02
Oct
ஆரோக்கியம் நம் கையில் – 004
பெண்களின் இளமைக்கும், ஆண்களின் வலிமைக்கும் அற்புத ஆற்றல் தரும் பவன முக்தாசனம்.
இளமை
உலகில் உள்ள எல்லா மனிதர்களும், ஆண், பெண் அனைவரும் இளமையுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். தவறில்லை. ஆனால் இளமை என்றால் என்ன? அதன் முழு அர்த்தம் புரிவதில்லை மனிதர்களுக்கு ! ஆம். கண்டதை உண்டு மகிழ்கின்றனர். உடற்பயிற்சி செய்வதில்லை. குடிப்பழக்கம் புகை பிடிப்பது போன்றவற்றால் உடல் உள் உறுப்புகள் ஒழுங்காக இயங்குவதில்லை. முடி கொட்டுகின்றது. இளம் வயதில் நரை வருகின்றது. உடன் தலைமுடிக்கு டை அடித்து கருப்பாக்கிவிடுகின்றனர். நல்ல விலை உயர்ந்த ஆடை, அணிகலன்களை அணிந்து, நல்ல முகப்பூச்சுப்பொடி, வாசனை திரவியம் அணிந்து கம்பீரமாக நான் இளமையுடன் இருக்கிறேன் என்று நினைத்து நடக்கின்றனர்.
ஆனால் உடல் உள் உறுப்புகள் குறிப்பாக இதயம், சிறுநீரகம், கணையம், நுரையீரல் முதலியவைகள் பாதிக்கப்படுகின்றது. அதனால் மாடிப்படி ஏற முடியவில்லை. மூச்சு வாங்குகின்றது. என்ன தான் முகப்பூச்சுப்பொடி போட்டாலும் முகத்தில் பொலிவு இல்லை. உடலில் சோர்வு, மனதிலும் சோர்வு, ஆக இளமை என்பது முடியில் டை அடிப்பது, விலையுயர்ந்த ஆடை ஆபரணம் அணிவதில் இல்லை என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
யாருடைய உடல் உள் உறுப்புகள் குறிப்பாக சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாக உள்ளதோ, வாயு கோளாறு இல்லாமல் உள்ளதோ, உடல் எடை அதிகமாகாமல் உள்ளதோ, இருதயம், நுரையீரல் சிறப்பாக இயங்குகின்றதோ அவர்கள் தான் இளமையோடு இருக்கின்றார்கள் என்று அர்த்தம். சிறுவயதில் உடல் உள் உறுப்புகள் சிறப்பாக இயங்கும். அதே இயக்கம் எண்பது வயதிலும் சிறப்பாக இயங்க வேண்டும். இதுவே இளமை. குழந்தை பருவத்தில் குழந்தை சுறுசுறுப்பாக துள்ளி குதித்து விளையாடும். அதே விளையாட்டு, சுறுசுறுப்பு மனதில் உற்சாகம் எண்பது வயதிலும் இருக்க வேண்டும். இதுவே இளமை, உடல் உள் உறுப்பும், மனதும், என்றும் இளமையாக இருக்க என்ன வழி? அதுவே யோகக் கலையாகும்.
பல வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்த பவன முக்தாசனத்திற்கு மிக அற்புதமான சிறப்புகள் உள்ளன.
பெண்களுக்கு
பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு இளமையாக இருப்பார்கள். குழந்தை பிறந்த பின்பு அடிவயிறு பெரிதாகி வயதான தோற்றம் ஏற்படும். அவர்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாததால் வயிற்று உள் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும். என்ன செய்வது என்று தெரியாமல் பல ஆங்கில மாத்திரைகளை உடல் எடைக் குறைப்புக்கு உட்கொண்டு அவதியுறுகின்றனர். அவர்கள் இந்த பவன முக்தாசனத்தை செய்தால், பிரசவித்த பெண்களின் அடிவயிற்று பெருக்கத்தை குறைத்து, வயிற்று உள் உறுப்புகள் மிகச் சிறப்பாக இயங்கும். நரம்பு மண்டலம். சிறப்பாக இயங்கும். அதனால் இளமையுடன், சுறுசுறுப்பாக அழகாக பெண்கள் வாழ முடியும்.
வாயு கோளாறு நீங்கும்
மனித உடலில் முக்கிய வாயுக்கள் பிராணன், அபாணன், வியாணன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்து வாயுக்கள் செயல்படுகின்றது. இந்த பத்து வாயுக்களும் அதனதன் சமமான விகிதத்தில் செயல்பட்டால், மனித உடலில் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் வராது. என்றும் இளமையுடன் வாழலாம். சுறுசுறுப்பாகத் திகழலாம். ஆனால் எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் உண்கின்ற உணவின் தன்மைக்கேற்ப, எண்ணும் எண்ணத்திற்கேற்ப உடலில் வாயுக்கள் சமமாக இயங்காது. அதனால் அஜீரணக்கோளாறு ஏற்படும். உடல் மற்ற உள் உறுப்புகள் பாதிக்கப்படும். நீங்கள் பவனமுக்தாசனம் செய்தால் வாயுக்கள் அனைத்தும் சிறப்பாக இயங்கும். அதனால் உடல் உள் உறுப்புகள் சிறப்பாக இயங்கும். இளமையுடன் வாழலாம்.
வயிற்று புற்று நோய் நீக்கும்
இன்று எண்ணற்ற மக்கள் வயிற்றில் புற்றுநோய் வந்து அவதிப்படுகின்றனர். குடலில் புற்றுநோய், கர்ப்பபையில் புற்றுநோய் வந்து அல்லல்படுகின்றனர். இதற்குக் காரணம் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது தான். அதனால் தான் அல்சர், புற்றுநோய் வருகின்றது. பவனமுக்தாசனம் வயிற்றில் சுரக்கும் அதிக அமிலத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அதனால் அல்சர், புற்றுநோய் வராது.
மலச்சிக்கல் நீங்கும்
மனித உடலில் கழிவுகள் ஒழுங்காக வெளியேறாவிட்டால் மனிதனுக்கு பல வகையான வியாதிகள் வருகின்றது. நிறைய மனிதர்கள் மலச்சிக்கலினால் அவதிப்படுகின்றனர். பவனமுக்தாசனம் அடிவயிற்றுப் பகுதி, மலக்குடல் பகுதி அமுக்கப்படுவதால் மலச்சிக்கல் நீங்கி மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்கின்றது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பயிற்சி செய்தால் மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் இல்லாதவர்கள் பயிற்சி செய்தால் எவ்வளவு வயதானாலும், மலச்சிக்கலில் சிக்காமல் சிறப்பாக வாழலாம்.
மாரடைப்பு நோய் வராது
பவன முக்தாசனம் நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது. அதனால் ராஜ உறுப்புகளில் ஒன்றான இருதயம் பாதுகாக்கப்படுகின்றது. மாரடைப்பு (Heart Attack) வராமல் தடுப்பது மட்டுமின்றி நமது இதயம் சிறப்பாக இயங்க வழி வகை செய்கின்றது. இன்று மிகச் சிறிய வயதிலேயே இதயக்கோளாறு, இதய வலியால் மக்கள் உயிர் பிரியும் அவல நிலை உள்ளது. கண்களால் பார்க்கின்றோம். தினமும் தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் வண்டியில் சத்தம் கொடுத்துக் கொண்டு எத்தனை மனிதர்களை இருதய வலி என்று ஏற்றிச் செல்கின்றார்கள். பெரிய மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று அவசரமாக நோயாளியை அழைத்துச் சென்றால், நோயாளியை பார்க்கும் முன், அவர் எங்கு வேலை செய்கின்றார், என்ன பதவி, என்ன சம்பளம், எவ்வளவு இன்சூரன்ஸ் (Mediclaim) போட்டுள்ளார் என இதைப் பார்த்து அதற்கேற்ப நோயாளி சாதாரண நெஞ்சுவலியாக இருந்தாலும், ஆஞ்சியோ செய்து அல்லல்படுத்தி Rs. 3 Lakhs Package, Rs.5 Lakhs Package என்று கூறி பணத்தை பறிக்கும் மருத்துவமனைகள் ஏராளம் உள்ளது. நான் எல்லா மருத்துவமனையும் இப்படி தான் என்று சொல்லவில்லை. நாட்டில் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் நிறைய மருத்துவமனைகள் உள்ளன. இது வருந்தத்தக்க விஷயம். இதில் மாட்டாமல் வாழ அனைவரும் பவனமுக்தாசனம் செய்து இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பவன முக்தாசனத்தின் மற்ற பலன்கள்
- மூலவியாதி நீங்கும்.
- இரத்தக் கோளாறுகள் நீங்கும்.
- குடல் வால்வுக் கோளாறுகள் நீங்கும்.
- கருப்பை கோளாறுகள் பெண்களுக்கு நீங்கும்.
- அதிக வயிற்றுத்தசையை குறைக்கின்றது.
இவ்வளவு பலன் தரும் பவனமுக்தாசனத்தை எப்படிச் செய்வது என்பதை அறிய ஆவலாக உள்ளீர்கள். இதோ செயல்முறை விளக்கம்.
பவன முக்தாசனம் செயல்முறை
- தரையில் விரிப்பில் நேராகப் படுத்துக் கொள்ளவும்.
- வலதுகால் முட்டிப் பகுதியில் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, வயிற்றை நோக்கி அழுத்தவும்.
- இடது காலை மடிக்காமல் தரையில் நேராக வைத்து தலையை உயர்த்தி எழுந்து முகவாய் கட்டையை வலதுகால் முட்டியை நோக்கிக் கொண்டு வந்து சேர்க்கவும்.
- மூச்சை இழுத்துக் கொண்டு வந்து மூச்சடக்கி 10 முதல் 15 விநாடிகள் இருந்துவிட்டு பின் விரிப்பின் மீது படுக்கவும்.
- பின் காலை மாற்றி செய்யவும்.
- வலது, இடதுகால் என மாற்றி மூன்று முறைகள் செய்து பின் ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
இந்த பவன முக்தாசனம் செய்வதால் எவ்வளவு உடல் உள் உறுப்புகள் பலன் பெறுகின்றன பார்த்தீர்களா! என்றும் இளமையாக வாழவும், சுறுசுறுப்பாக திகழவும், இராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கவும் பயன் அளிக்கின்றது.
பெண்களுக்கு அதிக பலன் கிடைக்கின்றது. வாயு கோளாறு, மலச்சிக்கல் நீங்குகின்றது.
இந்த ஆசனம் மட்டும் பயிற்சி செய்தாலே அவ்வளவு அற்புத பலன்களை அடையலாம். இதனுடன் பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். பசி இல்லையெனில் சாப்பிட வேண்டாம். காலை, மதியம் சாப்பிட்டு இரவு சாப்பாட்டை மாலை 6.00 மணிக்குள் மிகக்குறைவாக எடுத்துக் கொண்டால் உடலில் நோயே இருக்காது. குறிப்பாக வாயு தொந்தரவு, வயிற்றுப் பிரச்சனை நீங்கும்.
உணவு
மனித ஆரோக்கியத்திற்கு யோகாசனம் ஒரு கண், உண்ணும் உணவு மற்றொரு கண். இருவேளை காலை, மதியம் உணவு உண்ணுங்கள். முதலில் இரவு 7.00 மணிக்குள் அரை வயிறு உண்ணுங்கள். பின்பு மாலை 6.00 மணிக்கு அரைவயிறு உண்ணுங்கள். சில மாதங்கள் கழித்து இரவு உணவே வேண்டாம். விட்டு விடுங்கள். உங்களுக்கே தெரியும் காலையில் மிகச் சுறுசுறுப்பாக எழலாம். இரவு தூங்கும் பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். இரவு 11.00 மணிமுதல் காலை 3.00 மணி வரை உடல் தூக்கத்தில் இருக்க வேண்டும். ஒருவர் பசியே இல்லை என்றார். எப்படி சாப்பிடுகிறீர்கள் என்றேன். காலை எழுந்தவுடன் பத்து பிஸ்கட், பால், பின்பு 7.00 மணிக்கு 5 வடை, பின் 8.30 மணிக்கு 6 தோசை, மதியம் 1.00 மணிக்கு முழு சாப்பாடு, 3.00 மணிக்கு வடை5, மாலை முறுக்கு டீ, இரவு 7.00 மணிக்கு ஐந்து சப்பாத்தி என்று கூறிவிட்டு மூன்று மணிநேரம் பசி இல்லாமல் சாப்பிடுகிறேன் என்றார். இது எப்படியிருக்கு! இந்த மாதிரி சாப்பிட்டால் பசியிருக்காது. ஏப்பம் வரும். தொந்தி பெரிதாகும். மூச்சு மண்டலம் கெட்டுவிடும். எண்ணங்கள் சீராக இருக்காது.
யோகாசனம் செய்பவர்கள் உணவில் சரியான முறையைக் கையாண்டால் தான் பலன் நிச்சயம் கைகூடும்.
மாதம் ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிட்டு பாருங்கள். மாதம் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் அல்லது இருநேரம் உணவு உண்ணாதீர்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை முழு நாள் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்தி இருந்து பாருங்கள். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
வலுக்கட்டாயமாக உண்ணாமல் இருக்க வேண்டாம். உடலில் பசி தென்பட்டால் மிதமான பழங்கள் உண்டு அமைதியாக இருந்தால் நம் உடலில் உள் இயங்கும் இயக்கங்களை புரியலாம். தொழிற்சாலையில் ஞாயிறு விடுமுறை. எல்லா இயந்திரத்திற்கும் ஞாயிறு ஒரு நாள் ஓய்வு.
பிறந்தது முதல் இன்றுவரை நாம், நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஓய்வு கொடுக்கவில்லையென்றாலும் OVER LOAD கொடுத்து கெடுத்து வைத்துள்ளோம்.
நம் உடல் ஆரோக்கியம் நம் வாயின் மூலம், வயிற்றுக்குள் எதை, எப்படி எந்த சமயத்தில் கொடுக்கிறோம் என்பதைச் சார்ந்தே உள்ளது. எனவே நம் வயிறு இரவு தூங்க வேண்டும். நம் உடல் முழுக்க நல்ல ENERGY கிடைக்கும்.