11
Sep
ஆரோக்கியம் நம் கையில் – 001
ஒருவரை பார்த்து அவர் யோகக்காரர் என்று இன்று ஒருவர் கூறினார். அவரிடம் நிறைய சொத்து உள்ளது. பெரிய வீடு. நவீன வசதிகள் கொண்ட கார் உள்ளது. கையில் விலை உயர்ந்த செல்போன் உள்ளது. இதனால் யோகக்காரர் என்று கூறுவது வழக்கம். சராசரி மனிதர்கள் பெரும்பாலோர் யோகக்காரர் என்றால் நிறைய பணவளம் படைத்தவர் என்று நினைக்கின்றனர். உண்மையில் யாருடைய உடல் இயக்கம் சரியாக இருக்கின்றதோ, யாருடைய உடலில் எந்த நோயும் இல்லையோ, யார் மன அமைதியுடன் வாழ்கின்றார்களோ, அவர்களே யோகக்காரர் என்பதை நாம் உணர வேண்டும்.
பொதுவாக மனிதர்கள் கூறுவது வாயில்லாமல் உண்ண முடியுமா, நோய் இல்லாமல் வாழ முடியுமா என்று தான் கூறுவர். நிச்சயமாக நோயில்லாமல் வாழலாம். அதுதான் யோகக்கலை. யோகா என்றால் கை கால்களை வளைப்பது தானே என்று சாதாரணமாக எண்ணுவது தவறு. இது உடலையும், மனதையும், நம்முள் உள்ள ஆத்மாவுடன் (இயற்கையுடன்) இணைக்கிறது.
இப்பொழுது ஒன்று கூறுகிறேன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் அனைவரும் யோகாசனம், பிராணாயாமம், முத்திரை தியானம் தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதே செய்துள்ளோம். இக்கலை நமக்கு புதிதல்ல. ஆம். தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவரும் பொழுது முதலில் தலை வெளிவரும். பின்பு தான் கால் வரும். தலைகீழாக நிற்பது சிரசாசனம். நாம் தாயின் வயிற்றில் சிரசாசனம் செய்து தான் வெளிவருகிறோம்.
குழந்தை வெளி வந்தவுடன் நேராக படுக்க வைக்கிறோம். அது ஒரு காலை ஒரு அடி உயர்த்தும். பின் அடுத்த காலை ஒரு அடி உயர்த்தும். பின் இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தும். இது அர்த்தஹாலாசனம்.
பின் குழந்தை குப்புறப்படுத்து இரு கைகளையும் தரையில் ஊன்றி கழுத்தை மேல்நோக்கி பார்க்கும். இது புஜங்காசனம்.
பின் குழந்தை இரு கால்களையும் மடக்கி அமரும். இது வஜ்ராசனம்.
பின் மெதுவாக எழுந்து நிற்க முயற்சிக்கும். அதற்கு இரு கைகளையும் முன்னே நீட்டும். பாதி எழுந்து நிற்கும். இது உட்கட்டாசனம்.
பின் நின்று கீழே குனிந்து கால் பெருவிரலை தொடும். இது பாதஹஸ்த ஆசனம்.
குழந்தை தூங்கும் பொழுது இரு கைவிரல்களைப் பார்த்தால் கட்டை விரலை உள்ளங்கையினுள் மடக்கி மற்ற நான்கு விரல்களை மூடியிருக்கும். இது ஆதி முத்திரை.
குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் பொழுது எண்ணமற்ற மெளன நிலையில் தியான நிலையில் இருக்கின்றது.
இப்பொழுது கூறுங்கள். யோகாசனம், முத்திரை, தியானம் நமக்கு புதிதல்ல. இதை மையப்படுத்திதான் ஆசன வரிசையை அமைத்துள்ளனர்.
ஆசன வரிசை
- நேராகப் படுத்து செய்யும் ஆசனங்கள்
- குப்புறப்படுத்து செய்யும் ஆசனங்கள்
- அமர்ந்து செய்யும் ஆசனங்கள்
- நின்று செய்யும் ஆசனங்கள்
- முத்திரைகள், மூச்சுபயிற்சி, தியானம்
யோகாசனங்களை யார் செய்யலாம்?
ஆண்கள், பெண்கள் அனைவரும் பயிலலாம். எட்டு வயதிலிருந்து பயிலலாம். மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள். 140 என்றும் யோக சாஸ்திரம் கூறுகின்றது. இன்று 60 வயதானாலே வாழ்ந்தது போதும், உடலில் பல வியாதிகள் வருகின்றது. வாழப் பிடிக்கவில்லை என்கின்றனர். பயப்படாதீர்கள். யோகக்கலைகளை முறையாகப் பயலுங்கள். தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் மிகச் சிறப்பாக இயங்கும். உடல் ஆரோக்கியம் கிடைக்கும். உள் அமைதி கிடைக்கும். அவரவர்கள் வயது, உடல் நிலை, வியாதியின் தன்மைக்கு ஏற்ப யோகாசனங்களை, முத்திரையை முறைப்படி தக்க யோக வல்லுநரின் மூலம் பயிலுங்கள்.
மனிதனின் குணமும் உள் உறுப்புக்களும்
- பய உணர்வு இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
- கோபம் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்படும்.
- மன சஞ்சலம் இருந்தால் இதயம் பாதிக்கப்படும்.
- துக்கம், கவலை இருந்தால் நுரையீரல் பாதிக்கப்படும்.
- வருத்தம் இருந்தால் வயிறு ஜீரணம் பாதிக்கப்படும்.
இந்த உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். யோகாசனம் செய்தால் மட்டுமே மனிதனின் மனதில் எழும் கோபம், பயம், மன சஞ்சலம், துக்கம், வருத்தத்தை அழித்து அமைதியான மனநிலையை கொடுக்கும். யாருடைய மனம் அமைதியாக உள்ளதோ அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகுவலி, கழுத்து வலி வராது. எவ்வளவு வயதானாலும் நலமாக வாழலாம்.
இன்றைய காலத்தில் யோகாவின் அவசியம்
இன்றைய பரபரப்பான போட்டிகள் நிரம்பிய உலகில் டென்ஷன், பதட்டம், கவலையில்லாமல் வாழ முடியாது. இந்த மன அழுத்தத்தினால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கணையம் போன்ற சுரப்பிகள் ஒழுங்காக சுரப்பதில்லை. அதனால் பல நோய்கள் வருகிறது. யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால் தான் கவலையினால், டென்ஷனினால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும்.
யோகாசன முத்திரைகளின் நன்மைகள்
- உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.
- உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரி / பீனியல் / தைராய்டு – பாரா தைராய்டு / தைமஸ் / கணையம் / அட்ரினல் / கோணாடு சுரப்பிகள் சரியாக சுரக்கும்.
- அதிக உடல் எடை குறையும்.
- நீரிழிவு / இரத்த அழுத்தம் முழுமையாக நீங்கும்.
- மூட்டுவலி, முதுகுவலி, மன அழுத்தம் நீங்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, நீர்க்கட்டி போன்றவை நீங்கும். சுகப்பிரசவம் உண்டாகும்.
- உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். (மலமாக, சிறுநீராக, வியர்வையாக, கார்பன்-டை-ஆக்சைடாக) அதனால் கேன்சர் வராமல் தடுக்கப்படும்.
- படிக்கின்ற மாணவர்கள் நேர்முகமான சிந்தனையில் (Positive Thoughts) வாழலாம். ஞாபக சக்தி அதிகமாகும்.
- நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
- ஆண்மைக்கோளாறு நீக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
- நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். என்றும் இளமையுடன் சுறுசுறுப்பாக வாழலாம்.
- அதிகமான உடல் எடை உடனே பக்க விளைவின்றி குறையும்.
- எந்த ஒரு காய்ச்சலும் வராது. காரணம் யோகாசனம் செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.
நாள் இரண்டு – காலை/மாலை உடலில் மலம் வெளியேற வேண்டும். யோகாசனம் செய்தால் தான் உடலில் மலம் சரியாக வெளியேறும். இல்லையெனில் கழிவுகள் வெளியேறாமல், சாதாரணக் கழிவுகளாக தங்கி, பின் அசாதாரண கழிவுகளாகி பின் இரசாயனக் கழிவுகளாகி, பின் கட்டிகளாகி அதுவே கேன்சராக உருவாகின்றது. யோகாசனம் செய்தால் கேன்சரை வராமல் தவிர்க்கலாம்.
யோகாசன விதிகள்
- யோகாசனங்களை முறைப்படி தக்க குருவிடம் பயில வேண்டும்.
- தினமும் காலை 4.00 முதல் 7.00 மணிக்குள், மாலை 5.00 முதல் 7.00 மணிக்குள் பயிலலாம்.
- தரையில் ஒரு மேட் விரித்து நிதானமாக பயிலவும்.
- ஆண்கள் T. Shirts/ பனியன் Sports Track அணிந்தும், பெண்கள் சுடிதார் அல்லது Sports Track அணிந்தும் பயிலவும்.
- சாப்பிட்டால் மூன்று மணி நேர இடைவெளி வேண்டும்.
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் ஆசனம் செய்யக்கூடாது.
- குழந்தை உண்டானால் பெண்கள் இரண்டு மாதங்கள் பயிற்சி செய்யலாம்.
- அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, வேறு ஏதாவது பெரிய வியாதியிருந்தால் யோகா ஆசிரியரின் நேரடி பார்வையில் பயில வேண்டும்.
மிக எளிமையான யோகாசனங்கள், எளிமையான முத்திரைகள், நாடி சுத்தி, தியானம் தினமும் செய்து வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். அமைதியான மனதைப் பெறலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் இல்லாமல் வாழலாம்.
இன்றைய காலத்தில் நாம் பயில வேண்டிய முதல் கல்வி நமது உடலை ஆரோக்கியமாக வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனதை அமைதியாக வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே யோகக் கல்வியாகும். இதை முதலில் பயிலுங்கள். நோயின்றி வாழுங்கள்.
உணவு
அசனம் என்றால் உணவு. ஆசனம் என்றால் நிலையான இருக்கை. அசனம் பாதி, ஆசனம் பாதி = முழுமையான ஆரோக்கியம். அதாவது பசிக்கும் பொழுது பசியறிந்து உண்ண வேண்டும். அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும்.
ஆரோக்கியத்திற்காக எதையும் இழக்கத் தயாராகுங்கள்.
ஆசனம் செய்வோம், ஆரோக்கியமாய் வாழ்வோம். முத்திரை செய்வோம், மாத்திரை தவிர்ப்போம். ஆரோக்கியம் நம் கைகளில். கை விரல் முத்திரையே முழுமையான ஆரோக்கியம் தரும். ஒவ்வொரு மனிதருக்கும் உடல் ஆரோக்கியத்தின் மேல் விருப்பம் வேண்டும். விருப்பம் வந்தால் உற்சாகம், அன்பு, முக மலர்ச்சி தானாக வரும். யோகா செய்ய விருப்பப்படுங்கள். வளமாக வாழுங்கள். இன்று சுகர் நீக்கும் பவர் கொண்ட முத்திரை பார்ப்போம்.
சுகர் நீக்கும் பவர் கொண்ட வருண முத்திரை
இன்று நாட்டில் மனிதர்கள் தங்கள் பெயரை மறந்து I am a Diabetic Patient. நான் ஒரு நீரிழிவு வியாதி உள்ளவன் என்று வாழ்ந்து வருகின்றனர். நீரிழிவு (சுகர்) வந்தால் கடைசி வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்பது ஆங்கில மருத்துவமாகும்.
ஆனால் யோகக்கலையில் நீரிழிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அதற்கு முன் எதனால் நீரிழிவு வருகின்றது என்பதை உணர வேண்டும்.
நீரிழிவிற்கு காரணங்கள்
- எந்த ஒரு உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு வரும்.
- பசிக்கின்ற பொழுது சாப்பிடாமலிருத்தல், பசிக்காமல் உணவு அருந்துதல்.
- சாப்பிடும் பொழுது நன்கு மென்று கூழாக்கி சாப்பிட வேண்டும். அவசரமாக அரைகுறையாக சாப்பிடுதல்.
- பகலில் அதிகமாக தூங்குதல்.
- உடலுக்கு சரியான ஓய்வு கொடுக்காமலிருத்தல். இரவு 10 மணி முதல் 3.00 மணி வரை முழித்திருப்பவர்களுக்கு சுகர் வரும்.
- அதிகமாக உடல் உறவு கொள்பவர்களுக்கு வரும்.
- எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்களுக்கு வரும்.
மேற்குறிப்பிட் பழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் நமது பாங்கிரியாஸ் நன்றாக இயங்க எளிய முத்திரை உள்ளது. இதனை காலை/மதியம்/மாலை சாப்பிடும் முன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள். அதற்கு பின் முத்திரை என்றால் என்ன? அது எப்படி பலன் தரும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முத்திரை எப்படி பலன் தரும்?
மனித உடல் பஞ்சபூதத்தின் தொகுப்பு ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் இதுவே பஞ்சபூதமாகும். இவை இதன் தன்மைகள் நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இதனுடைய கட்டுப்பாடு நம் கைவிரல் நுனியில் உள்ளது.
- பெருவிரல் – நெருப்பு
- சுண்டு விரல் – நீர்
- மோதிர விரல் – நிலம்
- நடு விரல் – ஆகாயம்
- ஆள்காட்டி விரல் – காற்று
முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நாம் கை விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கின்றோம். அதனால் அதைச் சார்ந்த உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.
சுகர் நீக்கும் வருண முத்திரை செய்முறை
- நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- சுண்டு விரல் கட்டை விரல் நுனியை இணைத்து மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்கவும்.
- இரு கைகளிலும் செய்யுங்கள்.
- இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள்.
- பின் மெதுவாக கண்களை திறந்து கொள்ளுங்கள்.
- காலை/ மதியம் / மாலை சாப்பிடும் முன்பு பயற்சி செய்யுங்கள்.
உணவு
- வாரம் மூன்று நாட்கள் முருங்கை கீரை உணவில் எடுத்துக் கொள்ளவும்.
- பாகற்காய் வாரம் மூன்று நாட்கள் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- நாவல் பழக் கொட்டையை பொடி செய்து ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு டீஸ்ப்பூன் தண்ணீரில் கலந்து சாப்பிடுங்கள்.
- வாரம் இரு நாட்கள் ஒரு கொய்யா பழத்தை துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.
இந்த முத்திரையை ஒரு நாளில் சுகர் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்ந்தே பத்து முறை இரண்டு நிமிடம் பயிற்சி செய்யுங்கள். 21 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில் ஏதாவது இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள். உடலுக்கு ஒரு நல்ல ஓய்வு கொடுங்கள்.
சாப்பிடும் பொழுது நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். சாப்பிடும் பொழுது போன் பேசாதீர்கள். T.V பார்க்காதீர்கள்.
மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி எடுங்கள்.
முத்திரை என்பது நமது யோகத் தந்தை மாமுனி ஶ்ரீ பதஞ்சலி மஹரிஷி அருளிய அஷ்டாங்க யோகக் கலையாகும். முத்திரை நமது உடம்பில் உள்ள எல்லா குறைபாடுகளையும் நீக்க வல்லது. மனதில் அமைதியைத் தரவல்லது. அதுவும் வருண முத்திரை நிச்சயம் சுகரை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.
மீண்டும் இரத்த அழுத்தம் நீக்கும் யோக முத்திரை உணவு முறையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.