நலம் தரும் நாற்காலி யோகா – கண்களுக்கு ஒளியூட்டும் பிராண முத்திரை
பொதுவாக நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதனை, ‘என் கண் போல பாதுகாப்பேன்!’ என்போம். ஒரு தந்தை தனது மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது, ‘எனது கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்பார். ‘இரவு தூங்கி முழித்தல்’ என்கிறோம் நாம். கண்ணை திறப்பதைத்தான் “முழித்தல்” என்கிறோம். பின்னர் இரவில் கண்ணை மூடினால் ‘தூங்குதல்’ என்கிறோம். முழித்ததிலிருந்து தூங்கும் வரை நமக்கு கண்தான் ஒளி கொடுத்து பார்க்கச் செய்கிறது! அந்த கண் பார்வையினால் தான் ஒரு நாளில் எல்லா செயல்களும் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட கண்களை பாதுகாப்பதே நமது முதற்கடமை!
இன்று பள்ளி மாணவர்கள் பலரும் பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணிகின்றனர். பலரும் 40 – 50 வயதிற்குள் கண்ணில் குறைபாடு என அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கேட்ராக்ட், கண்ணில் கட்டி, கண்ணில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, தினமும் 10 நிமிடம் ஒதுக்குங்கள். நாற்காலியில் அமர்ந்து, ‘பிராண முத்திரை’ செய்து பலனடையுங்கள்!
பிராண முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- கண்களை மூடி, 10 முறை மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து மிக மெதுவாக வெளிவிடவும்.
- பிறகு இரண்டு கைகளிலும் மோதிர விரல், சுண்டு விரல் மத்தியில் பெரு விரலை வைக்கவும்.
- மற்ற இரண்டு விரல்களும் தரையை நோக்கி இருக்கட்டும். (படத்தைப் பாருங்கள்).
- இதே நிலையில் 2 நிமிடம் இருக்கவும்.
- பிறகு மெதுவாக கண்களைத் திறந்து, கைகளை சாதாரணமாக வைக்கவும்.
- இதேபோல காலை, இரவு சாப்பிடுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
- தவிர, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 2 நிமிடம் பயிற்சி செய்யவும்.
- சாப்பிட்டிருந்தாலும் கூட 2 மணி நேர இடைவெளியில் செய்யலாம்.
இந்த முத்திரையால் என்ன நன்மை?
- இந்த முத்திரையால் லிவருக்கு நல்ல பிராண ஆற்றல் கிடைக்கும். லிவரின் வெளியிருப்பு தான் ‘கண்’கள். எனவே கண்கள் நன்றாக இயங்க வழி செய்கிறது இந்தப் பயிற்சி.
- கண்களில் கட்டிகள் வராது. கண்களில் அடிக்கடி நீர் வெளிவரும் சிலருக்கு. இந்த முத்திரை செய்தால், அந்தப் பிரச்சனையும் சரியாகும். வராமலும் தடுக்கலாம்.
- கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடுகள் நீக்கும். கண் எரிச்சல், கண்வலி உள்ளிட்ட குறைபாடுகளும் சரியாகும்.
- பள்ளி படிக்கும் சிறார்கள் பலரும் இன்று கண்ணாடி அணிகின்றனர். அவர்கள் இந்த முத்திரையை தினமும் 3 முறை 2 நிமிடம் செய்தால், ஒரு மாதத்தில் நிலைமை சரியாகும்.
- உடல் கழிவுகள் சரியாக வெளியேறும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.
- சிறுநீரகமும், சிறுநீரகப்பையும் நன்றாக செயல்படும். அதில் கழிவுகள் தங்காது. கற்கள் உருவாவதும் தடுக்கப்படும்.
- தினமுமே ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.
கண்களுக்கான பயிற்சிகள்:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 10 முறை ஆழ்ந்த மூச்சு எடுத்து விடவும். பிறகு இரண்டு கைகளின் பெருவிரல்களையும் சேர்த்து, கீழிருந்து மெதுவாக மேலே கொண்டு வரவும். கைப்பெருவிரல் நுனியை மட்டும் இரண்டு கண்களால் பார்த்துக்கொண்டே பொறுமையாக கைகளை மடியிலிருந்து தலைக்கு மேலே கொண்டு வரவும். தலைக்கு மேல் வந்ததும் கண் விழிகளை நன்றாக மேலே உயர்த்தி, 10 விநாடிகள் விரல் நுனியைப் பார்க்கவும். பிறகு கைவிரல் நுனிகளைப் பார்த்தவாறே மெதுவாக கைகளைக் கீழேக் கொண்டு வரவும். இப்படி 3 முறை செய்யவும்.
- இப்பொழுது கைகளை நீட்டி, இரு கட்டைவிரலையும் சேர்த்து வைக்கவும். முதலில் வலது கை கட்டை விரலை மட்டும் மேல்நோக்கி வைத்து, வலப்பக்கம் கையை மெதுவாக முடிந்த அளவு பக்கவாட்டில் கொண்டு வரவும். தலையை திருப்பாமல் வலது கண்ணால் எவ்வளவு தூரம் வலது கட்டை விரலைப் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கவும். பிறகு மெதுவாக வலது கையின் கட்டைவிரலைக் கொண்டு வந்து, இடது கை கட்டை விரல் பக்கம் சேர்க்கவும். அவ்வாறு வரும்போது, வலது கை கட்டைவிரலை பார்த்துக் கொண்டே வர வேண்டும்.
- இதேபோல் இடது கையில் மற்ற விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நேராக மேல் நோக்கி வைத்து, இடது பக்கமும் மெதுவாக பக்கவாட்டில் கையைக் கொண்டு செல்லவும். இப்பொழுது தலையை நேராக வைத்து, இடது கண்ணை மட்டும் இடதுகை பெருவிரலை நோக்கி எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கவும்.
பிறகு இரு கைவிரல்களையும் கோர்த்து, இரு பெருவிரல்களையும் சேர்த்து வைத்து, கடிகாரச் சுற்றில் ஒரு வட்டம் பொறுமையாக போடவும். அப்போது கை பெருவிரலை மட்டும் பார்க்கவும். இப்படி மூன்று முறை பயிற்சி செய்யுங்கள்.
உணவுமுறை எப்படி இருக்கணும்?
பழங்கள்:
நெல்லி, பப்பாளி, அன்னாசி, மாம்பழம், ஆரஞ்சு, கருப்பு திராட்சை, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, சாத்துக்குடி இவற்றில் எந்தப் பழம் கிடைக்கிறதோ, அதை அந்த நேரத்தில் (ஒவ்வொரு வாரமும் மூன்று வகை பழங்கள்) சாப்பிடுங்கள். அடுத்த வாரம், வேறு மூன்று பழங்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகள்:
கேரட், வெள்ளரி, முருங்கை, பீர்க்கை, வெண்பூசணி, வெங்காயம், அவரை, பீன்ஸ், பூண்டு, வில்வம், கீழாநெல்லி, புடலை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேருங்கள்.
கீரைகள்:
கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கன்னி, வல்லாரை ஆகியவற்றையும் உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை:
- இரவில் அதிக நேரம் கண்விழிக்கக் கூடாது. இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை ஆழ்ந்த நித்திரை அவசியம்.
- காலை, மாலை என இரு வேளையும் மலம் கழிக்கவும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
- தாகம் எடுத்தால் தேவைக்கேற்ப நீர் அருந்தவும்.
- பஸ் / கார் பயணத்தின் போது புத்தகம் படிப்பதைத் தவிர்க்கவும்.
- அளவுக்கு அதிகமான நேரம் டி.வி. பார்த்தல், போனை நோண்டுதல், போன் பேசுதலைத் தவிர்க்கவும்.
- திருமணமானவர்கள் மாதம் இருமுறை மட்டும் உடலுறவு கொள்ளவும்.