வைரஸ் கிருமி தாக்காமல் நலமாக வாழ வைக்கும் முத்திரை
ஆரோக்கியம் நம் கையில் – 30
இன்றைய சூழ்நிலையில் மனிதர்களின் சிரசு (தலை) காக்கப்பட வேண்டும். அதற்கு மகா சிரசு முத்திரை செய்யுங்கள்.
இன்று நம் நாடு மட்டுமல்ல உலகமே மனித உயிரைக் கொல்லும் கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒருவித பய உணர்வு குடி கொண்டுள்ளது. இதிலிருந்து மீள என்ன வழி என்றால்…
ஒன்று அரசு, சுகாதாரத்துறை கூறுகின்ற நெறிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இப்பொழுது தனித்திருத்தல், வெளியில் கூட்டமாக செல்லாதிருத்தல், முகக்கவசம் அணிவது, கை, கால்களை அடிக்கடி சுத்தம் செய்வது.
இரண்டாவதாக தனிமையில் இருக்கும் பொழுது நமது உடல் உள்ளத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, நோய் எதிர்ப்பாற்றலை எப்படி வளர்ப்பது, பய உணர்வை எப்படி நீக்குவது என்பதை நாம் புரிந்து அதற்குரிய பயிற்சிகளை முறையாக எடுத்துக் கொண்டால் வாழ்வு வளமாக இருக்கும். அதுதான் முத்திரை பயிற்சி.
“எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது பழமொழி. ஆம் நமது தலையில் தான் மூளை, கண்கள், காது, வாய் உள்ளது. முளையின் மூலமாகவே இந்த உடல் இயக்கம் உள்ளது. மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் செல்வது ஒரு நிமிடம் நின்றாலும் உயிருக்கு ஆபத்து என்பது அனைவருக்கும் தெரியும். எனவே தான் தலையில் உள்ள உறுப்புகளை பாதுகாப்பது நமது முதல் கடமையாகும்.
இன்று நாட்டில் நிலவும் வைரஸ் பற்றிய பய உணர்வு, எதிர்மறை எண்ணங்கள் நம் மூளையில் பதிந்து விட்டது. அதனால் ஒரு பய உணர்வு ஏற்படுகிறது. இதனால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்குவதில்லை. பயத்தினால் சிறுநீரகம் ஒழுங்காக இயங்குவதில்லை. உடலில் கழிவுகள் சரியாக வெளியேறுவதில்லை. பஞ்ச பூதத்தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது.
மன அழுத்தம், ரத்த அழுத்தம் உண்டாகின்றது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மூளையில் உள்ள எதிர்மறை எண்ணத்தை நீக்கி, நேர்முக எண்ணத்துடன் வாழச் செய்வது தான் முத்திரையாகும். இந்த மகா சிரசு முத்திரையை பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். மூளை செல்கள் நன்கு இயங்கும். மன அமைதி கிடைக்கும். இப்பொழுது அனைவரும் தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில் தினமும் காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் ஐந்து நிமிடம் இந்த மகா சிரசு முத்தரையை பயிற்சி செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும்.
இந்த முத்திரையுடன் உணவு முறை:
முடிந்த அளவு கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னி கீரை, கரிசலாங்கன்னி கீரை, முருங்கை கீரை, வெள்ளரிக்காய், கொய்யா பழம், மாதுளம் பழம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு இந்த முத்திரையை 5 நிமிடம் பயிற்சி செய்யுங்கள்.
பின் கண்களை மூடி நிமிர்ந்து அமர்ந்து 5 நிமிடங்கள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனியுங்கள். இதேபோல் மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.
அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்ல இடம் இருக்கட்டும். பசிக்கும் பொழுது பசியறிந்து நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். இரவு சாப்பாடு 8 மணிக்குள் முடித்து விடுங்கள். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஆழ்ந்த நித்திரை கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.
எப்படி மகா சிரசு முத்திரை செய்வது?
- விரிப்பில் கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை ஒரு நிமிடம் வெளிவிடவும்.
- பின் உங்கள் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொட்டபடி வைக்கவும்.
- சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும்.
- மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்கவும்.
- சுண்டு விரல் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
- இரு கைகளிலும் ஒரே சமயத்தில் செய்யவும்.
எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்
இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்யவும். தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளை செய்யவும். முதலில் பயிற்சி செய்பவர்கள் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
பின் இரு மாதங்களில் 5 நிமிடம் செய்ய முடியும்.
முகத்தில் பிராண சக்தி
முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பிராண சக்தி நன்கு பாய்கின்றது. இதனால் மூளைப் பகுதியில் உள்ள டென்ஷன் விலகுகின்றது.
தலைவலிக்கு நல்ல முத்திரை
உடல் சூடு அதிகமானதும் தலைவலி வரும். இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் தலைவலி நீங்கும். சிலருக்கு பஸ்சில் அதிக நேரம் பயணம் செய்தால் தலைவலி ஏற்படும். இந்த முத்திரை ஒரு நல்ல நிவாரணமாக தலைவலியை அறவே போக்குகின்றது. காரணம் இந்த முத்திரையில் தான் தலைப்பகுதி முழுவதும் பிராண ஓட்டம் சிறப்பாக இயங்குகின்றது.
கண் வலி நீங்கும்
கண் வலி, கண்ணைச் சுற்றி ஏற்படும் வலிகள் இந்த முத்திரையால் நீங்குகின்றது. கண்கள் நன்கு பாதுகாக்கப்படும். கண்ணுக்கு பின் பகுதியில் ஏற்படும் வலிகளும் நீங்கும்.
சைனஸ், சளிக்கு நிவாரணம்
மூக்கடைப்பு, சைனஸ், சளித்தொந்தரவு உள்ளவர்களுக்கு இந்த முத்திரை மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதிகம் சளி தொந்தரவு உள்ளவர்கள் தினமும் மூன்று வேளை இந்த முத்திரை செய்து அதனுடன் துளசி இலை ஒரு கொத்து, அருகம்புல் ஒரு கைபிடி, மிளகு 8 இதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பாலில் ஒரு சிறிய கரண்டி மஞ்சள் பொடி, இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சுடவைத்து வடிகட்டி குடித்தால் நல்ல பலன் உண்டு.
சுவாச ஓட்டம் சிறப்பாக இயங்கும்
மகா சிரசு முத்திரை உடலில் சுவாச ஓட்டம் சீராக இயங்குவதற்கு பயன்படும். யாருடைய உடலில் சுவாசம் (பிராணன்) தடையின்றி உடல் முழுவதும் சீராக இயங்குகின்றதோ அவர் உடம்பில் வியாதியே வராது.
முகப்பொலிவு
இந்த முத்திரை கன்னம், தாடை, நெற்றி பகுதியில் உள்ள சுருங்கிய தசைகளை பிராண ஓட்டத்தின் மூலம் சரி செய்து முகத் தசைகளை பளபளப்பாகவும், வளவளப்பாகவும் மாற்றுகின்றது.
கழுத்து வலி
கழுத்து வலி நீங்கி வளமாக வாழ இந்த முத்திரை பயன்படுகிறது. ஒரே இடத்தில் பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அவர்களுக்கு இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.
சுறுசுறுப்பும், மன அமைதியும் கிடைக்கும்
எந்த மனிதனிடம் மன அமைதி உள்ளதோ அவன்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும். மன அமைதியடைய வேண்டுமெனில் கழுத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள நரம்பு மண்டலத்தில் உள்ள டென்ஷன் வெளியேற வேண்டும். அதற்கு இந்த முத்திரை செய்தால் கழுத்துப் பகுதியிலிருந்து கீழ்நோக்கி வரும் நரம்பு மண்டலங்களில் உள்ள டென்ஷனை குறைக்கின்றது. அதனால் மன அமைதி கிடைக்கும். எண்ண ஓட்டங்கள் ஒடுங்கும். பிராண சக்தி உடலில் சேமிக்கப்படுகின்றன. சுறுசுறுப்பாக வாழ வழி வகுக்கின்றது.
மன மகிழ்ச்சி
சிலருக்கு வாழ்க்கையில் பணம், புகழ், பதவி, சுற்றார், நண்பர்கள் எல்லாம் இருந்தும் மனதில் ஒரு மகிழ்ச்சி, புத்துணர்வு இருக்காது. ஏதோ இழந்தது போல் காணப்படுவர். அவர்கள் கழுத்தின் பின்புறமுள்ள நரம்புகளில் பிராண ஓட்டம், ரத்த ஓட்டம் சரியாக இயங்காதது ஒரு காரணம். இந்த முத்திரையை தினமும் மூன்று வேளை செய்தால் நரம்பு மண்டல இயக்கத்தில் மாறுதல் ஏற்படும். படிப்படியாக மனம் மகிழ்ச்சி அடையும்.