04
Feb
பெண்களுக்கு இளமை, ஆண்களுக்கு வலிமை தரும் பவன முக்தாசனம்
உலகிலுள்ள எல்லா மனிதர்களுமே இளமையுடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், இளமை என்றால் என்ன? அதன் முழு அர்த்தம் புரிவதில்லையே மனிதர்களுக்கு!
ஆம், கண்டதை சாப்பிடுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதில்லை. குடிப் பழக்கம், புகைப் பழக்கம் போன்றவற்றால் உடல் உள் உறுப்புகள் ஒழுங்காக இயங்குவதில்லை. அளவுக்கு அதிகமாக முடி கொட்டுகிறது. இளம் வயதிலேயே நரை வந்துவிடுகிறது. தலைமுடிக்கு டை அடித்துவிடுகிறார்கள். நல்ல விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து, நல்ல கிரீம், பெர்ஃபியூம் என்று போட்டுக்கொண்டு, நான் இளமையுடன் தான் இருக்கிறேன் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களின் உடல் உள்ளுறுப்புகள், குறிப்பாக, வயிற்றின் உள்ளுறுப்புகள், இதயம், நுரையீரல் முதலியவை பாதிக்கப்பட்டே கிடக்கின்றன. அதனால் மாடிப்படி ஏற முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. என்ன தான் கிரீம் போட்டாலும் முகத்தில் பொலிவு இல்லை. உடலில் சோர்வு. மனதிலும் சோர்வு. ஆக, இளமை என்பது முடியில் டை அடிப்பது, விலை உயர்ந்த ஆடை ஆபரணம் அணிவதில் இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாருடைய உடல் உள்ளுறுப்புகள், குறிப்பாக சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாக உள்ளதோ, வாயுக் கோளாறு இல்லாமல் உள்ளதோ… உடல் எடை அதிகமாகாமல் உள்ளதோ… இதயம், நுரையீரல் சிறப்பாக இயங்குகிறதோ… அவர்கள்தான் இளமையோடு இருக்கிறார்கள்.
சிறு வயதில் உடல் உள்ளுறுப்புகள் சிறப்பாக இயங்கும். அதே இயக்கம் 80வயதிலும் சிறப்பாக இயங்க வேண்டும் இதுவே இளமை.
இப்படி உடல் உள்உறுப்புகளும் மனதும் என்றும் இளமையாக இருக்க, ஒரே வழி யோகக்கலை தான். பல வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்துக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதில் பவனமுக்தாசனம் இளமை தரும் யோகா, வலிமை தரும் யோகா.
பெருத்த வயிறு குறையும்
பொதுவாக பெண்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தாலே அடி வயிறு பெரிதாகி வயதான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு அவர்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை என்றால் வயிற்று உள் உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். என்ன செய்வது என்று தெரியாமல் ஆங்கில மாத்திரைகளை உடல் எடை குறைப்புக்கு உட்கொண்டு பலரும் அவதிபடுகிறார்கள். அவர்கள் இந்த பவனமுக்தாசனம் செய்தால் அடி வயிற்றுப் பெருக்கம் குறைவதோடு, வயிற்று உள்ளுறுப்புகளும் மிகச் சிறப்பாக இயங்கும். கூடவே நரம்பு மண்டலமும் சிறப்பாக இயங்கும். இதனால் இளமையுடனும், சுறுசுறுப்புடனும் ட்ரிம் ஆக பெண்கள் வாழமுடியும்.
வாயுக் கோளாறு நீங்கும்!
மனித உடலில் பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனது பத்து வாயுக்குள் செயல்படுகின்றன. இந்த பத்து வாயுக்களும் அதனதன் சமவிகிதத்தில் செயல்பட்டால், மனித உடலில் வாய்வு சம்பந்தமான பிரச்சனைகளே வராது என்றும் இளமையுடன் வாழலாம்.
ஆனால் எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் உண்கிற உணவின் தன்மைக்கேற்ப, எண்ணும் எண்ணத்திற்கேற்ப உடலில் வாயுக்கள் சமமாக இயங்காது. அதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும். உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும். நீங்கள் பவனமுக்தாசனம் செய்தால் வாயுக்கள் அனைத்தும் சிறப்பாக இயங்கும். அதனால் உடல் உள்ளுறுப்புகளும் சிறப்பாக இயங்கும். இளமையுடன் வாழலாம்.
வயிற்றுப் புற்று நோய் நீங்கும்!
இன்று எண்ணற்ற மக்கள் குடலில் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வந்து அல்லல்படுகிறார்கள். இதற்கு காரணம் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது தான். ‘பவனமுக்தாசனம்’ வயிற்றில் சுரக்கும் அதிக அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர், புற்றுநோய் இரண்டும் வராது.
மலச்சிக்கல் நீங்கும்!
மனித உடலில் கழிவுகள் ஒழுங்காக வெளியேறாவிட்டால் மனிதனுக்கு பல வகையான வியாதிகள் வரும். பவனமுக்தாசனம் செய்யும்போது அடிவயிற்றுப் பகுதி, மலக்குடல் பகுதி அமுக்கப்படுவதால் மலச்சிக்கல் நீங்கி, மகிழ்ச்சியாக வாழலாம். மலச்சிக்கல் இல்லாதவர்கள் இதை பயிற்சி செய்தால் எவ்வளவு வயதானாலும் மலச்சிக்கலில் சிக்காமல் சிறப்பாக வாழலாம்.
மாரடைப்பு வராது!
பவனமுக்தாசனம் நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அதனால் ராஜ உறுப்புகளில் ஒன்றான இதயம் பாதுகாக்கப்படுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. இன்று மிகச் சிறிய வயதிலேயே இதயக் கோளாறுகள் வருகின்றன. இதில் சிக்காமல் வாழ அனைவரும் பவனமுக்தாசனம் செய்து இதயத்தை பாதுகாத்துகொள்ளுங்கள்.
பவன முக்தாசனம் மற்ற பலன்கள்…
மூல வியாதி, இரத்த கோளாறுகள், குடல் வால்வுக் கோளாறுகள், மூட்டு வலி, வயிற்று வலி போன்றவை நீங்கும். கருப்பை கோளாறுகள் பெண்களுக்கு சரியாகும். அதிக வயிற்றுத்தசையை குறைக்கும்.
பவனமுக்தாசனம் செயல்முறை
- தரையில் விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும்.
- வலது கால் முட்டி பகுதியை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு, வயிற்றை நோக்கி அழுத்தவும்.
- இடது காலை மடிக்காமல் தரையில் நேராக வைத்து தலையை உயர்த்தி எழுந்து, முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவும்.
- மூச்சை இழுத்து 10 முதல் 15 விநாடிகள் இருந்துவிட்டு தலை, கால்களை பிரித்து விரிப்பின் மீது படுக்கவும்.
- பின், காலை மாற்றி செய்யவும்.
- வலது கால் இடது, கால் என மாற்றி, மாற்றி மூன்று முறை செய்தபின் ஒரு நிமிடம் ஓய்வு எடுக்கவும்.
மனித ஆரோக்கியத்துக்கு யோகாசனம் ஒரு கண், உண்ணும் உணவு மற்றொரு கண். இந்த ஆசனம் செய்வதுடன் பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். பசி இல்லை எனில் சாப்பிட வேண்டாம். இரவு சாப்பாட்டை மாலை 6 மணிக்குள் மிகக் குறைவாக எடுத்துக் கொண்டால் உடலில் நோய் வராது.
முதலில் இரவு 7 மணிக்குள் அரைவயிறு உண்ணுங்கள். கொஞ்சநாள் கழித்து மாலை 6 மணிக்கு அரைவயிறு உண்ணுங்கள். சில மாதங்கள் கழித்து இரவு உணவை வேண்டாம், விட்டுவிடுங்கள். உங்களுக்கே தெரியும் காலையில் மிக சுறுசுறுப்பாக எழுவீர்கள். இரவு தூங்கும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். இரவு 11 மணி முதல் காலை 3 மணி வரை உடல் தூக்கத்தில் இருக்க வேண்டும். எக்கச்சக்கமாக சாப்பிட்டால் மூச்சு மண்டலம் கெட்டுவிடும். எண்ணங்களும் சீராக இருக்காது.
மாதம் ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிட்டு பாருங்கள். மாதம் ஒருநாள் ஒரு நேரம் அல்லது இரு நேரம் உணவு உண்ணாதீர்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறை முழு நாள் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்தி பழகிப்பாருங்கள். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். வலுக்கட்டாயமாக உண்ணாமல் இருக்க வேண்டாம். உடலில் பசி தென்பட்டால் மிதமான பழங்கள் உண்டு அமைதியாக இருந்தால் நம் உடலின் உள்ளே இயங்கும் இயக்கங்களை புரிந்துகொள்ளலாம்.
இரும்பு இயந்திரங்களுக்குக்கூட ஞாயிறு அன்று ஒரு நாள் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால், பிறந்தது முதல் வயிற்றுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. ஓய்வு கொடுக்க வில்லை என்றாலும் நிறைய சாப்பிட்டு கெடுத்து வைத்துள்ளோம். இரவில் நாம் நம் வயிறு தூங்க வேண்டும். மேலே சொன்னதை எல்லாம் நீங்கள் ஃபாலோ செய்தால் என்றும் இளமையுடன் வாழலாம்.