உடல் பருமன், மூட்டுவாதம் நீக்கும் கோமுகாசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 13
இன்று நம் நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கக் கூடிய பரவலான பிரச்சனை உடல் பருமனாக இருப்பது, மேலும் மூட்டுவலி, மூட்டு வாதத்தினால் அல்லல்படுதல்.
உடல் பருமனை குறைக்க பல முறைகளைக் கையாள்கின்றனர். ஆனால் உடனே குறைவதில்லையே என்று வருந்துகின்றனர். உடல் எடை அளவுக்கு அதிகமான மாறும் பொழுதே மூட்டுவலி, வாதம் உடன் சேர்ந்து கொள்கின்றது.
மூட்டு வாதம், உடல் அதிக எடை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். பசியின்மை இருக்கும். அஜீரணம் இருக்கும்.
நம்முடைய சித்தர்கள் பல வகைகளில் ஆராய்ந்து ஒவ்வொரு வியாதிக்கும் தீர்வாக அருமையான யோகாசனங்களை வழங்கியுள்ளார்கள். அதனை முறையாகப் பயின்றால் பலன் நிச்சயம் உண்டு.
இதில் முக்கிய விஷயம் என்னவெனில் ஒரு பிரச்சனைக்காக ஒரு ஆசனம் பயின்றால், அப்பிரச்சனையும் தீரும். மேலும் உடலில் பல வியாதிகள் இருந்தாலும், பல குறைபாடுகள் இருந்தாலும் அதற்கும் தீர்வு ஏற்படுகின்றது.
ஒரு இல்லத்தில் தாய் அல்லது தந்தை மிகப் பருமனாக இருந்தால் அதன் வெளிப்பாடாக அவர்கள் குழந்தைகளும் பருமனாக இருப்பார்கள். ஒரு தாய் – தந்தை யோகக்கலைகளை முடிந்த அளவு பயில வேண்டும். தனது குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே இக்கலைகளை பயிற்றுவித்து உணவுக் கட்டுப்பாடும், ஒழுக்கமான வாழ்வும் வாழச் செய்தால் நிச்சயம் குழந்தை வளர்ந்து வருகின்ற பொழுது உடல் பருமனாக வருவது குறையும். இதற்கு குடும்பத்தில் உள்ள தாய், தந்தை முதலில் இக்கலையைப் பயில வேண்டும்.
வாத நோய், மூட்டுவலியை ஆரம்பத்திலேயே விரட்ட நாம் முயற்சி எடுக்க வேண்டும். அப்படியில்லையெனில் வயது ஆக ஆக பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
யோகாசனங்கள் செய்யும் பொழுது உடலில் உள்ள கழிவுகள், எந்தப் பகுதியில் தேங்கியிருந்தாலும் வெளியேறிவிடும். கழிவுகள் தேக்கத்தினால் தான் மூட்டுவாதம், உடல் பருமன் ஏற்படுகின்றது.
கோமுகாசனம் என்ற ஆசனத்தின் மூலம் நம் உடம்பிற்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அதனை விரிவாகப் படித்த பின் ஒவ்வொருவரும் நிச்சயமாக இந்த ஆசனத்தைப் பயில்வது உறுதி.
கோமுகாசனம் செய்முறை:
- விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
- வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும்.
- இடது காலை மடித்து வலது தொடை மீது வைத்து, வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும்.
- இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின்புறம் கொண்டு வந்து முதுகை தொடவும்.
- வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்க முயற்சிக்கவும்.
- சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும்.
- பின் கைகளைப் பிரித்து கால்களை பிரித்து அமரவும்.
- மாற்று ஆசனமாக இடது காலை மடித்து, பின் வலது காலை மடித்து முன்பு செய்தது போல் செய்யவும்.
- உங்களது எந்த கால், முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து பயிற்சி செய்யவும்.
கோமுகாசனம் செய்வதால் மற்ற பலன்கள் என்ன?
மலச்சிக்கல் நீங்கும். மனிதனுடைய எல்லா வியாதிக்கும் மூல காரணம் மலச்சிக்கல் தான், உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தங்குவதால் பல வித நோய்கள் ஏற்படுகின்றது. இக்கோமுகாசனம் செய்தால் மலச்சிக்கல் நீங்கும்.
பசியின்மை, அஜீரணம்
பசியில்லாமல் அவதிப்படுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் இருந்தால் பசியிருக்காது. மலச்சிக்கல் நீங்கியவுடன் சரியாகப் பசி எடுக்கும். அஜீரணம் நீங்கும்.
நுரையீரல், மார்பு, இருதயம் பலம் பெறுகின்றது.
கை, கால்களில் ஏற்படும் வலி நீங்கும்.
குடலிறக்கம், விரைவீக்கம் நீங்கும்.
தூக்கமின்மை, கூன்முதுகு நீங்கும். தலைவலி நீங்கும்.
மூல வியாதி நீங்கும்.
மனிதனின் தோள்பட்டைகளில் காணும் ஏற்றம், இறக்கம் நீங்குகின்றது.
கணையம் ஒழுங்காக இயங்குகின்றது. அதனால் நீரிழிவு வராது. வந்தாலும் நீங்கும்.
ரத்த ஓட்டம் சீராக உடலில் நடைபெறும்.
சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
தோள்பட்டை வலி நீங்கும்.
நீங்கள் ஒரு ஆசனத்தை செய்தால், அதனுடைய மற்ற பலன்கள் எவ்வளவு உள்ளது பார்த்தீர்களா! யோகாசனங்கள் எல்லாமே நன்மை தரக் கூடியது தான்.
நம் நாட்டில் வாழ்ந்த பெரிய மகான்கள் ஒவ்வொரு ஆசனத்தையும் செய்து பார்த்து அனுபவித்து அதன் எல்லாப் பலன்களையும் உணர்ந்தார்கள். மகான்கள் சுட்டிக்காட்டிய யோகாசனங்களில் கோமுகாசனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மேற்கூறிய பலன்களில் உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் இதனைப் பயிற்சி செய்து பலன் அடையுங்கள்.
இந்த அற்புதக் கலையை நம் கையில் வைத்துக் கொண்டு நாம் ஏன் மருத்துவரிடம் சென்று அல்லல் பட வேண்டும்? ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்.