உலகிலுள்ள மனிதர்கள் எல்லாம் மாத்திரைகள் இன்றி வாழ வழிவகைகளைத் தேடுகிறார்கள். அதிலும் கூட ஒரு செயல் செய்ய வேண்டும், அது ஆரோக்கிய விஷயத்தில் அநேக பலன்களைத் தர வேண்டும் என்று தானே எல்லோரும் விரும்புகிறோம். நமது உடலுக்கும், மனதிற்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கும் நிறைய பலன்கள் தரக்கூடய ஒரு ஆசனம் தான் ஏகபாத பூரண தனுராசனம். இதனை முறைப்படி பயின்று தினமும் காலையும், மாலையும் ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும். வாழ்க்கையில் நமக்கு முழுமையான ஆரோக்கியம் கைகூடும்.
செய்முறை:
- விரிப்பில் குப்புறப் படுக்கவும்.
- வலது காலை மடக்கி வலது கையால் கால் பெருவிரலைப் பிடித்து உயர்த்தவும்.
- இடது கையையும் தலையையும் மேலே முடிந்த அளவு உயர்த்தவும்.
- இடது கையை சின் முத்திரையில் வைக்கவும்.
- பெருவிரல், ஆள்காட்டி விரலை இணைத்து உள்ளங்கை தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- இடது கால் நேராக நீட்டியிருக்க வேண்டும்.
- இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக கைகளை விடுத்து கால்களை நீட்டி ஐந்து விநாடிகள் ஓய்வெடுக்கவும்.
- பின் இதேபோல் கால் மாற்றி செய்யவும்.
- தினம் இரு முறை செய்யவும்.
பலன்கள்:
தொந்தி கரையும்
ஆம், தொந்தி கரையும். வயிற்றுப்பகுதி நன்கு அமுக்கப்படுவதால் தொந்தி குறையும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் எடை குறைய இது நல்ல ஆசனம். எந்த பக்கவிளைவுகளுமின்றி அதிக எடை குறையும்.
இதய வால்வுகளின் அடைப்புகள் நீங்கும்
இதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் பாயும். தைமஸ் சுரப்பி நன்றாக சுரக்கும். அதனால் இதயவலி, இதயத்தின் வால்வுகளில் இரத்த அடைப்பு, கொழுப்புகள் தங்குவது போன்ற பிரச்சனைகள் வராது. இராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படுகிறது.
குடலில் கழிவு தங்காது
குடல் சுத்தமாக இருக்கும். சிறுகுடல், பெருங்குடலில் கழிவுகள் தங்காது. குடல் சுத்தமானால் மனமும் சுத்தமாகும்.
கைவலி – கால்வலி நீங்கும்
சிறுகுடல் இயக்கம் சரியில்லையெனில் கைவலி, கை குடைச்சல் வரும். பெருங்குடல் இயக்கம் சரியில்லையெனில் கால்வலி, கால் குடைச்சல் ஏற்படும். இந்த ஆசனம் குடலுக்கு நல்ல சக்தி ஓட்டம் கொடுக்கிறது. சிறுகுடலின் வெளிஉறுப்பு தான் – கைகள். பெருங்குடலின் வெளி உறுப்பு தான் – கால்கள். இந்த ஆசனத்தால் கைவலி, கால்வலி இல்லாமல் வாழலாம்.
முதுகுவலி போகும்
இந்த ஆசனத்தில் முதுகுக்கு நல்ல சக்தியும் பலமும் கிடைக்கிறது. முதுகுவலி, தசைப்பிடிப்பால் வரும் முதுகுவலி நீங்கும்.
கழுத்துவலி இருந்தால் போகும்
கழுத்துவலி வராது. கழுத்து வலி உள்ளவர்கள் நிதானமாக பயிற்சி செய்யுங்கள். நல்ல நிவாரணம் கிடைக்கும். கழுத்தெழும்பு தேய்மானம் ஏற்படாது. பிராண ஆற்றல் நன்கு பாய்ந்து கழுத்துப் பகுதியை நன்கு இயங்கச் செய்கின்றது.
மலச்சிக்கல் வராது
மலச்சிக்கல் தான் எல்லா நோய்க்கும் மூலகாரணம். இந்த ஆசனம் மலக்குடலை நெகிழச் செய்து கழிவுகளை சரியாக வெளியேற்றுகின்றது. அதனால் உடல் முழுக்க ஆரோக்கியமாக இருக்கும். சுறுசுறுப்புடனும் வாழலாம்.
ஒரு ஆசனம் எவ்வளவு பலன்கள் தருகின்றன பார்த்தீர்களா? இதைச் செய்வதற்கு நீங்கள் எடுக்கும் நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள் தான். இதில் எவ்வளவு பிரச்சனைகள் தீர்கின்றன. தினமும் ஏகபலன்களைத் தரும் ஏகபாத பூரண தனுராசனத்தைப் பயின்று வளமாக வாழுங்கள். இதனுடன் கீழ்க்கண்ட உணவு முறைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
என்ன காய்கறிகள்?
பாகற்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், முள்ளங்கி உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பழங்களும்
கொய்யாப்பழம், கருப்பு திராட்சை, மாதுளம் பழம், வயல் வாழைப்பழம் நன்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
கீரை சாப்பிடுங்கள்
மணத்தக்காளி, புதினா, கொத்துமல்லி, முருங்கைக் கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
மாதம் இரண்டு நாள் மதிய உணவில் எல்லாப் பழங்களும் கலந்து பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
காபி, டீக்கு பதில் இரவு சுக்கு காபியை கருப்பட்டி சேர்த்து அருந்துங்கள்.