ஒவ்வொருவரும் வாழ்வில் தனக்கு பல குறைகள் உள்ளதாக வருந்துவதுண்டு. ஒருவர் தனக்கு மனைவி வாய்த்தது சரியில்லை; அது பெரிய குறை என்பார். மற்றொருவர், தனது பிள்ளை, தான் சொல்வதைக் கேட்பதில்லை என்பார். மற்றொருவர், தான் நினைத்தபடி வேலை கிடைக்கவில்லையே என்பார். இப்படி பல குறைகளை சொல்பவர்களின் உடலில் எவ்வளவு குறைகள் உள்ளன? அவற்றைப் பற்றி யாரும் குறைபட்டதாகத் தெரியவில்லை!
உடம்பு மெஷின் ஓடும் அளவு ஓடட்டும் என்று தான் இருக்கின்றனர். நமது உடலும் எவ்வளவோ போராடி, தனது பணியைச் செய்கிறது. ஆனால், மனிதர்களின் மனதில் இருக்கும் குறையினாலும் அவர்கள் உடல் உள் உறுப்புகளின் இயக்கத்திற்குத் தகுந்த பயிற்சி கொடுக்காததினாலும், உடல் தன செயலை இழக்கிறது. வலிகளும் நோய்களும் வருகின்றன. அப்பொழுதுதான் மனிதன் மிகவும் வருந்துகிறான். மற்ற குறையெல்லாம் மறந்து, முதலில் என் உடலில் உள்ள குறை நீங்கினால் போதும் என்கிறான். ஆக, முதலில் நாம் குறைவில்லா வாழ்வு வாழ, நமது உடல் நலமாக, எந்த குறையும் இன்றி வேலை செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி, மஹரிஷி பதஞ்சலியின் அஷ்டாங்க யோகக்கலை ஒன்றேயாகும்!
உதாரணமாக, குறைவில்லா வாழ்வு தரும் குக்குடாசனம் பயின்றால், நிறைவான வாழ்வு வாழ முடியும். இந்த ஆசனத்தை, சிறுவர்கள், பள்ளிப் பருவத்தில் மிக எளிமையாகப் பயின்று விடலாம். மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஆனால், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் அவர்களை செய்யச் சொல்லவும்.
பெரியவர்கள் முதலில் பொறுமையாக பத்மாசனம் போட்டுப் பழகவும். பிறகு நன்றாக உடல் வளையும் தன்மை வந்ததும், யோகா ஆசிரியரின் உதவியுடன் ஒரு முறை நேரில் கற்றுக் கொண்டு, பிறகு நிதானமாக செய்து பார்க்கவும்.
குக்குடாசனம் செய்முறை
- முதலில் பத்மாசனம் போடவும்.
- ஒவ்வொரு கையையும் தொடை இடுக்கில் மிக மெதுவாக நுழைக்கவும்.
- பிறகு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றியபடி மெதுவாக எழவும்.
- இதே நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.
- பிறகு கீழே அமர்ந்து, மெதுவாக கால்களை அகற்றி, கைகளை சாதாரணமாக வைக்கவும்.
- பின்னர் ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மறுபடியும் இதே போல ஒருமுறை செய்யவும்.
- பின்னர் மறுபடியும் மூன்று முறை பயிற்சி செய்யவும்.
குறிப்பு: சற்றே கடினமான ஆசனம் இது. எனவே அவசரப்படாமல் நிதானமாக இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்.
குக்குடாசனம் பலன்கள்
கல்லீரல் மிகச் சிறப்பாக இயங்கும்
கல்லீரல் மிகச் சிறப்பாக இயங்குவதோடு, அதிலுள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்!
மண்ணீரல் சக்தி பெறும்
நமது உடலில் உள்ள மண்ணீரல், சக்தி பெற்று நன்றாக இயங்கும்.
இதயம் பாதுகாக்கப்படும்
ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் இந்த ஆசனத்தைப் பயின்றால், வளர்ந்தபிறகு அவர்களின் இதயமும் நுரையீரலும் பாதுகாக்கப்படும். இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.
முழங்கால் வலி வராது
முழங்கால்வலி, மூட்டுவலி வராது. இருந்தாலும் நீங்கும். தசவாயுக்களும் சிறப்பாக இயங்கும்.
தோள்பட்டை வலி நீங்கும்
தோள்பட்டை வலி நீங்கும், தோள்பட்டை இறங்கியிருந்தால் சரியாகும். எனவே உடல் அழகுடன் இளமையாக நீங்கள் வாழலாம்.
கை வலி சரியாகும்
கை, கால்கள் நன்கு பலம் பெறும். கைவலி இருந்தால் சரியாகும். சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும்.
மனம் ஒருநிலைப்படும்
மனம் ஒரு நிலைப்படும். ஞாபகசக்தி வளரும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆசனத்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்!
சுறுசுறுப்பு கிடைக்கும்
குக்குடம் என்றால் கோழி என்று பொருள். கோழி எப்படி காலையில் சுறுசுறுப்பாக எழுந்து கூவி, அனைவரையும் எழுப்பி சுறுசுறுப்பாக்குகிறதோ, அதே சுறுசுறுப்பு இந்த ஆசனம் செய்பவருக்கும் கிடைக்கும்!
நரம்பு மண்டல இயக்கம் சிறப்பாகும்
நரம்பு மண்டல இயக்கம் மிகச் சிறப்பாகும். கை கால் நடுக்கம், உடல் நடுக்கம் வராது.
உணவுமுறை எப்படி?
- இந்த ஆசனம் செய்வதுடன், கருணைக்கிழங்கை வாரம் ஒருமுறை உணவில் சேர்க்கவும்.
- வேர்க்கடலையை வாரம் இரு நாட்கள் சிறிது சாப்பிடவும்.
- பெருநெல்லிக்கனி ஜீஸ் அல்லது இரு கனிகளை தினசரி உணவில் எடுக்கவும்.
- வாரம் ஒருமுறை பேரிக்காய் உண்ணவும்.
- பீட்ரூட், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்துமல்லித் தழை, கேரட், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிதளவு மிளகுத்தூளும் உப்பும் சேர்த்து, வெஜிடபிள் சாலட் ஆக வாரம் ஒருமுறை, ஒரு வேளை உணவாக உண்ணவும்.
மேற்சொன்ன முறையில் உணவு உண்டு, ஆசனமும் செய்து வந்தால், உடல் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆரோக்கியமாக வாழலாம்!