எல்லா நோய்க்கும் ‘ஆசனம்’ அருமருந்து
ஆரோக்கியம் நம் கையில் – 18
ஆயுர்வேதம், சித்தாவில் பொதுவாக சர்வரோக நிவாரணி என்று ஒரு மருந்து சொல்வார்கள். இதனை சாப்பிட்டால் எல்லா வியாதியும் நீங்கும் என்பார்கள்.
அதுபோல் யோகக்கலையில் உடல்பிணி அனைத்தையும் நீக்கும் ஒரு ஆசனம் உள்ளது. அதுதான் விபறிதக் கரணி என்ற ஆசனமாகும்.
இந்த ஆசனத்தில் நுரையீரல் தலைகீழாக இருக்கும். அதனால் அதிலுள்ள அசுத்த காற்றுகள் உடன் வெளியேறும்.
முதுகுத்தண்டின் மையத்திலுள்ள ஒருவிதத் திரவம் இந்த ஆசனத்தால் அதிக வேகமடைகிறது. அதனால் சிம்பதடிக் நரம்புகளும், வேகஸ் நரம்புகளும் சுறுசுறுப்படைகின்றன. தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகள் இந்த ஆசனத்தின் மூலம் சிறப்பாக இயங்குகிறது.
தலைகீழாக நிற்கும் சிரசாசனம் செய்வது கடினம். ஆனால் பலன்கள அதிகம். அனைவரும் சிரசாசனம் செய்யக்கூடாது. உடல் தன்மை அறிந்து, யோக வல்லுநரின் நேரடி பார்வையில் தான் செய்ய வேண்டும். ஆனால் இந்த விபறிதக் கரணி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிரசாசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன்கள் அனைத்தும் இந்த விபறிதக் கரணி ஆசனத்தில் கிடைக்கின்றது.
பெண்களுக்கு ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் நீக்குகின்றது. கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனை, குழந்தை பிறந்த பின் நீரிழிவு, உடல் பருமனாதல் முதலியவற்றைப் போக்குகின்றது. மேலும் முகப்பொலிவுடன் இளமையுடன் வாழ வழிவகை செய்கின்றது. சுகப்பிரசவம் உண்டாக்கும் சுகமான யோகா இந்த விபறிதக் கரணி.
விபறிதக் கரணி செய்முறை:
- தரையில் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை அடுக்கி வைக்கவும்.
- தலையணையின் மீது மையத்தில் அமராமல் முன்பகுதி நுனிக்கும், மையப்பகுதியின் இடையில் அமரவும்.
- சாதாரண மூச்சில் மெதுவாக பின்னால் வளைந்து கைகளை தரையில் ஊன்றிப் படுத்து உச்சந்தலையை தரையில் வைக்கவும்.
- இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மெதுவாக மேலே உயர்த்தவும்.
- கால்களை 90 டிகிரிக்கு நீட்டி கொண்டு வரவும்.
- உடல் கனம் முழுவதும் தோள்பட்டை கழுத்தில் இருக்கும்படி வைக்கவும்.
- இரு கைகளையும் தலையணைக்குப் பக்கத்தில் வைக்கவும்.
- சாதாரண மூச்சில் 5 நிமிடங்கள் இருக்கவும்.
- பின்பு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும்.
- பின் கைகளின் உதவியால் மெதுவாக தலையணையை எடுத்துவிட்டு சாந்தி ஆசனத்தில் இரு நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.
தலையணையை வெளியே எடுக்கும் முறை
கால் விரல்களை ஊன்றி குதிகாலை உயர்த்தி திரும்பவும் கால் விரல்களை ஊன்றி முதுகை உயர்த்தவும். அப்போது தலையணைகளை ஒன்றின் பின் ஒன்றாக பக்கவாட்டில் பிடித்து எடுத்துப்போட வேண்டும். அவசரப்படாமல் நிதானமாக பயிற்சி செய்ய வேண்டும்.
தொடர்ந்து இரண்டு மாதங்கள் 5 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். பின் மூன்றாவது மாதத்தில் 10 நிமிடங்கள் இதில் இருக்க முயற்சிக்கவும்.
கணவன் – மனைவி உறவு கொண்ட மறுநாள் இவ்வாசனத்தை செய்தால் உடல் பலவீனம், அசதி தெரியாது. சுறுசுறுப்பாக திகழ முடியும்.
தூக்கம் வராதவர்கள் ஏக்கம் தீர
இரவில் சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் பத்து நிமிடங்கள் விபறிதக்கரணி செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து சாப்பிடுங்கள். படுக்கும் பொழுது ஒரு டம்ளர் சூடாக தண்ணீர் குடித்துவிட்டு படுக்கவும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
ஆஸ்துமாவிற்கு அருமையான ஆசனம்
ஆஸ்துமா நோயாளிகள் இந்த ஆசனத்தை முறையாகப் பயில்வதன் மூலம் முழுமையான பலன்களை அடையலாம். நுரையீரல் சுத்தமடையும். நுரையீரலைச் சுற்றியுள்ள சளி தானாக வெளியேறும். மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் நீங்கும்.
உடல் எடை அதிகமுள்ளவர்கள் இந்த ஆசனத்தின் மூலம் விரைவில் உடல் எடை குறையும்.
டான்ஸில் நீங்கும்
மூக்கினுள் சில நேரங்களில் சதை வளரும். தொண்டையில் எச்சில் முழுங்கும் பொழுது வலி ஏற்படும். தொண்டையில் இருபுறமும் டான்ஸில் என்னும் இரு கிரந்திகள் உள்ளன. சில நேரங்களில் இவை நமது உடலைப் பாதுகாக்க பருமனாகிவிடும். நாம் உடனே ஆங்கல மருத்துவரிடம் சென்றால் டான்ஸில் ஆபரேஷன் செய்துவிடுவர். தேவையில்லை. விபறிதக் கரணி செய்யுங்கள். டான்ஸில் சரியாகிவிடும்.
நரை திரை நீக்கும் ஆசனம்
இவ்வாசனத்தால் உடலிலுள்ள எல்லாச் சுரப்பிகளும் சிறப்பாக இயங்குகின்றது. தலைமுடி நரைக்காமல் இருக்கும். கண்களில் வயதானால் காட்ராக்ட் மறைப்பு ஏற்படாது. எனவே தான் இது நரை (வெள்ளை முடி) திரை (கண்களில் மறைப்பு) நீக்கும் ஆசனம் என்று கூறுகின்றோம்.
கட்டி, முகப்பரு, முகத்தில் சுருக்கங்கள் நீக்கவல்லது இவ்வாசனம். நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். தலைசுற்றல், தலைவலி நீங்கும். பெண்களுக்கு கருப்பை ஏறுதல் இறங்கும் நிலையை சரி செய்கின்றது.
விபாறிதக்கரணியுடன் பிரிதிவி முத்திரை
மேற்குறிப்பிட்ட விபாறிதக்கரணி ஆசனத்தை முறையாக குருவின் நேரடிப் பார்வையில் பயிலுங்கள். மிகவும் வயதானவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
பிரிதிவி முத்திரை
கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள். வளமாக வாழுங்கள்.
பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும். மன சஞ்சலம் ஏற்படும்.
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.
பிரிதிவி முத்திரை செய்யும் முறை:
- விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள்.
- வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- பின் பெருவிரல், மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.
- மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும்.
- முதலில் மூன்று நிமிடங்கள் செய்யவும்.
- பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம்.
- காலை, மதியம், மாலை மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம்.
- மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இருவேளை (காலை, மாலை) செய்யலாம்.
இதன் அற்புத பலன்கள் இதோ…..
தோல் முழுவதும் நன்கு பளபளப்பாகத் திகழும். மன, உடல் சோர்வை நீக்கும்.
மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக இரத்தத்தில் சேரும். உடல் எடை படிப்படியாக கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் இந்த முத்திரை உடலில் ஏற்படும் வாயுத்தொல்லையை சரிசெய்து சுறுசுறுப்புடன் இயங்க வழி செய்கிறது.
சைனஸ் நோய் நீங்க
நிறைய மனிதர்கள் சைனஸ் என்ற வியாதியினால் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாகும். தொடர்ந்து செய்தால் மூக்கடைப்பு, மூச்சுதிணறல் போன்ற உபாதைகள் நீங்கும்.
மூட்டுவாதம்
மூட்டில் வலி, வாயு சம்பந்தமான கோளாறு நீங்கி வளமாக வாழலாம்.
சிலருக்கு நடக்கும் பொழுது உடல் தள்ளாட்டம் இருக்கும். இந்த பிரிதிவி முத்திரை மூலம் உடல் தள்ளாடுவது நீங்கும்.
கழுத்து முதுகெலும்பு நன்கு திடமாக ஆரோக்கியமாக இருக்கும். முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.
உடல் வெப்பம் அதிகமானாலும் குறைந்தாலும் பல பிரச்சனைகள் வரும். இந்த முத்திரை செய்தால் உடலில் வெப்பம் சமநிலையில் இருக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
மனத்தெளிவு இந்த முத்திரையில் கிடைக்கின்றது. அலைபாயும் மனம் அடங்க வழி தெரியவில்லையே என்று ஏங்கும் அன்பர்கள், இந்த முத்திரையை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிச்சயம் மனம் ஒடுங்கும். பேரமைதி கிட்டும்.
பொறுமை, தன்னம்பிக்கை
வாழ்க்கையில் பெரிய சாதனைகள் சாதித்தவர்கள் எல்லோரும் பொறுமையும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு பண்புகளும் யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் வாழ்வில் சாதிக்க முடியும். இந்த இரண்டு பண்புகளும் இந்த முத்திரையைச் செய்தால் நிச்சயம் கிடைக்கும். எனவே படிக்கும் மாணவர்கள் இளம் வயதிலேயே இதனைச் செய்தால் பொறுமை, தன்னம்பிக்கை என்ற இரு நாடிகளும் சிறப்பாக இயங்கி வாழ்வில் பெரிய சாதனையைச் செய்து வெற்றியுடன் வாழலாம்.