கொரோனாவை தடுக்கும் முத்திரை – யோகா
ஆரோக்கியம் நம் கையில் – 27
மனித உடலில் முக்கியமான ராஜ உறுப்புகள் என்றழைக்கப்படும் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பை சிறப்பாக இயங்க வேண்டும்.
பொதுவாக இந்த ராஜ உறுப்புகள் சக்தி குறைவு பெறும் பொழுது, உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறையும். அதனால் காய்ச்சல் ஏற்படும். காற்றில் உள்ள சிறிய கிருமிகள் கூட நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர் உடலை தாக்கி காய்ச்சலை உண்டு பண்ணுகிறது. பொதுவாக சிறுநீரக செயல்பாடு குறையும் பொழுது அடிக்கடி காய்ச்சல் வரும்.
நுரையீரல் செயல்திறன் குறையும் பொழுது சளி பிடிக்கும். இருமல் வரும். மூக்கடைப்பு வரும். பின்பு காய்ச்சல் வரும்.
அதேபோல் கல்லீரல் சக்தி ஓட்டம் குறைந்தால் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்படும். இதிலிருந்து நாம் உணர வேண்டியது ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ராஜ உறுப்புகள் நன்றாக இயங்க வேண்டும். அதற்கு சக்தி ஓட்டம் பிராண ஆற்றல் நன்கு கிடைக்க வேண்டும். மனித உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் பஞ்சபூதத் தன்மைகள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) உள்ளது. இது அதனதன் விகிதத்தில் இயங்கினால் எந்த ஒரு நோயும் வராது. இந்த பஞ்ச பூதத்தின் கட்டுப்பாடு நமது கைவிரல் நுனிகளில் உள்ளன.
- பெருவிரல் – நெருப்பு
- சுண்டுவிரல் – நீர்
- மோதிரவிரல் – நிலம்
- நடுவிரல் – ஆகாயம்
- ஆள்காட்டி விரல் – காற்று
நெருப்பு மூலகம் – இதயம், சிறுகுடல், இதய மேலுறையை கட்டுப்படுத்தும் (பெருவிரல் நுனி)
நில மூலகம் – மண்ணீரல், இரைப்பையை கட்டுப்படுத்துகிறது (மோதிர விரல் நுனி)
காற்று மூலகம் – நுரையீரல், பெருங்குடலை கட்டுப்படுத்துகிறது (ஆள்காட்டி விரல் நுனி)
நீர் மூலகம் – சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகிறது (சுண்டுவிரல் நுனி)
ஆகாய மூலகம் – கல்லீரல், பித்தப்பையை கட்டுப்படுத்துகிறது (நடு விரல் நுனி)
முத்திரை என்பது நமது கைவிரல் நுனிகளை இணைத்து ஒரு அழுத்தம் கொடுத்து மன ஒருநிலைப்பாட்டுடன் செய்யும் யோக பயிற்சியாகும். வெறும் விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கிறோம். அதனால் ஒவ்வொரு மூலகத்தைச் சார்ந்த உள் உறுப்புகள் பஞ்சபூத சக்தியை பெற்று மிகச் சிறப்பாக இயங்கும். ராஜ உறுப்புகள் நன்கு சக்தி பெற்று இயங்கும் பொழுது நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். எந்த ஒரு கிருமி, வைரசும் நம்மைத் தாக்காது.
எண்ணற்ற முத்திரைகள் இருந்தாலும் ராஜ உறுப்புகளுக்கு சக்தி கொடுக்கும் முக்கியமான முத்திரைகளை மட்டும் முறையாக காலை, மாலை இரண்டு வேளை ஒவ்வொரு முத்திரையையும் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதும், நிச்சயமாக கொரோனா வைரஸ்ஸிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
கொரோனா வைரஸ் தாக்காமல் வாழ கீழ்க்கண்ட முத்திரைகளை தினமும் காலை, மாலை இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
சூன்ய முத்திரை செய்முறை:
- நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும்.
- பின் நடுவிரலை மடக்கி அதன் நுனி உள்ளங்கையில் தொடட்டும்.
- அதன் மையத்தில் பெருவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- இரு கையிலும் இவ்வாறு செய்யவும். (படத்தைப் பார்க்க).
- இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
- இதயம், சிறுகுடல், இதய மேலுறை மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
- நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
பிரிதிவி முத்திரை செய்முறை:
- நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து தியானிக்கவும்.
- பின் கண்ணை திறந்து மோதிரவிரல் பெருவிரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.
- இரு கைகளிலும் செய்யவும்.
- இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
- மண்ணீரல், இரைப்பை நல்ல சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
வாயு முத்திரை
- நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து தியானிக்கவும்.
- கண்களை திறந்து ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மையத்தை கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- இரண்டு கைகளிலும் செய்யவும்.
- இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
- நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும்.
- நல்ல நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
சுத்தப்படுத்தும் முத்திரை
- நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும்.
- எல்லா விரல்களையும் சேர்த்து வைக்கவும்.
- பெருவிரலினால் மோதிரவிரலின் முதல் பகுதியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- இரு கைகளிலும் செய்யவும்.
- இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
- சிறுகுடல், பெருங்குடல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
- நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
- கழிவுகள் குடலில் தங்காது.
- அதனால் உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.
பிராண முத்திரை செய்முறை
- நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும்.
- மோதிர விரல் சுண்டுவிரல் மடக்கி அதன் மையத்தில் பெருவிரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
- சிறுநீரகம், சிறுநீரகப்பை மிக நன்றாக இயங்கும்.
- நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
ஆகாய முத்திரை
- நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும்.
- நடுவிரல் நுனியையும், கட்டை விரல் நுனியையும் தொடவும்.
- இரு கைகளிலும் செய்ய வேண்டும்.
- இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
- கல்லீரல், பித்தப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும்.
- நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட ஆறு முத்திரைகளை தினமும் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். நமது உடலில் இதயம், சிறுகுடல், மண்ணீரல், இரைப்பை, நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, கல்லீரல், பித்தப்பை மிகச் சக்தி பெற்று இயங்கும். அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எந்த ஒரு வைரஸ்சும் தாக்காது.
கொரோனா வைரஸ்சிற்காக இந்த முத்திரைகளைச் செய்தால், அதிலும் தாக்காமல் வெற்றி பெறலாம். மேலும் வேறு நோய் இல்லாமல் வளமாக வாழலாம்.
ராஜ உறுப்பான இதயம், நுரையீரலை பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு திறன் தரும் புஜங்காசனம் செய்முறை:
- குப்புறப்படுத்துக் கொள்ளவும்.
- இரு கைகளையும் மார்பு பக்கத்தில் ஒட்டி வைத்து கொள்ளவும்.
- மூச்சை மெதுவாக இழுத்து கொண்டு தலையை மேலே தூக்கவும்.
- இடுப்பு பகுதி வரை தரையில் இருக்க வேண்டும்.
- 15 வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும்.
- பின் மூச்சை மெதுவாக வெளியில் விட்டு தரையில் நெற்றியை வைக்கவும்.
- மூன்று முறைகள் செய்யவும்.
சிறுநீரகம், சிறுநீர்ப்பை நன்கு இயங்கச் செய்யும் ஜானு சீராசனம் செய்முறை:
- விரிப்பில் அமரவும்.
- வலது காலை மடித்து இடது தொடை அருகில் படும்படி வைக்கவும்.
- இடது காலை நேராக நீட்டவும்.
- கைகளை உயர்த்தி இரு கைகளையும் கொண்டு இடது கால் பாதத்தை தொடவும்.
- தலையை இடது காலின் முட்டியில் நெற்றி படும்படி செய்யவும்.
- சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக எழுந்துவிடவும்.
- இதேபோல் மாற்றி செய்யவும்.
- இரண்டு முறைகள் செய்யவும்.
சிறுகுடல், பெருங்குடலுக்கு சக்தியும் நோய் எதிர்ப்பாற்றல தரும் நவுகாசனம் செய்முறை:
- விரிப்பில் நேராக படுக்கவும்.
- இரு கால்களையும் சேர்த்து வைக்கவும்.
- இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடவும்.
- மூச்சை உள் இழுத்து கொண்டு கைகளையும் கால்களையும் உயர்த்தி கை விரலினால் கால் பெருவிரலை தொடும் அளவு உயர்த்தி படத்தில் உள்ளது போல் இருக்கவும்.
- இந்நிலையில் மூச்சடக்கி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இருக்கவும்.
- பின் மூச்சை வெளியிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- இது போல் இரண்டு முறைகள் செய்யவும்.
வயதானவர்கள் முத்திரைகள் மட்டும் மூன்று வேளை இரண்டு நிமிடம் பயிலுங்கள். மற்றவர்கள் முத்திரையுடன் யோகாசனமும் பயிலுங்கள்.
நமது அன்றாட பழக்கங்கள்
அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு இந்த முத்திரையை செய்யுங்கள்.
அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும்.
மிதமான உணவு எடுங்கள். கீரை, பழவகைகள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
மாதுளம் பழம், கொய்யாபழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக காரம், மைதாவினால் ஆன உணவு தவிர்க்கவும். தெருவில் விற்கும் சுத்தமில்லாத பண்டங்கள் வாங்கி உண்ணாதீர்கள்.
சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள். வெளியில் சென்று வீடு திரும்பினால் வீட்டிற்குள் நுழையுமுன் கை, கால், முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள்.
காலை, மாலை இருவேளை குளிக்கலாம்.
வாரம் ஓருநாள் 6 மிளகு நன்கு நுணுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் சுட வைத்து அதில் போட்டு குடிக்கவும்.
15 நாட்களுக்கு ஒருமுறை காலை வேப்பங்கொழுந்து இலை பத்து (அ) பதினைந்து மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும்.
வீட்டில் குளியல் அறை, கழிவறைகளை சுத்தமாக வைக்கவும். படுக்கும் தலையனை உறை, போர்வை வாரம் ஒருமுறை துவைத்து சுத்தமாக வைக்கவும்.
ஹோட்டலில் சாப்பிடும் பொழுது வெந்நீர் கேட்டு குடிக்கவும்.
வாரம் ஒரு நாள் ஒரு வேளை அரைமூடி தேங்காய் மட்டும் உணவாக எடுக்கவும். நான் இன்று ஆரோக்கியமாக உள்ளேன். நாளையும் ஆரோக்கியமாக இருப்பேன். ஒவ்வொரு நாளும் என் ஆரோக்கியம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று ஆழ் மனதில் அடிக்கடி கூறுங்கள்.
தினமும் காலை, மாலை நிமிர்ந்து கண்களை மூடி 15 நிமிடங்கள் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனித்து தியானியுங்கள். எந்த வைரஸ்சும், கிருமியும் உங்களை அண்டாது.