உங்கள் வீட்டுப் பிள்ளை படிப்பிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கணுமா?
இன்றைக்கு ஒவ்வொருவர் வீட்டிலும், என் குழந்தை ஒழுங்காக படிப்பதில்லை, கவனக்குறைவாக இருக்கிறான், என் பொண்ணுக்கு ஞாபகசக்தி ரொம்ப குறைவு, பாடங்களை புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறாள், டியூஷன் வைத்தும் மார்க் குறைவாக வாங்குகிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று எக்கச்சக்க குறைகளை பெற்றோர்கள் கூறுவதைக் கேட்க முடியும் இந்த பிரச்சனைகளை யோகாவால் சரிசெய்ய முடியும். உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் யோகாவால் முடியும். விரிவாகவே சொல்கிறேன்.
இன்றைய மாணவர்களின் நிலை
இன்றைக்கு படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது நிறைய மாணவர்களுக்கு தெரிந்திருப்பதால் நன்றாகவே படிக்கிறார்கள். ஆனால் பயம், டென்ஷன், கவலை, சோம்பல் முதலியவற்றால் படித்தது மறந்து விடுகிறது என்கிறார்கள்.
சில மாணவர்களுக்கு படிப்பில் விருப்பமே வருவதில்லை. தகாத நண்பர்களின் சகவாசத்தால் சினிமா, இன்டர்நெட் முதலியவற்றில் பாலியல் சம்பந்தமான தகாத காட்சிகளைப் பார்த்து, மனதில் காமம் சூழ்ந்தவராய், படிப்பில் நாட்டம் இல்லாதவர்களாய் போய்விடுகிறார்கள்.
இன்னும் சில மாணவர்கள் போதை மருந்து மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். சமீபத்தில் கூட மாணவி ஒருவர், பள்ளி சீருடையுடன் குடித்துவிட்டு தெருவில் கலாட்டா செய்வதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்களே.
இதேபோல, நாமக்கல்லில் ஒரு கொலை வழக்கில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கைது செய்த நிகழ்வையும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.
இந்த நேரத்தில் தொலைக்காட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். நாட்டில் எவ்வளவோ நல்ல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த மாதிரி வேதனை தரும் நிகழ்வுகளை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்காதீர்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன்.
மேலே சொன்னது போன்ற நிலைகள் மாற வேண்டுமென்றால் மாணவர்களுக்கு முதலில் அளிக்கப்பட வேண்டிய கல்வி, யோகக்கலையான யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவைதான் யோகக்கல்வி ஒன்றுதான் மனிதன் மனதில் உள்ள விலங்கின பண்பை நீக்கி, மனிதப் பண்புகளையும், தெய்வீக பண்புகளையும் வளரச்செய்யும். இதனை மாணவப் பருவத்திலேயே கற்றுக் கொடுத்து விட்டால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். உங்கள் பிள்ளைகளும் திசைமாறிச் செல்ல மாட்டார்கள்.
மாணவர்களுக்கு எளிய நாடி சுத்தி பயிற்சி
- விரிப்பில் கிழக்கு முகமாக வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
- கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
- இடது கை சின் முத்திரையில் இருக்கவும்.
- வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு, இடது நாசி வழியாக மிக மெதுவாக ஆழமாக மூச்சை இழுக்கவும்.
- பிறகு மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- மூச்சை உள்ளே இழக்கும்போது அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்ல குணங்கள் உடலுக்குள் வருவதாக எண்ணவும்.
- மூச்சை வெளிவிடும் போது நம்மிடம் உள்ள தீய குணங்கள், பொறாமை, கோபம், டென்ஷன், சோம்பல் போன்றவை உடலை விட்டு வெளியேறுவதாக எண்ணவும் இது போல் பத்து முறை பயிற்சி செய்யவும்.
- பின் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசி வழியாக மிக மெதுவாக ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- மூச்சை இழுத்து விடும்போது மேற்கூறியவாறு நினைத்து பத்து முறை பயிற்சி செய்யவும்.
- இப்போது இரு கைகளும் சின் முத்திரையில் வைத்துக்கொண்டு, கண்களை மூடி இரு நாசி வழியாகவும் மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- இப்படி பத்து முறை செய்யவும்.
- பிறகு கீழ்க்கண்ட வாசகங்களை மனதுக்குள் மூன்று முறை உச்சரிக்கவும்.
நான் எனது தாய், தந்தையரை மதித்து, அவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பேன்.
நான் எனது ஆசிரியர்களை மதிப்பேன். நான் கோபப்பட மாட்டேன்.
நான் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன். நான் எப்போதும் ஒழுக்க நெறியில் வாழ்வேன்
என்னுள் மறைந்திருக்கும் ஆத்ம சக்தியால் என்னால் எதையும் சாதிக்கமுடியும்.
மேற்கூறியவற்றை மனதில் மூன்று முறை நினைத்தால் அந்த உணர்வலைகள் மிக மெதுவாக உடல் முழுவதும் பரவும்.
பலன்கள்
இந்த பயிற்சியின் மூலம், மாணவர்கள் தங்களை அறியாது மனதுக்குள் சேர்த்து வைத்து இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நிச்சயமாக அவர்களின் உடலை விட்டு, உள்ளத்தை விட்டு வெளியேறும். இந்த யோகாவை செய்யச் செய்ய ஒவ்வொரு நாளும் நேர்மறை எண்ணங்கள் உங்கள் பிள்ளையின் உள்ளத்தில் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை பிறக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறான செயல்களில் ஈடுபடாமல் உங்கள் பிள்ளைகள் வாழ்வார்கள்.
மாணவர்களின் ஞாபக சக்தி வளர அர்த்த சிரசாசனம்
- விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- அதிலிருந்து எழுந்து உச்சந்தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்களையும் கால் பெருவிரல்கள் தரையில் படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும்.
- இந்த நிலையில் சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.
- இதேபோல் மூன்று முறை செய்யவும்.
பலன்கள்
- பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும்.
- படித்தது மனதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் போது ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும்.
- பரிட்சை எழுதும் போது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
- சோம்பல் நீங்கும்.
- மூளை செல்கள் புத்துணர்வு இயங்கும்.
- தவிர இந்த ஆசனத்தை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும்.
மாணவர்களை சுறுசுறுப்பாக்கும் தடாசனம்
- விரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும்.
- இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி இரு கைகளையும் சேர்த்து கும்பிட்ட நிலையில் நிற்கவும்.
- இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து இரு குதிகால்களையும் உயர்த்தி, கால் விரல்களில் நிற்கவும்.
- மூச்சை அடக்கி இப்படியே பத்து வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- இதேபோல் மூன்று முறை செய்யவும்.
- இந்த தடாசனத்தை கை விரல்கள் ஒன்றையொன்று பின்னி, விரல்கள் வானத்தைப் பார்த்தவாறு வைத்து, கால்களை உயர்த்தி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
- மாணவர்கள் சுறுசுறுப்பாவார்கள்.
- புத்தகங்களை சுமப்பதால் வரும் கழுத்து வலி, முதுகு வலி போகும்.
- அதிகமாக படித்தாலும் டென்ஷன் ஏற்பட்டு கழுத்து வலி வரும்.
- மனச்சோர்வு ஏற்படும்.
- இந்த ஆசனம் செய்தால் முதுகு வலி, கழுத்துவலி இரண்டும் நீங்கும்.
- குட்டையான மாணவர்கள் உயரமாக வளர்வதற்கும் துணைபுரியும் இந்த ஆசனம்!
பெற்றோர் கவனத்திற்கு!
மேலே நான் கற்றுக்கொடுத்துள்ள யோகக்கலைகளை உங்கள் குழந்தைகளுக்கு முதல் கல்வியாக கற்றுக்கொடுங்கள். இதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வழங்கும் பெரிய சொத்து! ஆம் இன்றைய உலகில் ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும், ஆரோக்கியத்தையும் உங்கள் பிள்ளைகளுக்கு மாணவப் பருவத்திலேயே அழித்துவிட்டால் போதும். அவர்களின் பிற்கால வாழ்க்கை வளமாக இருக்கும். இது உண்மை.