29
Oct
கழுத்துவலி நீக்கும் யோகா!
வசிஷ்ட முனிவர் ராமபிரானுக்கு கற்பிக்கும் போது, மனித நோயை இரண்டாக வகைப்படுத்துகிறார்:
ஆதிஜ – மன உளைச்சலினால் அல்லது தடுமாற்றத்தினால் ஏற்படுகிற நோய்கள்.
அனாதிஜ – நோய்கிருமிகளினால் தாக்கப்பட்டு வருகிற நோய்கள்.
கழுத்து வலிக்கு காரணங்கள் என்னென்ன?
- கழுத்து வலிக்கு, மன உளைச்சல், அதிக வேலைப்பளு, கவலை, டென்ஷன், பதட்டம், கோபம் இவையே அடிப்படை காரணங்கள். மனிதனின் மூளை முகுளத்திலிருந்து வருகிற நரம்புகளில் கழுத்துப் பகுதியில் தான் ஸ்ட்ரெஸ் நரம்பு பிரிந்து செல்லும். அதிகமான மன அழுத்தம் நமக்கு ஏற்படும் போது கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிப்படைந்து வலி ஏற்படும்.
- அதிகமான மசாலா உணவுகளை சாப்பிட்டு உடலில் வாயு சம்பந்தமான உபாதை உள்ளவர்களுக்கும் கழுத்துவலி வரும்.
- அடிக்கடி சைனஸ், சளி உபாதை உள்ளவர்களுக்கும் நுரையீரல் பலவீனமானவர்களுக்கும், இதயம் பலவீனமானவர்களுக்கும் கழுத்துவலி அதிகம் வரும்.
யோகாசனம் கழுத்துவலி நீக்குமா?
நீக்கும். நம் உடலில் மட்டுமில்லாமல் மனோரீதியாகவும் மாற்றத்தை அளிக்க வல்லது யோகாசனம் மட்டுமே. நரம்பு மண்டலத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும். நாடித் துடிப்பை மிதமாக்கும். யோகாசனம் ஒன்றுதான் சுவாசத்தை சீராக்கும். ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வலியை படிப்படியாக குறைத்து, பின்பு முழுமையாக சரி செய்யும்.
யோகா பயிற்சியின் மூலமாக மட்டுமே மூளைக்கும் தண்டுவடத்துக்கும் சரியான பயிற்சி அளித்து அவற்றை நமது கட்டுக்கும் கொண்டுவர முடியும். ஏனென்றால், இங்கு தான் நரம்பு மண்டலத்தின் வேர் முடிச்சுகள் செயல்பட தொடங்குகின்றன.
கழுத்துவலி நீக்கும் யோகப்பயிற்சிகள்
பயிற்சி 1:
சுகபாசனத்தில் சூன்ய முத்திரை தியானம்
கழுத்துவலி போக வேண்டுமென்றால் மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன், பதட்டம் முதலில் நீங்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட பயிற்சி மிக அவசியம்.
- விரிப்பில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.
- முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
- இரு கைகளிலும் சூன்ய முத்திரை செய்யவும்.
- அதாவது நமது நடுவிரலின் மேல் கட்டை விரலை வைத்து, கட்டை விரலால் லேசான அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
- இப்போது இரண்டு நாசி வழியாகவும் மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- இந்த நேரத்தில் நல்ல சக்தி வாய்ந்த பிராணன் உடலில் செல்வதாக என்ன வேண்டும்.
- கூடவே மிக மெதுவாக இரண்டு நாசி வழியாகவும் மூச்சை வெளியே விடவும்.
- இந்த சமயத்தில் உங்கள் உடல் மற்றும் மனதிலுள்ள டென்ஷனும் அழுத்தமும் உங்களை விட்டு வெளியேறுவதாக என்ன வேண்டும்.
- இதே போல் 10 தடவை செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய மூச்சோட்டம், கழுத்துப்பகுதி முழுவதும் நன்கு பரவுவதாக எண்ணி, 2 நிமிடம் கழுத்துப் பகுதியில் கவனம் செலுத்தவும்.
- பின் மெதுவாக கண்களை திறக்கவும்.
- கை விரல்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும்.
பயிற்சி 2:
- விரிப்பில் நேராக படுத்து, இரண்டு கால்களையும் மடக்கவும்.
- ஒரு அடி இடைவெளி விட்டு கால் பாதங்களை தரையில் பதிக்கவும்.
- குதிகால் பக்கத்தில் கைவிரல்கள் தொடும்படி வைக்கவும்.
- இப்போது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் உயர்த்தவும்.
- இந்த நிலையில் 10 வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- இதுபோல் 3 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 3:
- பயிற்சி இரண்டில் செய்தபடி முதலில் இடுப்பை உயர்த்தவும்.
- பிறகு இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் கட்டிக் கொள்ளவும்.
- இந்த நிலையிலேயே மூச்சடக்கி 10 வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- இதேபோல் 3 முறை செய்யவும்.
பயிற்சி 4:
- விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- இப்போது இரண்டு கைகளையும் கோர்த்து காதோடு உயர்த்தி தலைக்கு மேல் வைக்கவும்.
- இரண்டு கைவிரல்களும் பின்னி, உள்ளங்கை வானத்தைப் பார்க்க வேண்டும்.
- கைகள் காதோடு சேர்ந்து நேராக இருக்க வேண்டும்.
- இப்போது இரண்டு நாசி வழியாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.
- உடனே இரண்டு நாசி வழியாகவும் மூச்சை வெளிவிடவும்.
- முதலில் 5 தடவை மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை விடவும்.
- பிறகு 5 தடவை வேகமாக மூச்சை உள்ளிழுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும்.
- பின் சாதாரண நிலைக்கு வரவும்.
இப்படி செய்தால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. பணமும் செலவாகாது. மனமும் அமைதி பெரும். கழுத்துவலியும் காணாமல் போய்விடும்!