11
Oct
இடுப்பு வலியா? பார்சுவகோணாசனம் சரி செய்யும்!
பார் என்றால் தமிழில் உலகம் என்று பொருள். பாரில் மனிதனாக பிறந்து ஒவ்வொருவரும் பார் புகழ வாழ வேண்டும்!
ஆனால், அரசாங்கமே பார் (மதுக்கடை) திறந்து வைக்கிறது. இதனால் பலரும் குடிகாரர்களாகவும் குற்றங்கள் புரிபவர்களாகவும் மாறி விட்டார்கள். எத்தனை குடும்பங்கள் பாரினால் (மதுக்கடை) பாதிக்கப்பட்டு வருகின்றன? “என் கணவர் குடிபோதைக்கு அடிமையாகி விட்டார். அவரை திருத்த முடியவில்லை!” என எத்தனை பெண்கள் கண்ணீர்விட்டு கதறுகின்றனர். யோகியர்கள் வாழ்ந்த நம் நாட்டின் கலாச்சாரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
இதற்கொரு ஒரு விடிவுகாலத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும்! எப்படி? அது யோகக்கலை மூலம்தான். யோகக்கலை தான், மனித மனதிலுள்ள தீய எண்ணங்களை, அனுபவங்களை அழிக்கிறது. நல்ல எண்ணங்கள் வளர செய்கிறது.
முக்குணங்களின் வடிவு தான் மனிதன்!
தமோகுணம்: மட்டமான உணர்வலைகள் கொண்ட மனிதன். குடிப்பது, திருடுவது, ஏமாற்றுவது எல்லாம் அடங்கும்.
ரஜோகுணம்: நல்ல அதிர்வலைகள் கொண்ட மனிதன்.
சத்வகுணம்: மிகச் சிறந்த அதிர்வலைகள் கொண்ட மனிதன். விட்டு கொடுத்தல், அன்பு காட்டுதல், கருணை, உதவி செய்தல், பொறுமை, நிதானத்தோடு இருத்தல், தன்னைப்போல் பிறரை நேசித்தல் எல்லாம் அடங்கும்.
யோகாசனம் செய்தால், ஒருவருக்கு இருக்கும் மோசமான தமோகுணம், நல்லது எனப்படும் ரஜோகுணமாக மாறி, பின் சத்வகுணம் என்ற மிக உயர்ந்த குணத்துக்கு அவரை மாற்றி விடும்!
எனவே தான் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இந்த யோகக்கலையை பயில வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நமது குமுதம் சிநேகிதி வாயிலாக வலியுறுத்துகிறோம்.
ஒருவர் எல்லா யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்பதில்லை! எதாவது ஒரு யோகாசனத்தை, உங்கள் உடலுக்கு நன்றாக வளைந்து வரும் ஆசனத்தை, காலையும் மாலையும் தலா 10 நிமிடம் பயிற்சி செய்தால் போதும். பலன்கள் ஏராளம்!
பார் (உலகம்) புகழ நல்ல குணம் கொண்ட மனிதனாக, நோயற்ற ஆரோக்கியம் கொண்ட மனிதனாக வளமாக நீங்கள் வாழ பார்சுவகோணாசனத்தை தினமும் காலை / மாலை 2 முறை பயிற்சி செய்யுங்கள்.
எப்படி செய்வது?
- விரிப்பில் நேராக நிற்கவும்.
- இரு கால்களையும் 6 அடி இடைவெளிவிட்டு அகற்றி வைக்கவும்.
- இடது பாதத்தை இடது புறம் திருப்பவும்.
- இடது பாதத்தின் 90 டிகிரி கோணத்தில் வலது பாதத்தை வைக்கவும்.
- இடது பாத மூட்டினை வளைத்து கொள்ளவும்.
- வலது கால் நேராக இருக்கட்டும்.
- வலது உள்ளங்கையை வலது புறம் வைக்கவும்.
- உடலை இடது கால் தொடையில் நேராக வைக்கவும்.
- சாதாரண மூச்சில் 10 முதல் 15 வினாடிகள் இருக்கவும்.
- பிறகு இயல்பு நிலைக்கு வரவும்.
- இதே போல் காலை மாற்றி ஒருமுறை செய்யவும்.
பார்சுவகோணாசனத்தின் பலன்கள்:
- உடல் அழகான தோற்றத்துடன் மிளிரும். அதிக தசை குறையும்.
- முதுகு வலி: முதுகெலும்பை திடப்படுத்துகிறாது. முதுகுவலியை நீக்குகிறது.
- தொடை தசைகள்: அதிக தொடை தசைகள், ஆண்களை விட பெண்களுக்கு அழகைக் கெடுக்கும். இந்த ஆசனம் அதிகமான தொடை தசைகளை கரைத்துவிடும். நல்ல இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
- வயிறு: சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும். வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். நன்றாக பசி எடுக்கும்.
- பாத வலி: கால் பாத வலி, கணுக்கால் வலி, வீக்கம் முதலியவை நீங்கும்.
- குடல் இறக்கம்: இன்று நிறைய பேருக்கு குடல் இறக்கம் (Hernia) ஏற்பட்டு, அவசரப் பட்டு அறுவை சிகிச்சை செய்து விடுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்ததால் பின்பு பல புதிய வியாதிகள் உடலில் ஏற்பட்டு அவதிப் படுகிறார்கள். இறைவன் கொடுத்த இந்த உடலில் கத்தி வைக்க இடம் கொடுக்கக் கூடாது. நம் புத்தியை பயன்படுத்தி சிறியவர் முதல் பெரியவர் வரை யோகக்கலை பயின்று வளமாக வாழ வேண்டும். இந்த ஆசனம், குடல் இறக்கத்தை சரி செய்கிறது. குடல் இறக்கம் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.
- இடுப்பு வலி: பெண்களுக்கு இடுப்பு வலியானது அடிக்கடி வரும். இந்த ஆசனம் இடுப்பு வலியை நீக்கும். சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்பு இடுப்பு வலி அதிகமாகும். எலும்பு தேய்மானம் ஏற்படும். அவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றால், இடுப்பு வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
- அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு: இன்று நிறைய பேர் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களாய் இருக்கிறார்கள். 8 மணி நேரம், 10 மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில அமர்ந்து கணினியில் வேலை செய்கிறார்கள். அவர்கள் உடலுக்கு பயிற்சி கொடுக்காததால் உடல் பருமனாகி விடும். ரத்த ஓட்டம் சீராக இருக்காது. பசியிருக்காது. இவர்கள் தினமும் இந்த ஆசனத்தை செய்தால் உடல் சுறுசுறுப்பாகி விடும். ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். இந்த ஒரு ஆசனத்தை தினமும் காலையும் மாலையும் 5 நிமிடம் மட்டும் செய்து ஆனந்தமாய் வாழுங்கள்.
- நீரிழிவு: கணையம் சிறப்பாக இயங்கும். நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்தும். சிறிய வயதிலேயே பயிற்சி செய்தால், எவ்வளவு வயதானாலும் நீரிழவு வராது.
- மாணவர்களுக்கு: மாணவர்களுக்கு நிறைய உடல் சுமை (புத்தகப் பையை எடுத்துச் செல்வது), மனச்சுமை (நிறைய பாடங்கள் படிப்பது) உள்ளிட்டவை இருக்கின்றன. இதனால் அவர்களின் உடலும் மனமும் சோர்வடைகிறது. மாணவர்கள், காலையில் இந்த ஆசனத்தை செய்தால், அவர்களுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். மாலை ஒருமுறை பயிற்சி செய்தால் மீண்டும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இந்த ஆசனத்துடன் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை…
- தேன், எலுமிச்சைச்சாறு அடிக்கடி பருகவும்.
- எள் 100 கிராம், கொள்ளு 100 கிராம், உளுந்து 50 கிராம், கேழ்வரகு 200 கிராம், கோதுமை 500 கிராம், பொட்டுக்கடலை 250 கிராம். இவை அனைத்தையும் ரவை போல உடைத்து கொள்ளுங்கள். இதில் கஞ்சி போல் காய்ச்சி, சிறிதளவு உப்பை கலந்து, தினமும் ஒரு டம்ளர் சாப்பிடவும்.
- கீரைகள்: வல்லாரை, புளிச்ச கீரை, வெந்தய கீரை உணவில் அடிக்கடி சேருங்கள்.
- மாதம் ஒரு முறை வில்வம், அருகம்புல், வேப்பிலை இவை மூன்றையும் சம அளவு சாப்பிடவும். இப்படி மூன்றும் சாப்பிடும் பொழுது உடலில் வாத, பித்த, சிலேத்தும வியாதிகள் நீங்கும்.
பார்சுவகோணாசனத்துடன், மேற்குறிப்பிட்ட உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் கழிவுகள் மட்டுமல்ல, மனதில் சேர்ந்துள்ள தேவை அற்ற கழிவுகளும் நீங்கும். பார் புகழும்படி நீங்கள் வாழலாம்!