நலம் தரும் நாற்காலி யோகா
மலச்சிக்கலை போக்கும் சுஜி முத்திரை!
மனம் சிக்கலானால் மலச்சிக்கல் வரும். உணவு முறை மாற்றமும் சிக்கலுக்கு முக்கிய காரணம். சிறியவர் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்துடனே தான் வாழ்கிறோம். அதனால் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறுவது மிகக் கடினம். இதனை பலரும் அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
மனிதனின் உடலில் காலை / மாலை இருவேளையும் கழிவுகள் (மலம்) சரியாக வெளியேறினால் மட்டுமே அவன் ஆரோக்கியமான உடல் கொண்டவனாக கருதப்படுகிறான். இதில் சிக்கல் ஏற்பட்டால் வாயு தொல்லை, அஜீரண கோளாறு, வயிறு உப்புசம், பசியின்மை, மூட்டுவலி, தூக்கமின்மை, உடல் சோர்வு, மூலம் போன்ற பல பிரச்சனைகள் வரிசை கட்டும். மனிதனுடைய மலக்குடலில் கழிவுகள் தங்கினால், உடலில் கட்டிகள் உருவாகி பலவிதமான நோய்களின் வாசஸ்தலமாக அமைந்துவிடும். மலச்சிக்கல் பிரச்சனை தீரவும், எப்போதும் மலச்சிக்கல் வராமல் இருக்கவும் எளிய யோக முறைகள் உள்ளன. நாற்காலியில் அமர்ந்து பயிற்சி செய்து நோயின்றி வளமாக வாழலாம்.
சுஜி முத்திரை
- முதுகெலும்பு நேராக இருக்கும்படி நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளி விடவும்.
- இதுபோல் பத்து முறை செய்யவும்.
- இரண்டு கை விரல்களையும் மடக்கவும்.
- கட்டை விரல், நடு விரலின் மேல் படும்படி வைக்கவும்.
- கைகளை மார்புக்கு அருகில் வைத்து வலது கையை, வலது பக்கவாட்டிலும், இடது கையை இடது பக்கவாட்டிலும், ஆள்காட்டி விரலை மட்டும் நேல்நோக்கி நீட்டியபடி வைக்கவும்.
- காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் 2 நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
- மலச்சிக்கல் உள்ளவர்கள், 5 நிமிடங்கள் மூன்று வேளை பயிற்சி செய்யவும்.
சாத்வீக உணவே பெஸ்ட்!
- பொதுவாக, சாத்வீக உணவு என்று சொல்லும் பழம், கீரை, பச்சை காய்கறிகளை அதிகமாக எடுப்பவர்களுக்கு மலக்குடல் எளிதாக வேலை செய்யும்.
- அதிக காரம், புளிப்பு, உப்பு, மாமிசம் உண்பவர்களுக்கு மலக்குடல், சிறு பெருங்குடல் இயக்கம் பாதிக்கும். ஏனெனில், சாத்வீக உணவு எடுக்கும் பொழுது உணவே மனித உடலில் உணர்வாக மாறுகிறது. நாம் அதிகம் மாமிசம் எடுத்தால், விலங்கினப் பண்புகள் அதிகம் வரும். அதனால், உடலில் சுரக்கும் சுரப்புகளில், மாறுதல் ஏற்படும். மன இறுக்கம், பதட்டம் வரும். முடிந்த வரை மலச்சிக்கல் இல்லாமல் இருக்க கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளலாம். அதோடு, பசி எடுக்கும் போது மட்டும், நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும்.
- கீரை வகைகள்: அரைக்கீரை, கரிசலாங்கண்ணி, முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை
- காய்கறிகள்: பூசணிக்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, முட்டைகோஸ், பீன்ஸ், அவரை
- பழங்கள்: வாழை, மாதுளை, கொய்யா மற்றும் உலர்ந்த கருப்புத் திராட்சையை வாரம் மூன்று நாட்கள் உணவில் சேர்க்கலாம்.\
- தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்கவும்.
- சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட பின் இருபது நிமிடம் கழித்தும் தண்ணீர் குடிக்கலாம்.
- அதிக வெயில் காலத்தல் இளநீர் குடிக்கலாம்.
- இரவு படுக்கும் போது சூடான வெந்நீரில், சீரகம் போட்டு ஒரு டம்ளர் குடிக்கவும்.
- காலையில், எழுந்தவுடன் பல் விளக்கிவிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.
வயிற்றுக்கான மூச்சு பயிற்சி
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- இரு கைவிரல்களையும். வயிற்றின் பக்கத்தில் வைக்கவும்.
- மூன்று எண்ணி மெதுவாக மூச்சை உள்ளே இரு நாசி வழியாக இழுக்கவும்.
- மூன்று எண்ணி மூச்சடக்கவும்.
- ஆறு வரை எண்ணி வயிற்றில் ஒரு அழுத்தம் கொடுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும்.
- மூன்று எண்ணி மூச்சை அடக்கியிருக்கவும்.
- இது ஒரு சுற்று. இதுபோல், ஐந்து முறைகள் செய்ய வேண்டும்.
- மூன்று எண்ணி மனதிற்குள் மூச்சை உள் இழுத்தல் மூன்று, வினாடிகள் மூச்சை அடக்குதல் – வயிற்றில் கைவிரல்களால் அழுத்தி ஆறு எண்ணி மூச்சை வெளியிடுதல் – உடன் மூன்று வினாடிகள் மூச்சை அடக்குதல்.
- இதனை பொறுமையாக செய்ய வேண்டும். இது புரிவது சிரமமாக இருந்தால், இரு கைவிரல்களையும் வயிற்றின் பக்கவாட்டில் வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து மூச்சை வேகமாக மூக்கின் வழியாக வெளிவிடவும்.
- பின் மீண்டும் இதே போல ஐந்து முறைகள் பயிற்சி செய்யவும்.
இந்தப் பயிற்சியை காலை எழுந்தவுடன் பல் விளக்கி காலைக் கடனை முடித்துவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு ஐந்து முறைகள் பயிற்சி செய்யவும். மாலை 6 மணிக்கு இதே பயிற்சியை செய்ய வேண்டும். மிக விரைவிலேயே மலச்சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.
மலம் கழிக்கும் நேரம்
மலம் கழிக்கும் பொழுது சிலருக்கு பல சிந்தனைகள் ஓடும். 15 முதல் இருபது நிமிடம் வேறு கற்பனையில் இருந்து விட்டு மலம் வரவில்லை என்று சிலர் ஏமாற்றமடைவதுண்டு. இது அன்றாட செயல். காலை / மாலை கடன். எனவே உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வயிற்று உள் பகுதியில், வைத்து மலம் வெளியே வரும் என்ற ஒரு எண்ணத்தில் மட்டும், உணர்வுகளை வயிற்றில் வைத்து இருக்க முயற்சிக்கவும். எந்த ஒரு செயலும் மன ஒருநிலையுடன் செயல்பட வேண்டும். அதேபோல் தான் இதுவும். பசி இல்லாத போதும், வயிறு உப்புசமாக ஜீரணமாகாமல் இருந்தால் ஒரு வேளை சாப்பிடாதீர்கள். பசி எடுக்கும் போது சாப்பிடுங்கள்.