ஆரோக்கியம் நிலைக்க ‘நின்ற பாத ஆசனம்’
ஆரோக்கியம் நம் கையில் – 28
வாழ்வில் பொதுவாக மனிதர்கள் பெரும்பாலும் ஆசைப்படுவது என் செல்வம் நிலைத்து நிற்க வேண்டும், என் பெயர் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதற்கு முதலில் நம் உடல், மனதில் ஆரோக்கியம் நிலைத்து நி்ற்கும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் செல்வம், பெயர், புகழ் எல்லாம் நிலைத்து நிற்க பாடுபட வேண்டும். இதோ ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்க உதவும் நின்ற பாத ஆசனத்தை தினமும் பயிற்சி செய்ய வாருங்கள்.
செய்முறை:
- விரிப்பில் நேராக நிற்கவும்.
- வலது காலை மடித்து பாதம் இடுப்புப் பகுதியில் வானத்தை நோக்கி இருக்குமாறு படத்திலுள்ளது போல் வைக்கவும்.
- இப்பொழுது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.
- இந்நிலையில் சாதாரண மூச்சில் இருபது விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக கை, கால்களை தரையில் கொண்டு வரவும்.
- இதேபோல் காலை மாற்றி ஒருமுறை பயிற்சி செய்யவும்.
- காலை, மாலை இரண்டு முறை பயிற்சி செய்யவும்.
குறிப்பு:
முதலில் பயிற்சி செய்பவர்கள் நிதானமாக சுவரில் சாய்ந்து பயிற்சி செய்யவும். நன்கு முழுமையாக பயின்றவுடன் சுவரில் சாயாமல் பயிலலாம்.
அதிகமான உடல் எடை உள்ளவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், யோகாசன ஆசிரியரை அணுகி அவரின் நேரடி பார்வையில் பயிலவும்.
முதலில் பயிற்சி செய்பவர்கள் பத்து விநாடிகள் இருக்கவும். ஒரு மாதம் கழித்து இருபது விநாடிகள் இருக்கலாம்.
காலையில் சூரியனை நோக்கி கிழக்கு திசையிலும், மாலையில் சூரியனை நோக்கி மேற்கு திசையிலும் செய்வது நல்ல பலனைத் தரும். சூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படும்படி நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் பயில்வது மிக நல்லது.
நின்றபாத ஆசனத்தின் பலன்கள்:
குதிகால் பாத வலி:
நிறைய மனிதர்களுக்கு குதிகால் எரிச்சல், பாத வலியில் அவதிப்படுகின்றனர். அவர்கள் இவ்வாசனம் செய்தால் மிக நல்ல பலன் தரும்.
மன அமைதி:
நிறைய மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. மன அமைதியின்றி குழப்பத்தில் தான் வாழ்கின்றனர். இந்த ஆசனம், மனக் குழப்பத்தை நீக்குகின்றது. மன அமைதியை அளிக்கின்றது.
மன ஒரு நிலைப்பாடு:
நின்ற பாத ஆசனம் தொடர்ந்து செய்தால் மனம் தெளிவடையும். நிறைய மனிதர்கள் வாழ்வில் சின்ன பிரச்சனைகளுக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்தால் உள்ளம் தெளிவாகும்.
தோள்பட்டை வலி:
பொதுவாக நாம் வலது பக்கம் அல்லது இடது பக்கம் அதிகமான வலுவை கொடுப்பதால் தோள்பட்டை சரியாக சமமாக இருக்காது. இலேசாக வலப்பக்கம், அல்லது இடப்பக்கம் விலகியிருக்கும். அதனால் தோள்பட்டை வலி வரும். இந்த ஆசனம் இதனை சரி செய்து அழகான தோற்றத்தையும் கொடுக்கின்றது.
மூட்டுவலி:
உடலில் மூட்டுக்களில் தங்கியுள்ள கழிவுகள் நீங்கி, மூட்டு வலி வராமலிருக்கும்.
நரம்புத் தளர்ச்சி: உடல் கை, கால் நடுக்கம், பதட்டத்தையும், நரம்புத் தளர்ச்சியையும் நீக்கி உற்சாகத்தை கொடுக்கிறது.
தூக்கம்:
மன அமைதி கிடைப்பதால் தேவையற்ற எண்ண ஓட்டம் அழிவதால் தூக்கம் நன்கு வரும்.
கோனாடு சுரப்பியின் குறைபாடுகளை நீக்குகின்றது. சிறுநீரகக் குறைபாடு அதனால் நீங்கும்.
அடி வயிறு பருமன்:
சிலருக்கு அடி வயிறு மட்டும் அதிக பருமனாக இருக்கும். இந்த ஆசனம் அந்தக் குறைபாட்டை நீக்குகின்றது.
கால் பாதத்திற்கு பிரபஞ்ச சக்தி:
இந்த ஆசனம் செய்யும் பொழுது பிரபஞ்சத்திலுள்ள நல்ல பிராணசக்தி கால் பாதத்தில் இறங்குகின்றது. கை வழியாகவும் பிராண ஆற்றலை உள் வாங்குகின்றோம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெற்று இயங்குகின்றது.
மாணவர்கள்:
படிக்கின்ற மாணவர்கள் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்தால் நல்ல மன ஒருமைப்பாடு, மன அமைதி, சிந்தனை கிடைக்கும். எதையும் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவர்.
உணவு:
இந்த ஆசனத்துடன் முட்டைகோஸ், அவரைக்காய் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு தேனில் கலந்து இஞ்சி துண்டும் சேர்த்து வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள். புலால் உணவை தவிருங்கள். பசு நெய், வெண்ணை சிறிது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கலாம்.
இந்த ஆசனத்துடன் மகாசிரசு முத்திரையும் பயிற்சி செய்யவும்.
மகாசிரசு முத்திரை:
மனித உடல் எவ்வளவு அற்புதமாக இறைவனால் உருவாக்கப்பட்டுள்ளது. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது பழமொழி. ஆம் நமது தலையில் உள்ள மூளை, கண், காது, வாய், மூக்கு இவை தான் இந்த உடல் என்ற இயந்திரத்தை இயக்குகின்றது. எனவே சிரசைக் காப்பது நமது முதல் கடமையல்லவா?
மனிதனின் சிரசில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்க ஓர் அற்புத முத்திரை உள்ளது. இந்த முத்திரைக்கு மகா சிரசு முத்திரை என்ற பெயர்.
மகா சிரசு முத்திரை எப்படி செய்வது:
- விரிப்பில் கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை ஒரு நிமிடம் வெளிவிடவும்.
- பின் உங்கள் கட்டைவிரல் ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொட்டபடி வைக்கவும்.
- சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும்.
- மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்கவும்.
- சுண்டு விரல் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
- இரு கைகளிலும் ஒரே சமயத்தில் செய்யவும்.
எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்:
இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்யவும். தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளை செய்யவும். முதலில் பயிற்சி செய்பவர்கள் இரண்டு நிமிடங்கள் செய்யவும். பின் இரு மாதங்களில் ஐந்து நிமிடம் செய்ய முடியும்.
முகத்தில் பிராண சக்தி:
முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பிராண சக்தி நன்கு பாய்கின்றது. இதனால் மூளைப்பகுதியில் உள்ள டென்ஷன் விலகுகின்றது.
தலைவலிக்கு நல்ல முத்திரை:
உடல் சூடு அதிகமானதும் தலைவலி தரும். இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் தலைவலி நீங்கும். சிலருக்கு பஸ்ஸில் அதிக நேரம் பயணம் செய்தால் தலைவலி ஏற்படும். இந்த முத்திரை ஒரு நல்ல நிவாரணமாக தலைவலியை போக்குகின்றது. காரணம் இந்த முத்திரையில் தான் தலைப்பகுதி முழுவதும் பிராண ஓட்டம் சிறப்பாக இயங்குகின்றது.
கண்வலி நீங்கும்:
கண்வலி, கண்ணைச் சுற்றி ஏற்படும் வலிகள் இந்த முத்திரையால் நீங்குகின்றது. கண்கள் நன்கு பாதுகாக்கப்படும். கண்ணுக்கு பின் பகுதியில் ஏற்படும் வலிகளும் நீங்கும்.
சைனஸ் சளிக்கு நிவாரணம்:
மூக்கடைப்பு, சைனஸ், சளித் தொந்தரவு உள்ளவர்கள் இந்த முத்திரை மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதிகம் சளி தொந்தரவு உள்ளவர்கள் தினமும் மூன்று வேளை இந்த முத்திரை செய்து அதனுடன் துளசி இலை ஒரு கொத்து, அருகம்புல் ஒரு கைபிடி, மிளகு 8 இதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பாலில் மஞ்சள்பொடி பனங்கற்கண்டு சேர்த்து சுடவைத்து வடிகட்டி குடித்தால் நல்ல பலன் உண்டு.
சுவாச ஓட்டம் சிறப்பாக இயங்கும்:
மகா சிரசு முத்திரை உடலில் சுவாச ஓட்டம் சீராக இயங்குவதற்கு பயன்படும். யாருடைய உடலில் சுவாசம் தடையின்றி உடல் முழுவதும் சீராக இயங்குகின்றதோ அவர் உடம்பில் வியாதியே வராது.
முகப்பொலிவு:
இந்த முத்திரை கன்னம், தாடை, நெற்றி பகுதியில உள்ள சுருங்கிய தசைகளை பிராண ஓட்டத்தின் மூலம் சரி செய்து முகத் தசைகளை பளபளப்பாக மாற்றுகின்றது.
கழுத்து வலி:
கழுத்து வலி நீங்கி வளமாக வாழ இந்த முத்திரை பயன்படுகின்றது. ஒரேயிடத்தில் பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அவர்களுக்கு இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.
சுறுசுறுப்பும், மன அமைதியும் கிடைக்கும்
எந்த மனிதனிடம் மன அமைதி உள்ளதோ அவன் தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும். மன அமைதியடைய வேண்டுமெனில் கழுத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள நரம்பு மண்டலத்தில் உள்ள டென்ஷன் வெளியேற வேண்டும். அதற்கு இந்த முத்திரை செய்தால் கழுத்து பகுதியிலிருந்து கீழ் நோக்கி வரும் நரம்பு மண்டலங்களில் உள்ள டென்ஷனை குறைக்கின்றது. அதனால் மன அமைதி கிடைக்கும். எண்ண ஓட்டங்கள் ஒடுங்கும். பிராண சக்தி உடலில் சேமிக்கப்படுகின்றது. சுறுசுறுப்பாக வாழ வழி வகுக்கின்றது.
மன மகிழ்ச்சி:
சிலருக்கு வாழ்க்கையில் பணம், புகழ், பதவி என எல்லாம் இருந்தும் மனதில் மகிழ்ச்சி, புத்துணர்வு இருக்காது. ஏதோ இழந்தது போல் காணப்படுவர். கழுத்து பின்புறமுள்ள நரம்புகளில் பிராண ஓட்டம், இரத்த ஓட்டம் சரியாக இயங்காதது ஒரு காரணம். இந்த முத்திரையை தினமும் மூன்று வேளை செய்தால் நரம்பு மண்டல இயக்கத்தில் மாறுதல் ஏற்படும். படிப்படியாக மனம் மகிழ்ச்சி அடையும்.