எல்லோருமே வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சிக்கு அஸ்திவாரமே, நம் உடல் ஆரோக்கியம் தான்! ஆனால், பலரும் அதை மறந்துவிட்டனர். பெரிய வீடு இருந்தால் மகிழ்ச்சி, நவீன வசதியுடன் கார் இருந்தால் மகிழ்ச்சி என்று நினைத்து, இவை அனைத்தையும் அடைய பல வருடங்கள் ராப்பகலாகப் பாடுபட்டு, கடைசியில் அவற்றை அடையும்போது, உடல் ஆரோக்கியம் இல்லாமல் உடலில் நீரிழிவு, ரத்த அழுத்தம், முதுகுவலி, அல்சர் உள்ளிட்ட வியாதிகள் வருகிறது. அப்போதுதான் புரிகிறது, ‘மகிழ்ச்சி’ என்பது, உடல் ஆரோக்கியத்தில் உள்ளது, வசதிகளைப் பெருக்குவதில் இல்லை என்கிற விஷயமே!
அனைவரும் முதலில் தங்கள் வாழ்வு மங்களமாக, யோகக் கலையைப் பயிலுங்கள். அதிலும் மங்கள வாழ்வு தரும் மாலாசனா பயின்று மகிழ்வுடன் வாழுங்கள்!
மாலாசனா செய்முறை:
- தரையில் விரிப்பை விரித்து, அதன் மீது இரு பாதங்களையும் ஊன்றி உட்காரவும்.
- இரு கைகளையும் முட்டிக்கு கீழே படத்தில் உள்ளதைப் போல வைத்து, கைகளை அப்படியே பின்னால் கொண்டு சென்று, இணைக்கவும்.
- உடலை சற்றே குனிந்து தலையை நிமிர்த்தவும்.
- அப்படியே 10 விநாடிகள் இருக்கவும்.
- பின்னர் மெதுவாக கைகளை அகற்றி, தரையில் இயல்பாக அமரவும்.
- இதேபோல் மூன்று முறை பயிற்சி செய்யவும்.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
நம் பாதங்கள் மிகவும் முக்கியமானவை! நமது கால் பாதங்கள் தானே, உலகில் நம்மை ஒவ்வொரு இடத்துக்கும் நடத்தி அழைத்துச் செல்கிறது. பாதங்களில் வலி, வீக்கம் வந்து நடக்க முடியாமல் இருக்கும்போதுதான் அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியவருகிறது. கால்களும், பாதங்களும் இந்த ஆசனத்தால் நல்ல சக்தி பெறுகின்றன. அதிலுள்ள நரம்பு மண்டலங்கள் மிக நன்றாக இயங்கும். எவ்வளவு வயதானாலும் நமது பாதங்கள் அருமையாக ஒத்துழைக்கும். எவ்வளவு வயதானாலும், எவ்வளவு தூரமானாலும் சோர்வின்றி நடக்கலாம். பாதம் வீங்காது. பாதத்தில் துர்நீரும் தங்காது.
சிறுநீரகம் நன்றாக இயங்கும்
சிறுநீரகம் நன்றாக இயங்கும். உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. சிறுநீரகத் தொற்று (Urinery Infection) கிருமிகள் மூலம் அடிக்கடி காய்ச்சல் வரும். நோய் எதிர்ப்பாற்றல் குறையும். இந்த ஆசனம் செய்தால் இந்தப் பிரச்சனை முழுமையாகத் தீரும்.
மூட்டுகள் பலப்படும்
இரு கால் மூட்டுக்களும் நன்றாக பலப்படும். மூட்டுச் சவ்வுகள் நன்கு இயங்கும். மூட்டுவலி வராது. மூட்டுவலி இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் முழுமையான தீர்வு மூட்டு வலிக்குக் கிடைக்கும்.
மலச்சிக்கல் தீரும்
மலச்சிக்கல் நீங்கும். ஆசனவாயில் அரிப்பு நீங்கும். ஆசனவாயில் புண் இருந்தால் குணமாகும். கிருமிகள், தொற்று நோய் வராது.
நரம்பு பிரச்சனை வராது
இரு கால்களுக்கு பின்னால் நரம்புகள் முடிச்சுகளாய் சுருண்டிருப்பதால் (Varicose Vein) நடக்க முடியாமல் பலரும் அவதிப்படுவார்கள். இந்த ஆசனமானது நரம்பு மண்டலங்களை நன்றாக இயங்கச் செய்யும். ‘வெரிகோஸ் வெயின்’ பிரச்சனை வராமல் வளமாக வாழலாம்.
அடிமுதுகு வலி சரியாகும்
அடிமுதுகு வலி வந்தால் ‘கோணாடு சுரப்பி’ ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். இந்த ஆசன நிலையில் நாம் இருந்தால், கோணாடு சுரப்பிப் பகுதிக்கு நல்லதொரு அழுத்தம் கிடைக்கும். அதனால் கோணாடு சுரப்பி நன்றாக இயங்கும். அதனால் அடி முதுகுவலி வராது. வந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றால் மிக விரைவிலேயே முதுகுவலி நீங்கி, வளமாக வாழலாம்.
சிறுகுடலும், பெருங்குடலும் நன்றாக இயங்கும்
சிறுகுடலும், பெருங்குடலும் சக்தி பெற்று நன்றாக இயங்கும். அங்கு கழிவுகளும் கிருமிகளும் தங்காது. குடல் சுத்தமாக இயங்கினால் உடல் உள் உறுப்புகள் அனைத்துமே நன்றாக இயங்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம். எப்பொழுதும் தெளிந்த சிந்தனையுடன் வாழலாம். உற்சாகமாக இருக்கலாம். அதனாலேயே எதிர்மறை எண்ணங்கள் அறவே நீங்கி நேர்மறை எண்ணத்துடன் (Positive Thinking) வாழலாம்.
மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும்
மூளை செல்களுக்கு நல்ல பிராணசக்தியும், ரத்த ஓட்டமும் சீராகக் கிடைக்கும். அதனால் மூளை செல்கள் சிறப்பாக இயங்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும். மாணவர்கள் இந்த ஆசனத்தை தினமும் காலையில் இரண்டு நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நுரையீரல் நல்ல சக்தி பெறும்
நுரையீரல் சக்தி பெற்று நன்றாக இயங்கும். அதிலுள்ள அசுத்த காற்றும் வெளியேறும். அதனால் அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும். பனி காலங்களில் காதுவலி வராது.
மனம் ஒருமுகப்படும்
எண்ணங்கள் ஒருநிலைப்படும். மனம் ஒருமுகப்படுவதால் எந்த செயல் செய்தாலும் அதனை திறம்பட செய்ய முடியும். இது, படிக்கிற மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
என்ன உணவு எடுத்துக் கொள்வது?
- பெரு நெல்லிக்காயை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.
- மணத்தக்காளிக் கீரையை உணவில் வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.
- வல்லாரைக் கீரையை வாரம் ஒருநாள் எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் மாதவிடாய் கோளாறும், அதிக ரத்தப்போக்கும் குணமாகும்.
மாலாசனா செய்வதோடு, மேலே சொன்ன உணவுகளையும் பசித்தப் பின்பு மட்டும் சாப்பிட்டு வாருங்கள். மங்களமான வாழ்வு உங்கள் வசமாகும்!