சிறுநீர், பித்தப்பை கற்களை கரைக்கும் ஆசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 8
அந்த காலத்தில் வாழ்ந்த நம் சித்தர்கள், மனித உடற்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒவ்வொரு உள் உறுப்பிலும் ஏற்படும் தேக்கங்களை, கழிவுகள் தங்காமல் இயங்க எப்படி உடலை வளைத்து இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அனுபவத்துடன், நமக்கு ஆசனங்களாக வடிவமைத்துள்ளார்கள். அதனை நாம் ஒழுங்காகப் பயிற்சி செய்து, மனிதனுக்குரிய ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் இந்த சிறுநீரகக் கற்கள், பித்தப்பையில் கற்கள் எல்லாம் நமக்கு வரவே வராது.
சிறுநீரகம், சிறுநீர்ப்பை குழாய்களில் ஏற்படும் கற்களை கரைக்கும் ஜானுசீராசனம் செய்முறை:
- விரிப்பில் இரு கால்களையும் நீட்டி அமரவும்.
- வலது காலை மடித்து இடது தொடையை உள்ளங்கால் தொடும்படி வைத்து குதிகாலை உள்ளே இழுத்து தொடை இணைப்பை தொடும்படி வைக்கவும். (படத்தைப் பார்க்கவும். இது டு வடிவத்தில் இருக்கும்.)
- உங்கள் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து நெற்றி கால்முட்டியைத் தொடும்படி செய்து இடது கால் கட்டை விரலை கைகளால் பிடிக்கவும்.
- சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை கண்களை மூடியவாறு இருக்கவும்.
- பின் கைகளை பிரித்து நிமிர்ந்து சாதாரணமாக அமரவும்.
- ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும.
- இதேபோல் மாற்று ஆசனமாக இடது காலை மடித்து இரண்டு முறை செய்து பின் ஓய்வெடுக்கவும்.
- இந்த ஆசனத்தை ஞான முத்திரை என்றும் அழைப்பர்.
முதலில் பயிற்சி செய்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பயிலவும். எடுத்தவுடன் இரு கைகளால் கால் பெரு விரலை தொட முடியாது. நெற்றியும் கால் மூட்டில் படாது. கவலை வேண்டாம். எவ்வளவு குனிய முடியுமோ குனிந்து அந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்கவும். தொடர்ந்து ஒரு மாதம் அல்லது இரு மாதம் பயிற்சி செய்ய, செய்ய வளையும் தன்மை தானாக வரும். இந்த கோணத்தில் காலை மடித்து அமர்ந்தாலே, சிறுநீரக கற்கள், தானாக கரைந்து வெளியேறும் அற்புதத்தை உணரலாம்.
அடிமுதுகு வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்ய வேண்டாம். தகுந்த யோக வல்லுனரின் ஆலோசனைப்படி செய்யவும்.
இந்த ஆசனத்தை ஒரு 5 நிமிடம் தினமும் காலை, மாலை சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் பயிற்சி செய்யுங்கள். சிறுநீர்ப்பையில் கற்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. உங்கள் குழந்தைகளுக்கு இதனைப் பழக்குங்கள். வளர்ந்து வரும்பொழுது எந்த வயதிலும் இந்த நோய் வராமல் தடுக்கலாம். இறைவன் கொடுத்த விலைமதிப்பில்லா அற்புத மனித உடல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த உடலில் மருத்துவரின் கத்தி (அறுவை சிகிச்சை) படக்கூடாது என்றால், நம் புத்தியை கூர்மையாக்கி இந்த ஆசனத்தை செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஜானு சீராசனம் செய்வதால் ஏற்படும் மற்ற பலன்கள் இதோ!
- நமது உடலிலுள்ள நரம்பு மண்டலங்களும், தசைகளும் நன்கு வலிமை பெறுகின்றது.
- தூக்கத்தில், சொப்பனத்தில் விந்து வெளியேறுவதைத் தடுக்கின்றது. வீரிய குறைபாடுகளை நீக்கி ஆண்மைக் குறைவை நீக்கும் அற்புத ஆசனம்.
- பெண்களுக்கு ஏற்படும் அதிகமாக வெள்ளைபடுதலை மாதவிடாய் சமயம், மற்ற சமயம் தடுத்து சீராக்கி வலிமையை கொடுக்கும்.
- போகத்தில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டு, அதனால் உடலில் வீரியம் இழந்தவர்கள் இவ்வாசனத்தால் மீண்டும் இளமையுடன் வீரியத் தன்மை பெற்று வாழலாம்.
- நீரிழிவு நீக்கி கணையத்தை சிறப்பாக இயங்கச் செய்யும்.
- வயிறு உப்புசம் நீக்கி பசி எடுக்கும்.
- உடல் அதிக எடை, தொந்தி குறையும்.
- ஆண்களுக்கு விரை வீக்கத்தை சரி செய்யும்.
- பெண்களுக்கு கருப்பை சம்மந்தமான நோய்களை நீக்கும்.
- இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு அவ்வாறு ஏற்படாமல் இவ்வாசனம் சரி செய்துவிடும்.
- குடல் இறக்கம் சரியாகும்.
எவ்வளவு நன்மைகள் இந்த ஒரு ஆசனத்தால் பார்த்தீர்களா! அதனால் தான் இந்த ஆசனத்தை மகாமுத்திரை அல்லது ராஜ முத்திரை என்று கூறுவர்.
ஆசனம் பாதி உணவு பாதி என்பது பழமொழி. ஆசனத்துடன் உணவிலும் நாம் கவனம் செலுத்தினால் மிக விரைவில் பலன் உண்டு.
சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் கரைய கீழ்க்கண்ட உணவுகளை ஆசனத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்.
உண்ண வேண்டிய கீரைகள்:
- முளைக்கீரை, சாட்டரணை, யானை, நெருஞ்சி, சிறுநெருஞ்சி, வாழைத்தண்டு.
- வாழைத்தண்டு நல்லது தான். ஆனால் பலர் தினமும் வாழைத்தண்டு சாப்பிடுகின்றனர். அது தவறு. உடலில் உள்ள உயிர் சக்தியை உறிஞ்சிவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை வாழைத்தண்டு பொரியல் செய்து மருந்தாக ஒரு கரண்டி சாப்பிடவும். பலன் உண்டு. மற்றக் கீரைகளை இருமுறை சாப்பிடலாம்.
காய்கறிகள்:
- பூசணிக்காய், நூக்கல், வெள்ளை முள்ளங்கி, கோவைக்காய்.
பழங்கள்:
- சாத்துக்குடி, கரும்புச்சாறு, அன்னாசிப்பழம், மாதுளை பழம் ஆகியவற்றை நன்கு மென்று சாப்பிடவும்.
பித்தப்பை கற்கள், சிறுநீரகம், சிறுநீரகப் பையில் உள்ள கற்களை நீக்க இயற்கை உணவு முறைகள்:
- கரிசலாங்கண்ணி கீரையை எந்த வகையிலாவது பச்சையாகவோ, சமையல் செய்தோ தினமும் உட்கொண்டால், பித்தப்பை கற்கள் இல்லாமல் மறைந்துவிடும்.
- கரிசலாங்கண்ணி கீரையை தினமும் உட்கொண்டால் ஆயுள் நீடிக்கும். பித்தப்பையில், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை அகற்றி, பித்தப்பை, சிறுநீரகப்பையை சிறப்பாக இயங்கச் செய்யும்.
- கரிசலாங்கண்ணி கீரையில் பழுப்பு இலைகளை நீக்கி, நீரில் கழுவி வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்த்து வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும், கீழும் விரல்களால் தேய்த்தோமானால் மூக்கு, தொண்டையிலுள்ள கபம் வெளியாகும்.
- பித்தப்பை கெட்டுப்போய், அதில் கற்களும் இருந்தால் அந்நேரமே பித்தம் வெளியேறும். அதிலுள்ள கற்கள் வாந்தி மூலமோ, மலத்தின் மூலமோ வெளியேறும். சிறுநீரகம் சுத்தப்படும். சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால் சிறுநீரில் கரைந்து வெளியேறும். இது முற்றிலும் உண்மை. இதனை உலகிற்கு தன் பாடல் மூலம் வெளியாக்கியவர் வள்ளலார் ஆவார். ஆனால் உலகம் இதனை முழுமையாக உணரவில்லை.
- கரிசலாங்கண்ணி கீரையை உண்டால் சுவாசப்பையும், நுரையீரலும், பித்தநீர் வெளியேறுவதால் கல்லீரலும், பித்தப்பையும், மலம் வெளியேறுவதால் பெருங்குடலும், நீர் பிரிவதால் சிறுநீர் பையும் சுத்தம் அடைகின்றது.
- வெள்ளரிக்காயில் புளிப்புத் தன்மையை விட காரத்தன்மை பொருந்திய தாதுப் பொருட்கள் அதிகமுண்டு. நீர் நன்றாகப் பிரியும். ஆகவே வெள்ளரிக்காய் தினம் உண்டால் சிறுநீர்ப்பையில் கற்கள் சேராது. சேர்ந்தாலும், சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.
- சிவப்பு குடை மிளகாய் இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள். சிறுநீர்க் கற்கள் வராமல் தடுக்கும்.
- முட்டைக்கோஸில் வைட்டமின் K, வைட்டமின் C நார்ச்சத்து உள்ளது. இது சிறுநீரகம், சிறுநீரகப்பையை சுத்தப்படுத்தும். எனவே முட்டைக்கோஸை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவில் சேருங்கள். சிறுநீர்ப்பையிலுள்ள கற்கள் கரையும். சிறுநீரக உறுப்பு சிறப்பாக வேலை செய்யும்.
- ஆப்பிள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆப்பிள் பழம் சாப்பிடுங்கள்.
- பூண்டை உணவில் குழம்பாக, தோசையாக சாப்பிடலாம். எண்ணையில் வதக்கி சாப்பிடலாம். இது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள், கற்களை வெளியேற்றும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
- வெங்காயத்தில் பொட்டாசியம் குறைவாகவும், குரோமியம் அதிகமாகவும் உள்ளது. இதனால் சிறுநீரகங்கள் நன்கு இயங்கும். சிறுநீரகக் கற்கள், நச்சுப் பொருட்கள் வெளியேறும்.
- பீட்ரூட் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக இயங்கச் செய்யும். பீட்ரூட்டில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் சிறுநீரகத்தின் நச்சுப் பொருட்களை அகற்றுகின்றது.
- கத்தரிக்காய் எங்கும் கிடைக்கும் எளிய காய்கறி. தினம் உணவில் சேருங்கள். சிறுநீரகப்பை சிறப்பாக இயங்கும்.
- பேரிக்காய் சிறுநீரகம், சிறுநீரகப்பையிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றும். எனவே பேரிக்காய் உணவில் வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளுங்கள்.
- தாகம் எடுக்கும் பொழுது நிறைய நபர்கள் தண்ணீர் குடிப்பதில்லை. நம் உடலில் சிறுநீரகம், பித்தப்பையில் உள்ள கழிவுகள் வெளியேற உடல் தண்ணீர் கேட்கின்றது. நாம் உடல் மொழியை அலட்சியப்படுத்துகின்றோம். இது தவறு. தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடியுங்கள். பித்தப்பை, சிறுநீரகப்பை சிறப்பாக இயங்கும்.
- தினம் அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை ஒழுங்காக இயங்காது. அதில் நச்சுத் தன்மை உருவாகும். பின் கற்களாக மாறும். எனவே காபி குடிப்பதற்கு பதில் இஞ்சி டீ காலை, மாலை குடியுங்கள். பித்தப்பை சுத்தமாகும்.
- நீர்ச்சத்து உள்ள பழச்சாறுகள் வாரம் இருமுறை உண்ணுங்கள். (ஆரஞ்சு, மாதுளை, கொய்யா)
உணவு முறைகள் மேற்குறிப்பிட்டவை எல்லாம் நமக்கு அன்றாடம் கிடைக்க கூடியவையே. நம் உடல் நலனுக்காக கொஞ்சம் அக்கறை எடுத்து மேற்குறிப்பிட்ட உணவுகளை உண்ணுங்கள். அத்துடன் ஜானுசீராசனத்தையும் செய்யுங்கள். பித்தப்பை, சிறுநீரகத்தில் கற்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பித்தப்பையில் கற்களை அகற்றும் மருத்துவரும் இந்த உணவை, யோகாவை செய்து அவர் உடலையும் பாதுகாக்கலாம். மருத்துவருக்கும் மருத்துவர் யோகா.