நலம் தரும் நாற்காலி யோகா – செவிச் செல்வம் காக்கும் சூன்ய முத்திரை
மனித உறுப்புக்கள் எல்லாமே முக்கியமானது தான். நமக்கு ஏதாவது ஒரு உறுப்பு செயல்பாட்டில் குறை ஏற்படும்போது தான் அதன் முக்கியத்துவத்தை உணர்வோம். அந்த வகையில் ‘காது’ மிக அற்புதமான உறுப்பு! ஒவ்வொரு நிமிடமும் நாம், உலகின் ஒலிகளை காதால் கேட்டு, அந்த ஒலியினால் உலகை உணர்ந்து செயல்படுகிறோம். எழுந்தவுடன், உங்கள் அம்மாவின் அன்புக் குரலோ, மனைவியின் குரலோ உங்களை விசாரிக்கிறது. தம்பி, தங்கைகள் உங்களை அழைத்துப் பேசும் ஒலி, உங்கள் காதில் பட்டு, முக்கியமான சில விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது. இதுபோல் காலை முதல் இரவு வரை நமது கடமைகளை செய்ய காதில் விழும் சத்தம் தான் வழிகாட்டுகிறது. இரவு தூங்கும் போது கூட ஏதாவது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் விஷ சந்துக்கள் சத்தம் கேட்டால் உடன் முழிக்கச் செய்வதும் நமது காது தான்!
இப்பேற்பட்ட காது, அந்தக் காலத்தில் எல்லாம் சிலருக்கு 100 வயதிற்கு மேலும் நன்கு கேட்டது. இன்றோ, காதில் செல்போன் பல மணிநேரம் இருப்பதால் காதில் உள்ள உயிர் செல்கள் சக்தியிழந்து, பல பிரச்சனைகள் வருகின்றன. காதின் கேட்கும் திறன் குறையும்போது தான் நம் வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சனை இது என்பதை உணர்கிறோம்.
காதில் ஏற்படும் பொதுவான குறைபாடுகள்:
- காதில் கேட்கும் திறன் படிப்படியாக குறைதல்.
- மிகவும் கத்திப் பேசினால்தான் கேட்க முடியும்.
- காது அருகில் பேசினால் தான் கேட்கும்.
- காது வலி அடிக்கடி ஏற்படும்.
- காதில் புண்கள் உண்டாகும்.
- காதில் கட்டிகள் உருவாகும்.
- காதில் கட்டிகளிலிருந்து சீழ் வெளியேறும்.
- காதில் ‘குர்’ என்ற சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
- சிலருக்கு அவ்வப்பொழுது சப்தம் கேட்கும். அது தூங்குவதற்கு தொந்தரவாக இருக்கும்.
- வலது அல்லது இடது காது கனமாக பாரமாக இருக்கும்.
- காதிற்குள் யாரோ ஒருவர் பேசுவது மாதிரியான உணர்வு அடிக்கடி ஏற்படும்.
- பனி, மழைக்காலங்களில் காது வலியும், சளியும் அதிகமாக இருக்கும்.
- குளிக்கும்போது காதுக்குள் அடிக்கடி தண்ணீர் உள்ளே சென்றுவிடும். இதனால் ‘கொட கொட’ என சப்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். நமது அன்றாட வேலையிலும் மனம் முழுமையாகச் செல்லாது.
மேலே சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் இன்று பலருக்கும் இருக்கிறது. அவர்கள் அனைவரும் கவலைப்படாமல், கீழ்க்காணும் பயிற்சிகளை பயிலுங்கள். வேறு யார் சொல்வதையும் காதில் போடாமல், இந்தப் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் காது சம்பந்தமான குறைபாடுகள் நீங்கி, வளமாக வாழலாம்!
சூன்ய முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- கண்களை மூடி, மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி பத்து முறை செய்யவும்.
- பிறகு இரண்டு கைகளிலும் நடுவிரலை மடித்து, அதன் மேலே கட்டை விரலை வைத்து, சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- ஆள்காட்டி விரல், மோதிர விரல், சுண்டு விரல் ஆகிய மூன்றும் தரையை நோக்கி இருக்கட்டும் (படத்தைப் பாருங்கள்).
- இதே போல இரண்டு நிமிடம் சாதாரண மூச்சில் இருக்கவும்.
- இப்படி காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் தலா 2 நிமிடம் பயிற்சி செய்யவும்.
காது நுனிகளை கைவிரல்களால் இழுத்துவிடல்….
- நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும்.
- இரு நாசி வழியே மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி 10 முறை செய்யவும்.
- பிறகு பெருவிரல், ஆள்காட்டி விரலை காது நுனிகளில் பிடித்து, இரு நுனிகளையும் மெதுவாக கீழே இழுக்கவும்.
- பிறகு மெதுவாக பழைய நிலைக்கு வரவும்.
- இப்படி 10 முறை செய்யவும்.
சண்முகி முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி பத்து முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.
- பிறகு பெருவிரலால் இரு காது துவாரத்தையும் மூடிக்கொள்ளவும்.
- மற்ற விரல்களை படத்தில் உள்ளது போல வைத்துக் கொண்டு, உங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்தவும்.
- இப்படியே 2 நிமிடம் இருக்கவும்.
- பிறகு மெதுவாக கைகளை எடுத்து விடவும்.
- இதே போல மூன்று முறை பயிற்சி செய்யவும்.
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்றுவிதமான பயிற்சிகளையும் தினமும் காலையும் மாலையும் நாற்காலியில் அமர்ந்து நிதானமாக செய்யுங்கள். காது சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவிலேயே நிரந்தர தீர்வு கிடைக்கும்.
உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய்வை:
- காரம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்.
- முட்டைக்கோஸ், அவரை, பீட்ரூட், தக்காளி, வெண்டைக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேருங்கள்.
- வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். நல்லெண்ணெயை சூடு செய்து, ஆறவைத்து, காதின் வெளிப்புறமும், உட்புறமும் எண்ணெய் தேய்த்து, ஐந்து நிமிடம் கழித்து குளிக்கவும். எண்ணெய்க் குளியல் செய்யும் தினத்தன்று மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்கள்.
- வெள்ளைப் பூண்டில் இரண்டு சிறிய பற்களை எடுத்து, எண்ணெயில் வதக்கி, வாரம் ஒரு நாள் மட்டும் காலையில் சாப்பிட்டு வரவும்.
- மணத்தக்காளிக் கீரை, தண்டாங்கீரை, பசலிக்கீரை, அரைக்கீரை, முடக்கத்தான் கீரை உள்ளிட்டவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.
- தினமும் குளிக்கும் போது காதின் வெளிப்புறத்தை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
நமக்கு எவ்வளவு வயதானாலும் நம்முடைய காதுகள் நன்றாக இயங்குவதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பயிற்சிகளையும் உணவு முறைகளையும் கடைப்பிடியுங்கள். முக்கியமாக, நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். காதில் உள்ள குறைபாடுகள் அனைத்துமே ஒரு மண்டலத்திலேயே (48 நாட்கள்) சரியாகி, நீங்கள் வளமாக வாழலாம்!