17
Sep
கால் பாதம் குளியல்
இந்த கால் பாதக்குளியல், வெறுமெனே பாத அழகுக்கு மட்டுமல்ல, நம் பாத விரல்களிலும் நகத்தினுள்ளும் இருக்கும் கண்ணனுக்குத் தெரியாத அழுக்குகள், கிருமிகளை அழிக்க உதவும்! உடலில் கால் பகுதியில் உள்ள உஷ்ணத்தையும் நீக்கி விடும். இதைச் செய்வதால் கால் பாதவலி, கணுக்கால் வலி, மூட்டு வலிகளும் படிப்படியாகக் குறைந்து விடும்.
கால் பாதம் குளியல் செய்முறை:
- ஒரு பிளாஸ்டிக் டப்பில் லேசான சூட்டில் வெந்நீர் விடவும்.
- அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு போட்டு கரைக்கவும்.
- அந்த டப்பில் உங்கள் இரு பாதங்களையும் வைத்து அமைதியாக பத்து நிமிடம் இருக்கவும்.
- பின் கால்களை வெளியில் எடுத்து அந்த தண்ணீரை செடியில் படாமல் கொட்டிவிடவும்.
- கால் பாதத்தை துணியால் மெதுவாக துடைக்கவும்.
- இதை வரம் மூன்று முறை செய்யவும்.
எளிமையான பிராணசக்தி பெரும் தியான முறை
- ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கால்களை தொங்கவிட்டு அமரவும்.
- உங்கள் இரு உள்ளங்கைகளையும் இரு கால் மூட்டுகளின் மேல் வைத்து கொள்ளுங்கள்.
- கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- அப்படி மூச்சை வெளியிடும் பொழுது உங்கள் உள்ளங்கை மூலமாக பிராண சக்தி இரண்டு மூட்டுக்குள்ளும் பரவுவதாக எண்ணுங்கள்.
- மூட்டின் உள்பகுதி நன்கு வலுப்பெறுகின்றது. அதில் வெப்ப ஓட்டம், மூச்சோட்டம், ரத்த ஓட்டம் நன்றாக இயங்குகிறது என்று எண்ணுங்கள்.
- இது போல் பத்து தடவை செய்யவும்.
நமது உள்ளங்கை மூலம் நம் உடம்பிலுள்ள பிராண சக்தி நன்றாக மூட்டுக்குள் பாய்ந்து, அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். நம் கையே நமக்குதவி, ஆரோக்கியம் நம் கையில் என்பது இதுதான். ஆம். நம்பிக்கையுடன் மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சிகளை தினமும் காலை / மாலை செய்யுங்கள். உணவில் மாற்றம் செய்யுங்கள். மூட்டுவலி முணங்கி கொண்டே உங்கள் உடலைவிட்டு ஓடிவிடும்.
இந்த 2 நிமிட பயிற்சி, மூன்று மணி நேர வாக்கிங் செய்ததற்கு சமம்!
சென்ற இதழில் மூட்டுவலி நீக்கும் உட்கட்டாசனம் பற்றி பேசினோம் அல்லவா? அதன் பலன்கள் இதோ…
- இந்த ஆசனத்தால் நமது இரு கால் மூட்டுகளுக்கும் நல்ல ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் கிடைக்கும்.
- மூட்டுகள் நன்கு பலப்படும்.
- மூட்டைச் சுற்றியிருக்கிற சைனோவியல் என்ற சுரப்பி சரியான அளவு சுரக்கும்.
- அலுவலகத்தில் ஒரே இடத்தில பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், இந்த ஆசனத்தை செய்ய, ரத்த ஓட்டம் சீராகும்.
- மூட்டுவலி இருந்தால் படிப்படியாகக் குறையும். மூட்டுவலி இல்லையென்றால் பிற்காலத்தில் வராமல் தடுக்கப்படும்.
- மூட்டில் நீர் தேங்கல், வலி, வாதம் நீங்கும்.
- இந்த உட்கட்டாசனத்தில் 2 நிமிடங்கள் இருந்தால், மூன்று மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும்.
உட்கட்டாசனத்தின் மற்ற பலன்கள்
- தோள்பட்டைகளில் ஏற்படும் இருக்கத்தை போக்கும்.
- கால் மற்றும் பாத வலி நீக்கி, கால்களுக்கு வலிமை தரும்.
- உதரவிதானம் மேல் நோக்கி உயர்த்தப் படுவதால் இதயம் வலுப்பெறும்.
- பெண்களுக்கு வரும் இடுப்புவலி நீங்கும்.
- குறிப்பாக மாதவிடாய் காலங்களில் வரும் அதிகமான இடுப்புவலி நீங்கும்.
- இரண்டு கால்களிலும் சம அளவு உடல் பாரம் செலுத்தப்படுவதால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.
- பெண்கள் இளம் வயதிலேய இந்த ஆசனத்தை செய்தால், திருமணத்துக்கு பின் சுகப்பிரசவம் நடைபெறும்.
- மூட்டு வாதம், அஜீரணம் வராது.
யாரெல்லாம் உட்கட்டாசனம் செய்யலாம்?
சிறுவர் முதல் பெரியவர் வரை உட்கட்டாசனத்தை செய்யலாம். மிகுந்த பலன் கிடைக்கும்.
யாரெல்லாம் உட்கட்டாசனம் செய்ய கூடாது?
- மூட்டில் அறுவை சிகிச்சை செய்து நான்கு மாதங்கள் முடியாத நிலையில் உள்ளவர்கள்.
- மூட்டில் அதிகமான வீக்கம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம்.
வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு…
பெண்கள் அவசியம் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். காரணம், பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மூட்டுவலி வந்து விடுகிறது. பெண்கள் காலை / மதியம் / மாலை என மூன்று வேலை பயிற்சி செய்யுங்கள். மூட்டு வலியும் மறையும். சுறுசுறுப்பாக வாழலாம். தினமும் காலைக் கடன்களை முடித்து விட்டு ஐந்து நிமிடம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் இந்தப் பயிற்சியை செய்யுங்கள்.
மூட்டுவலி உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்?
- தினமும் 5 பச்சை வெண்டைக்காய்களை கழுவி நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடவும்.
- பூண்டு, வெங்காயம் உணவில் அதிகம் சேர்க்கவும். இதில் கந்தகச் சத்து அதிகமுள்ளது. இவற்றால் தேய்மானம் அடைந்த எலும்புகள், இணைப்புத் திசுக்கள் வலுப்பெறும்.
- தவிர கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடவும்.
- அண்ணாசி பழத்திலுள்ள ப்ரோமெலைன் எனும் சத்து, மூட்டு அழற்சியை குறைக்கும் தன்மையுடையது.
- வைட்டமின் சி சத்து, மூட்டுகள் தேய்மானம் அடைவதை தள்ளிப்போடும். எனவே சி சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சைப்பழம், காளிஃபிளவர், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும்.
- பழங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் சாப்பிடவும்.
- பிரண்டையும், முடக்கத்தான் கீரையும் நல்லது.
மூட்டுவலி உள்ளவர்கள் என்ன சாப்பிடக் கூடாது?
- புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள் சாப்பிடக் கூடாது.
- தக்காளிப் பழம், பால், ஆட்டுக்கறி, கோழிக்கறி, போன்ற கொழுப்பு பொருட்களை தவிர்க்கவும்.