20
Aug
தொந்தி குறைக்கும் ஆசனம் – பாதஹஸ்தாசனம்
தொந்தி, வியாதிக்கு தந்தி என்றொரு பழமொழி உண்டு. ஆம், நீரிழிவு உள்ளவர்கள் பொதுவாக தொந்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த பாதஹஸ்தாசனம் கணையத்தை ஒழுங்காக இயங்கச் செய்து தொந்தியை குறைத்து டயாபடீஸ் வராமல் தடுத்து உங்களை இளமையாக, சுறுசுறுப்பாக வாழ வைக்கும்.
பாதஹஸ்தாசனம் செய்முறை:
- விரிப்பில் கிழக்கு நோக்கி நிற்கவும்.
- இரு கால்களையும் சேர்த்து வைக்கவும்.
- இரு கைகளையும் தலைக்கு மேல உயர்த்தவும்.
- மூச்சை வெளியில் விட்டு கொண்டே கீழே குனிந்து கால் விரலை தொடுவதற்கு முயற்சி செய்யவும்.
- இந்த நிலையில் சாதாரணமாக மூச்சு விட்டு கொண்டே இருபது வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும்.
- இதே போல் மூன்று முறை செய்யவும்.
இதை யாரெல்லாம் செய்யக்கூடாது
- அடிமுதுகு வலி அதிகம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
- முதுகெலும்பில் டிஸ்லொகேட் ஆகியிருந்தாலும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
- முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
நீரிழிவு உள்ளவர்கள் அவசர படாமல் நிதானமாக பயிற்சி செய்யுங்கள். முதல் நாளிலேயே முழுமையான நிலை வராது. தொடர்ந்து பல மாதங்கள் பயிற்சி செய்த பின்னர் தான் உடலில் வளையும் தன்மை கிடைக்கும். ஆனால், நீங்கள் குனிந்து காலை தொட முயற்சி செய்யும் போது வயிற்றின் உள்பகுதி அமுக்கப்படும். இதனால் கணையம் ஒழுங்காக சுரக்கும். நீரிழிவிலிருந்து நிச்சயம் விடுதலை ஆகிவிடுவீர்கள்.
மணிப்பூரக சக்கர தியானம்
நமது உடம்பில் ஆறாதாரம் என்று சொல்லும் முக்கிய சக்கரங்கள் உள்ளன. ஒவ்வொரு சக்கரமும் உடலில் உள்ள முக்கிய நாளமில்லா சுரப்பியை கட்டுப்படுத்துகிறது. நீரழிவு ஏற்படுத்தும் பாங்கிரியாஸ் சுரப்பியை கட்டுப்படுத்தும் சக்கரம் மணிப்பூரகம். நமது உடம்பில் மணிப்பூரக சக்கரம் என்பது வயிற்று உள்பகுதி. இந்த மணிப்பூரக சக்கரம் தான் பாங்கிரியாஸ் கட்டுப்படுத்துகிறது.
தியான முறை
- விரிப்பில் நிமிர்ந்து அமருங்கள்.
- கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
- இரு கை விரல்களும் சின் முத்திரையில் இருக்கவும்.
- பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும்.
- மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கவும்.
- இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி ஐந்து முறை செய்த பிறகு உங்கள் மனதை வயிற்று உள்பகுதியிலும் அதற்கு பின்புறமுள்ள முதுகுத் தண்டிலும் நிலை நிறுத்தவும்.
- நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்துக்கு கிடைப்பதாக என்னவும்.
- ஒரு ஐந்து நிமிடம் உங்கள் மனதை வயிற்று உள்பகுதியில் நிலை நிறுத்தவும்.
- பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
எண்ணமும் பிராணனும்
ஒரு விஷயம் தெரியுமா? நம் எண்ணம் எங்கு செல்கிறதோ அங்கு சுவாசமும் செல்லும். கண்களை மூடி உங்கள் மனதில் வயிற்று உள்பகுதியில் நினைக்கும்போது உங்கள் சுவாசம் அங்கு பரவும். அடுத்து கணையத்துக்குள்ளும் பிராண சக்தி நன்கு பரவும். ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், மூச்சோட்டம் மூன்றும் வயிற்று உள்பகுதியில் சமமாக இயங்கும். கணையத்திலுள்ள குறைபாடுகள் நீங்கி சிறப்பாக இயங்கும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்
அசனம் (உணவு) பாதி. ஆசனம் (யோகாசனம்) பாதி என்பதுதான் முழுமையான ஆரோக்கியம். அதனால் ஆசனத்துடன் அசனத்திலும் (உணவு) சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.
நீரிழிவு உள்ளவர்கள் என்னென்ன கீரைகள் சாப்பிடலாம்
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்னி, பசலை கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, புதினா, கொத்துமல்லி, முருங்கைக்கீரை
என்னென்ன காய்கறிகள் சாப்பிடலாம்
பூசணிக்காய், பப்பாளிக்காய், புடலங்காய், நெல்லிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெண்டைக்காய், கோவக்காய், பாகற்காய், சௌ சௌ, அவரைக்காய், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், வாழைப்பூ.
தானியங்கள் என்னென்ன சாப்பிடலாம்
கேழ்வரகு, கோதுமை, கம்பு, பார்லி, சோளம், கொள்ளு, கொண்டைக்கடலை, வெந்தயம், பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ்.
என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்
அத்திப்பழம், தர்பூசணி, அன்னாசி, எலுமிச்சை, தக்காளி, மாதுளை, கொய்யாப்பழம், ஆப்பிள், நாவல், ஆரஞ்சு, சாத்துக்குடி.
சாப்பிடக்கூடாத பழங்கள்
வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, மாம்பழம்.
பயமும் கவலையும் வேண்டாம்
நீரிழிவு வந்துவிட்டது என்ற பயத்தை விட்டொழியுங்கள். மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சியை செய்து உணவு முறையையும் மாற்றி அமையுங்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை இரு வேலையும் பயிற்சி செய்யுங்கள். முதலில் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் வரும். தொடர்ந்து பயிற்சி செய்தால் கணையம் சிறப்பாக சுரக்கும். முழுமையான விடுதலை கிடைக்கும். நீரிழிவு ஒரு பரம்பரை வியாதி என்பதை மாற்றுவோம். நீரிழிவு இல்லாத சுகமான சமுதாயத்தை உருவாக்குவோம்.