06
Dec
சளியால் காது வலியா? பத்ம உஜ்ஜயி ஆசனம் சரியாக்கும்!
என்னை யாருக்கு பிடிக்குதோ இல்லையோ. ஆனா ஒரே ஒருத்தருக்கு மட்டும் ரொம்ப பிடிக்கும். அவர் பேரு சளி. ஆமா, சளியை எனக்கு பிடிக்காது. ஆனா அது என்ன பிடிச்சிட்டு என்னை படாதபாடு படுத்தி எடுத்துடுது! என்று தனக்கு சளி பிடித்ததை பற்றி வேடிக்கையாக சிலர் சொல்வதுண்டு.
ஆம். இந்தச் சளி, நம் உடலில் அதிகமானால்,
பிராண ஓட்டம் பாதிக்கும்.ரத்த ஓட்டம் பாதிக்கும்.ஆஸ்துமா வரும்.ஜீரண மண்டலம் பாதிக்கும்.நரம்பு தளர்ச்சியுண்டாகும்.மன அழுத்தம் ஏற்படும்.இதயம் பாதிக்கப்படும்.
வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழவேண்டுமெனில் நமது உடலில் சளியின் ஆதிக்கம் இருக்கக் கூடாது. அதற்கு அசனம் (உணவு) மற்றும் ஆசனம் (யோகா) இரண்டையும் சரியாக எடுத்து கொண்டாலே போதும்!
நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு யோகக் கலையில் பத்ம உஜ்ஜயி என்கிற ஆசனம் உள்ளது. இதனை தினமும் காலை / மதியம் / மாலை என மூன்று நேரமும் சாப்பிடுவதற்கு முன்பாக இரண்டு நிமிடம் நம்பிக்கையுடன் பயிற்சி செய்யலாம். இதனால் உடலில் உள்ள அதிக சளி மிக விரைவிலேயே வெளியேறும். நுரையீரலின் இயக்கமும் சிறப்பாகும். நீங்கள் இந்த ஆசனம் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2 நிமிடம்தான். இதனால் உங்களுக்கு கிடைக்கும் பலன்களோ ஏராளம்!!
பத்ம உஜ்ஜயி ஆசனம் செய்முறை:
- முதலில் பத்மாசனத்தில் அமரவும்.
- இரு கைகளையும் மேலே கோர்த்து படத்திலுள்ளபடி வைக்கவும்.
- கை விரல்கள் வானத்தை பார்த்து இருக்கட்டும்.
- வாயை மூடி மூச்சை ஒரே சத்தமாக விரைவாக வெளியே தள்ளவும்.
- இதே போல் 10 முறை செய்யவும்.
- பின்னர் சில நொடிகள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் 2 முறை செய்யவும்.
என்ன பலன்கள் கிடைக்கும்?
நுரையீரல் சுத்தமாகும்
மூச்சை வேகமாக வெளியே தள்ளும் பொழுது நுரையீரலுக்குள் அதிக காற்று செல்லும். இதனால் நுரையீரலின் இயக்கம் சிறப்பாக இருக்கும். நுரையீரலில் உள்ள கெட்ட காற்று வெளியேறும். நல்ல பிராணன் உள்வாங்கப்படும்.
ஆஸ்துமா / சைனஸ் பிரச்சனை நீங்கும்
ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்த ஆசனத்தின் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து தினமும் 3 வேளை, 3 தடவை இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) நல்ல பலன் கிடைக்கும். மாத்திரைகள் சாப்பிட்டு முழு பலன் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள் நம்பிக்கையுடன் பயிற்சி செய்தால் நிச்சயமாக முழுப்பலன் கிடைக்கும்.
தலைவலி வராது
ஒற்றை தலைவலி, இருபக்க தலைவலி, தலைக்கனம் உள்ளிட்டவை இந்த ஆசனத்தின் மூலமாக நிரந்தரமாக நீங்கும். சளி அதிகமாவதால் தலையில் நீர் கோர்த்து தான் தலைவலி வரும். இந்த ஆசனத்தில் மூச்சை வேகமாக வெளியிடும் பொழுது மூச்சு அதிர்வுகள், தலைப்பகுதி, மூக்குப் பகுதியிலுள்ள கெட்ட நீர் / சளியை வெளி தள்ளுகிறது. மன அழுத்தத்தையும் நீக்குகிறது. இதனால் தலைவலி நீங்கும்.
கண் பார்வை சிறப்பாகும்
கண் நரம்புகள் சிறப்பாக இயங்கும். பார்வை கோளாறுகள் நீங்கும். லிவர் நன்றாக இயங்குவதால் அதன் பிரதி பிம்பமான கண்கள் சிறப்பாக ஒளி பொருந்தியதாக திகழும்.
காது வலி சரியாகும்
சளி அதிகமானால் காது வலி ஏற்படும். காது சரியாக கேட்காது. இந்த ஆசனம் சளியை குறைப்பதால், காது வலி நீங்கி, காது நன்றாக இயங்கும்.
பெண்களுக்கு முடி கொட்டுதல் சரியாகும்
முடி கொட்டுவதால் நிறைய பெண்கள் கவலைப்படுகின்றனர். இந்த ஆசனம், முடி கொட்டுவதை தவிர்க்கும். முடி நன்றாக அடர்த்தியாக வளரும். அதன் சுரப்பியை நன்றாக சுரக்க செய்கிறது. பெண்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்தால், முடிகொட்டுவதற்காக வேறு எந்த மாத்திரை மருந்துகளும் சாப்பிட வேண்டியதில்லை.
தோள்பட்டை வலி வராது
தோள்பட்டை இறக்கம், தோள்பட்டை வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறது. இன்று அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் தொடர்ந்து பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கும், தொழிற்சாலையில் இயந்திரங்களின் அருகில் வேலை செய்பவர்களுக்கும் தோள்பட்டை வலி வரும். இந்த ஆசனம் தினமும் பயிற்சி செய்யுங்கள் தோள்பட்டை வலி நீங்கும்.
கழுத்து வலி வராது
மன அழுத்தம், கவலை காரணமாக நமது கழுத்து நரம்புகளுக்கு ரத்தம் சரியாக பாய்வதில்லை. அதனால் கழுத்து வலி வருகிறது. இந்த ஆசனமானது கழுத்துப் பகுதியிலுள்ள நரம்பு மண்டலங்களை நன்றாக இயங்கச் செய்கிறது. அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். அதனால் கழுத்து வலி நீங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். அது மட்டுமல்ல எப்போதும் புத்துணர்வுடன் இருக்கலாம். சுறுசுறுப்பாக வாழலாம்.
நல்ல பிராணசக்தி கிடைக்கும்
உடல் முழுக்க எல்லா உறுப்புகளிலும் உள்ள அசுத்த காற்று வெளியேறும். நல்ல பிராணன் உடல் முழுக்க கிடைக்கும்.
ரத்த அழுத்தம் சீராகும்
உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் சரியாகும். மனக்கவலை, டென்ஷன் நீங்குவதால், ரத்த அழுத்தம் அறவே நீங்கும்.
ஆசனத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை:
- தூதுவளை கீரை வாரம் ஒரு நாள். கண்டங்கத்தரி கீரை மாதம் இரு நாட்கள். மணத்தக்காளி கீரை வாரம் ஒரு நாள் சாப்பிடவும்.
- காலை பல் விலக்கியவுடன் அருகம்புல் 5, துளசி இதழ் 5 நன்கு மென்று சாறை சாப்பிடவும்.
- மாதம் 3 நாட்கள் பப்பாளி பழத்தை ஒரே நேர உணவாக எடுத்துக் கொள்ளவும்.
- வெள்ளரிக்காய், புடலங்காய், அவரை, கேரட், பச்சைப் பட்டாணி, அவல் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
- பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் போட்டு பனங்கற்கண்டு சேர்த்து பருகவும். வாரம் 3 நாட்கள் மாலையில் சுக்கு – கருப்பட்டி சேர்த்து சுக்குக் காபி காய்ச்சி குடிக்கவும்.
- பூண்டை நெய்யில் வதக்கி, வாரம் இரண்டு நாட்கள் உண்ணவும். மாதம் ஒரு நாள் 8 மிளகைத் தட்டி பொடியாக்கி ஒரு சிறிய டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகவும்.
- அதிகாலை 6 முதல் 7 மணி வரை சூரிய ஒளி உங்கள் உடலில் படுமாறு மாடியில் அமர்ந்து 5 நிமிடம் சூரியனை நோக்கி கண்களை மூடியிருக்கவும்.