16
Oct
ஆரோக்கியம் நம் கையில் – 006
நாம், நம் உடலைப்பற்றி, உடல் உள் உறுப்புகள் பற்றி அது இயங்கும் தன்மை, அதில் ஏற்படும் மாறுபாடுகள், பிரச்சனைகள், அதலிருந்து விடுதலை பெற்று சிறப்பாக வாழ யோக நெறி முறைகளும் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் மனித உடலில் மிக முக்கிய உறுப்பான முதுகெலும்பு பற்றியும், அதன் தன்மை பற்றியும் முதலில் தெரிந்து கொள்வோம்.
மனிதனுக்கு அழகு எது? முதுகெலும்பு தான். யாராவது நம் வாழ்வில் அதிகம் உதவி செய்தால் இவர்தான் என் வாழ்க்கையின் முதுகெலும்பாகத் திகழ்கிறார் என்று கூறுவது வழக்கம். மனிதன் ஒருவனே தனது முதுகெலும்பை தரையில் படுக்க வைத்து உறங்கும் நிலையைப் பெற்றுள்ளான். மற்ற விலங்கினங்கள் எதுவுமே தனது முதுகெலும்பை தரையில் படுக்க வைத்து உறங்க முடியாது.
முதுகுத்தண்டின் நீளம் பதினாறறை அங்குலம். இது நரம்பு நாளங்களால் ஆனது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்குச் செல்கிறது. மேலும் முப்பத்தாறு இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகின்றது.
மூளைக்கும், உடலின் உறுப்புகளுக்கும் இணைப்பு நிலையமாக திகழ்வது இந்த முதுகுத்தண்டு தான். மேலும் இருதயம், நுரையீரல், இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த முதுகுத்தண்டு தான்.
மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான் முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கின்றது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித்தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தது. மற்ற ஒன்பது எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக பெரியவர்களாக வளரும் பொழுது இடுப்புக்கு அடியில் மாறிவிடும்.
- கழுத்து சார்ந்த முதுகெலும்புகள் – 7
- மார்பு பகுதி முதுகெலும்புகள் – 12
- இடுப்பு சார்ந்த முதுகெலும்புகள் – 5
- இடுப்புக்கு அடியில் உள்ள மூட்டு முக்கோண எலும்பு – 5
- முதுகுத்தண்டின் அடியில் உள்ள வால் எலும்புகள் – 4
- மொத்தம் – 33
முதுகுவலி உணர்த்துவது என்ன?
மனிதனின் உடல் உள் உறுப்புகள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது.
அடி முதுகுவலி / நடு முதுகுவலி / கழுத்து முதுகுவலி
அடி முதுகுவலி (Spinal Card end) ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. அதனால் சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறிதான் அடி முதுகுவலி. இதேபோல் நடுமுதுகுவலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இருதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.
முதுகுவலி வரக் காரணங்கள்
- உடற்பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போட்டவர்களுக்கு அடிமுதுகுவலி வரும். சிறுநீரகப் பிரச்சனை இருக்கும். இவர்களுக்கு நடுமுதுகுவலியும் வரும். சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனை இருக்கும்.
- அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும். இவர்கள் இனிவரும் எளிய ஆசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
- தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி (கழுத்து முதுகுவலி) வரும்.
- ஒரே இடத்தில் பலமணிநேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.
- அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து முதுகுவலி ஏற்படும். நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.
- அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இருதயம் பாதிப்பால் கழுத்து முதுகுவலி ஏற்படும்.
- அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களை தூக்கினால் அடி முதுகு வலி ஏற்படும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.
இப்பொழுது காய்ச்சலுக்கு பல பெயர் சூட்டுகின்றனர். (டெங்கு / பன்றிகாய்ச்சல் / பறவைக் காய்ச்சல் / சிக்கன் குன்யா) இவை எல்லாம் நோயல்ல, கழிவுகள் வெளியேற்றம் தான். இதே போன்று ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகுவலி ஏற்படும்.
எதிர்பாராத விபத்தினாலும், முதுகில் பலம் வாய்ந்த அதிக எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் Dislocation ஆகி முதுகில் வலி ஏற்படுகின்றது.
இதுவரை முதுகு எலும்பின் முக்கியம் பற்றியும், எதனால் முதுகுவலி ஏற்படுகின்றது என்பது பற்றியும் தெரிந்து கொண்டோம். முதுகுவலி வரும் காரணங்களை எல்லாம் நாம் அறிய வேண்டும். அப்படி அறிந்தால் தான், நாம் முதலில் நம் முதுகை பாதுகாக்க எப்படி வாழ வேண்டும் என்பதை உணரலாம்.
இனி கவலையை விடுங்கள். முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத யோகக்கலையினை பயிலப் போகின்றோம்.
மனித உடல்
நம் உடல் எப்பொழுதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டேயிருக்கும். அதற்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. ஒரு தாய் தனது பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள். ஒருநாள் அக்குழந்தைக்கு வெளியில் பசும்பால் வாங்கி கொடுக்கிறாள். அந்தப்பால் நச்சுத்தன்மை உள்ளதாய் இருக்கின்றது. அது தாய்க்கு தெரியாமல் கொடுத்துவிடுகிறாள். ஆனால் குழந்தையின் வயிற்றில் சென்று அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தை வாய்வழியாக குடித்த பாலை வாமிட் செய்கின்றது. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக ஒவ்வாத உணவை வெளித்தள்ளுகின்றது. எங்காவது பறவை, நாய், பூனை தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரிடம் சென்றதைப் பார்த்துள்ளீர்களா? இயற்கையோடு இயற்கையாக வளரும் பிராணிக்கு நோய் வராது. வந்தாலும் தானே சரி செய்துவிடும். ஒவ்வொரு விலங்கிற்கும், மனித உடலுக்கும் அந்த பண்பு உண்டு. ஏன் இதை இங்கு தெரிவிக்கிறேன் என்றால் எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு ஒரு மருத்துவர் கூறினார் என்று உடன் முதுகில் அறுவை சிகிச்சைக்கு சென்றுவிடாதீர்கள். முதுகெலும்பில் கத்தியே வைக்கக்கூடாது. அதற்கு நம் புத்தியைக் கூர்மையாக்கி இனிவரும் யோகக்கலையினை பயில்வோம். வாருங்கள் வெற்றி நிச்சயம்.
தன் உடலே தன்னைப் பாதுகாக்க முயலும் பொழுது, நீங்கள் இயற்கையான மருந்தில்லா மருத்துவமான யோகக்கலைகளை செய்தால் உடல் மிக நன்றாக ஒத்துழைக்கும். விரைவில் பலன் கிடைக்கும்.
இன்றைய அவசரமான உலகில் முதுகுவலி உள்ளவர்களும், இல்லாதவர்களும் கீழ்க்கண்ட யோகப் பயிற்சியை தினமும் காலை / மாலை பத்து நிமிடங்கள் செய்யுங்கள். வலி இருந்தால் படிப்படியாகக் குறையும். முதுகுவலி இல்லாதவர்களுக்கு நிச்சயமாக பிற்காலத்தில் வராமல் தடுக்கும்.
முதுகுவலி நீக்கும் யோக சிகிச்சை – புஜங்காசனம்
புஜங்கம் என்றால் பாம்பு. ஒரு பாம்பு படம் எடுத்து நிற்பது போன்ற தோற்றம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது. எண்ணற்ற யோகாசனங்கள், உடல் பயிற்சிகள் செய்தால் தான் முதுகுவலி நீங்கும் என்று நினைக்காதீர்கள். தேர்வு செய்யும் முறை, விதம் தான் முக்கியம். இதற்கு அனுபவம் தேவை. இந்த இடத்தில் சற்குரு சீரோ பிக்க்ஷு என்பவரை நினைவுபடுத்துகிறேன். அவரே எனது குரு ஆவார். இவர் 60 வருடங்களுக்கு மேல் ஶ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் ராஜயோகத்தை ஆராய்ச்சி செய்து, அனுபவித்து, பலன் கண்டு ஒவ்வொரு வியாதிக்கும் எது எளிமையான ஆசனம் என்பதை வழங்கியுள்ளார். அனைவருக்கும் பலன் அடைய வேண்டி அதனை இங்கே வழங்குகின்றோம். 60 வருட அனுபவத்தின் பலன்களை நாம் இன்று அடையப்போகின்றோம்.
கழுத்து முதுகுவலி / அடி முதுகுவலி / நடு முதுகுவலி நீக்கும் புஜங்காசனம் செய்முறை
- விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப்படுத்துக் கொள்ளுங்கள்.
- இப்பொழுது இரு கைகளையும் இருதயத்தின் பக்கத்தில் வைக்கவும். கை விரல்கள் தரையில் இருக்க வேண்டும்.
- இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து தலையை உயர்த்தி முதுகை பின்பக்கமாக வளைத்து கண்களை வானத்தை நோக்கிப் பார்க்க வேண்டும்.
- இந்த நிலையில் மூச்சடக்கி 10 விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒருமுறை செய்யவும்.
- இதேபோல் காலை/ மாலை செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு
- அவசரப்படாமல், நிதானமாக, பொறுமையாக செய்ய வேண்டும்.
- எடுத்தவுடன் முழுமை நிலை வராது. முதலில் உடலை வளைக்கும் பொழுது மெதுவாக வளைக்கவும். வலி ஏற்பட்டால் நிறுத்திக் கொள்ளவும். ஒரு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் முழுமை நிலை வரும்.
- முதுகுத்தண்டில் அதிகவலி உள்ளவர்கள், முதுகெலும்பு விலகியிருந்தால் (Dislocation) யோக வல்லுநரின் நேரடிப் பார்வையில் செய்யவும்.
- சாதாரண வலி, அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்வதால் வலி, இருசக்கரம் அதிகம் ஓட்டுவதால் வலி உள்ளவர்கள் தாராளமாக இதனைச் செய்யலாம். பத்தே நாளில் பறந்துவிடும் முதுகுவலி. இது உண்மை.
இந்த ஒரு ஆசனம் கழுத்து முதுகு / நடுமுதுகு / அடி முதுகு எலும்புகளில் உள்ள குறையை நீக்குகிறது. முதுகெலும்பை வலிமையாக்குகின்றது.
இந்த புஜங்காசனம் முதுகுவலியை மட்டும் போக்குவதில்லை இதோ இதன் மற்ற பலன்கள்.
புஜங்காசனம் மற்ற பலன்கள்
- ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி ஆகியவற்றை (ஈஸ்னோபைல்) நீக்குகிறது.
- கிட்னியை பலப்படுத்தி நன்றாக இயங்கச் செய்கின்றது.
- பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை எளிதில் போக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்றவைகள் நீங்கும்.
- மலச்சிக்கல் நீங்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
அந்த காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற PREVENTION என்ற மருத்துவ இதழின் ஆய்வுத் தகவலின் படி முதுகுவலியை 96% யோகச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று அறிவித்துள்ளனர். எனவே இந்த புஜங்காசனத்தை ஆண் / பெண் இருபாலரும் பயிற்சி செய்து திடமான முதுகெலும்பைப் பெற்று வளமாக வாழுங்கள்.
சில ஆரோக்கிய குறிப்புகள்
- பொதுவாக எங்கு அமர்ந்தாலும் நிமிர்ந்து உட்காருங்கள். அலுவலகத்திலும் சரி, வீட்டில் நாற்காலியில் அமர்ந்தாலும் நிமிர்ந்து உட்காருங்கள். நிமிர்ந்து உட்கார்ந்தால் எண்ணம் தெளிவாகும். POSITIVE THINKING வளரும்.
- நல்ல சத்துள்ள பழங்கள், கீரை, காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள். பேரீச்சம் பழம், நெல்லிக்கனி தினமும் சாப்பிடுங்கள்.
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. 5 –வது நாளிலிருந்து பயிற்சி செய்யலாம். சிலர் தவறாக மாதவிடாய் காலங்களிலும் உடற்பயிறசி செய்கின்றனர். அவர்கள் பின் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்.
- அளவுக்கு அதிகமான வெயிட் உள்ள பொருட்களை திடீரென்று தூக்காதீர்கள். உங்கள் உடல் பலம் அறிந்து செயல்படுங்கள்.
- உடலுக்குத் தேவையான ஓய்வும் கொடுங்கள். அதிக உழைப்பு, தொடர்ந்து கண் விழித்தால் முதுகுவலி வரும்.
தினமும் புஜங்காசனம் செய்து நிமிர்ந்து நில்லுங்கள். முதுகெலும்பை போற்றி பராமரித்து முழுவெற்றி வாழ்க்கையில் அடையுங்கள்.