18
Feb
கிட்னியைப் பாதுகாக்கும் யோகா
மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். இந்த உடலில் சிறு நீரகத்தின் பங்கு என்ன? அது செயலிழந்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும்? இதுநாள்வரை அறியாதவர்கள் இதோ இப்போது அறிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரகங்கள் எங்கிருக்கின்றன?
வயிற்றின் பின்புறம் முதுகெலும்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு செ.மீ. நீளத்தில் 6 செ.மீ. அகலத்தில் 3 செ.மீ. தடிமனில் சிறுநீரகங்கள் இருக்கின்றன.
சிறுநீரகத்தின் வேலைகள்
ஒரு மில்லியன் சிறுநீர் முடிச்சுகள் (நெஃப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெஃப்ரான்கள் ரத்தத்தில் இருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர் பைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.
நமது உடம்பில் ஒரு ரத்த நதியே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்தில் 5 லிட்டர் ரத்தம் பாய்கிறது. இந்த ரத்தத்தில் ஒன்றே கால் லிட்டர் ரத்தம் சிறுநீரகத்துக்கு போகிறது. ரத்தம் முதலில் பாய்வது இங்குதான். சிறுநீர் வடிகட்டப்படுவதும் இங்குதான்.
ஒரு நிமிடத்துக்கு 125 மில்லி லிட்டர் சிறுநீர் ஒரு நாளைக்கு 150 முதல் 160 லிட்டர் சிறுநீர் என வடிகட்டப்படும்.
சிறுநீரகம் படும் கஷ்டம்!
பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகிறோம் என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களுக்கு நாம் அடுத்த நிமிடம் வயிற்றுக்குள் எதைத் தள்ளப் போகிறோம் என்றே தெரியாது. காலை டிபன் வயிறு முழுக்க… அது ஜீரணம் ஆகும் முன் ஸ்நாக்ஸ்… பின் மதியம் ஃபுல் மீல்ஸ்… மாலையில் வடை, பஜ்ஜி, டீ… இரவு ஃபுல் கட்டு… இப்படி நீங்கள் சாப்பிட்டால் இதனால் உங்கள் உடலில் ஏற்படுகிற அதிகப்படியான கழிவுகளை அகற்ற நெஃப்ரான்கள் ஓவர்டைம் வேலை பார்க்கின்றன.
ஒரு மனிதன் தாயின் வயிற்றில் கருவாக உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து இறக்கும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை பார்க்கின்றன சிறுநீரகங்கள். இப்படிப்பட்ட சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
- அடிக்கடி காய்ச்சல் வரும்
- கை கால் வீக்கம் ஏற்படும்
- பசியின்மை, வயிறு உப்புசம்
- இருமல், சளி, மூச்சுத்திணறல்
- தோல் வியாதி (தோல் அரிப்பு)
- வயிற்றுப்போக்கு
- அதிக ரத்த அழுத்தம்
- மனச்சோர்வு
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
- தசைப்பிடிப்பு
- வாந்தி, குமட்டல்
- ரத்தசோகை
மேலே சொன்ன அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக செயலிழப்பிற்கான காரணங்கள்
- அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்வதால்…
- சிகரெட், பீடி, மது பழக்கத்தால்…
- பசித்தால் மட்டும் புசிக்காமல், ருசிக்காக உணவு உட்கொள்வதால்…
- உயர் ரத்த அழுத்தம்
- மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
- அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்
சிறுநீரகம் சிறப்பாக இயங்க செய்யும் நௌகாசனம்
- விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள்.
- இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடுங்கள்.
- மூச்சை இழுத்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உயர்த்துங்கள்.
- இரு கை விரல்களும் இரு கால் விரல்களை நோக்கி இருக்கட்டும்.
- இந்த நிலையில் மூச்சை அடக்கி பத்து வினாடிகள் இருக்கவும்.
- பிறகு மூச்சை வெளிவிட்டு படுத்துக் கொள்ளுங்கள்.
- இது போல் காலை மாலை இரு வேளையும் மூன்று முறை செய்யுங்கள்.
குறிப்பு
முதலில் பயிற்சி செய்யும்போது பேலன்ஸ் கிடைக்கவில்லை எனில் கைகளால் கால்களைப் பிடித்துக் கொள்ளலாம். இந்த ஆசனத்துடன் கீழ்கண்ட உணவு முறைகளையும் ஃபாலோ செய்யுங்கள்.
உண்ண வேண்டிய காய்கள்:
வாழைத்தண்டு, புடலங்காய், முள்ளங்கி, கோவைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், நூல்கோல், சௌசௌ, சுரைக்காய், பூசணிக்காய்.
பழங்கள்:
நாவல், வெள்ளரி பழம், தர்பூசணி, சாத்துக்குடி, மாதுளை
கீரை:
சிறுகீரை, அரைக்கீரை, முள்ளுக்கீரை, யானை நெருஞ்சி
பயறு வகைகள்:
கொள்ளு, பார்லி, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கேழ்வரகு, எள், மக்காச்சோளம்.
பூ வகைகள்:
வாழைப்பூ, ரோஜாப் பூ, ஆவாரம் பூ, செம்பருத்தி, வெண்தாமரை
இந்த உணவுகளில் உங்களால் முடிந்த, கிடைக்கக் கூடிய உணவுகளை சாப்பாட்டில் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் அரை வயிறு மட்டும் சாப்பிடுங்கள். தேவையற்ற நொறுக்கு பண்டம் சாப்பிடுவதை தவிருங்கள். தினசரி நௌகாசனம் செய்யுங்கள். உங்கள் சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து குழந்தைகளையும் நௌகாசனம் செய்ய வைத்து உணவிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சிறுநீரகத்தை காத்து பெரு வாழ்வு வாழுங்கள்.
Pls send more details about yoga thanks