நலம் தரும் நாற்காலி யோகா
கழுத்து வலி நீங்க வழி!
மனிதனின் உடல் ஒரு அற்புத சக்தி வாய்ந்தது. இந்த உடலில் எந்தக் குறைபாடும் இல்லாமல் வாழ வேண்டுமெனில் அதற்கு யோகக் கலை அவசியமாகின்றது. உடலில் உள் உறுப்புகளில் குறைபாடு ஏற்பட்டால், அது வெளி உறுப்புகளில் வலியாக மாறுகிறது. இந்த வலியை தாங்க முடியாமல் உடனே வலி நிவாரண மாத்திரை சாப்பிடுகிறோம். வலி முழுமையாக தீரவில்லை. மீண்டும் வருகிறது. அந்த வகையில், கழுத்து வலி நிறைய நபர்களுக்கு பெரும் கவலையைக் கொடுக்கிறது. பல மருத்துவச் சிகிச்சை எடுத்தும் நிரந்தரமான தீர்வு எட்டவில்லை.
இதன் அடிப்படை காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.
நுரையீரல், இதயத்தில் சக்தி ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் கழுத்துவலி வரும். உடலில் மூக்கடைப்பு, சைனஸ் இருந்தால் கழுத்துவலி வரும். பயப்படத் தேவையில்லை. பெரிய நாற்காலி யோகா மூலம் சரி செய்துவிடலாம்.
கவலை, டென்ஷன், மன அழுத்தம் இருந்தால் கழுத்து வலி வரும். கவலைப்படாமல் வாழ நாம் முத்திரை பயிலப் போகிறோம்.
தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமலிருந்தோலோ, பல மணிநேரம் செல்போன் பார்ப்பதாலும் கழுத்துவலி வரும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நன்கு உறங்க வேண்டும். இந்த நேரத்தில் கண் விழித்தால், இதயம், நுரையீரலுக்கு சக்தி ஓட்டம் குறைவாயிருக்கும். அதனாலும் கழுத்து வலி வரும்.
இது தவிர மிக அதிகமான காரம், புளிப்பு, எண்ணெய் பண்டங்கள் அதிகம் உண்பது, மைதா மாவினாலான பரோட்டா போன்ற உணவுகள் அதிகமாக எடுத்தாலும் கழுத்துவலி வரும். இந்த சில காரணங்களில் ஏதாவது உங்களுக்கு பொருந்தினால், உங்கள் பண்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது கழுத்துவலி நீக்கும் மிக எளிமையான யோகப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக கழுத்து வலி நீங்கி கவலையின்றி வாழலாம்.
முதல் பயிற்சி (பர்வட்டாசன முறையில்)
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். இதை பத்து முறை செய்ய வேண்டும்.
- இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே இரு கைகளையும் தலைக்கு மேல் காதோடு சேர்த்து கும்பிடவும். (படத்தை பார்க்க)
- இந்நிலையில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இருபது விநாடிகள் இருக்கவும்.
- பின், மூச்சை வெளியிட்டு இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும்.
- இதேபோல் மூன்று முதல் ஐந்து முறைகள் பொறுமையாகச் செய்யவும்.
இரண்டாவது பயிற்சி (கழுத்தை சுற்றுதல்)
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- கைகளை இடுப்பு பக்கத்தில் வைக்கவும்.
- தலையை மட்டும் வலப்புறம், பின்புறம், இடதுபுறம், முன்புறம் மெதுவாக திருப்பவும்.
- முதலில் வலது பக்கம் ஆரம்பித்து ஒரு சுழற்சி சுற்று, பின் இடது பக்கம் ஆரம்பித்து ஒரு சுழற்சி சுற்று.
- இது போல் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.
உணவு:
- பசிக்கும்போது மட்டும் உணவு நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும்.
- சாப்பிடும் பொழுது டி.வி., பார்ப்பது, புத்தகம் படிப்பது, செல்போன் பேசுவதைத் தவிர்க்கவும்.
- காலை 8 மணி முதல் 9 மணிக்குள் காலை சிற்றுண்டி முடிக்கவும். மதியம் 1 முதல் 1.30 மணிக்குள் மதிய உணவு எடுக்கவும். இரவு 7 – 8.00 மணிக்குள் இரவு உணவு எடுத்துவிட வேண்டும்.
- சிலர் காலையில் பசி எடுத்தாலும், வேலை சிந்தனையால் உணவு உண்ணாமல் விட்டு விடுகின்றனர். பசிக்கும் பொழுது காபி / டீ குடிக்கின்றனர். அது உடலில் வாயுத் தன்மையில் மாறுபாடு ஏற்படும். வயிற்றில் புண் வரும். அந்த வாயு பிரச்சனையே கழுத்துவரை உள்ள நரம்பு மண்டலத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
- பசிக்கின்ற பொழுது உடல்மொழி அறிந்து சரியான உணவை உண்ண வேண்டும்.
காய்கறிகள்:
- சுரைக்காய், புடலங்காய், பீட்ரூட், தக்காளி அடிக்கடி உணவில் சேர்க்கவும்.
பழங்கள்:
- வாழைப்பழம், கொய்யா, சப்போட்டா, திராட்சையை உணவில் அடிக்கடி எடுக்கவும்.
கீரைகள்:
- அகத்திக் கீரை, பசலைக் கீரை, குறுந்தக்காளி கீரை.
பொதுவான குறிப்பு:
கழுத்துவலி உள்ளவர்கள் மிகப் பெரிய தலையணை உயரமாக வைத்துப் படுக்காதீர்கள். மிக மிக சிறிய அளவு தலையணை உபயோகப்படுத்தவும். ஒரு துண்டை நான்காக மடித்துக்கூட தலைக்கு வைத்துக் கொள்ளலாம்.
அதிகமாக இரண்டு சக்கர வண்டி பைக் ஓட்டுபவர்கள், ஒரு மணி நேரம் ஓட்டினால், ஒரு ஐந்து நிமிடம் நிமிர்ந்து, அமர்ந்து இந்த ஆசனத்தை தலைக்கு மேல் கையை கும்பிட்டு ஒரு முறை செய்யுங்கள். கழுத்தை வலது, இடது பக்கம் ஒரு முறை சுழற்றும் பயிற்சி செய்யுங்கள்.
காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் சூரிய ஒளி முகம், கழுத்தில் படும்படி ஒரு ஐந்து நிமிடங்கள் இருக்கவும். முடிந்தால் மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் சூரிய ஒளி முகம், கழுத்து பின்புறம் படும்படி நிமிர்ந்து நின்று இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி கும்பிட்டு மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். பத்து முறை இவ்வாறு செய்யவும்.
அனைவரும் மேற்குறிப்பிட்ட பயிற்சியை செய்து வந்தால் கழுத்து வலி காணாமல் போய்விடும்.