உலகில் நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்கு நமது யோக சாஸ்திரத்தில் இருவித காரணங்களை பிரதானமாகச் சொல்கிறார்கள்.
ஒன்று, மனிதனுடைய பழக்க வழக்கங்களால் வரும் உடல் நோய்கள் & மன நோய்கள். உதாரணமாக, ஒருவர் தினமும் குடித்துக் கொண்டேயிருந்தால் லிவர் கெட்டுவிடும். வயிற்றுவலி வரும். ஒருவர் தினமும் நிறைய சிகரெட் பிடித்தால் நுரையீரலும், இதயமும் பாதிக்கப்படும். இது நமது பழக்கத்தால் வரும் உடல் நோய்கள்.
ஒருவர் கடும் கோபக்காரராக இருந்தால் உறவுகள் பாதிக்கப்படும். இது மனதுக்கு வரும் நோய்.
சிலருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இருக்காது. நல்ல பண்புள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடலில் சில நோய்கள் இருக்கும். மனதிலும் கவலைகள் இருக்கும். இதனை ‘கர்மவினை’ என்று யோக சாஸ்திரம் சொல்கிறது. நாம் முன்பு செய்த தீயவினைகள் நம்மைத் தாக்குகின்றன. இந்த வினைப்பயன் அகல, நாம் அனைவரும் யோகாசனங்களும், தியானமும் செய்து, பிராணன் மூலம் உடல் ஆற்றலும், மன ஆற்றலும் பெற்றுத்தான் இந்த நோயைப் போக்க முடியும். ஆக, யோகப் பயிற்சிகள் செய்தால் உடல், மன நோய்களை நம்மிடமுள்ள ஆத்ம சக்தி மூலம் சரிசெய்து வளமாக வாழலாம். அந்த வகையில் கர்மவினை அகற்றும், கைகால் வலிகள் அகற்றும் கருடாசனம் செய்து கவலையின்றி வாழுங்கள்!
கருடாசனம் செய்முறை:
- விரிப்பில் நேராக நிற்கவும்.
- வலது காலை இடது காலின் பின்னால், கால் விரல்கள் படுமாறு வைத்துப் பின்னவும்.
- இரு கைகளையும் அஞ்சலி முத்திரையில் வைக்கவும். அதாவது, கும்பிட்டு கைகளை நெஞ்சுப் பகுதியில் வைக்கவும்.
- இப்போது கண்களை மூடி, மனதை இதயத்தில் நிறுத்தி, மூச்சோட்டத்தை 30 விநாடி கூர்ந்து கவனிக்கவும்.
- பின்னர் மெதுவாக காலை கீழே வைக்கவும்.
- இதே போல் இடது காலை மாற்றி ஒரு முறை பயிற்சி செய்யவும்.
- இரண்டு கால்களையும் மாற்றி தலா ஒரு முறை கட்டாயம் பயிற்சி செய்யவும்.
கருடாசனத்தின் பலன்கள்:
மன அமைதி கிடைக்கும்
இந்த ஆசனத்தில் கைகளில் அஞ்சலி முத்திரை செய்வதால் பஞ்சபூதமும் சமமாக இயக்குகிறது. அதனால் மன அமைதி கிடைக்கும். எண்ணங்கள் ஒருமுகப்படும். இதயம் பாதுகாக்கப்படும். தீய எண்ணங்கள் மறையும். நல்ல எண்ணங்கள் வளரும். அதுவே செயலாக மாறுவதால் நமது கர்மவினைகளின் தாக்கம் குறையும். நீங்கள் நல்லதை நினைத்து, நல்லதே பேசி, நல்லதே பிறருக்கு செய்வதால் அனைவருடைய வாழ்த்தும் உங்களை வாழ வைக்கும்.
கால் பாதங்கள் உறுதியாகும்
இந்த ஆசனம், கால் பாதங்களையும், கால் நரம்புகளையும் பலப்படுத்தும். பாதவலி, நரம்புவலி நீங்கும். கால் விரல்கள், கைவிரல்களில், உடல் உள் உறுப்புகளின் முக்கியமான சக்தி நாளங்கள் உள்ளன. இந்த ஆசனம் அதனை நன்றாகத் தூண்டிவிட்டு நல்ல பிராண ஆற்றலைப் பெற்று சிறப்பாக இயங்க உதவிபுரிகிறது.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி
படிக்கும் மாணவச் செல்வங்கள் இந்த ஆசனத்தை தினமும் பயின்றால், ஞாபக சக்தி நன்றாக வளரும். மனமும் ஒருநிலைப்படும்.
நரம்பு மண்டலம் வலுவாகும்
நரம்பு மண்டலம் புத்துணர்வு பெற்று நன்றாக இயங்கும். நரம்பு பலவீனம் நீங்கும். கை, கால் நடுக்கமும் நீங்கும்.
கண் பார்வை சரியாகும்
கருடனுக்கு கண்கள் நன்றாகத் தெரியும். நமக்கும் கருடாசன நிலையில், கண் நரம்புகள் நன்றாக இயங்கும். கண் பார்வை நன்றாக இருக்கும். கேட்ராக்ட், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பிரச்சனைகளும் வராது.
கால் ஆணி வராது
கால் பாதத்தில் ஆணி வராது. ஆணி இருந்தாலும் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்தால் விரையில் குணமாகும். கால் தசைகள் பலப்படும். தொடை தசைகள் அழகாக இருக்கும். தொடையின் அதிக தசைகள் குறைந்து உறுதியான கால்களாக மாறும். மூட்டுக்கள் பலம் பெறும்.
என்ன உணவு சாப்பிடலாம்?
- இந்த ஆசனம் கர்மவினையை நீக்க வல்லது. இத்துடன் வாரம் ஒரு முறை தூதுவளையை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
- கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த ஆசனம் செய்வதுடன் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள்.
- 15 நாட்களுக்கு ஒருமுறை சுரைக்காய், பூசணிக்காயை உணவில் சேருங்கள்.
- வாரம் ஒரு முறை ஐந்து அத்திப்பழங்கள் சாப்பிடவும்.