உடல் பருமனை குறைக்கும் யோகா – முத்திரை
ஆரோக்கியம் நம் கையில் – 22
பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி கழுத்து முதல் கால்வரை சதை அதிகமாக இருந்தால் எப்படியிருக்கும். நமக்கே நம்மை பிடிக்காது. இப்படி சதை அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன.
- உணவில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது, பசியில்லாமல் உண்பது, அதிகமாக உண்பது, இடைத்தீனி இடையைப் பெருக்கும்.
- திடீரென சிலருக்கு ஏதாவது நோய் வந்து அதற்கு தொடர்ந்து பல மாதங்கள் ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு அதன் பக்க விளைவாக சதை அதிகமாகலாம்.
- பகலில் உறங்குபவர்களுக்கு உடல் பருமனாகும்.
- இரவில் 10 மணிக்கு வயிறு முழுக்க சாப்பிட்டு உடன் உறங்குபவர்களுக்கு இடுப்பு சதை அதிகமாகும்.
- அளவுக்கு மீறி பகல், இரவு தாம்பத்திய உறவு கொள்பவருக்கு இடுப்பு சதை அதிகமாகும்.
- தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு, தைராய்டு குறைவாகச் சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.
- அதிகமாக எண்ணெய் பண்டம், தினமும் வடை, பஜ்ஜி, மிக்சர், ஸ்வீட் போன்ற பண்டங்களை உண்பவர்களுக்கு இடுப்பு சதை அதிகமாகும்.
- எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்து பசியில்லாமல் உணவு அதிகமாக உண்பவர்களுக்கு சதை அதிகமாகும்.
மேற்குறிப்பிட்ட எந்த வகையை சேர்ந்தவராயிருந்தாலும் இதோ உங்களுக்காக ஓர் எளிமையான யோகாசனத்தை தருகின்றோம். நம்பிக்கையுடன் செய்து சிறிது உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் போதும், இடுப்புசதை குறைந்து மிடுக்காகத் திகழலாம்.
அர்த்தக்கட்டி சக்ராசனம் செய்முறை:
- விரிப்பின் மீது இருகால்களையும் ஒன்று சேர்த்து நிற்கவும்.
- உங்கள் வலது கையை பக்கவாட்டில் உயர்த்தி, வலது காதுக்கு பக்கத்தில் ஒட்டியது போன்று நிறுத்தவும்.
- இந்நிலையில் இடது பக்கவாட்டில் வளைந்து படத்தில் உள்ளபட 15 முதல் 20 எண்ணிக்கை செய்யவும்.
- மூச்சை இழுத்துக் கொண்டே வளையவும். மூச்சை அடக்கி 15 முதல் 20 விநாடிகள் இருந்துவிட்டு பின்னர் மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.
- பின்பு மாற்று ஆசனமாக இடது கையை உயர்த்தி செய்யவும். இப்படியாக வலப்பக்கம், இடப்பக்கம் மூன்று முறைகள் செய்யவும்.
பார்ப்பதற்கு எளிய ஆசனமாகத் தோன்றலாம். ஆனால் பலன்கள் ஏராளம்.
- பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும்.
- கல்லீரல், உணவுப்பை நன்றாக இயங்கும். இடுப்பு வலி நீங்கும்.
- உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும்.
இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். பசித்தால் மட்டும் உடல்மொழி அறிந்து உண்ணும் உணவில் முழுக்கவனம் வைத்து சாப்பிடுங்கள். பகலில் தூக்கம், இடைத்தீனி, எண்ணெய் பதார்த்தம் உண்பதை விடுங்கள். மாற்றத்தை காண்பீர்கள்.
சூரிய முத்திரை
அடுத்து ஜீரண சக்தி சரியாக இயங்காமல் நிறைய மனிதர்கள் அவதிப்படுகின்றனர். சிறுகுடல், பெருங்குடல், வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரையைக் காணவுள்ளோம்.
சிறுகுடல், பெருங்குடல், வயிற்றுப்பகுதி நன்றாக சுத்தமாக இருப்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவசியம் என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு மிக அவசியம். காரணம் அந்த வயிற்றினுள் இருக்கும் கருவறை தான் குழந்தை உருவாகும் இடம். இந்த முத்திரையை பெண்கள் பயின்றால் நிச்சயம் கருப்பையும் சுத்தமாகயிருக்கும். பிறக்கின்ற குழந்தையும் சுகப்பிரசவமாக ஆரோக்கியமாக இருக்கும்.
மனிதன் உண்ணும் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் குடலில் தங்கி குடல் அசுத்தமாகின்றது. குடலில் புளிப்புத்தன்மை அதிகமாகின்றது. குடலில் இருந்து தான் உண்ட உணவுகள் ஜீரணமாகி ரத்தத்துடன் கலக்கின்றது. குடல் சுத்தமில்லாத காரணத்தால் குடலில் உள்ள அசுத்தங்களும் ரத்தத்தில் கலக்கின்றது. அதனால் மனிதனின் எண்ணங்களும் அசுத்தமடைகின்றன. தீய எண்ணங்களை அழிக்க முடியாமல் மனிதன் அவதியுறுகிறான். யாருடைய குடல் சுத்தமாகவுள்ளதோ, அவர்கள் எண்ணங்களும் சுத்தமாக இருக்கும். உடல் உள் உறுப்புகள் எல்லாம் சுத்தமாக இருக்கும். மனதில் அமைதி நிலவும்.
சூரிய முத்திரை செய்முறை:
முதலில் விரிப்பு விரித்து கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கீழே உட்கார முடியாதவர்கள் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்.
முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். பின்பு உங்கள் மனதில் இப்பொழுது செய்யப் போகும் சூரிய முத்திரையின் மூலம் எனது சிறுகுடல், பெருங்குடல், வயிற்றுப்பகுதி சுத்தமடையப் போகின்றது. அங்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சிறப்பாக இயங்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இரு கைகளையும் இதேபோல் வைத்து செய்ய வேண்டும். இந்நிலையில் பத்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம். (படத்தை பார்க்கவும்)
முதலில் பயிற்சி செய்கின்றவர்கள் ஐந்து நிமிடங்கள் செய்யவும். படிப்படியாக பயிற்சி செய்யும் நேரத்தை பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்களாக உயர்த்தவும். செய்து முடித்தவுடன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு பின் எழவும்.
உடலில் குடல் சூடு ஏற்பட்டால், குடலில் புண் ஏற்படும். பின்பு வாய் துர்நாற்றம் ஏற்படும். பிறரிடம் பேசினால் எதிரில் நிற்பவர் முகம் சுழிப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் உடலில் சூடு அதிகமானதுதான். அதனை கட்டைவிரல் நெருப்பு தத்துவம் கட்டுப்படுத்துகின்றது. மோதிர விரல் நில தத்துவம். நமது வயிற்றுக்கு கீழ்ப்பகுதி நிலம். கட்டைவிரலினால் மோதிர விரலில் அழுத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் குறிப்பாக குடலில் உள்ள அதிக சூட்டை சமப்படுத்துகின்றது. மேலும் சிறு, பெருங்குடல் சுத்தமாவதால் பசி இல்லாமல் அவதிப்படுவோரும் இம்முத்திரையைச் செய்தால் நல்ல பலன் உண்டு.
சூரிய முத்திரையின் இதர பலன்கள்
- தொப்பை குறையும்.
- உடலில் கொழுப்பு குறையும்.
- மன அமைதி உண்டாகும்
- உடல் அதிக எடை குறையும்
- உடல் களைப்பு நீங்கும்
- உடலில் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
முத்திரையின் முழுப்பலன் அடைய சில முக்கியமான விதிமுறைகள்:
- அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுப்போக இடம் வேண்டும்.
- சாப்பிடும் பொழுது நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். அப்படிச் சாப்பிட்டால் ஒரு ஏப்பம் வரும். அதோடு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
- பசித்தால் மட்டுமே சாப்பிடவும்.
- பச்சைக் கீரை, பழவகைகள் அதிகம் சாப்பிடவும்.
- கம்பு, கேழ்வரகு, தினை, சோளம் போன்றவைகளையும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பால் அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். பிளாக் டீ, கிரீன் டீ சாப்பிடலாம்.
- குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் (குளிர்சாதனப் பெட்டியில்) வைத்த உணவுப் பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
குறிப்பாக பெண்கள் இளம் வயதினிலேயே இந்த முத்திரையைச் செய்தால் நல்ல பண்புள்ளவர்களாக, ஆரோக்கிய உடல் பெற்றவர்களாகத் திகழ்வர். அதனால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமான குழந்தையாகப் பிறக்கும்.