நலம் தரும் நாற்காலி யோகா
அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே இதயத்தை பாதுகாக்கலாம்!
ஆச்சர்யம்! ஆனால், உண்மை!!
மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானதுதான்! அதில் ‘ராஜ உறுப்பு’ என்று அழைக்கப்படுவது ‘இதயம்’. அதன் லப்–டப் துடிப்பு இருந்தால் தான் 72,000 நாடிகளும் துடிக்கும். உடலில் உயிரோட்டமிருக்கும்.
ஆனால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட்டும் கையில் எந்நேரமும் செல்போனுமாக வாழ்பவர்களின் இந்த பரபரப்பான வாழ்க்கை முறை, எந்நேரமும் பதட்டத்துடன் வாழ்வதால் மன அழுத்தம் அதிகமாகி இதயத்துடிப்பை அதிகப்படுத்துகிறது. அதனால், இளம் வயதிலேயே இதயவலி, இதய வால்வில் ஓட்டை, ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் என இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கை நிறைய மாத்திரை சாப்பிட்டபடி, பயத்துடன் வாழும் மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஏனிந்த நிலைமை? ஒவ்வொருவருமே தனது இதயத்தை வளமாக, நலமாக வைத்துக்கொள்ள வேண்டாமா? இதுவே நமது முதல் கல்வியாக இருக்க வேண்டும். இதயத்தை நலமாக இயங்கச் செய்யும் எளிய யோகப் பயிற்சிகள் நம் மண்ணில் உள்ளன! அவற்றை செய்து வந்தால் இதயம் சிறப்பாக இயங்கும். வாழ்க்கையும் நலமாக வளமாக மாறும்!! அதற்கு முன்பாக எந்தக் காரணங்களால் இதயம் பாதிப்படைகிறது என்று தெரிந்து கொள்வோம். அதற்கேற்ப நமது பண்புகளை மாற்றிக்கொள்வோம். இதனால் நம் இதயம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.
கவலையால் இதயம் பாதிக்கப்படும்
கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அதனால் இதயம், இதய வால்வில் ரத்தம் சீராக செல்லாமலிருக்கும். வாழ்வில் நடந்த சோகமான நிகழ்ச்சி சிலருக்கு மனதில் அடிக்கடி எழுந்து, கவலையை உண்டு பண்ணும்.
அதிகம் சிந்திப்பதால்..
எப்பொழுதும் பரபரவென்று, ஏதாவது சிந்தனை செய்து கொண்டே இருப்பார்கள் சிலர். அதன் காரணமாக இதயத் துடிப்பு அதிகமாகும். இதயத்தில் ‘தைமஸ்’ சுரப்பியில் மாற்றம் ஏற்படும்.
கோபத்தாலும் இதயம் பாதிக்கப்படும்….
அடிக்கடி கோபப்படும் மனிதர்களின் இதயத் துடிப்பு அதிகமாகும். அதனால் விரைவிலேயே பாதிப்பு ஏற்படும். பலரும் கோபத்தினாலேயே ராஜ உறுப்பான இதயம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
ஓய்வில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்வதாலும்….
உடலுக்கு ஓய்வின்றி மிக அதிகமாக உழைப்பவர்களுக்கு இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும். உடலுக்கு அதற்குரிய சரியான ஓய்வு கொடுக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடலுக்கு ஓய்வும், உறக்கமும் அவசியம். இன்று பலர் இரவு ஷிஃப்ட் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் இதயத்திற்கு உரிய நேரத்தில் ஓய்வும், சக்தியும் கிடைக்காததால் தைமஸ் சுரப்பி சரியாக சுரக்காமல் போகிறது. இதனால் இதயத்தின் ஓட்டம் அதிகரிக்கும்.
உணவில் ஒழுக்கம் இல்லாததால்….
சாத்வீகமான உணவு எடுக்காதவர்கள், பசிக்கும் போது எண்ணெய்ப் பண்டங்களை உண்பவர்கள், அதிகமாக நொறுக்குத் தீனி உண்பவர்கள், மாமிசம் அதிகமாக உண்பவர்கள் உள்ளிட்டோருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பகலில் உறக்கம் கூடாது….
பகலில் உணவு உண்டவுடன் படுத்து உறங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய பலவீனம் ஏற்படும். அதேபோல், அதிக நேரம் காலையில் உறங்குபவர்களுக்கும், சூரிய உதயத்திற்கு பிறகு எழும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதயத்தில் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு இதயத்தின் இயக்கம் சரியாக இருக்காது.
அதிக பயம் & சந்தேகம் கொண்டவர்கள்
சிலருக்கு எப்பொழுதும் மனதில் ஒருவித பய உணர்வும், சந்தேகமும் இருக்கும். ‘பஸ்ஸில் சென்றால் விபத்து ஏற்படுமோ’ என்று பயப்படுவார்கள். ‘இரவு வீட்டில் தூங்கும் பொழுது திருடன் வந்துவிடுவானோ’ என்ற பயமிருக்கும். சாப்பிடும் போது ‘சாப்பாட்டில் பல்லி ஏதும் விழுந்திருக்குமோ’ என்ற சந்தேகமும் பயமும் வரும். இப்படி தேவையற்ற மன பயத்தால் இதயத் துடிப்பு அதிகமாகிவிடும்.
மேலே சொன்ன பண்புகளில் ஏதாவது உங்களுக்கு இருந்தாலும் இனி பயம் வேண்டாம். இப்பொழுது தமது பண்புகளை மாற்றி இதயத்திற்கு நல்லதொரு சக்தி கொடுக்கும் யோக முத்திரைப் பயிற்சியை பார்க்கப் போகிறோம்.
தியான முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- இப்படி 5 முதல் 10 முறை செய்யவும்.
- பிறகு இடது கை கீழே, வலது கையை இடது கை உள்ளங்கையின் மீது வலது உள்ளங்கையை வைக்கவும்.
- இரு கட்டை விரல் நுனியும் (நெருப்பு மூலகம்) ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். (படத்தைப் பார்க்கவும்)
- இப்போது சாதாரணமாக நடைபெறும் மூச்சை மட்டும் கவனிக்கவும்.
- இப்படி 5 நிமிடம் இந்த முத்திரையில் இருக்கவும்.
- பிறகு மெதுவாக நிமிர்ந்து அமரவும்.
அபான வாயு முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை 30 விநாடி கூர்ந்து கவனிக்கவும்.
- நடு விரலையும், மோதிர விரலையும் மடக்கி அதன் நடுவில் பெருவிரலை வைக்கவும்.
- ஆள்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடிப்பகுதியில், படத்தில் உள்ளது போல் வைக்கவும்.
- சுண்டுவிரல் மட்டும் தரையை நோக்கியிருக்க வேண்டும்.
- இதே நிலையில் 2 நிமிடம் இருக்கவும்.
- இப்படி இரு கைகளிலும் செய்யவும்.
- காலை / மாலை இந்தப் பயிற்சியை செய்து வரவும்.
இரு முத்திரைகளின் பலன்கள்:
- இந்த முத்திரைகளால் மன அமைதி கிடைக்கும்.
- மன அழுத்தம் நீங்கும். இதயத்துடிப்பு சீராகும்.
- தைமஸ் சுரப்பி சரியாக சுரக்கும்.
- இதய வால்வில் எந்த ஒரு அடைப்பும் கொழுப்பு தங்காமல் சீராக இயங்கும்.
- நுரையீரல் நல்ல சக்தி பெற்று இயங்கும்.
- மூச்சுத் திணறல் இருக்காது.
- வாயு சம்பந்தமான பிரச்சனை இருக்காது.
- கோபம் வராது.
- எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கலாம்.
என்னென்ன உணவுகள் எடுக்கலாம்?
- இந்த முத்திரையுடன் உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
- அதிகமாக மாமிசம் உண்பதை தவிர்க்கவும். முழுமையான ஆரோக்கியம் வேண்டுமெனில் மாமிசத்தை தவிர்ப்பது மிக நல்லது.
- வாரம் ஒருமுறை 4 வில்வ இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது ஒரு டம்ளரில் ஆறு வில்வ இலையை கொதிக்கவைத்து அந்தத் தண்ணீரை குடிக்கவும்.
- சின்ன வெங்காயத்தை உணவில் அடிக்கடி சேர்க்கவும். வாரம் ஒரு நாள் 5 சின்ன வெங்காயத்தை உரித்து, உணவு உண்ணும்போது சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.
- ஃபிரிட்ஜில் வைத்த ஜூஸை உடனே சாப்பிடாதீர்கள். இரவில் தயிர் / மோர் சேர்க்க வேண்டாம்.
- துளசி இலையை வாரம் இருமுறை காலையில் கைப்பிடி எடுத்து, சுத்தப்படுத்திவி்ட்டு சாப்பிடவும்.
- மாதம் ஒருநாள் மட்டும் 5 மிளகை நன்றாக இடித்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் குடிக்கவும்.
- புதினா, கொத்துமல்லித் தழையை வாரம் இருமுறை உணவில் சேர்க்கவும்.
- மாதம் ஒருநாள் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு இரண்டு ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
- உணவில் புளி, காரம், உப்பு ஆகியவற்றை குறைவாக சேர்க்கவும்.
இந்த இரு முத்திரைகளோடு மேலே சொன்ன உணவுமுறைகளையும் கடைப்பிடியுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது, இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்துங்கள். இதனால் உங்கள் இதயம் சீராக, சிறப்பாக இயங்கும். கவலை இல்லாமல் வாழலாம்.