தலைவலி போக்கும் அற்புத ஆசனங்கள்
ஆரோக்கியம் நம் கையில் – 21
ஒரு இல்லத்தில் அவசர அவசரமாக அந்த இல்லத்தரசி தனது படுக்கை அறைக்கு ஓடினாள். பின்னால் அவளது குழந்தைகளும் கணவனும் ஓடினர். ஒருவர் விரிப்பை விரித்தார். ஒருவர் மின் விசிறியை போட்டு விட்டு, கதவை மெதுவாக அடைத்துவிட்டு கணவனும், குழந்தையும் சோகமாக அமர்ந்தனர். இதைப்பார்த்த நான் என்னவாயிற்று, ஏன் உங்கள் மனைவியை அறையில் படுக்க வைத்து விட்டு வெளியில் வந்து சோகமாக அமர்ந்துள்ளீர்கள் என்று வினாவினேன்.
அதுவா என் மனைவிக்கு திடீரென்று தலைவலி லேசாக ஆரம்பிக்கும். அப்பொழுது கண் முகமெல்லாம் சிவந்து விடும். உடன் அதைப் பார்த்து அறையில் படுக்க வைத்து விடுவோம். அதிலிருந்து ஒரு மூன்று மணிநேரம் தலைவலியால் துடியாக துடித்து விடுவாள். எல்லா மருத்துவரிடமும் காண்பித்து எந்த பலனுமில்லை. தலைவலியால் துடிப்பதை எங்களால் பார்க்க முடியாது. மிகவும் வேதனையாக இருக்கும். மூன்று மணி நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்தவுடன் அவளே எழுந்து வெளியே வந்துவிடுவாள்.
ஒரு சமயம், இந்த தலைவலி தொடங்கும் பொழுது படுக்க வைக்கவில்லையென்றால் மிருகமாக மாறி கோபப்பட்டு கையில் உள்ளதை கொண்டு எங்கள் மீது தாக்கிவிடுவாள் என்று கண்ணீர் மல்க கூறினார்.
நான் அவருக்கு கூறினேன். எந்த மருத்துவமும் தீர்க்க முடியாத வியாதியை பதஞ்சலி மஹரிஷி அருளிய அஷ்டாங்க யோகக் கலைகளிலுள்ள யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் தீர்த்து வைக்கும் என்றேன். ஆச்சரியமாகவும், நம்பிக்கையுடனும் என்னைப் பார்த்தார். ஆம் என்று கூறி அந்த அம்மையாருக்கு எளிய பயிற்சியை அளித்தேன். தீர்ந்தது தலைவலி. இப்பொழுது அவருக்கு தலைக்கவசமாக யோகக்கலை திகழ்கிறது.
இதேபோல் நம் நாட்டில், எண்ணற்ற பெண்களும், ஆண்களும் ஒற்றைத் தலைவலி, இரட்டைத் தலைவலியால் (மைக்ரேன்) பெரிய அவஸ்தைப் படுகின்றனர். அனைவருக்கும் இந்த தலைவலி நீக்கி தலைக்கவசமளிக்கும் யோக ரகசியத்தை இதோ அளிக்கிறேன்.
தலைவலி வர முக்கிய காரணங்கள்:
மலச்சிக்கல்: உடலில் கழிவுகள் சரியாக வெளிவர வேண்டும். தினமும் காலை, மாலை மலம் சரியாக வெளியேற வேண்டும். பொதுவாக தலைவலி உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். கழிவு தேக்கம் ஏற்படாமல் தடுக்க யோகாவும், சரியான உணவும் தேவை.
மனச்சிக்கல்: மன அழுத்தம், பலவகையான கவலைகள், மனதில் குழப்பமுடையவராக இருப்பார்கள். இதனால் தலைவலி ஏற்படும்.
அஜீரணம்: சாப்பிட்ட உணவு செரிக்காமல், வயிறு உப்பிசமாக இருக்கும் நிலையில் மீண்டும் பசி வருமுன் சாப்பிட்டாலும் தலைவலி ஏற்படும்.
சைனஸ், சளித்தொல்லை, மூக்கடைப்பு, அடிக்கடி ஜலதோஷம் பிடித்தல் இதனால் தலைவலி வருவதற்கு வாய்ப்புண்டு.
உடலில் அதிகமான உஷ்ணம் உண்டாகும் பொழுது தலைவலி ஏற்படும். உஷ்ணம் கவலையினால் ஏற்படும்.
அதிர்ச்சியான சம்பவம்
வாழ்வில் எதிர்பாராதவிதமாக பயமூட்டும், அதிர்ச்சியான நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அந்த காட்சி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். திடீரென்று மனதில் மீண்டும் தோன்றும் பொழுது அவர்களுக்கு தலைவலி ஏற்படும்.
இனி இந்த தலைவலிக்கு உரிய தீர்வு யோகாவிலும், தியானத்திலும் என்ன பயிற்சிகள் என்பதை காண்போம்.
சண்முகி முத்திரை
காலை எழுந்தவுடன் பல் விளக்கி காலை கடன்களை முடித்துவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவும். உங்களது இரு கை பெருவிரலினால் காதின் துவாரத்தை மூடவும். இரு கைகளின் ஆள்காட்டி விரலை கொண்டு கண்களை மூடி, மோதிர விரல் சுண்டுவிரல்களை உதட்டிற்கு கீழ் வைத்து படத்திலுள்ள படி இருக்கவும். காதுகளை பெருவிரலால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும்.
சாதாரண சுவாசத்தில் ஒரு நிமிடம் அமைதியாக இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை எடுத்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் இருமுறை இவ்வாறு செய்யவும். இவ்வாறு செய்யும் பொழுது கபாலப்பகுதி, மண்டை உட்பகுதியில் நன்கு பிராணன் இயங்கும். அந்தப் பகுதியிலுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக பிராண சக்தி பெற்று சுறுசுறுப்பாகத் திகழும்.
இரண்டாவது பயிற்சி:
வஜ்ராசனத்தில் படத்தில் உள்ளது போல் அமரவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மற்ற மூன்று விரல்கள் சேர்ந்திருக்கவும்). கண்களை மூடவும். இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளிவிடும் பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும். இதேபோல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து வெளிவிடவும்.
இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை அடக்கவும். கஷ்டப்பட்டு மூச்சை அடக்க வேண்டாம். எப்பொழுது மூச்சு வெளிவிட வேண்டும் என்ற உணர்வு வருகின்றதோ உடன் இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதே போல் ஐந்து முறைகள் செய்யவும்.
உத்தானபாத ஆசனம்
விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களை சேர்க்கவும். கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.
மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும். மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும். ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.
இதன் பலன்கள் ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையிலுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப்பெற்று சிறப்பாக இயங்கும். வாயு தொந்தரவு நீங்கும். அஜீரணக் கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம்.
மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தினமும் காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யலாம். மூன்று வேளை செய்ய முடியாதவர்கள், இரண்டு வேளை செய்யவும். அல்லது காலை மட்டும் பயிற்சி செய்யுங்கள். பலன் நிச்சயமுண்டு.
(பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் ஐந்து நாட்கள் யோகப்பயிற்சி செய்ய வேண்டாம்)
இத்துடன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ!
இரவு படுக்கும் முன் சூடான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்திவிட்டு ஒரு நிமிடம் சண்முகி முத்திரை பயிற்சி செய்து விட்டு படுக்கவும். இரவு அரைவயிறு சாப்பாடு 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். பசித்தால் மட்டும் உணவு உண்ணவும்.
சாத்வீகமான உணவு கீரை, பழம், காய்கறிகள் அதிகம் சேர்க்கவும். மாமிச உணவைத் தவிர்த்தால் மிக விரைவில் தலைவலி நீங்கும். காரணம் நாம் உண்ணும் உணவில் உள்ள உணர்வலைகள் தான் நமது பண்பை நிர்ணயிக்கும். மாமிச உணவை உட்கொண்டால் கோபம், டென்ஷன் அதிகம் உருவாகும்.
தலைவலி வரும் அறிகுறி வந்தாலே உடன் வஜ்ராசனத்தில் அமர்ந்து மூச்சை நினைத்து மெதுவாக மூச்சிழுத்து மெதுவாக மூச்சை வெளிவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
மாதம் ஒருமுறை நல்ல இயற்கை எழில் சூழ்ந்த பகுதி உங்களுக்குப் பக்கத்திலிருந்தால் அங்கு சென்று ஒரு மணிநேரம் இயற்கை அழகை ரசிக்கவும்.
15 நாட்களுக்கு ஒருமுறை மூன்று வேளையும் பழச்சாறு மட்டும் (மாதுளை (or) ஆரஞ்சு (or) ஆப்பிள் (or) திராட்சை அருந்தி அதையே உணவாக்கி வேறு உணவு எடுக்காதீர்கள். இது உடலில் உள்ள தேக்கமுற்ற கழிவுகளை வெளியில் எடுத்துவிடும். அதனால் தலைவலி வராது.
அஞ்சலி முத்திரை
விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக மூச்சை கவனிக்கவும்.
இப்பொழுது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையொன்று தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியில் தொடுமாறு வைக்கவும். இரண்டு கைகளும் இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். நமது வலது கைவிரல்கள் இடது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்கவும். தலையைச் சிறிது தாழ்த்தவும். கண்களை மூடியபடி இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இதுபோல் காலை, மாலை மூன்று முறைகள் செய்யலாம்.
மனித உடலில் சக்தி ஓட்டம்
மனித உடலில் நேர்சக்தி, எதிர்சக்தி இரண்டும் உள்ளது. நமது வலது கை நேர் சக்தி, இடது கை எதிர்சக்தி. நம் இரு கைகளும் அஞ்சலி முத்திரையில் இணையும் பொழுது சக்தி ஓட்டம் சிறப்பாக ஏற்பட்டு நிறைவு பெறுகின்றது. இதன் காரணமாக உடலில் பிராண சக்தி சரியாக, நிலையாக இருக்கும்.
மூளைக்கு அமைதி
மூளைக்கு எப்பொழுதும் ஓய்வு கொடுக்காமல் சிந்தனை செய்து கொண்டே இருந்தால் மூளை சூடேறும். அஞ்சலி முத்திரையில் மூளைக்கு ஓய்வு கிடைக்கின்றது. மூளை அமைதியாகின்றது. மீண்டும் சக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.
மன அழுத்தத்தினால் இன்று பலவகையான வியாதிகள் வருகின்றது. குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமே. இந்த அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.