நலம் தரும் நாற்காலி யோகா
உடல் பருமன், தைராய்டு பிரச்சனை இனி இல்லை! சூன்ய முத்திரை
நம்மில் பலரின் கஷ்டமே உடல் பருமனாக இருப்பதுதான். அதனால் உடல் இயக்கம் குறைந்து போய், சோம்பேறித்தனம் அதிகமாகி விடுகிறது. ‘ஐயோ…. விரும்பிய உடை அணிய முடியவில்லையே, இளமை தோற்றம் போய்விட்டதே’ என்று பலருக்கும் மனக்கவலை அதிகரிக்கிறது. உடல் மெலிய வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் அது சாத்தியமாவதில்லை!
அட, தோற்றத்தை விடுங்கள். உடலில் அளவுக்கு அதிகமாக சதை போட்டால், முதலில் மூட்டுவலி வரும். பிறகு இதயம், நுரையீரல் பாதிப்பு ஏற்படும். சுறுசுறுப்பு குறைந்து போகும். வாயு தொந்தரவும் அதிகம் வரும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் ‘உடல் பருமன்’ தான். இதிலிருந்து மீள எளிமையான வழி, யோக நெறியில் உள்ளது! அதற்கு முன்பாக, ‘எதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது?’ என்பதைப் புரிந்து கொண்டு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்!
தைராய்டு சுரப்பி…..
நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ‘தைராய்டு’ மிக முக்கியமான சுரப்பி! இது குறைவாக சுரந்தால் உடல் பருமனாகும். அதிகமாக சுரந்தால் உடல் மெலியும்.
உணவுமுறை தான் காரணம்!
- பசிக்காத போது உணவு உண்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, எண்ணெய் பண்டங்கள், நொறுக்குத்தீனிகளை அளவுக்கு அதிகமாகக் கொரிப்பது உள்ளிட்ட செயல்களால் உடல் எடை அதிகரிக்கும்.
- இரவில் 10 மணிக்கு மேல் உணவு உண்பது. முக்கியமாக, உணவு உண்டதும் உறங்குவதாலும் உடல் எடை கூடும்.
- உடலுக்கு எந்தவொரு பயிற்சியும் கொடுக்காமல் இருந்தால் உடல் பருமனாகும்.
- திருமணத்துக்குப் பிறகு அளவுக்கு அதிகமாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டாலும் உடல் எடை கூடும். எனவே 15 நாட்களுக்கு ஒருமுறை இணைவது உத்தமம்.
- பகலில் உறங்குபவர்களுக்கும் உடல் எடை கூடும்.
- மாமிசமும், மைதாவில் செய்த பரோட்டாவும் அதிகமாக உண்பவர்களுக்கு உடல் எடை கூடும்.
மேற்காணும் லிஸ்டில் உள்ள பழக்கம் உங்களுக்கு ஏதும் இருந்தால், அதை நீங்கள் உடனே கைவிட்டு, இந்த எளிய யோகப் பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான தசைகள், எந்தவொரு பக்கவிளைவும் இன்றி குறையும். உடலும் வளமாக இருக்கும். வயிற்று தசை, இடுப்பு தசை, தொடை தசை மற்றும் கைகளின் அதிக தசைகள் அனைத்துமே ‘தைராய்டு சுரப்பி’யை மையமாக வைத்து தான் இயங்குகின்றன! எனவே உடல் பருமன் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை சரியாக்கும் ‘சூன்ய முத்திரை’யை இன்றே பயிற்சி செய்யத் தொடங்குங்கள்!
சூன்ய முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி, இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும்.
- பிறகு இரு கைகளிலும் நடு விரலை மடக்கி, அதன் மையத்தில் பெருவிரலை வைத்து, சிறிதாக அழுத்தம் கொடுக்கவும்.
- ஆள்காட்டி விரல், மோதிரவிரல், சுண்டுவிரல் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).
- இந்த நிலையில் இரண்டு நிமிடம் இருக்கவும்.
- காலை, மதியம், மாலை சாப்பிடுவதற்கு முன்பாக இந்தப் பயிற்சியை செய்யவும்.
ஜலந்தர பந்தம் செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கவும்.
- மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி பத்து முறை செய்யவும்.
- பிறகு ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும் சேர்த்து, படத்தில் காட்டியபடி வைக்கவும்.
- பின்னர் இரு நாசிகளின் வழியே மூச்சை மெதுவாகவும், ஆழமாகவும் முடிந்த அளவுக்கு இழுத்து, மூச்சை அடக்கி, குனிந்து முகத்தாடையினால் தொண்டையின் அடிப்பகுதியில் ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து, மூச்சை அடக்கியபடி பத்து விநாடிகள் இருக்கவும்.
- பிறகு மெதுவாக மூச்சை வெளியே விட்டு நிமிரவும்.
- 3 முதல் 5 முறை மிகவும் பொறுமையாக இந்தப் பயிற்சியை செய்யவும்.
இந்த இரு பயிற்சிகளால் என்ன நன்மை?
- தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட அனைத்து குறைபாடுகளையும் இவை நீக்கிவிடும். தைராய்டும் சரியான அளவு சுரக்கும். அதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான தசைகள் குறைந்து, மிடுக்காக வாழலாம்.
- தைராய்டுக்கு மாத்திரை தொடர்ந்து சாப்பிடுபவர்கள், இந்த முத்திரையை பயிற்சி செய்தால், ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) தைராய்டு மாத்திரையை நிறுத்தி விடலாம்.
- எப்போதும் சுறுசுறுப்பாக உலா வரலாம். உடலுக்கு நோய் எதிர்பாற்றல் நன்றாகக் கிடைக்கும். உடல் தசைகள் சரியான விகிதத்தில் இருப்பதால் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி வரவே வராது.
பெண்களுக்கு…
பெண்கள் பலருக்கும் இன்றைக்கு ‘தைராய்டு பிரச்சனை’ உள்ளது. அதனால் அதிக உடல் பருமன், மாதவிடாய் பிரச்சனை, குழந்தைப்பேறு இல்லாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்தப் பயிற்சி, பெண்களுக்கு உண்மையில் ஒரு வரப்பிரசாதம். திருமணம் ஆனவர்கள் மட்டுமல்ல, படிக்கும் மாணவிகளுக்கும் பள்ளிப் பருவத்திலேயே இந்த முத்திரையை பயிற்றுவியுங்கள். பிற்காலத்தில் செதுக்கிய சிற்பம் போல் நல்ல உடல் தோற்றமும், ஆரோக்கியமும் பெற்று வாழ்வார்கள்.
உணவு….?
- இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள்.
- வாரம் ஒருமுறை சுரைக்காய், அரைக்கீரை, பசலைக்கீரையை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பாகற்காயை மாதம் இருமுறை எடுத்துக்கொள்ளவும்.
- இரவில் சுக்கும், கருப்பட்டியும் சேர்த்து (பால் சேர்க்காமல்) ‘சுக்கு காபி’ செய்து குடியுங்கள்.
- இரவு மட்டும் சிறுதானியத்தில் (கம்பு / சோளம்) தோசை செய்து சாப்பிடவும்.
- தாகம் எடுக்கும் பொழுது நிறைய தண்ணீர் குடியுங்கள்.
- நெல்லிக்காய், முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரியை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். கிழங்கு வகைகளையும், எண்ணெய் பண்டங்களையும் தவிருங்கள்.