பூரண நலம் தரும் பரிபூரண நவாசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 25
சந்தோஷம், மகிழ்ச்சி என்பது நமது உடலையும், மனதையும் நாம் எப்படி வைத்துள்ளோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் மன அமைதி, மன மகிழ்ச்சி, சந்தோஷம் வாழ்வில் இருக்கும்.
உடல், மன நோய் வர என்ன காரணம் என்றால், உடலில் தங்கும் கழிவுகள் சரியாக வெளியேறுவதில்லை. அது சரியாக வெளியேற ஒரே வழி யோகாசனம் செய்வது தான்.
அடுத்து மனக் கழிவுகள். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகள், கவலை, மன அழுத்தம் நீக்கி சிந்தனை தெளிவு பெற வைப்பதும் யோகாசனம் தான். ஆக உடல் மன ஆரோக்கியத்தையும், அமைதியையும் அளிப்பது இந்த அற்புத யோகக்கலையாகும்.
வாழ்வில் ஆரோக்கியம் உடலில் வேண்டுமெனில் அதிகாலையில் எழும் பழக்கம் வேண்டும்.
பொதுவாக ஒரு சொல் வழக்கமுண்டு.
காலை மூன்று மணிக்கு எழுபவன் முனிவன்
காலை நான்கு மணிக்கு எழுபவன் ஞானி
காலை ஐந்து மணிக்கு எழுபவன் அறிஞன்
காலை ஆறு மணிக்கு எழுபவன் மனிதன்
காலை ஏழு மணிக்கு எழுபவன் எருமை
மனிதனாகப் பிறந்தவன் வாழ்க்கையை அருமையாக வாழ வேண்டுமெனில் அதிகாலை எழ வேண்டும். இல்லையேல் வாழ்வு எருமை போல் மந்தமாகிவிடும். அதிகாலை எழுவதற்கு ஒரே வழி யோகாசனத்தை தினமும் முறைப்படி பயில்வது தான்.
பரிபூரண நவாசனம் செய்தால் மனமும் உடலும் வளமாகும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம்.
பரிபூரண நவாசனம் செய்முறை:
- விரிப்பில் நேராகப் படுக்கவும்.
- இரு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும்.
- இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே காலையும், கையையும் உயர்த்தவும்.
- கைகளை முதலில் கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும்.
- பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் படத்திலுள்ளது போல் சேர்க்கவும்.
- இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.
- மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளை கால் நோக்கி உயர்த்த வேண்டும்.
- அந்நிலையில் மூச்சை அடக்கியிருக்க வேண்டும்.
- பின் மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வர வேண்டும்.
- மூன்று முறைகள் செய்யவும்.
- ஒவ்வொரு முறை செய்து விட்டு ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
குறிப்பு:
முதுகுவலி அதிகம் உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்தவர்கள் இந்த ஆசனத்தை தனியாக செய்ய முயற்சிக்க வேண்டாம். தகுந்த ஆசானின் உதவியுடன் செய்யவும்.
இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதனை செய்ய முயற்சிக்காதீர்கள்.
பலன்கள்
முகப்பொலிவு:
இந்த ஆசனம் முகத்திலுள்ள எல்லா தசைகளும் நன்கு பளபளப்பாக இருக்க உதவுகின்றது. முகம் முழுவதும் ரத்த ஓட்டம் சிறப்பாக பாயும். முகமலர்ச்சியை தருகின்றது.
குடல் சுத்தம்:
சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகின்றது. குடல் சுத்தமாவதால் எண்ணங்கள் சுத்தமாகின்றது. அதனால் அகமலர்ச்சியுடன் சேர்ந்து முகமலர்ச்சியை தருகின்றது.
மூன்று முதுகுவலி:
கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி மூன்றையும் வராமல் தடுக்கும் அருமையான ஆசனமிது. வந்தாலும் முறையாக தினமும் பயிற்சி செய்தால் முதுகெலும்பு பலம் பெறும். முதுகுவலியையும் நீக்குகின்றது.
குடல் இறக்கம்:
குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது. வயிற்றுப்போக்கு அதிகமாக சென்றால் உடன் இந்த ஆசனம் செய்தால் சரியாகிவிடும். குடல் இறக்கத்தினால் தான் அதிக வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.
சிறுநீரக உறுப்பு:
சிறுநீரகப்பை, சிறுநீரக உறுப்பை வலுவாக்கி, அதன் குறைபாடுகளை அகற்றுகின்றது.
அதிக வயிற்றுத் தசை:
அதிக வயிற்றுத் தசையை குறைத்து அழகாக, மிடுக்காக, சுறுசுறுப்பாக வாழ வழி வகை செய்கின்றது.
இடுப்புவலி:
இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதமாகும். இடுப்பு வலியை நீக்குகின்றது.
நரம்புத் தளர்ச்சி:
நரம்புத் தளர்ச்சியை நீக்குகின்றது. உடல் நடுக்கம், கைகால் நடுக்கத்தை சரி செய்கின்றது.
ஆண்மைக் குறைவு:
ஆண்மைக் குறைவை நீக்குகின்றது. பெண்களுக்கான மாதவிலக்கு நாட்களில் வரும் பிரச்சனை, வயிற்று வலி, நாள் தள்ளிப் போதல், கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருத்தல் போன்ற வியாதிகளை நீக்குகின்றது.
உணவு:
இந்த ஆசனத்துடன் தினமும் கருவேப்பிலை துவையல் உணவில் சேர்க்கவும். புதினா துவையல் வாரம் மூன்று நாட்கள் சேர்க்கவும். கொய்யாப்பழம் அடிக்கடி உண்ணவும். அரைக்கீரை, தண்டுக்கீரை, அகத்தக்கீரை, முள்ளங்கி உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் உடைத்த அரை மணி நேரத்திற்குள் இரண்டு மூன்று துண்டுகள் கீரி உண்ணுங்கள். இதனை தினமும் உண்ணலாம்.
இந்த உணவும், மேற்கூறிய ஆசனமும் செய்தால் உடல், மன ஆரோக்கியத்துடன் வளமாக வாழலாம்.
இந்த ஆசனத்துடன் லிங்க முத்திரையும் பயிற்சி செய்யவும்.
லிங்க முத்திரை:
சளி, சைனஸ் நீக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் லிங்க முத்திரையின் செயல்முறை விளக்கம்.
ஒரு மனிதன் சுவாசிக்கும் பொழுது 7 லிட்டர் காற்று உள்ளே போய் 7 லிட்டர் காற்று வெளிவர வேண்டும். ஆனால் 7 லிட்டர் காற்று உள்ளிழுத்து விட்டு மூன்று அல்லது நான்கு லிட்டர் காற்றை மட்டும் வெளியேற்றினால் மீண்டும் பழைய அளவு வெளிக்காற்றை உள்ளிழுக்க சிரமம் ஏற்படும். இதனால் மூச்சு திணறல் ஏற்படும். நுரையீரல்களில் சளி அதிகம் இருப்பதால் மூச்சு உடல் முழுக்க செல்வதில்லை. இதுவே ஆஸ்துமாவாகின்றது. ஆஸ்துமாவிற்கு மூலகாரணம் சளி என்பதை நாம் உணர வேண்டும்.
சளி அதிகமாகும் பொழுது அதுவே காசநோயாக மாறி உயிருக்கே ஆபத்தாகின்றது. மேலும் உடலில் சளி அதிகமாகும் பொழுது உடல் மெலிந்துவிடும்.
மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்து விடுவதற்கு காரணம் சளி அதிகமாவது தான். சிந்தனை தெளிவில்லை. வாழ்க்கையில் உற்சாகமாக வாழ முடிவதில்லை. உடலில் முதுகில், கழுத்து முதுகெலும்பில் வலி ஏற்படுகின்றது. இவ்வளவு உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்கும்.
லிங்க முத்திரை செய்முறை:
- முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- முதலில் இருநாசித் துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.
- பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும்.
- மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முத்திரையை பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம். முதலில் ஐந்து நிமிடங்கள் செய்யவும். படிப்படியாக பத்து நிமிடங்கள் செய்யலாம். பின்பு ஒரு மாதத்தில் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரையில் இரண்டு கைவிரல்களையும் இணைக்கும் பொழுது அக்கு பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. குறிப்பாக நமது உடலின் சூடு அதிகமாகி உடலில் உள்ள சளியை வெளிக் கொணர்கின்றது.
உணவுப் பழக்கம்:
உடலில் சளி அதிகமாகாமல் இருக்க மேற்கூறிய லி்ங்க முத்திரையுடன் சில முக்கிய உணவுப் பழக்கம் கடைபிடித்தால் பலன் நிச்சயம் உண்டு.
குளிர்பானங்கள் குறிப்பாக ஐஸ்ஸில் வைத்த குளிர்பானங்களை குடிப்பதைத் தவிர்க்கவும்.
சுத்தமான தண்ணீரை, சுடவைத்த வெந்நீர் மட்டும் குடிக்கவும். ஹோட்டல் மற்றும் வெளியிடங்களுக்குச் சென்றாலும் வெந்நீர் மட்டும் பருகவும்.
தினமும் முடிந்தால் துளசி இலையை சாப்பிடவும். அல்லது இரவு படுக்கும் முன்பாக பித்தளை செம்பில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலையைப் போட்டு மூடி வைக்கவும். காலை எழுந்து பல் துலக்கிவிட்டு அந்த தண்ணீரையும் குடித்து துளசியையும் சாப்பிடவும். இது நுரையீரலில் உள்ள சளியை எடுத்துவிடும். மூச்சுத்திணறல் வராது.
வாரம் இருமுறை காலை அருகம்புல்சாறு சாப்பிடலாம். அருகம்புல் பொடியாகவும் கிடைக்கின்றது. ஒரு சிறிய ஸ்பூன் அளவு வெந்நீரில் கலக்கி சாப்பிடவும்.
பசும்பாலில் பனங்கற்கண்டு சேர்த்து மஞ்சள்பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து இரவு படுக்குமுன் சாப்பிடவும்.
முத்திரையுடன் மேற்குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தையும் கடைப்பிடித்தால் நிச்சயமாக சளி என்ற அரக்கனை அழித்துவிடலாம்.
சளி இல்லாமல் இருப்பவர்களும் மேற்குறிப்பிட்ட முத்திரையையும், பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்தால் கடைசி வரை சளி அதிகப்படாமல் வாழலாம்.
லிங்க முத்திரையின் மற்ற பலன்கள்:
- சுவாசப்பை, நுரையீரல் வலுப்படும்.
- உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
- உடல் அதிக எடை குறையும்.
- அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
நிறைய நபர்களுக்கு உடலில் உயிர்சக்தி (விந்து) வீரியம் குறைந்து காணப்படுகின்றது. அதனால் புத்திர பாக்கியம் இல்லாமல் வாடுகின்றனர். இதற்குக் காரணம் உடலில் உயிரோட்டம் ஒழுங்காக செயல்படாதது தான். உடல் சூட்டை சமப்படுத்தும் லிங்க முத்திரை செய்தால் உடலில் உயிரோட்டமும், வெப்ப ஓட்டமும் சீராகயிருக்கும்.