இந்த உலகில் மனிதன் எதையும் உருவாக்கலாம். பெரிய வீடு கட்டலாம். அந்த வீட்டில் பலவித ஆடம்பர பொருட்களை வைக்கலாம். அத்தனையும் மனிதன் கண்டுபிடித்து தயார் செய்ததுதான். அதேபோல் ஒரு வீட்டில் ஒரு டி.வி. உடைந்து விட்டால், உடனே அதே மாடலில் வேறொரு டி.வி. வாங்கலாம். ஆனால், அந்த வீட்டில் வசிக்கும் மனிதன், உடல் ஆரோக்கியம் குலைந்து இறந்து விட்டால் அதே மனிதன் போல் உடனே இன்னொரு மனிதனை வாங்க முடியுமா? முடியாது!! ஆம்.. மனித உடல் ஒரு பொக்கிஷம்! இந்த உடல், இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமாகும். இதற்குள் இருக்கும் அற்புத உடல் உறுப்புகள், இயற்கையிடமிருந்து பிராண சக்தியைப் பெற்று தங்கள் பணியை செய்து வருகின்றன.
நாம் உண்ட உணவை, ‘சத்து’ தனியாக, ‘அசத்து’ (கழிவு) தனியாக பிரிக்கிறது ஜீரண மண்டலம்.
உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளுக்கும் பிராணசக்தி நன்றாக பாய்கிறது. இந்தச் செயலைச் செய்வது மூச்சோட்ட மண்டலம்.
உடல் முழுக்க ரத்த ஓட்டம் நன்றாகப் பாய்கிறது. இது ரத்த ஓட்ட மண்டலத்தின் பணி ஆகும்.
தனது துடிப்பின் மூலம், உடல் முழுக்க ரத்தத்தை சீராக அனுப்பிக் கொண்டிருக்கிறது இதயம். உயிர் துடிப்புக்கு இதுவே ஆதாரம்.
மூளை மிக அற்புதமாக நினைவாற்றலை நம் உடல் இயங்க வழங்கிக் கொண்டுள்ளது.
மேலே சொன்னவை சிறிய உதாரணங்கள் தான். நம் உடல் இயக்கத்தைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். இத்தனை உள் உறுப்புகளையும் தோல் மூடியுள்ளது. மூடிய தோலில் எங்கும் ஒரு தையல் கூட கிடையாது.
இத்தகைய மகத்துவமிக்க படைப்பாகிய உடலை சரியாகப் பாதுகாப்பது நமது முதல் கடமையல்லவா! இதற்கு எளிய ஒரே வழி யோகாசனம் தான். உடலின் உள் உறுப்புகளை ஆற்றலுடன் பல வருடங்கள் இயங்கச் செய்கிறது. உடலை மட்டுமல்ல, நம் உடலை இயக்கும் மனதையும் நன்றாக செயல்பட வைப்பதும் யோகாசனம் தான்! உடல் ஆரோக்கியத்தோடு, மன அமைதியையும் கொடுப்பதும் கூட யோகாசனம் மட்டுமே. பலவித பலன்கள் தரும் பத்ம ஆனந்தாசனம் முறையாக பயிலுங்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழுங்கள்!
பத்ம ஆனந்தாசனம் செய்முறை:
- முதலில் ‘பத்மாசனம்’ போட வேண்டும்.
- அதாவது வலதுகாலின் மீது இடதுகாலும், இடதுகாலின் மீது வலது காலும் இருப்பதை போல மடித்து அமரவும்.
- அப்படியே மெதுவாக இடது பக்கம் ஒரு சாய்ந்து படுக்கவும்.
- இடது கையை மடக்கி, காதோடு சேர்த்து வைத்து, தலையை உயர்த்தவும்.
- வலது கையை பக்கவாட்டில் வலது மூட்டின் மீது ‘சின் முத்திரை’யில் வைத்து சாதாரண மூச்சில் பத்து விநாடி இருக்கவும்.
- பின்னர் மெதுவாக அவசரப்படாமல் கைகளையும், கால்களையும் அகற்றி பொறுமையாக தரையில் படுக்கவும்.
- இதேபோல் வலது பக்கமும் ஒரு முறை மாற்றி செய்யவும்.
பத்ம ஆனந்தாசனத்தின் பலன்கள்:
மூட்டுவலி குணமாகும்
இந்த ஆசனம் வலது கால், இடதுகால் மூட்டுக்களை திடப்படுத்துகிறது. மூட்டுவலி வராமல் பாதுகாக்கிறது. மூட்டுவலி இருந்தாலும் முறைப்படி பயின்றால், விரைவிலேயே பூரண குணமாகும்.
சிறுநீரகம் சுறுசுறுப்பாகும்
சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்றாக இயங்கும். இந்த ஆசனம் செய்தால் பிராண சக்தி நன்றாக கிடைக்கும். அதனால் கழிவுகள் முறையாக வெளியேறி, உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.
நுரையீரல் நன்கு இயங்கும்
நுரையீரலில் உள்ள அசுத்த காற்று வெளியேறும். நல்ல சுத்தமான பிராணனை மீண்டும் எடுக்க உதவுகிறது. இதனால் மூக்கடைப்பு சரியாகும்.
ஆஸ்துமாவை தடுக்கிறது
மூச்சுத்திணறல், ஆஸ்துமா வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா உள்ளவர்கள் தகுந்த யோக வல்லுனரின் நேரடிப் பார்வையில் இந்த ஆசனத்தைப் பயின்று பலன் அடையலாம்.
உடல் சதை குறையும்
உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையும். அந்தந்த வயதிற்கேற்ப உடலுக்குத் தேவையான தசைகளை இறுக்கச் செய்யும். வலது, இடதுபுறம் என மாற்றி மாற்றி பயிற்சி செய்வதால் இடுப்பின் இருபக்க தசைகளும் மிக கச்சிதமாக இருக்கும். பெண்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்தால், நல்ல அழகிய உடல் தோற்றத்துடனும், இளமையுடனும் வாழலாம்.
மன அமைதி அதிகமாகும்
கையில் சின் முத்திரையுடன் இந்த ஆசனத்தில் இருப்பதால் மன அமைதி ஏற்படும். மன அழுத்தம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
கழுத்து வலி வராது
கழுத்து வலி வராது. கழுத்து வலி இருந்தாலும் விரைவில் சரியாகும். காது நரம்புகள் நன்றாக இயங்கும். காது வலி வராமல் தடுக்கப்படும்.
கால் பாதவலி சரியாகும்
கால் பாதவலி, கால் வீக்கம் வராமல் தடுக்கிறது. நரம்புகளையும் நன்றாக பலப்படுத்துகிறது.
இந்த ஆசனத்தின் பொதுவான விதிகள்…
- மிகவும் உடல் பருமனானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனமானவர்கள் தகுந்த யோக வல்லுனரின் நேரடி மேற்பார்வையில் இந்த ஆசனத்தைப் பயிலுங்கள்.
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் 4 நாட்கள் பயில வேண்டாம். கருவுற்ற பெண்களும் இந்த ஆசனத்தை பயில வேண்டாம். காலை / மாலை வெறும் வயிற்றில் தரையில் விரிப்பு விரித்து, யோகாவிற்குரிய தளர்வான உடை அணிந்து, நிதானமாக இந்த ஆசனத்தைப் பயிலுங்கள்.
உணவுமுறை எப்படி?
- இந்த ஆசனம் செய்து வருவதுடன் அகத்திக்கீரை, தண்டங்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, அவரைக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.
- சிறுதானிய உணவை வாரம் ஒருநாள் எடுத்துக்கொள்ளலாம்.
- சப்போட்டா, சீதாப்பழம், பேரிக்காய், நாவல்பழம், கற்பூரவல்லி வாழைப்பழம் ஆகியவற்றையும் அடிக்கடி சாப்பிடவும்.