14
Apr
அழகான பார்வை பெறுங்கள்!
அந்தக் காலத்தில் 90 வயதிலும் கண்ணாடி போடாமல் வாழ்ந்த மனிதர்கள் ஏராளம். இன்றோ 9 வயது குழந்தைகள் கூட கண்ணாடி போடுகிறார்கள். இதற்கு என்னென்ன காரணங்கள்… யோகாவில் இதற்கு தீர்வு இருக்கிறதா…. பார்ப்போம்.
கண்களில் பிரச்னை வரக் காரணங்கள்…..
குழந்தை, தாய்ப்பால் குடிக்கவில்லை என்றால்… ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் போல இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால்… மனித உடலின் கழிவுகள் சரியாக நீக்கப் படாவிட்டால்… உடலுக்கு தேவையான நீர் அருந்தா விட்டால்… ஓடுகிற பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்து வந்தால்… அளவுக்கு மீறி டி.வி., சினிமா, கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும். தவிர, மன அழுத்தம், சத்தான உணவுகள் சாப்பிடாதது, ஆங்கில மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகளாலும் கண்கள் பாதிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் உடலுறவு கொண்டாலும், உயிர் ஆற்றல் விரயமாகி முதலில் பாதிப்பது கண்கள்தான். 15 நாட்களுக்கு ஒருமுறை இணைவதே நல்லது.
இன்றைக்கு மாணவப் பருவத்திலேயே நெட்டில் பார்க்கக்கூடாத அடல்ட் ஒன்லி வீடியோக்களைப் பார்த்து, தங்கள் உடலில் உள்ள உயிர் சக்தியை இளைஞர்கள் இழந்து விடுகிறார்கள். விளைவு கண் பார்வை மங்கி கண்ணாடி போடும் நிலை உருவாகிறது.
குழந்தை உண்டாகியவுடன் 9 மாதம் வரை பாலியல் சம்பந்தமான படங்கள், பாடல்களை கேட்டாலும் வயிற்றில் உள்ள குழந்தையும் இந்த உணர்வால் ஈர்க்கப்படும். குழந்தை பிறந்து வளர ஆரம்பித்தவுடன், கருவில் பதிந்த படம், பாடல்களைக் கேட்டு, கண்டு, பாலியல் சம்பந்தமான மனோ நிலையில் அதிகம் பாதிக்கப் பட்டு உடலில் உள்ள உயிர் சக்தி குறையும். இதனால் லிவர் பாதிக்கப்பட்டு அதன் எதிரொலியாக கண் பார்வை மங்கும்.
இந்த பிரச்சனை வராமல் தடுப்பதற்கான ஒரே வழி, நாம் ஒவ்வொருவரும் மனதை கட்டுப்படுத்தி உடலை நேசிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் ஒருசேர செய்ய வேண்டும் என்றால், யோகப்பயிற்சி செய்ய வேண்டும்.
திரிகோண ஆசனம்
- விரிப்பில் கிழக்கு நோக்கி இரண்டு அடி இடைவெளி விட்டு கால்களை அகட்டி நிற்கவும். கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டவும் (ஸ்டெப் – 1).
- இப்போது மூச்சை வெளிவிட்டுக் கொண்டு இடது கையால் வலது கால் பெருவிரலைத் தொடவும்.
- வலது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் வலது கை விரலை 20 வினாடிகள் பார்க்கவும் (ஸ்டெப் – 2).
- பிறகு மெதுவாக மூச்சை உள்ளிழுத்து சாதாரண நிலைக்கு வந்து மூச்சை வெளிவிடவும்.
- இதேபோல் மூச்சை வெளியிட்டுக் கொண்டு வலது கையால் இடது கால் பெருவிரலைத் தொடவும்.
- இடது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் இடது கைவிரலை 20 வினாடிகள் பார்க்கவும் (ஸ்டெப்-3).
- பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும்.
- இது போல் 3 முறை பயிற்சி செய்யவும்.
சூரிய ஒளி சிகிச்சை
அதிகாலை சூரியன் உதயமாகும் நேரம் 3 நிமிடங்கள் சூரியனை உற்று நோக்கவும். பின் மெதுவாக கண்களை மூடி, ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். இதேபோல் 3 முறை செய்யவும்.
கண்களின் மேல் மசாஜ்
- விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும்.
- கண்களை மூடவும்.
- இரு கைகளையும் சுண்டு விரல் ஒட்டி இருக்கும்படி வைத்து, கைகளின் மேல் பகுதியை கண்களின் மீது வைத்து, கண்களிலிருந்து காதுப்பகுதியை நோக்கி மெதுவாக வருடி விடவும் (ஸ்டெப்-4).
- இது மசாஜ் செய்வதுபோல இருக்கும்.
- 10 முதல் 15 முறை இப்படி செய்யவும்.
கண் கழுவுதல்
- குளிர்ந்த சுத்தமான தண்ணீரை (குளோரின் போட்டது அல்ல) ஒரு அகன்ற பாத்திரத்தில் வழிய வழிய ஊற்றவும்.
- தலையைக் குனிந்து, அந்தப் பாத்திரத்தினுள் கண்களை மூழ்கச் செய்து கண் விழிகளை உருட்டவேண்டும்.
- பிறகு இமையை லேசாக மூடி திறக்கவும்.
- மீண்டும் புதியதாக நீர் நிரப்பி அடுத்த கண்ணுக்கும் இப்படியே செய்ய வேண்டும்.
- காலையில் குளிக்கும்போது, மாலையில் என இருமுறை செய்யலாம்.
இப்படி செய்து வந்தால் கண்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்கள் குளிர்ச்சியடையும். கண்களிலுள்ள தூசிகள் அழுக்குகள் வெளியேறும்.
கண்கள் நன்கு இயங்க உணவுகள்…..
நெல்லிக்காய், பப்பாளி, அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, சாத்துக்குடி என இதில் எது கிடைத்தாலும் தினமும் ஒரு பழம் சாப்பிட்டு விடுங்கள்.
காய்கறிகளில்… கேரட், முருங்கை, வெண்பூசணி, வெங்காயம், அவரை, பீன்ஸ், புடலங்காய் என இவற்றில் தினமும் ஒரு காயையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வில்வம், கொத்துமல்லி, கீழாநெல்லி, வல்லாரை என இந்த கீரைகளில் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்னதை எல்லாம் செய்து வந்தால் உங்கள் பிள்ளைகள் கண்ணாடி போட வேண்டிய அவசியமே வராது.