18
Sep
ஆரோக்கியம் நம் கையில் – 002
ஒவ்வொரு நோய் பற்றியும், அதிலிருந்து முழுமையாக விடுதலை அடைய எளிய வகை யோகாசனங்கள், உணவு முறைகள் பற்றி பார்க்கவுள்ளோம். இன்று நம் நாட்டில் நிறைய மனிதர்களுக்கு இரத்த அழுத்தம் (B.P – Low / High) என்ற நோய் உள்ளது. பொதுவாக ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள், தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பீர்கள். இனி கவலையை விடுங்கள். நாம் யோக முறையில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்போகின்றோம்.
இரத்த அழுத்த நோய் என்றால் என்ன?
நமது இதயம் சுருங்கி விரிந்து, இரத்தத்தை இரத்தக் குழாய்களில் செலுத்தும் பொழுது ஏற்படும் அழுத்தம் தான் இரத்த அழுத்தம் எனப்படும். இதயம் சுருங்கி விரிவடைவதை இதயத்துடிப்பு என்கிறோம். பொதுவாக மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 முறைகள் நிகழ்கின்றது. இதயத்தின் அறை சுருங்கும் நிலைக்கு சிஸ்டோல் என்றும், விரிவடையும் நிலைக்கு டையஸ்டோல் என்றும் அழைக்கப்படுகின்றது.
பொதுவாக மனிதனின் இரத்த அழுத்தமானது இதய அறைகள் சுருங்கிய நிலையில் (சிஸ்டோலின் போது) 120 மில்லி மீட்டர் பாதரசம் ஆகவும், இதய அறைகள் விரிந்த நிலையில் (டையஸ்டோலின் போது) 80 மில்லி மீட்டர் பாதரசமாகவும் இருக்கும்.
சிஸ்டோலில் இரத்த அழுத்தம் 140 மி.மீ. பாதரசம் அளவுக்கு மேலோ, டையஸ்டோலில் இரத்த அழுத்தம் 90 மி.மீ. பாதரசம் அளவுக்கு மேலோ தொடர்ந்து நீடித்தால் அதனை உயர் இரத்த அழுத்தம் என்றழைக்கின்றனர். இந்த இரத்த அழுத்தத்தால் உடலில் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
இரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம்
- மன இறுக்கம், மன அழுத்தம் இருந்தால் இதயம் சுருங்கி விரிவடைவதில் மாற்றம் ஏற்படும். அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். மன இறுக்கம் / மன அழுத்தத்தை அறவே ஒழிப்பது யோகக்கலை ஒன்றே. அது எப்படி என்பதை விரிவாக பார்க்கவுள்ளோம்.
- சினமும் இரத்த அழுத்தமும் அடுத்த காரணம். ஆம் பொதுவாக கோபப்படுபவர்களுக்கு இரத்த அழுத்தம் இருப்பதைப் பார்க்கிறோம். கோபம் அடையும் பொழுது மன அலைச்சுழல் விநாடிக்கு 25 முதல் 30 வரை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் சினம் உள்ளவர்களுக்கு நிச்சயமக இருக்கும். சினத்தை ஒழிக்கும் யோக நுட்பங்களை நாம் விரிவாக காணவுள்ளோம். கோபப்படாமல் பொறுமையாக படியுங்கள்.
- அடுத்த முக்கிய காரணம் கவலைப்படுதல். கவலைப்படும் பொழுது இதயம் சுருங்கி விரியும் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. அதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. பொதுவாக நிறைய மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. வாழ்க்கையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களை எண்ணி கவலைப்படுவர். அல்லது எதிர் காலத்தில் என்ன செய்யலாம் என்று வருந்துவர். இப்படி வாழ்வதால் நிகழ்காலம் முழுவதும் கவலை சூழ்ந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. இதற்கு கவலை நீக்கும் யோகப்பயிற்சி உள்ளது. அதனை பயின்றால், நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாம். கவலைப்படாதீர்கள்.
- டென்ஷன் அடுத்த காரணமாகும். பொதுவாக சிறிய விஷயங்களுக்கு பதட்டம், டென்ஷன் ஆகின்றவர்களுக்கும் இரத்த அழுத்தம் விரைவில் வருகின்றது. பதட்டமும், டென்ஷனும் படும் பொழுது இதயம் மிக வேகமாகத் துடிப்பதை காணலாம். இதற்கும் யோகத்தில் தீர்வு உண்டு.
- பிட்யூட்டரி சுரப்பி. இச்சுரப்பி மனித மூளையின் அடிப்பாகத்தில் அமைந்து உள்ளது. சுரப்பிகளில் இது தலைமை சுரப்பி என அழைக்கப்படுகின்றது. இச்சுரப்பி அதிகமாக சுரந்தால் இரத்த அழுத்தம் வரும். மனிதனின் எண்ணம் சாந்தமாகயிருந்தால் இச்சுரப்பி சரியாக சுரக்கும்.
- இரத்த அழுத்தத்திற்கு அடுத்த காரணம் நாம் உண்ணும் உணவுப் பழக்கம். நல்ல காரமாக, மாமிச உணவு அடிக்கடி உண்பவர்கள், நாவின் ருசிக்காக அடிக்கடி ஹோட்டலில் உண்பவர்கள் எண்ணெய் பண்டம் உண்பவர்கள், இரவு அதிக நேரம் கழித்து அளவுக்கு அதிகமாக உணவு உண்டு உடன் படுக்கைக்கு செல்பவர்கள், சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்பவர்கள், பகலில் உடலுறவு கொள்பவர்கள், இவர்களுக்கெல்லாம் உடலில் இரத்த அழுத்தம் வந்துவிடும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன? அது வருவதற்கு முக்கிய காரணங்கள் என்ன என்பதை அறிந்தோம். இனி இதிலிருந்து விடுதலை அடைய யோக வழி முறைகளைப் பற்றி அறிவோம். ஶ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோக நுட்பங்கள் மூலம் இரத்த அழுத்தத்திலிருந்து நிரந்தரமாக விடுதலை அடையலாம். இதற்குத் தேவை யோகக்கலை பயில வேண்டும் என்ற விருப்பம், உற்சாகம், அன்பு, முகமலர்ச்சி இவை மட்டும் இருந்தால் போதும்.
யோகக் கலைகள் மூலம் எப்படி இரத்த அழுத்தத்தை நீக்கலாம் என்பதைப் பார்க்கும் முன்பு யோகாசன, தியான விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
யோகாசன, தியான விதிமுறைகள்
- யோகப் பயிற்சிகளை காலையிலும், மாலையிலும் செய்யலாம்.
- மாலையில் செய்வதை விட காலையில் பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- காலை எழுந்தவுடன் பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு பயிற்சி செய்ய வேண்டும்.
- வெறும் தரையில் பயிற்சி செய்யக்கூடாது. ஒரு மேட் / பாய், விரிப்பு – ஜமுக்காளம் ஏதாவது ஒன்று விரித்து அதில் அமர்ந்து செய்ய வேண்டும்.
- நல்ல காற்றோட்டமுள்ள இடமாக இருக்க வேண்டும்.
- இறுக்கமான உடை, பையில் செல்போன், கண்ணாடி அணிந்து செய்யக்கூடாது.
- ஆண்கள் Sports track & T-Shirts, பெண்கள் சுடிதார் அணிந்து (பேண்ட் டீ சர்ட்) செய்ய வேண்டும்.
- பெண்கள் மாதவிலக்கு சமயம் நான்கு நாட்கள் யோகாசனங்கள் செய்யாமல், ஐந்தாவது நாள் முதல் பயிற்சி செய்யலாம்.
உணவு
- மாமிசம் தவிர்ப்பது மிக நல்லது.
- கீரை, பச்சை காய்கறிகள், பழம், சிறுதானிய உணவு அதிகம் சேர்க்கலாம்.
- நன்கு மென்று கூழாக்கி உணவை சாப்பிடவும்.
- சாப்பிடும் பொழுது பேசக் கூடாது. சாப்பிடும் பொழுது உணவுக்குழல் பாதை திறந்து மூச்சுக் குழல் பாதை மூடும். பேசும்பொழுது உணவுக்குழல் பாதை அடைத்து மூச்சுக்குழல் பாதை திறக்கும். சாப்பிடும் பொழுது பேசினால் மூச்சுக்குழலில் உணவு சென்றுவிடும். அதனால் தான் புரையேறி மூக்கு வழியாக சிலருக்கு சாப்பாடு (உணவு) சில துளி வெளிவரும். சாப்பிடும் பொழுது பேசுபவர்களுக்கு இரத்த அழுத்தம் வரும்.
இரத்த அழுத்தம் நீக்கும் பத்மாசனம்
- தரையில் கிழக்கு திசை நோக்கி ஒரு விரிப்பு விரித்து அதில் அமரவும்.
- இரு கால்களையும் நீட்டிக் கொள்ளவும்.
- இடது காலை மடித்து வலது கால் தொடையில் வைக்கவும்.
- பின் வலது காலை மடித்து இடதுகால் தொடை மீது வைக்கவும்.
- இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். (சின் முத்திரை கட்டைவிரல், ஆள்காட்டி விரல் நுனி இரண்டும் தொட்டுக் கொண்டு, மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கியிருக்க வேண்டும்).
- முதுகெலும்பு நேராகயிருக்க வேண்டும்.
- முதலில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும்.
- உடன் இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும்.
- மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும்.
- மூச்சு வெளியிடும் பொழுது உடல், மனம், உடல் உள்ளுறுப்புகளிலுள்ள டென்ஷன், மன அழுத்தம், கவலை நீங்குவதாக எண்ணவும்.
- இதுபோல் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
பின் உங்கள் மனதை முதுகுத் தண்டின் கடைசிப் பகுதியில் நிலை நிறுத்தி அந்த இடத்தில் உங்கள் மூச்சோட்டத்தை இரண்டு நிமிடங்கள் கவனிக்கவும். பின் உங்கள் உள்ளத்தில் கீழ்க்கண்ட உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவும்.
- நான் இனிமேல் கோபப்பட மாட்டேன்.
- நான் இனிமேல் கவலைப்படமாட்டேன்.
- நான் இனிமேல் டென்ஷன், பதட்டப்படமாட்டேன்.
- நான் உணவில் கட்டுப்பாட்டுடன் சாத்வீகமான உணவை உண்பேன்.
- நான் தினமும் யோகப்பயிற்சி செய்வேன்.
- என்னிடம் இதுவரை கருமையத்தில் பதிந்துள்ள தீய வாசனைகள் யாவும் அறவே அழிகின்றன.
மேற்கூறியவைகளை பத்து முறை உங்கள் உள்ளத்தில் உச்சரிக்கவும்.
பின் மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உள் இழுக்கும் பொழுது பொறுமை, அமைதி முதலிய தெய்வீக குணங்களை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது கருமையத்தில் பதிந்துள்ள தீய பண்புகள், பொறாமை, கோபம், கவலை, டென்ஷன் நீங்குவதாக எண்ணவும்.
பின் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இயல்பாக நடக்கின்ற மூச்சை மட்டும் அமைதியாக கவனிக்கவும். பின் ஓம் சாந்தி என்று மூன்று முறை கூறி கண்களை மெதுவாகத் திறந்து சாதாரண நிலையில் அமரவும்.
பத்மாசனம் பலன்கள்
- பத்மாசனம் செய்யும் பொழுது இரு கால்களும் தொடை மீது அழுத்தப்படுவதால் இரத்தம் முதுகுத்தண்டு வழியாக மூளைக்கும் அதன் அடியிலுள்ள பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிக்கும் நன்கு பாய்கின்றது. இச்சுரப்பி சரியாக இயங்கச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் படிபடியாக குறைந்து சரியாகிவிடும்.
- இந்த ஆசனத்தில் பத்து நிமிடங்கள் இருக்கும் பொழுது, உடல் ஆடாமல், அசையாமல் இருப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
- இருதய துடிப்பு சீராகின்றது. உடல் உள் உறுப்பில் உள்ள டென்ஷனும் வெளியேறுகின்றது.
- மூச்சை மெதுவாக இழுத்து வெளியிடுவதால் நுரையீரல் முழுவதும் பிராணன் நன்கு செல்கின்றது. பிராண ஓட்டம் சீரமைகின்றது. அதனால் இரத்த ஓட்டமும் சீரடையும்.
முக்கிய குறிப்பு
- இதனைப் படிப்பவர்கள் வயதானவர்களாக இருக்கலாம். உடல் பருமனானவர்களாக இருக்கலாம். கால்களில், மூட்டுகளில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் பத்மாசனம் போட முடியவில்லை என்று வருந்த வேண்டாம். அவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை சின் முத்திரையில் வைத்து பயிற்சி முறைகளை காலை/மாலை செய்யுங்கள். பலன் நிச்சயமுண்டு.
- மிகவும் வயதானவர்கள் சுவரில் சாய்ந்து முதுகெலும்பை மட்டும் நேராக வைத்து பயிற்சி செய்யுங்கள்.
- சாதாரணமானவர்கள் எடுத்தவுடன் பத்மாசனம் வராது. பொறுமையாக ஒவ்வொரு காலாக முயற்சி செய்து ஒரு மாதத்தில் முழுமையாக பத்மாசனம் போடலாம்.
வஜ்ராசனம்
இரத்த அழுத்தம் வராமல் தடுக்கும், வந்தால் விரைவில் பூரண குணப்படுத்தும் மற்றுமொரு எளிய ஆசனம் வஜ்ராசனமாகும்.
வஜ்ராசனம் செய்முறை
- விரிப்பில் அமரவும். இரு கால்களையும் நீட்டவும்.
- ஒவ்வொரு காலாக மடித்து இரு கால்களையும் மடக்கி இரு குதிகால்களில் புட்டம் படும்படி அமரவும்.
- இரு கைகளையும் கால் முட்டிகளில் வைக்கவும்.
- கண்களை மூடி மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியி்டவும்.
- இதுபோல் ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு உங்கள் இரு உள்ளங்கைகளையும் இருதயத்தில் வைத்து எனது இருதயம் சீராக இயங்குகின்றது. இரத்த ஓட்டம் நன்றாக பாய்கின்றது என்று மனதிற்குள் மூன்று முறை கூறிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
முக்கிய குறிப்பு
- மூட்டுவலி உள்ளவர்கள், கால்களில், மூட்டில், கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், மிகவும் வலி உள்ளவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அவசரப்பட்டு வஜ்ராசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
இரத்த அழுத்தம் நீக்கும் இயற்கை உணவு
பழங்கள்
சப்போட்டா, நெல்லிக்காய், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், உலர்ந்த திராட்சை இந்த பழங்களை உண்ணலாம்.
காய்கறிகள்
வாழைத்தண்டு, பீட்ரூட், காரட் சூப், காலிபிளவர், முள்ளங்கி, வெள்ளரிக்காய், கோஸ்.
கீரைகள்
அகத்திக்கீரை, வல்லாரை, முருங்கைகீரை, துளசி, புதினா, கொத்தமல்லி, கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி, பசலைக்கீரை.
பயிறு வகைகள்
பச்சைபயிறு, பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ், கொண்டைகடலை.
தினமும் தாகம் எடுக்கும் நேரத்தில் தண்ணீர் குடிக்கவும். ஒரு நாளில் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சீரான இரத்த ஓட்டம்
சீரான இரத்த ஓட்டம் இருந்தால் தான் உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தம் நல்ல முறையில் சென்றடையும். நம் வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தில் மின் அழுத்தம் 200 – ல் இருந்து 240 – ஓல்ட் இருக்க வேண்டும். அதற்கு குறைந்தால் மின் விளக்குகள் கண் சிமிட்டும். மின் சாதனங்களும் பழுதடையும். வீட்டிற்கு எப்படி சீரான மின் ஓட்டம் தேவையோ அதுபோல நம் உடல் நன்கு இயங்க சீரான இரத்த அழுத்தம் தேவைப்படுகின்றது.
நம் உடலில் உள்ள இரத்த குழாய்கள் அனைத்தையும் எடுத்து ஒரே நீளமாகப் பிடித்தால் அதன் நீளம் 70,000 (எழுபதாயிரம்) மைல்கள் இருக்குமாம். இந்த இரத்த குழாய்கள் தான் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இரத்தக் குழாய்கள் நன்கு சுருங்கி விரியும் நிலையில் இருக்க வேண்டும். மாமிசம் போன்ற அதிக கொழுப்புச் சத்தான உணவால், கொலஸ்ட்ரால் என்ற சத்து இரத்தத்தில் அதிகமாகி, இரத்தக் குழாய்கள் தடித்து விடுகின்றன. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். எனவே தான் மாமிசம் உண்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
மேற்குறிப்பிட்ட யோகப்பயிற்சியை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயிற்சி செய்தால் விரைவில் கட்டுக்குள் வரும். தொடர்ந்து பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் அறவே நீங்கும்.
இரத்த அழுத்தம் இல்லாதவர்களும் அவசியம் இதனைப் பயிற்சி செய்யுங்கள். உங்களது பண்புகள் மாறும். மனதில் அமைதி நிலவும். எவ்வளவு வயதானாலும் இரத்த அழுத்தம் வராது. இரத்த அழுத்தத்தினால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் வரும். கண் பார்வை இழக்கச் செய்யும். சிறுநீரகம் பாதிக்கும். எனவே அனைவரும் இந்த யோகப்பயிற்சியை செய்து, இரத்த அழுத்தம் வராமல் வளமாக வாழ்வோம்.