11
Jun
நாம் எல்லோரும் அம்மாவின் வயிற்றில் இறுக்கும் போதே யோகாசனம் செய்திருக்கிறோம் தெரியுமா? ஆச்சரியமாக உள்ளதா?
ஆம் நாமெல்லாம் குழந்தையாக தாயின் கருப்பையில் இருந்து வெளி வரும்போது முதலில் தலை தான் வெளியே வரும்; பின்பு தான் மற்ற உறுப்புக்கள் வெளியே வரும். இப்படி தலை கீழாக நிற்பது “சிரசாசனம்”. இதை செய்த்தபடியே தான் நாம் ஒவ்வொருவரும் பிறக்கிறோம். ஆசனங்களில் இதை தான் “ராஜா” என்போம்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஓரிரு வாரத்தில் இரு கால்களை மட்டும் வேகமாக உயர்த்தி ஆட்டும் அல்லவா? இது “அர்த்த ஹலாசனம்”. பிறகு கைகளையும் கால்களையும் சேர்த்து உயர்த்தும் – இது “நெகாசனம்”. அடுத்து குப்புற படுத்து இரு கால்களையும் உயர்த்தும் – இது “சலபாசனம்”. பின் குப்புற படுத்து இரு கைகளையும் ஊன்றி தலையை மேலே உயர்த்தி பார்க்கும் – இது “புஜங்காசனம்”.
பின்பு குழந்தை எழுந்து நிற்க கற்றவுடன், இரு கால் பாதங்களை மட்டும் உயர்த்தும் – இது “தடாசனம்”. குழந்தை சீராக நிற்க கற்றவுடன் மெதுவாக நிற்கும், உட்காரும்; மீண்டும் நிற்கும், உட்காரும் – இது “பஸ்கி” எனப்படும்.
சரி… யோகாசனங்கள் எப்படி வியாதியை குணமாக்கும்?
நம்முடைய உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், மூச்சோட்டம் – மூன்றும் சீராக இயங்கவில்லை என்றால் தான் பல வித வியாதிகள் வரும். யோகாசனம் செய்தால் நம் உடலில் இந்த மூன்று ஓட்டங்களும் சரியாக இயங்கும்.
நம் உடலில் பிட்டுடரி சுரப்பி, தைராய்டு சுரப்பி உள்ளிட்ட முக்கியமான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இந்த நாளமில்லா சுரப்பிகள் சுரக்கிற தன்மையில் மாறுபாடு ஏற்பட்டாலும் பல விதமான நோய்கள் வரும். யோகாசனங்கள் செய்தால் நாளமில்லா சுரப்பிகள் எல்லாம் நன்றாக இயங்கும். யோகாசனங்கள் செய்தால் நம்முடைய நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி உடலை சரியான எடைக்கு கொண்டு வரும். ஆயுளையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்க செய்யும். தைராய்டு சுரப்பியோ தனது வாழ்நாள் முழுவதும் தனது கடமையை சரியாக செய்யும். ராஜா உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும்.
இதுவரை யோகாசனம் என்றால் கடினமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். தினமும் காலை மாலை இரண்டு நேரமும் இருபது நிமிடம் செய்தால் போதும். உங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இந்த யோகாசனங்களை எவ்வளவு வயதானவர்களும் செய்யலாம். என்ன வியாதி உள்ளவர்களும் செய்யலாம். எனக்கு எந்த பிரச்சனை இல்லை என்பவர்கள் கூட யோகா செய்து வாழலாம்.
நம் பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச நாளாக கொண்டாட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார் , தவிர யோகாசனத்தின் மகிமையை குக்கிராமங்களிலும் எடுத்துரைக்கவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் , இந்த தொடரில் யோகாசனங்கள் மகிமை அதன் விதிகள் முக்கியமான நோய்கள் பற்றிய குறிப்புக்கள் அந்த நோய்களை நீக்கும் யோகாசனங்கள் ஆகியவற்றை சொல்லி தர இருக்கிறேன்.
எல்லோருமே இந்த யோகாசன பயிற்சிகளை செய்வது அவசியமே. அடுத்த இதழில் இருந்து யோககலையை கற்றுக்கொள்ள ரெடியாக இருங்கள், நிறைய யோகா ரகசியங்கள் , எளிமையான யோகா சொல்லித்தர இதோ நானும் ரெடியாகி விட்டேன் (தொடரும்)