உச்சி முதல் பாதம் வரை நலமளிக்கும் நடராஜ ஆசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 23
கால் பாதத்தில் ஆரம்பித்து தலை வரை பிரச்சனைகள் உள்ள மனிதர்கள் இன்று ஏராளம். காரணம் வாழும் கலை எப்படி என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு எண்ணமும் நமது உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. மன அமைதியிருந்தால் தான் உடல் அமைதி பெறும். இதையே மாற்றி யோசித்தால் முதலில் உடல் அமைதி. பிறகு மன அமைதி கிடைக்கும். உடலில் தலை முதல் கால் வரையில் உள்ள உறுப்புகள் நன்றாக இயங்கினால் தான் நம் மனமும் அமைதியாயிருக்கும்.
உடல் அமைதிக்கு யோகாசனங்களை நம் சித்தர்கள் அளித்துள்ளார்கள். உள் அமைதிக்கு தியானத்தை யோகத் தந்தை பதஞ்சலி மகரிஷி அருளியுள்ளார்.
நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் நிறைய ஆசனங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கும் தலை முதல் கால் வரை உள்ள உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்ய ஏற்ற ஆசனம் நலம் தரும் நடராஜ ஆசனம்.
இந்த ஒரு ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை செய்யுங்கள்.
நடராஜ ஆசனம் செய்முறை:
- விரிப்பில் நேராக நிற்கவும்.
- இரு கால்களையும் நன்றாக அகற்றவும்.
- வலது கால் பாதத்தையும் இடது கால் பாதத்தையும் வலப்பக்கம் இடப்பக்கம் பார்க்கும்படி படத்திலுள்ளது போல் வைக்கவும்.
- கால்களை தொடையை நேராக பக்கவாட்டில் படத்திலுள்ளது போல் வைக்கவும்.
- இரு கைகளையும் பக்கவாட்டில் மடக்கி கை விரல்கள் வானத்தைப் பார்ப்பது போல் வைக்கவும்.
- சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கால்களை கைகளை நன்றாக சேர்க்கவும்.
- இதே போல் மூன்று முறைகள் செய்யவும்.
பலன்கள்:
- தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சீராக இயங்குகின்றது.
- தலைவலி வராது.
- தோள்பட்டை வலி நீங்கும்.
- கைகள் வலுப்பெறும்.
- அஜீரணம், பசியின்மை நீங்கும்
- மூலம் நீங்கும்
- மலச்சிக்கல் நீங்கும்.
- தொடை தசைகள் வலுப்பெறும்
- அழகான தோற்றம் உண்டாகும்
- கால், பாதவலி நீங்கும்
- நரம்புத் தளர்ச்சி நீங்கும்
- மூட்டுகள் பலம் பெறும்
- மூட்டுவலி, மூட்டு தேய்மானம் வராது
- நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
- கழிவுகள் வெளியேறும்
- சுறுசுறுப்பாக திகழலாம்
- முதுகு கூன் நிமிரும். முதுகெலும்பு வலுப்பெறும்
- உடல் வசியம் ஏற்படும்
இவ்வளவு நலன்கள் இந்த ஒரு ஆசனத்தில் இருப்பதால் தான் இதனை நலம் தரும் நடராஜ ஆசனம் என்று அழைக்கின்றோம்.
நமது சித்தர்கள் இந்த ஆசனத்தின் மூலம் மனித உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளுக்கும் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும் என்கிறார்கள்.
தலைமுடி நரைக்காமல் இருக்க
வெள்ளை பூ பூக்கும் கரிசலாங்கன்னியின் இலைகளை நன்கு மசித்து அடை தட்டி வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் அடையை ஊறவைத்து தேய்த்தால் முடி கறுப்பாக அழகுடன் வளரும்.
தலைவலி நீங்க
ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்கவும்.
கண் நோய் நீங்க
முருங்கை கீரையை உணவில் சேர்க்கவும்.
கீழாநெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு சமஅளவு கலந்து நல்லெண்ணையுடன் காய்ச்சி தலை முழுகி வந்தால் கண்பார்வை நன்கு தெரியும்.
காதுவலி நீங்க
ஒரு துண்டு சுக்கை தோல் சீவி 250 மில்லி நீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்சி அத்துடன் பால் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிடவும்.
வாய்ப்புண் குணமாக
மணத்தக்காளி கீரையை சாறெடுத்து வாயில் ஊறவைத்து கொப்பளிக்கவும்.
ரோசாப்பூ இதழை நீரில் காய்ச்சி குடிநீராக்கி வாய் கொப்பளிக்கவும்.
பல் வலி தீர பலம் பெற
சுக்கை இழைத்து வலிக்கின்ற பற்களின் மீது பூசி வரவும்.
கருவேலம்பட்டை பற்பொடியால் பல் துலக்கவும்.
ஜலதோஷம் நீங்க
சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகிய கடை சரக்குகளை சம அளவு எடுத்து கசாயம் செய்து 3 வேளை உட்கொள்ளவும்.
நெல்லிக்கனி லேகியம் காலை, மாலை உண்ணவும்.
தொண்டை வலி நீங்கி வளம் பெற
அதிமதுரத் துண்டை நசுக்கி வாயில் அடக்கி வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து வரும் உமிழ்நீரை உட்கொள்ளவும்.
பசும்பாலில் கற்கண்டு மிளகு கலந்து காய்ச்சி குடிக்கவும்.
குரல் இனிமைக்கு
முற்றிய மாவிலை நான்குடன் இருநூறு மி.லி. நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரவும்.
முகம் பொலிவு வசீகரம் பெற
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு நான்கு நாட்கள் கழித்து ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 45 நாட்கள் உண்ணவும். முகம் பொலிவும் அழகும் பெறும்.
நுரையீரல் பலம் பெற
தூதுவளை இலையை சாறாக்கி அத்துடன் சம அளவு நெய் கலந்து காய்ச்சி எடுத்து தினமும் காலை, மாலை இருவேளையும் ஒரு கரண்டி சாப்பிடவும்.
வில்வ இலையில் சூரணம் செய்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து காலை, மாலை தினமும் உண்ணவும்.
குடல், வயிறு சுத்தமாக
கொய்யா இலை கொழுந்தினை மென்று தின்று பின் இலகுவான உணவினை உண்ணவும். கொய்யாபழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளவும். பப்பாளி பழம் உணவில் எடுக்கவும்.
சிறுநீரகம் சிறப்பாக இயங்க
பாகற்காய் உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
இளநீர் குடிக்கவும்
வெந்தயத்தை பொடி செய்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி உண்ணவும்.
பொன்னாங்கன்னி கீரை உணவில் சேர்க்கவும்.
மூலநோய் நீங்க
வாழைப் பிஞ்சுகளை உணவில் சேர்க்கவும்.
அருகம்புல்லினை அரைத்து அதன் சாற்றைப் பசும்பாலில் கலந்து குடிக்கவும்.
மாதுளம் பழம் உண்ணவும்.
சின்ன வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி உண்ணவும்.
கால்வலி நீங்க
கால், பாதவலி நீங்க மூட்டு வலி நீங்க ஒரு டப்பில் சுடு தண்ணீர் விட்டு அதில் கல் உப்பு போட்டு கலக்கி அந்த தண்ணரில் கால் பாதங்கள் மூழ்குமளவு வைத்து 5 நிமிடமிருக்கவும். வாரம் இருமுறை செய்யவும்.
உச்சி முதல் பாதம் வரை உடல் உறுப்புகள் நலமாக இயங்க நலம் தரும் நடராஜ ஆசனமும் மேற்குறிப்பிட்ட சித்த வைத்தியத்தையும் உங்களால் முடிந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். நலமாக வாழலாம்.