01
Sep
நமது நாட்டில் தொழில்நுட்பங்கள் வளருவதற்கு முன்பு, சுருங்கக்கூறின் செல்போன் வருமுன் கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது. அப்பொழுது கடிதம் யார் எழுதினாலும் இங்கு அனைவரும் நலம், அங்கு அனைவரும் நலமா? என்று தான் எழுதுவது வழக்கம். ஒருவரை நேரில் பார்க்கும் பொழுதும் நலமா என்று விசாரிப்போம்.
நலம் என்றால் ஒரு மனிதனின் உடலும், உடல் உள் உறுப்புகளும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை சுத்தப்படுத்துகின்ற நாடிசுத்தி பயிற்சியை ஒவ்வொரு மனிதனும் முறையாக பயில வேண்டும்.
நாடிகள்
மனித உடலில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன. இதில் மூன்று முக்கிய நாடிகள் மூலமாக மற்ற அனைத்து நாடிகளில் சுவாசம் நடைபெறுகின்றது – இடகலை நாடி, பிங்கலை நாடி, சுழுமுனை நாடி.
இடகலை நாடி என்பது இடது நாசி மூச்சாகும். இந்த நாசி வலது பக்க மூளை மற்றும் இடது உடல் பாக இயக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது. உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கின்றது. அதனால் இதனை சந்திர நாடி என்கிறோம்.
பிங்கலை நாடி என்பது வலது நாசி மூச்சு. இடது பக்க மூளை மற்றும் வலது உடல் பாக இயக்கத்திற்கு ஆதாரமாகவுள்ளது. சூரிய ஆற்றலோடு தொடர்புடைய இந்நாடி உடலுக்குத் தேவையான வெப்பத்தை அளிக்கின்றது. இதனை சூரிய நாடி என்றும் அழைப்பர்.
சுழுமுனை நாடி மோஷ மார்க்கத்திற்குரிய நாடியாகும். மனிதனிடத்தில் பொதுவாக சந்திர நாடி, சூரிய நாடி மட்டுமே இயங்கும். சுழுமுனை நாடி அமைதியாகயிருக்கும்.
இந்த நாடிகளின் வழியாக சுவாசம் நடைபெறும் பொழுது மனித உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டி அதன் வேகத்தை சரிப்படுத்துகின்றது. குறிப்பாக இடநாடி வழி மூச்சு நடைபெறும் பொழுது பராசிம்பதடிக் நரம்புகளை தூண்டி இருதயம் மற்றும் இரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைக்கும். மனதை அமைதிபடுத்தும். வலது நாசி வழியாக மூச்சு நடைபெறும் பொழுது அவை சிம்பதடிக் நரம்புகளை தூண்டி இருதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை விரைவுப்படுத்தும். துடிப்புடன் வேலை செய்யத் தூண்டுகிறது.
நாடிகள் உடலின் தேவைக்கேற்ப நரம்பு மண்டலங்களோடு இணைந்து உடலை இயக்குகின்றது.
மனிதனின் உடல்நலம், மனநலம், இடகலை, பிங்கலை நாடிகளின் (வலது நாசி, இடது நாசி) சரியான இயக்கத்தை பொருத்தே அமைகிறது. இந்த நாடிகளின் இயக்கத்தை சீர் செய்து நன்றாக இயங்கச் செய்யும் கலையே நாடி சுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாகும்.
பிராணாயாமம் ஏன் முதலில் பயில கூடாது?
ஒவ்வொருவரும் பிராணாயாமம் என்ற மூச்சடக்கும் பயிற்சியை பயில ஆவல் காட்டுகின்றனர். ஆனால் நமது நாடிகளை சுத்தப்படுத்தி அதன் மூலம் நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், இராஜ உறுப்பான இதயம், நுரையீரல், கல்லீரல் முதலிய உறுப்புகளை நன்கு இயங்கச் செய்ய வேண்டும். பின்பு தான் மூச்சடக்கும் கலையான பிராணாயாமத்தை முறைப்படி தக்க குருவிடம் பயில வேண்டும். நாடி சுத்தி என்ற மூச்சுப் பயிற்சியில் மூச்சை அடக்கும் பயிற்சி கிடையாது.
பொதுவாகவே இன்று மனிதர்கள் மன அழுத்தம், கவலை, டென்ஷனால் அவர்கள் உடலில் மூச்சோட்டம் ஒழுங்காக இயங்கவில்லை. இதயத்துடிப்பு அதிகமாகவுள்ளது. இரத்த அழுத்தம் உள்ளது. இந்நிலையில் மூச்சை அடக்கும் பிராணாயாமம் பயின்றால் என்னவாகும்? இதயத்திற்கு மீண்டும் நாம் அழுத்தம் கொடுக்கிறோம். எனவே ஒவ்வொரு அன்பர்களும் ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்தவுடன் பிராணாயாமம் பயில வேண்டும் என்று முடிவெடுக்காதீர்கள்.
பிராணாயாமம் என்பது யோகத் தந்தை பதஞ்சலி மஹரிஷி அருளிய அஷ்டாங்க யோகத்தின் நான்காவது படியாகும்.
- இயமம்
- நியமம்
- ஆசனம்
- பிராணாயாமம்
- பிரத்தியாகாரம்
- தாரணை
- தியானம்
- சமாதி
இதில் இயமம், நியமம் மன உடல் ஒழுக்க கோட்பாடு. அதில் வெற்றி பெற்று பின் யோகாசனங்கள் சரியாக செய்து அதன் பின்தான் பிராணாயாமம் பயில வேண்டும்.
எனவே எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத நாடி சுத்தியை எப்படி எல்லோரும் செய்வது என்பதை முதலில் தெரிந்து பயில்வோம்.
மனிதனின் ஆயுட்காலம் சூரிய, சந்திர கிரகத்தின் சஞ்சாரத்தை முன்னிட்டு கணக்கிடப்படும் நாள், மாதம், ஆண்டு இவைகளால் அல்ல. மனித உடலில் உள்ள சூரிய நாடி, சந்திர நாடி மூலம் நடைபெறும் நிதானமான அல்லது வேகமான சுவாச இயக்கத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல் தான் என்று யோக சாஸ்திரம் கருதுகிறது.
மிக நிதானமாக சுவாசிக்கும் கடல் ஆமை, யானை, முதலை நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றன. மிக வேகமாக சுவாசிக்கும், நாய், முயல் முதலியவை சில ஆண்டுகளில் மாண்டு விடுகின்றன.
அக்காலத்தில் மனிதர்கள் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தனர். கவலை, டென்ஷனின்றி வாழ்ந்தனர். அவர்கள் ஒரு நிமிடத்திற்கு மூச்சு விடும் எண்ணிக்கை 12 முதல் 15 ஆக இருந்தது. அதனால் 100 முதல் 120 வருடங்கள் உயிர் வாழ்ந்தனர்.
தற்காலத்தில் கோபம், டென்ஷன், கவலை, மன அழுத்தத்துடன் வாழ்வதால் மூச்சின் இயக்கம் அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 21 முறை மூச்சு விடுகின்றனர். இதனால் பிராண சக்தி இழந்து ஆயுளும் குறைகிறது.
ஒரு நாளில் 21600 முறை சுவாசிக்கிறோம். ஒரு சுவாசத்தில் உள்ளே இழுக்கும் காற்று எட்டு அங்குலம். வெளியே விடும் காற்று பன்னிரண்டு அங்குலம். ஒரு சுவாசத்தில் நான்கு அங்குல பிராண நஷ்டம். 21600×4 = 86400 அங்குல பிராணன் ஒரு நாளில் நஷ்டமாகின்றன. இது தவிர யோக சாஸ்திரத்தில் பிராண நஷ்ட கணக்கு என்று கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
பிராண நஷ்டம்
- தூங்கும் பொழுது – 18 அங்குலம்
- ஓடும் பொழுது – 27 அங்குலம்
- சண்டையிடும் பொழுது – 12 அங்குலம்
- தொழில் புரிவதில் – 10 அங்குலம்
- பேசும் பொழுது – 4 அங்குலம்
- நடக்கும் பொழுது – 8 அங்குலம்
- உடலுறவில் – 40 அங்குலம்
பிராண நஷ்டம் ஏற்படுகின்றது.
நுரையீரலின் அடி அறையில் பழைய காற்றுகளான பிராணவாயு, கரியமிலவாயு, நீராவி, சுற்றுப்புறத்திலுள்ள புகை, தூசுகள் யாவும் இருக்கும். இவைகளை வெளியேற்றினால் தான் புதிய காற்று அங்கு வர முடியும். அதுவரை நாம் எடுக்கும் காற்று பாதி அளவே நுரையீரலில் சென்று திரும்புகிறது. 16 அங்குலம் ஒரு மூச்சில் செல்ல வேண்டிய காற்று 12 அங்குலமே உள் செல்கிறது. இதில் நுரையீரல் 8 அங்குலமே பயன்படுத்தி மீதி 4 அங்குலம் விரயமாகிறது. இதன் அளவை அதிகரிப்பதே நாடி சுத்தியாகும். இதையே 16 –ம் பெற்றால் 16 அங்குல காற்று உள்ளே சென்று வந்தால் பெருவாழ்வு வாழலாம் என்பது பழமொழி.
நாடிசுத்தி பயிற்சி
நாம் இப்பொழுது எளிமையான எந்த பக்க விளைவுமில்லாத நல்ல பலன்களைக் கொடுக்கும் நாடி சுத்தி எப்படி செய்வது அதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இதனை காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகெலும்பு நேராக வைத்து செய்ய வேண்டும். வயதானவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
இடது கை சின்முத்திரையில் இருக்க வேண்டும். (பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைத்து மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கவும்)
- வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மிக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக இடது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடத்திலேயே மூச்சை இழுத்து மிக மெதுவாக இடது நாசியிலேயே வெளியிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். (மூச்சு இழுக்கும் பொழுது வயிறு வெளியில் வர வேண்டும். மூச்சு விடும் பொழுது வயிறு உள்ளே மெதுவாக செல்ல வேண்டும்).
- இப்பொழுது வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியிலேயே மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.
- இப்பொழுது வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளியிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.
- இப்பொழுது மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை மெதுவாக வெளியிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும்.
நாடிசுத்தி பலன்கள்
மேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை பயிற்சி செய்தாலே மிக அற்புத பலன்கள் கிடைக்கும்.
- மன அழுத்தம் நீங்கும்.
- மன அமைதி கிடைக்கும்.
- ஆஸ்த்துமா, சைனஸ் நீங்கும்.
- இதயம் பாதுகாக்கப்படும்.
- இதய வால்வு நன்கு இயங்கும்.
- இரத்த அழுத்தம் நீங்கும்.
- இரத்தம் சுத்தமாகும்.
- மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும்.
- நல்ல தூக்கம் வரும்.
- ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
- ஒற்றைத் தலைவலி நீங்கும்.
- நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்.
- இளமையுடன் வாழலாம். ஆயுள் நீடிக்கும்.
- தியானம் செய்ய மன ஒரு நிலை கிட்டும்.
- நரம்பு மண்டலம் நன்கு இயங்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனை, மன இறுக்கம் நீங்கும்.
- நமது முக தசைகள் பளபளப்புடன் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
- அறிவுத்திறன் அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும்.
- கர்ப்பிணி பெண்கள் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
- நேர்மறை எண்ணங்கள் வளரும். எதிர்மறை எண்ணம் நீங்கும்.
- அதிக உடல் எடை குறையும். வயதிற்கேற்ற தசைகள் உடலில் இருக்கும்.
- உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
- கொழுப்புக் கட்டிகள் கரையும்.
- முடி கொட்டுதல், இளநரை குறைபாடுகள் நீங்கும்.
- உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் அதனதன் விகிதத்தில் இருக்கும்.
இவ்வளவு பலன்கள் தருகின்ற, எந்த பக்க விளைவும் இல்லாத நாடிசுத்தி பயிற்சியை ஒவ்வொருவரும் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். நலமாக வாழுங்கள்.
தெளிவாக இத்தனை தகவல்களையும் கொடுத்ததற்கு நன்றி. 🙏🏾