நலம் தரும் நாற்காலி யோகா
அஜீரணக் கோளாறு நீக்கும் அபான முத்திரை
மனித வாழ்வில் முக்கியமான ஒன்று பசி எடுத்து உணவு உண்ணுதல். பொதுவாக மனிதர்கள் காலை / மதியம் / இரவு என மூன்று வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடுகிறார்கள். 50% மக்கள் சாப்பிட வேண்டும் என்று கடமைக்காகச் சாப்பிடுகின்றனர். காரணம் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் பாதிப்படைந்தால், பசி முழுமையாக எடுப்பதில்லை. இதனால் மனதில் ஒரு உற்சாகம், மகிழ்ச்சி இல்லை. வேலையிலும் முழுக் கவனத்தை செலுத்த முடியவில்லை. உண்பதற்காகவே உழைக்கிறோம். ஆனால் பசித்து உண்ண முடியவில்லை என்பது பலரின் கவலை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும். பசித்து, பசிக்காக, ஆனந்தமாக ரசித்து ருசித்து உணவு உண்ண வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமது உடல் இயக்கம் சரியாக இருக்க வேண்டும்.
உடல் – மனம் – பசி
இந்த உடல் பல மில்லியன் செல்களினால் ஆனது. ஒவ்வொரு செல்களிலும் பஞ்சபூதத் தன்மைகள் உள்ளது. செல்களின் மிக முக்கிய வேலை இரண்டு. நாம் உண்ணும் உணவில் தனக்கு தேவையான உணவை உட்கிரகிப்பது. அதில் உருவான கழிவுகளை வெளியேற்றுவது.
செல்லிற்கு தேவையான உணவு வெளியே இருக்கும். செல்லின் உட்புறம் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு செல்லின் வெளியே இருக்கும் உணவு உட்கிரகிக்கப்படும். உணவை உட்கிரகித்தல், கழிவுகளை வெளியேற்றுதல் இந்த இரண்டு முக்கிய பணிகளை செய்யும் செல்கள் சிறப்பாக இயங்க நமது மனதில் அமைதி வேண்டும். படபடப்பு, டென்ஷன், கவலையில்லாமல் மனதை பக்குவமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பசி அறிந்து சாப்பிட வேண்டும். பசி இல்லையெனில் ஏற்கனவே உண்ட உணவில் உள்ள கழிவுகளை உடல் வெளியேற்றும். பணி முடியாமல் அதனை தீவிரமாக வெளியேற்ற செல்கள் முயற்சி செய்யும் பொழுது மீண்டும் சாப்பிட்டால் உடல் செல்களுக்கு நாம் மீண்டும் தொந்தரவு கொடுக்கிறோம். அதனால் மேலும் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல்களில் கழிவுகள் தங்கும். இதனால் உடலில் வாயு பிரச்சனை ஏற்படுகின்றது. உட்கொள்ளும் உணவும் எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்க வேண்டும். முடிந்த அளவு அதிக காரம், எண்ணெய் பண்டங்கள், மாமிசம் தவிர்ப்பது நலம். உடலுக்குரிய ஓய்வு இரவு 10.00 மணி முதல் காலை 3.00 மணி வரை நல்ல உறக்கம் வேண்டும். இவையெல்லாம் இருந்தால் பசி எடுக்கும்.
பசி இல்லாதவர்களுக்கும், அஜீரணமாக உள்ளவர்களுக்குரிய எளிய யோக முத்திரைகள்.
வாயு முத்திரை:
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- இயல்பாக நடக்கும் மூச்சை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும்.
- ஆள்காட்டி விரலை நன்கு மடித்து அதன் மையத்தில் பெருவிரலை வைத்து இலேசான அழுத்தம் கொடுக்கவும்.
- இரு கைகளிலும் செய்யவும்.
- கையை முட்டி மேல் வைத்துக் கொள்ளலாம்.
- இரண்டு நிமிடங்கள் சாப்பிடும் முன் காலை / மதியம் / மாலை என இந்தப் பயிற்சியைச் செய்யவும்.
அபான முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சைக் கூர்ந்து கவனிக்கவும்.
- பின்பு கண்களைத் திறந்து நடுவிரல், மோதிர விரல்களிடையே அதன் மையத்தில் பெருவிரல் நுனியை வைக்கவும்.
- ஆள்காட்டி விரல், சுண்டுவிரல் தரையை நோக்கியிருக்கட்டும்.
- இரு கைகளிலும் செய்யவும்.
- இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை என சாப்பிடும் முன் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.
அதிகாலை 6.00 மணிக்கு சூரிய ஒளி உடலில் படும்படி இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் சூரியனைப் பார்த்து அபான முத்திரை செய்யவும்.
பலன்கள்
- இந்த இரண்டு முத்திரைகளும் உடலில் தச வாயுவை நன்கு இயங்கச் செய்யும்.
- ஜீரண மண்டலத்தை நன்கு இயங்கச் செய்கிறது. அஜீரணக் குறையை நீக்கவல்லது.
- செல்கள் சிறப்பாக இயங்குவதற்கும், செல்களின் கழிவுகளை உடனே அகற்றவும் பயனுள்ளதாக அமைகிறது.
- சிறுகுடல், பெருங்குடல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
- நாம் உண்கின்ற உணவு ஜீரணமாவதற்குரிய சுரப்பிகளைச் சரியாகச் சுரக்கச் செய்கின்றது.
உணவு
- கொய்யா பழம் அடிக்கடி சாப்பிடுங்கள்.
- வாரம் இருமுறை மாதுளம் பழம். உணவில் புளிக்கு பதில் தக்காளி. மாதம் ஒருமுறை பப்பாளி பழம்.
- கிழங்கு வகைகளைத் தவிர்த்து முட்டைகோஸ், அவரை, பீட்ரூட் உணவில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இருபது நிமிடம் கழித்தும் தண்ணீர் குடிக்கவும்.
- இரவு 8.00 மணிக்குள் உணவு உண்ண வேண்டும். இரவு அரை வயிறு சாப்பாடு / கால் வயிறு தண்ணீர் / கால் வயிறு காற்றுக்கு இடமிருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அஜீரணக் கோளாறு என்பது இருக்கக்கூடாது. பசி நன்கு இருக்க வேண்டும். பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். ஒரு ஆரோக்கியமான உடலை பெற்றால்தான் பசி இருக்கும். பசித்தால் தான் நம் வாழ்க்கை ருசிக்கும். அதற்கு மேற்கூறிய பயிற்சிகளையும், பண்புகளையும் வாழ்வில் கடைபிடியுங்கள்.