31
Mar
தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும், எல்லோருமே பெண்களை கொண்டாடத்தான் செய்வோம். காரணம் நாம் ஆணோ, பெண்ணோ ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து தானே உருவாகி வெளி வருகிறோம்! நாமெல்லாரும் வலிமையாக பிறக்க வேண்டும் என்றால் அதற்கு உலகில் உள்ள பெண்கள் எல்லாம் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவர்களது கருப்பை! அந்த கருப்பை பலமாக இருக்க வேண்டும் என்றால் மாதவிடாய் சரியாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் வளப்படுத்துகிற யோகா பற்றி தான் இந்த இதழில் சொல்லப்போகிறேன்.
மாதவிலக்கு
மாதவிலக்கு என்பது தடித்துப்போன எண்டோமெட்ரியம் வெளியேறுவதாகும். ஒரு மாதவிலக்கில் இருந்து அடுத்த மாதவிலக்கு துவங்கும் நாள் வரை ஒரு மாதவிலக்கு சுழற்சி என அழைக்கப்படும். இந்த மாதவிலக்கு சுழற்சி 28 நாட்கள் கொண்டதாக இருக்கும். சிலருக்கு இந்தச் சுற்று 30 நாட்கள் கொண்டதாக இருக்கும். சிலருக்கு 35 நாட்கள் கூட இருக்கும். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இந்த 28 நாட்கள் கொண்ட மாதவிலக்கு சுழற்சி 5 காலங்களாகப் பிரிக்கப் படுகின்றன.
- மாதவிலக்கில் ரத்தப்போக்கு காலம்: 1 – 4 நாட்கள்
- கருவணு வளரும் காலம்: 5 – 12 நாட்கள்
- கருவணு வெடித்து வரும் காலம்: 13 – 14 நாட்கள்
- கருவணு வெளிப்பட்டபின் வரும் காலம்: 15 – 26 நாட்கள்
- மாதவிலக்கு முந்தைய காலம்: 27 – 28 நாட்கள்
கருப்பை
கருப்பை என்பது பேரிக்காய் வடிவத்தில் உள்ள தசை உறுப்பு. இது இடுப்புக் கழியின் மத்தியில் உள்ளது. இதற்கு முன்புறம் சிறுநீர்ப்பையும், பின்புறம் மலக்குடலும் உள்ளன. இது சுமார் 8.5 செ.மீ. நீளமும் 5 செ.மீ. அகலமும் 2.5 செ.மீ. பருமனும் கொண்டு சுமார் 60 கிராம் எடையுள்ளது. கருப்பையில் கரு வளர வளர அளவிலும் எடையிலும் அது பெரிதாகும்.
இதில் மாதவிடாய் சுழற்சி சரியில்லை என்றாலும், தவறான உணவு முறையாலும் அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் தள்ளிப்போதல், மாதவிடாயின் போது வயிற்றுவலி அதிகமாக இருப்பது, கருப்பையில் கட்டி, கருமுட்டைப் பையில் நீர்க்கட்டிகள், வெள்ளைப்படுதல், குழந்தையின்மை என்று பல பிரச்சனைகள் ஏற்படும்.
பச்சிமோஸ்தாசனம்
மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து பெண்கள் விடுதலையடைய இந்த ஆசனத்தை தான் செய்ய வேண்டும்.
- விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும்.
- கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து மடிக்காமல் தலைக்கு மேல் உயர்த்தவும்.
- மெதுவாக முன்னால் குனிந்து கால்களை மடிக்காமல் கால் விரல்களைத் தொட முயற்சிக்கவும்.
- இரு கைவிரல்களாலும் இரு கால் விரல்களை தொட முயற்சிக்கவும்.
- பின் கால் கட்டை விரல்களைப் பற்றி மேலும் குனிந்து நெற்றியை கால் முட்டிகளின் மீது வைக்கவும்.
- கைகளை மடித்து கைமுட்டியை விரிப்பின் மீது வைக்கவும்.
- மூச்சை வெளிவிட்டு குனியவும்.
- மூச்சை அடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும்.
- பின் மூச்சை வெளிவிட்டு கட்டை விரலை பிரித்து கைகளை நீட்டி மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காரவும்.
- இப்படி 3 முறை செய்யவும்.
முதலில் பயிற்சி செய்யும்போது கால் பெருவிரலைத் தொடுவது சிரமமாக இருக்கும். மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் முழுமை நிலையினை அடைந்து விடுவீர்கள்.
யாரெல்லாம் செய்யக்கூடாது?
அடி முதுகில் வலி, முதுகுத் தண்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். கல்லீரல் பிரச்சனை, மண்ணீரல் வீக்கம், அல்சர் நோய் உள்ளவர்கள் யோகாசன வல்லுநரின் நேரடி ஆலோசனையின்படி இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
பலன்கள் என்னென்ன?
- பெரும்பாலும் பெண்களுக்கு சிறுநீரகம் மற்றும் கருப்பை வழியாகவே வியாதிகள் தோன்றும். இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலமாக அந்த பிரச்சனைகள் வராது. அப்படியே வந்தாலும் பூரணமாக சரியாகும்.
- பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அடி வயிற்றுப் பெருக்கத்தை இந்த ஆசனம் சரி செய்து விடும்.
- உடலுறவில் நாட்டமில்லாத திருமணமான பெண்கள், இந்த ஆசனத்தை செய்தால் அதற்குரிய ஹார்மோன்கள் சரியாக சுரந்து, செக்ஸ் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
- தொடர்ந்து செய்தால் மஞ்சள் காமாலை, புற்றுநோய் வராது.
- நுரையீரல் பலப்படும்.
- தசைவலி, வாதக் கோளாறுகள் நீங்கும்.
- நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும்.
- ஆண்களுக்கு விந்து ஒழுக்கைத் தடுக்கும்.
இந்த ஆசனம் ஆண், பெண் இருவருக்குமே நன்மை பயக்கும் என்றாலும், நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பெண்களுக்கு மிக மிக முக்கியம்.