நலம் தரும் நாற்காலி யோகா
வாயு பிரச்சனை தீர வளமான முத்திரை
மனித உடலில் உள்ள அசைக்க முடியாத சொத்து காற்று (மூச்சு, பிராணன், சுவாசம்). இதுதான் நமது வாழ்வின் பிரதானம். உடல், மன ஆரோக்கியத்திற்கு நமது உடலில் இந்தக் காற்று பத்துவித வடிவங்களில் தனது கடமையைச் செய்து உடலை நன்கு இயக்குகின்றது. தச என்றால் பத்து. தச வாயுவாக பத்து விதத்தில் செயல்படுகின்றது.
- பிராணன் – நாகன்
- அபாணன் – கூர்மன்
- வியானன் – கிரிகரன்
- உதானன் – தேவதத்தன்
- சமானன் – தனஞ்செயன்
பிராணன்
மூச்சு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. அடி முதுகு தொடங்கி இருதயம், நுரையீரல் வரை செயல்படுகிறது.
அபானன்
நமது உடலில் தொப்புள் முதல் கால் கட்டை விரல் வரை செயல்படும். மலம், சிறுநீர் முதலியவற்றை கீழ்நோக்கி தள்ளுகிறது.
வியானன்
தோள்பட்டை முதல் உடலின் பாகங்கள் அனைத்திலும் செயல்படுகிறது. நரம்பு மண்டலங்கள் வழியாக சென்று உடலின் உறுப்புகளை நீட்ட, மடக்க செய்கிறது.
உதானன்
நுரையீரல் முதல் தொண்டை வரை பரவியுள்ளது. பசி எடுக்கச் செய்யும். நாம் உண்ணும் உணவின் சாரத்தை பெரு நாடி நரம்பு வழியாக வாங்குகிறது.
சமானன்
தொப்புள் முதல் மேல் உதரவிதானம் வரை செயல்படும். ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும்.
நாகன்
பிராணனின் துணை வாயு நாகன்
கூர்மன்
அபானனின் துணை வாயு கூர்மன்
கிரிகரன்
சமானனின் துணை வாயு கிரிகரன்
தேவதத்தன்
உதானனின் துணை வாயு தேவதத்தன்
தனஞ்செயன்
வியானனின் துணை வாயு தனஞ்செயன்
ஒவ்வொருவரும் உடலில் உள்ள பத்துவித வாயுக்கள் அதன் செயல்பாடுகள் பற்றி, தெளிவாக அறிய வேண்டும். அப்பொழுதுதான் வாயு என்பது எவ்வளவு முக்கியமானது. இந்த வாயுவை உடலில் சரியாக இயங்கச் செய்யும் முத்திரைகளை செய்வதால் எப்படி பலன் கிடைக்கிறது என்பதை அறியலாம். பொதுவாக நுரையீரலில் வாயுவின் இயக்கம் சரியில்லை எனில் சளி பிடிக்கும். அப்பொழுது உதானன் என்ற வாயுவில் பிரச்சனையுள்ளது என்று அர்த்தம். ஜீரண மண்டலம் நன்கு இயங்கவில்லையெனில் சமானன் வாயுவில் பிரச்சனை என்று அர்த்தம்.
நமது உடலில் தச வாயுக்களும் நன்றாக இயங்க இரு முக்கிய முத்திரைகளை தினமும் பயிற்சி செய்தால், போதும். வாயு சம்மந்தமான பிரச்சனை தீரும்.
அபான வாயு முத்திரை
- ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும் ஒரு நிமிடம்.
- இப்பொழுது நடுவில், மோதிரவிரல் மடக்கி அதன் மையத்தில் பெருவிரலை வைக்கவும்.
- ஆள் காட்டி விரலை மடக்கி பெருவிரல் அடியில் வைக்கவும்.
- சுண்டுவிரல் மட்டும் தரையை நோக்கியிருக்க வேண்டும். (படத்தை பார்க்கவும்)
- இரு கைகளிலும் செய்யவும்.
- இரண்டு நிமிடங்கள் காலை, மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
- காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் பயிற்சி செய்தால், மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.
- வாயு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
முகுள முத்திரை
- ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை 30 விநாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.
- பின் பெருவிரல் நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல்நோக்கி வைக்கவும். (படத்தை பார்க்கவும்).
- இரு கைகளிலும் செய்ய வேண்டும்.
- இரண்டு நிமிடங்கள் காலை / மாலை பயிற்சி செய்யவும்.
- மூன்று வேளை பயிற்சி செய்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்.
2 முத்திரையின் பலன்கள்
- உடலில் தச வாயுக்களும் சரியான விகிதத்தில் இயங்கும். அதில் ஏற்பட்ட மாறுபாடுகள் சரியாகும்.
- வாயுவினால் ஏற்படும் மூட்டுவலி, கழுத்துவலி நீங்கும். இடுப்புவலி நீங்கும்.
- இதயத்தில் வாயுவினால் ஏற்படும் அழுத்தம் நீங்கும். இதய வால்வு நன்றாக இயங்கும்.
- மூட்டுச் சவ்வுகள் நன்கு இயங்கும். எவ்வளவு வயதானாலும் வாயுவினால் மூட்டு வீக்கம் வராது.
- அஜீரணம் கோளாறு நீங்கும். சிலருக்கு கிழங்கு வகைகள் உண்டால், உடலில் வாயுத் தன்மை சீர்கெட்டு மூட்டுவலி, இடுப்பு வலி வரும். இந்த இரு முத்திரையையும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். இந்த பிரச்சனை தீரும். கிழங்கு வகைகள் சாப்பிட்டாலும் உடலில் வாயு பிரச்சனை வராது.
- ஒரு மண்டலம் 48 நாட்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் பயிற்சி செய்யுங்கள். 21 நாட்களுக்கு பிறகு மிக நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.
உணவு
- பழங்கள் கொய்யாப்பழம், மாதுளம் பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.
- கீரை வகைகளில் பொன்னாங்கன்னி கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
- வாரம் ஒரு நாள் மட்டும் காலை உணவு அரைமூடி தேங்காய் துருவி சாப்பிடுங்கள்.
- ஒரு வாழைப்பழம் காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- துளசி, வில்வம் இலை வாரம் இருமுறை ஒரு கைப்பிடி நன்கு கழுவி விட்டு மென்று சாப்பிடுங்கள்.
- எலுமிச்சம் பழம் பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சிறிது இந்து உப்பு போட்டு வாரம் ஒரு நாள் காலை பல் விளக்கிவிட்டு வெறும் வயிற்றில் குடிக்கவும்.
- பெருங்காயம் சிறிது நுணுக்கி நீர்மோரில் போட்டு மாதம் ஒரு நாள் குடிக்கவும்.
- பூண்டு 2 பல் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எண்ணெயில் வதக்கி சாப்பிடவும்.
- இரவு சாப்பாடு 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.
- இரவு 10 மணிமுதல் காலை 3 மணி வரை நல்ல உறக்கம் வேண்டும்.