01
Oct
இன்றைய போட்டியான உலகில் மதிநுட்பம், நல்ல அறிவு இருந்தால் மட்டும் போதாது. சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும். அதற்கு உடல் ஆரோக்கியம் அவசியம் வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க யோகாசனம் பயில்வதே சாலச் சிறந்த வழியாகும்.
ஆரோக்கியம் என்பது மனிதனின் மனதையும், உடலையும் சார்ந்தது. உடலையும், மனதையும் சமப்படுத்துவது தான் யோகாசனம்.
மனிதனின் உடல் சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமெனில் நமது உடலில் உள்ள தச வாயுக்கள் (பத்து விதமான வாயு) அதனதன் விகிதத்தில் இயங்க வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் பசியிருக்காது. அஜீரணமாகும். இரத்த ஓட்டம் நன்றாக இருக்காது. மூச்சின் இயக்கம் சரியாக இருக்காது. அதனால் சுறுசுறுப்பு இருக்காது.
இதனை சரி செய்ய யோகாசனத்தில் எல்லோரும் எளிமையாக செய்யும் எந்த பக்க விளைவும் இல்லாத ஆசனம் உள்ளது. அதுவே அர்த்தஹாலாசனம் ஆகும். இதனை அனைத்து வயதினரும் பயிலலாம். அதற்கு முன் யோகாசன விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
யோகாசன விதிமுறைகள்
- யோகாசனங்களை காலை 4 முதல் 7 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் செய்யலாம்.
- வெறும் வயிற்றில் பயிற்சி செய்யவும். சாப்பிட்டிருந்தால் மூன்று மணி நேர இடைவெளி வேண்டும்.
- வெறும் தரையில் செய்யக்கூடாது. ஒரு மேட் அல்லது விரிப்பு விரித்து அதில் செய்ய வேண்டும்.
- நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் செய்ய வேண்டும்.
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் 5 நாட்கள் செய்யக்கூடாது. ஆறாவது நாள் முதல் செய்யலாம்.
- ஆண்கள் விளையாட்டு ஆடைகள், பேண்ட், பெண்கள் சுடிதார் அணிந்து பயிற்சி செய்யலாம்.
- யோகாசனங்களை நிதானமாக மன ஒருமைப்பாட்டுடன் செய்ய வேண்டும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழிவகுக்கும்.
அர்த்தஹாலாசனம் செய்முறை
- விரிப்பில் நேராக படுக்கவும்.
- இரு கால்களும் சேர்த்து இருக்கட்டும்.
- கைகளை உள்ளங்கை தரையில் படும்படி பக்கவாட்டில் வைக்கவும்.
- இப்பொழுது இரு கைகளையும் நன்கு தரையில் அழுத்தி மூச்சை இழுத்துக் கொண்டு வலது காலை ஒரு அடி உயர்த்தவும்.
- மூச்சடக்கி பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மூச்சை வெளியிட்டு மெதுவாக காலை தரையில் வைக்கவும்.
- இதேபோல் இடது காலை மூச்சை உள் இழுத்து ஒரு அடி உயர்த்தவும்.
- பத்து விநாடிகள் மூச்சடக்கியிருக்கவும்.
- பின் மூச்சை வெளியிட்டு மெதுவாக காலை தரையில் வைக்கவும்.
- இதேபோல் ஒவ்வொரு காலிலும் மூன்று முறைகள் பயிற்சி செய்யவும்.
- இப்போது மூச்சை இழுத்து மெதுவாக இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தவும்.
- பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக காலை கீழே வைக்கவும்.
- மூன்று முறை பயிற்சி செய்யவும்.
அர்த்தஹாலாசனம் பயன்கள்
- இந்த ஆசனம் உடலில் தச வாயுவையும் நன்றாக இயங்கச் செய்கின்றது. அதனால் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் நாம் வாழலாம்.
- உடலில் அதிக தசையை குறைக்கின்றது. உடல் அழகாக நல்ல பொலிவான தோற்றத்துடன் வாழலாம்.
- பெண்களுக்கு இடுப்பு தசைகளை குறைத்து இளமையுடன் வாழ வழிவகுக்கின்றது.
- நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும்.
- இரத்த ஓட்டம் நன்றாக இயங்கும்.
- அஜீரணக் கோளாறு நீங்கும்.
- தொப்பையை குறைக்கும்.
- பெண்களுக்கு இடுப்பு வலி நீங்கும்.
- நீர்க்கட்டிகள் வராது.
- சிறுநீரகம் நன்கு இயங்கும்.
- மலச்சிக்கல் நீங்கும். உடலில் கழிவுகள் தங்காது.
- கால் பாதவலி, கால் வீக்கம் வராது.