ஒரு மனிதன் என்பவன் வீரிய மிக்கவனாகத் திகழ வேண்டும். வீரியம் என்பது உயிர் சக்தி, உயிர் ஆற்றல், பிராண ஒளி, ஜீவ ஒளி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
ஒரு சில மனிதர்களின் பேச்சு, செயல், நடை, பாவனைகள் அனைத்திலும் வீரியம் (உயிரோட்டம்) இருக்கும். அவர் அனைவராலும் ஈர்க்கப்படுவார். அதற்கு அவரின் உடலிலுள்ள உயிரோட்டம் தான் காரணம். அந்த உயிரோட்டமானது நன்றாக இயங்குகிறது என்று அர்த்தம்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் வீரியம் (உயிர்) சரியாகக் கிடைக்கிறது. யார் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறீர்களோ அவரிடம் கேளுங்கள், “நீங்கள் யோகாசனம் செய்கிறீர்களா?” என்று.. “ஆம்” என்பார் அவர். “நீங்கள் விபரீதக்கோணாசனம் செய்வீர்கள் தானே?” என்றும் கேளுங்கள். அவரின் பதிலால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம்… யாரெல்லாம் விபரீதக்கோணாசனம் செய்கிறார்களோ, அவர்கள் உடலில் வீரியம் மிகச் சிறப்பாக இயங்கும்!
மகிமை மிக்கது கல்லீரல்!
மாற்று இருதயம், மாற்று கிட்னி என்பது போல நம் உடலில் மாற்றவே முடியாத ஒரு உறுப்புதான் கல்லீரல் (லிவர்). நம் உடலுக்கு இன்றியமையாத உறுப்பு இது! உடலில் உணவு சுரப்பியில் மிகப்பெரிய சுரப்பியும் இதுவே. நமது வயிற்றுப் பகுதியில் வலது புறத்தின் கீழே அமைந்துள்ள உறுப்பு கல்லீரல். கருஞ்சிவப்பு நிறம் கொண்ட இது, இரு மடல்களாக இருக்கும். ஒரு நாளைக்கு 20 அவுன்ஸ் அளவுக்கு பித்த நீரை சுரப்பதே இதன் பிரதான வேலை!
உணவுச் சத்தை கிளைகோஜனாக சேமித்து வைப்பதும், கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றுவதும், தேய்ந்து போன ரத்த அணுக்களை அழிப்பது லிவரின் மற்ற வேலைகள். கல்லீரல் நன்றாக இயங்கினால் தான் நமது உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு நாம் அனைவரும் முதலில் செய்ய வேண்டியது விபரீதக்கோணாசனம்.
விபரீதக்கோணாசனம் செய்முறை
- விரிப்பில் நேராக அமரவும்.
- இரு கால்களையும் பக்கவாட்டில் நீட்டவும்.
- இரு பாதங்களையும் படத்திலுள்ளது போல் மேல் நோக்கி இருக்கும்படி வைக்கவும்.
- இப்போது, மூச்சை வெளிவிட்டபடி குனிந்து, இரு கைகளையும் இடது பாதத்தின் வெளியே இணைத்து, கும்பிட்டு, நெற்றியை மூட்டின் மீது படுமாறு வைக்கவும்.
- இதே நிலையில் 10 முதல் 15 விநாடிகள் இருக்கவும்.
- பின்னர் மெதுவாக கைகளை எடுத்து, நிமிர்ந்து உட்காரவும்.
- இதுபோல வலது பாதத்திலும் செய்யவும்.
- ஒவ்வொரு பாதத்திலும் தலா மூன்று முறை செய்யவும்.
முக்கிய குறிப்பு
- ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனம் மற்றும் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகில் அதிக வலி உள்ளவர்கள் மற்றும் முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டோர் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
- மற்றவர்கள் இந்த ஆசனத்தை நிதானமாகச் செய்யவும். ஒரே நாளில் இதன் முழுமை நிலை வராது. மூன்று நான்கு மாதங்களில் இந்த ஆசனத்தின் முழுமை நிலையை அடையலாம். அதுவரை முடிந்த அளவு நிதானமாக பயிற்சி செய்யவும்.
இந்த ஆசனத்தின் முக்கிய பலன்கள்…
கல்லீரல் மிகச் சிறப்பாக இயங்கும். அதில் நல்ல சக்தி ஓட்டம் கிடைக்கும். தவிர, அதிலுள்ள குறைகள் நீங்கி, கழிவுகள் அனைத்தும் முறையாக வெளியேறும்.
உடலுறவில் நாட்டம் வரும்!
சிறுநீரகமும், சிறுநீரகப்பையும் மிகச் சிறப்பாக இயங்கும். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், அடிக்கடி காய்ச்சல் வரும். கால் பாதம் வீங்கும். உடல் அசதி இருக்கும். உடலுறவில் நாட்டமிருக்காது. இந்தக் குறைபாடுகள் அனைத்துமே இந்த ஒரு ஆசனத்தால் சரியாகும். ஆண்களுக்கு சிறப்பான வீரியம் கிடைக்கும்.
குடல் இயக்கம் சிறப்பாகும்
சிறுகுடலும் பெருங்குடலும் சிறப்பாக இயங்கும். அவற்றிலுள்ள கழிவுகளும் நீக்கப்படும். குடல் சுத்தமானால் நமது மனமும் சுத்தமாகும். உடலில் நோய் எதிர்ப்புத்திறன் எப்பொழுது குறையும் என்றால், குடலில் அசுத்தங்கள் அதிகமாகும் பொழுதுதான். ஆகவே, ஒவ்வொரு மனிதனும் குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
காய்ச்சலுக்கு குட் பை!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், அடிக்கடி காய்ச்சல் வரும். டெங்கு, சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல் என்று புதிது புதிதாக காய்ச்சலுக்கு பெயர் வைத்து, மக்களை பயமுறுத்துகிறார்கள். விபரீதக்கோணாசனம் செய்பவர்களிடம் எந்தவிதமான காய்ச்சலும் நெருங்காது.
தொடை தசைகள் அழகாகும்!
தொடை தசைகள் அதிகமானால், உடலில் அழகும் தோற்றமும் கெடும். குறிப்பாக, பெண்கள் நடக்கும்போது, தொடை தசைகள் உராய்ந்து புண்கள் வரும். இந்த ஆசனம் செய்தால், அதிக அளவிலுள்ள தொடை தசைகள் கரைந்து, உடலுக்கு அழகான தோற்றம் கிடைக்கும்.
மூட்டு வலி மாயமாகும்!
மூட்டுகளும், அதனுள் உள்ள சவ்வும் நன்றாக பலம் பெறும். மூட்டு வலி வராது. மூட்டு வலி இருப்பவர்கள், இந்த ஆசனத்தை முறையாகப் பயின்று செய்தால், மூட்டு வலி நீங்கும்.
நரம்பு மண்டலம் பலம் பெறும்!
நரம்புத் தளர்ச்சியை நீக்கும் ஆசனம் இது! இன்று 30 வயதுகளிலேயே பலரும் ‘நரம்புத் தளர்ச்சி’ பிரச்சனையால், கண்டக் கண்ட மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இதனால் உடல் மற்றும் மன நடுக்கத்துடன் வாழ்கின்றனர். அவர்கள் இந்த ஆசனத்தை நம்பிக்கையுடன், தினமும் காலையும் மாலையும் 2 நிமிடம் செய்தால், நரம்பு மண்டலம் பலம் பெறும்.
பாத வீக்கம் குறையும்
கால் பாத வீக்கம், கெட்ட நீர் தேக்கம் உள்ளிட்டவை குறையும். பாத வலியையும் அறவே நீக்கும்.
பெண்களின் இளமை கூடும்!
பெண்களின் தேக அமைப்பில் இளமையை அதிகரிக்கும். தசைச் சுருக்கங்களை நீக்கும். உடற்கழிவுகள் அனைத்தும் சரியாக வெளியேறும். மாதவிடாய் பிரச்சனையும், அதிக வெள்ளைப்படுதலும் நீங்கும். உடல் சூடு சமப்படும். குழந்தை பிறந்தப் பிறகு நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கும்.
மூலமும் மலச்சிக்கலும் வராது!
மலச்சிக்கலை நீக்கும். மூல வியாதி வராமல் தடுக்கும்.
என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?
- தினமும் இந்த ஆசனம் செய்து வருவதுடன், நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.
- பசு நெய்யை உணவில் சேருங்கள்.
- பசு வெண்ணெய்யை வாரம் ஒரு நாள், ஒரு சிறிய உருண்டை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
- நாள்தோறும் மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவும்.
வீரியம் தரும் சூரணம்!
வெங்காயப்பூக்களை 200 கிராம் அளவு சேகரித்துக் கொள்ளவும். அதனை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, இடித்துத் தூளாக்கவும். இதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.
இந்த ஆசனம் செய்து வருவதுடன் வெங்காயப்பூ சூரணமும் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். கருப்பை வலுவடையும். மலட்டுத்தனம் நீங்கும். முக்கியமாக, ஆண்கள் நல்ல வீரியத்துடன் வாழலாம்.