பொதுவாக நாம் அனைவரும், பேசும்போது பக்கா என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவோம். புதுச்சட்டை அணிந்தால் நண்பர்கள், இது உனக்கு பக்காவாக உள்ளது என்பார்கள். திருமண வீட்டில் சாப்பிட்டதும் பக்கா சாப்பாடு என்போம். எனக்கு மனைவி பக்காவாக அமைந்துள்ளாள். என்னைப் புரிந்து நடந்து கொள்கிறாள் என்று சொல்வதுண்டு! ஆக, பக்கா என்பதற்கு பூரணமானது, குறைவில்லாதது, நிறைவானது, மகிழ்ச்சியானது என்று பொருள் கொள்ளலாம்.
சரி, நமக்குக் கிடைக்கும் விஷயங்கள் மட்டும் பக்காவாக இருந்தால் போதுமா? நம் உடலும் மனமும் பக்காவாக இருக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் பக்காசனம் இளம் பருவத்திலேயே பயில வேண்டும். இதைப் பயின்றால், உடல் உள் உறுப்புகள் பக்காவாக இயங்கும். மனம் பக்காவாக (அமைதியாக) இருக்கும். வாழ்வும் ஆனந்தமாக அமையும்.
குறிப்பு
படிக்கும் மாணவர்கள் (அ) நல்ல உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் எனில், இந்த ஆசனத்தை நிதானமாக முயற்சித்துச் செய்ய வேண்டும். ஒருவேளை, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதயப் பலவீனமுள்ளவர்கள், ரத்த அழுத்தம், கழுத்துவலி அதிகம் உள்ளவர்கள் எனில் முயற்சிக்க வேண்டாம். தகுந்த யோகாசன நிபுணரின் நேரடிப் பார்வையில் பயிற்சி எடுக்கவும்.
பக்காசனம் எப்படிச் செய்வது?
- இரு கைகளையும் தரையில் ஊன்றி, கை முட்டியில் முழங்கால் படும்படி வைக்கவும்.
- பின்னர் மெதுவாக இரு கால்களையும் படத்தில் உள்ளதைப் போல உயர்த்தவும்.
- இதே நிலையில் 10 எண்ணும் வரை இருக்கவும்.
- பின்னர் மெதுவாக கீழே அமரவும்.
- ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மறுபடியும் இதே மெத்தடில் ஒரு முறை செய்யவும்.
முதலில் பழகுபவர்கள் சுவர் ஓரமாக பழகவும். தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி செய்து நன்றாக இந்த ஆசனம் வரும் பொழுது சுவரின் உதவியின்றி பயிற்சி செய்யலாம். முதலில் கடினமாகத் தெரியும். பயிற்சி செய்தால் எளிதாக வரும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி படிக்கிற மாணவச் செல்வங்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதமாகும். செய்யச் செய்ய எளிமையாக வந்துவிடும்.
இதனால் என்ன பலன்?
புத்திக் கூர்மையாகும்
மாணவர்களின் அறிவுத் திறன் வளரும். புத்திக் கூர்மையாகும்! முக்கியமாக, ‘என்னால் முடியுமா?’ என்பது போன்ற எதிர்மறை எண்ணப் பதிவுகள் நீங்கும். குடல் சுத்தமாவதால், தெளிந்த சிந்தனையுடன் செயல்படலாம்.
எதிர்மறை சிந்தனைகள் மாறும்
மாணவர்களின் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) இன்று அதிகமாகிவிட்டது. இது மாற ஒரே வழி, யோகக்கலையினை தினமும் ஒரு அரைமணி நேரம் மாணவர்கள் பயில வேண்டும். குறிப்பாக, இந்த ‘பக்காசனம்’ செய்தால் நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். ஒழுக்கமாக வாழலாம்.
புஜங்கள் வலிமை பெறும்
நமது புஜங்கள் வலிமை பெற்று நன்கு இயங்கும். உடலின் தோற்றம் இளமையாயிருக்கும். உடல் கட்டமைப்பு நன்றாக இருக்கும். நமது உடலானது சரியான சதைக் கட்டுப்பாட்டுடன் அழகாயிருந்தால், நமக்கு மனதில் ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் இருக்கும்.
மூட்டுகள் பலம் பெறும்
இளம் வயதிலேயே இந்த ஆசனத்தை பயிற்சி செய்தால், மூட்டுகள் நன்றாக பலம் பெற்று இயங்கும். மூட்டுவலி வராது. கை மூட்டுகளும் நன்கு பலம் பெற்று இயங்கும்.
நுரையீரல் நன்றாக இயங்கும்
இந்த ஆசனத்தால் நுரையீரலில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறுகிறது. நுரையீரலின் இயக்கமும் சீராகும்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
இந்த ஆசனத்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதனால் அடிக்கடி காய்ச்சல் வருவது நிற்கும். உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்.
மலச்சிக்கலைத் தடுக்கும்
மலச்சிக்கலைப் போக்குகிறது. மலக்குடல், பெருங்குடலில் கழிவுகள் தங்காமல் வெளியேறி, சுத்தமடையச் செய்கிறது.
சிறுகுடல் இயக்கம் சிறக்கும்
சிறுகுடல், பெருங்குடலின் இயக்கம் நன்றாயிருக்கும். நல்ல சக்தி இந்த ஆசனத்தின் மூலம் கிடைக்கும்.
மன ஒருமைப்பாடு கிடைக்கும்
எல்லா மனிதர்களுக்கும், மன ஒருநிலைப்படுதல் என்பது மிக முக்கியமாகும். குறிப்பாக, மாணவச் செல்வங்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே மனம் ஒருநிலைப்பட்டு விட்டால், அவர்கள் வாழ்வு வளமாக, நலமாக இருக்கும். இந்த ஆசனம், மன ஒருநிலைப்பாட்டை கொடுக்கிறது. அதனால் மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் வாங்கலாம்.
தேர்வு விரைவாக எழுதலாம்
மாணவர்கள் பொதுவாக தேர்வு எழுதும் பொழுது, இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுதினால் அவர்களின் கை விரல்களில் வலி ஏற்படுகிறது. இதனால் அவர்களால் தேர்வை விரைவாக எழுத முடியாமல் போகிறது. இந்த ஆசனமானது கைவிரல்கள், நரம்புகளுக்கு நல்ல சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. கை நரம்புகளை மிகச் சிறப்பாக இயங்க வைத்து, கைவிரல்களில் வலியின்றி மாணவர்கள் தேர்வு எழுத உதவுகிறது!
மிருதங்கம், தபேலா வாசிப்பவர்களுக்கு..
மிருதங்கம், தபேலா, டோல்கீ உள்ளிட்ட இசைக் கருவிகளை கைவிரல்களால் வாசிக்கும் இசைக் கலைஞர்களுக்கும், ஆர்மோனியம் வாசிக்கும் இசைக் கலைஞர்களுக்கும் இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதமாகும். கைவிரல்கள், அதன் நரம்புகள் மிகச்சிறப்பாக இயங்கும். எவ்வளவு நேரம் வாசித்தாலும், கைவிரல்களில் வலி எடுக்காது. நரம்புகள் மிகச் சிறப்பாக இயங்கும்.
கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வேலை செய்பவர்கள்….
தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் வேலை செய்பவர்களுக்கு கைவிரல்களில் வலி ஏற்படும். இந்த ஆசனமானது அந்த வலியை சரிசெய்து, விரல்களுக்கு சிறப்பான வலுவைக் கொடுக்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறை….
- கம்பு, சோளம், கேழ்வரகு இவற்றில் தினம் ஒன்றை ஒரு நேரம் சாப்பாட்டில் அரிசிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளவும்.
- கருணைக்கிழங்கை வாரம் ஒருமுறை உணவில் சேர்க்கவும்.
- முள்ளங்கி, சௌசௌ, வெள்ளரியை அடிக்கடி சாப்பிடவும்.
- காலை டிபனுடன், கறிவேப்பிலை துவையல் எடுத்துக்கொள்ளவும். இதனால் வயிற்றுப்புண்ணும் ஆறும்.
- வாரம் ஒருமுறை காலையில் இளநீர் குடிக்கவும். வாரம் ஒருநாள் இரவு உணவாக, அவல், பொரிகடலை, தேங்காய் இவற்றை கலந்து, ஒரு கப் அளவு சாப்பிடவும்.
- 15 நாட்களுக்கு ஒருமுறை, காலையில், 3 சிறிய துண்டு இஞ்சியை லேசாக உப்புத் தொட்டு சாப்பிடவும்.
- சுத்தமான தேனில் நெல்லிக்கனியை ஊறவைத்து, அதனை தினமும் ஒன்று சாப்பிடவும்.
- மாதம் ஒருமுறை துளசி இலை, அருகம்புல், வில்வ இலை இவற்றை தலா 5 எண்ணிக்கையில் எடுத்து வாயில் போட்டு மென்று, சாற்றை மட்டும் குடித்துவிட்டு, சக்கையை துப்பிவிடவும்.
பக்கா ஆசனமும் செய்து மேலே சொல்லப்பட்டுள்ள உணவுமுறையையும் கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்வும் பக்காவாக இருக்கும்.