கல்லீரல் காக்கும் யோகமுத்ரா
ஆரோக்கியம் நம் கையில் – 16
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு அற்புதமான வேலைகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில் நம் உடம்பிலுள்ள லிவர் மிக முக்கியமான உறுப்பாகும். மனித உடலில் மாற்று இருதயம், கிட்னி வைப்பது போல் மாற்று கல்லீரல் (லிவர்) என்று மாற்ற முடியாது. எத்தனை மனிதர்களுக்கு இந்த லிவர் என்ன, என்ன வேலைகளைச் செய்கின்றது என்பது தெரியுமா?
லிவரின் அற்புத வேலைகள்
இதன் எடை சுமார் 2 கிலோ கிராமாக உள்ளது. இது நமது உடலில் வயிற்றின் வலது புறத்தின் கீழ் அமைந்திருக்கின்றது. கருஞ்சிவப்பு நிறமாகும். இரண்டு மடல்களாக இருக்கும். வலது மடல், இடது மடலை விட ஆறு மடங்கு பெரியதாகும். பொதுவாக லிவர் தினசரி 20 அவுன்ஸ் பித்த நீரை சுரக்கின்றது.
உணவுச் சத்துக்களை கிளைகோஜனாக சேமித்து வைப்பது லிவர் தான். கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றுவது லிவர். நம் உடம்பில் தேய்ந்து போன இரத்த அணுக்களை அழிப்பதும் லிவர் தான்.
லிவரின் உட்புறத்தில் பித்த நீரை சேமித்து வைப்பதற்காக ஒரு சிறு பை பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. இதனை கால்பிளாடர் என அழைப்பர். இதில் தான் கொலஸ்டிரால் என்ற கொழுப்பு பொருள் உள்ளது.
மனிதர்களுக்கு பித்தக் கற்கள் உடலில் உண்டாகும். இந்தப் பித்தக்கற்கள் இருக்கும் வரை பிரச்சனை இருக்காது. அவை பித்தநீர் நாளத்தில் பிரவேசித்து பித்தநீர் ஓட்டத்தை தடுக்கும் போது வலி ஏற்படும். மேலும் மஞ்சள் காமாலை வியாதியும் ஏற்படும்.
லிவர் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் பசியின்மை, மலச்சிக்கல் வரும். வயிற்றின் மேல் பகுதி வீங்கும். வலியும் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
லிவரால் கிரகிக்கப்படுகின்ற ரசாயன நச்சுப் பொருட்கள் பித்தப்பையில் அடைக்கப்படுகின்றது. அவை நமது உடலில் கலந்து விடாமல் பாதுகாக்கப்படுகின்றது. லிவர் ஒழுங்காக வேலை செய்யவில்லையெனில் உடலிலுள்ள ரசாயன நச்சுப்பொருட்கள் இரத்தத்துடன் கலக்கும் அபாயம் ஏற்படும். கல்லீரலின் (லிவர்) துணையோடு தான், பித்தப்பையில் சேர்ந்த ரசாயன நச்சுப் பொருட்களை அழித்து விடுகின்றது. மோசமான நச்சுப் பொருட்களை கற்களாக மாற்றி உள்ளேயே வைக்கின்றது.
இவ்வளவு அற்புத வேலைகளை அமைதியாகச் செய்து கொண்டிருக்கும் லிவர் பற்றி ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும். அதோடு மட்டுமல்ல அது சிறப்பாக இயங்க நம் சித்தர்கள் அருளிய யோக நெறிமுறைகளையும் கடைபிடித்தால் லிவர் மிகச் சிறப்பாக இயங்கும். அதனால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் மிகச் சிறப்பாக இயங்கும்.
லிவர் கெடுவதற்கு காரணங்கள்
பசித்து புசித்தால் உடலில் எல்லா உறுப்புமே நன்றாக இயங்கும். குறிப்பாக பசிக்காமல் ருசிக்காக மூன்று வேளை உணவு உண்பது என்று பசியில்லாமல் உண்பது, அதுவும் அளவுக்கு அதிகமாக உண்பதால் லிவர் தனது செயல் திறனை விரைவில் இழக்கின்றது.
மது அருந்துவதாலும், மற்ற போதைப் பொருட்களை உட்கொள்வதாலும் லிவர் தனது செயல் திறனை இழக்கின்றது.
அடிக்கடி உணவில் புரோட்டா, போன்ற மைதா மாவினால் ஆன உணவுகளை ஹோட்டலில் உட்கொள்வதாலும் லிவர் செயல் திறனை இழக்கின்றது.
அதிக உடலுழைப்பு, ஓய்வே இல்லாமல் இரவில் விழித்து வேலை செய்வதாலும் லிவர் தன் செயல் திறனை இழக்கின்றது.
லிவரின் கவசம் பாதுகாப்பு யோகமுத்ரா
நமது உடலின் முக்கிய உறுப்பான லிவருக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தான் யோகாசனங்களில் ஒன்றான யோகமுத்ரா என்ற ஆசனமாகும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இதனை காலை – மாலை பயிற்சி செய்து, நமது லிவருக்கு கவசமாக, பாதுகாப்பாக இதனைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
யோக முத்ரா செய்முறை:
- விரிப்பில் முதலில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமரவும்.
- இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து வலது கை மணிக்கட்டை இடது கையால் பற்றி பிடிக்கவும்.
- மூச்சை வெளியிட்டுக் கொண்டு மெதுவாக முன்னால் குனிந்து நெற்றி தரையில் படும்படி வைக்கவும்.
- சாதாரண மூச்சில் கண்களை மூடி 30 விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமரவும்.
- ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை செய்யவும்.
- இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும்.
முக்கிய குறிப்பு:
பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண சுகாசனத்தில் அமர்ந்து குனிந்து பயிற்சி செய்யவும்.
தொடர்ந்து இரு மாதங்கள் பயிற்சி செய்தால் பின் பத்மாசனத்தில் எளிதாக பயிலலாம். அடி முதுகு வலி, கழுத்து வலி, முதுகு வலியால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது முதுகெலும்பு பாதிப்பு உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இதனை காலை எழுந்தவுடன் விளையாட்டாக பயிற்றுவியுங்கள். சிறு வயதிலேயே பயின்றால் நல்ல பலனுண்டு. எவ்வளவு வயதானாலும் லிவர் மிகச் சிறப்பாக இயங்கும்.
இந்த யோக முத்ராவினால் ஏற்படும் மற்ற பலன்கள் இதோ……
- கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்படாமல் நன்கு இயங்கும்.
- மலச்சிக்கல், அஜீரணம் நீக்கும்.
- நரம்புத் தளர்ச்சியைப் போக்குகின்றது.
- தாது பலமின்மையை நீக்குகின்றது.
- மன ஒருமைப்பாட்டை அளிக்கின்றது.
- இடுப்புவலி, முதுகுவலி நீங்கும்
- உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பண்பு ஏற்படும். கோபம், படபடப்பு நீங்கும்.
- பல மணிநேரம் ……. செய்வதாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் ஏற்படும் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி நீங்கும்.
லிவர் நன்றாக இயங்க இதோ ஒரு அருமையான “பிராண முத்திரை” எல்லோராலும் யோகாசனம் செய்ய முடியாது. வயதானவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகமுத்ரா ஆசனம் செய்ய முடியாது. எனவே லிவர் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள்.
பிராண முத்திரை செய்முறை:
- ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும்.
- தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும்.
- பின் சுண்டு விரலையும், மோதிர விரலையும் மடித்து படத்தில் உள்ளது போல் வைத்து பயிற்சி செய்யவும்.
- இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப்படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நில மூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர், நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறைபாடுகள் நீங்குகின்றது.
இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம் தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.
இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம் இருமுறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு இந்த மாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.