கழுத்துவலி நீக்கும் யோகாசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 9
நம் நாட்டில் பெரும்பான்மையான மனிதர்கள், ஆண், பெண் இருபாலருக்கும் அதிகமாக இருக்கும் ஒரு நோய் கழுத்து வலி. கழுத்திற்கு பின்புறமுள்ள பகுதியில் வலி இருந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு கழுத்து வலியுடன் சேர்த்து கைவலியும் வந்துவிடும்.
ஒருவர் கழுத்துவலிக்கு எல்லாவித சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி என்று மருத்துவ சிகிச்சை எடுத்துவிட்டு கேட்காமல் இறுதியில் ஆர்த்தோ ஸ்பெசலிஸ்ட்டிடம் சென்றார். அவர் இவருக்கு இருக்கும் கழுத்துவலியை கேட்டு மாத்திரை மருந்து கொடுத்துவிட்டு முழுமையான குணம் கிடைக்காது. வலியிருக்கும் பொழுது பெயின்கில்லர் போடுங்கள். தூக்கம் வராவிட்டால் தூக்க மாத்திரை சாப்பிடுங்கள். என்ன செய்வது எனக்கும் கழுத்துவலி 10 வருடமாக இருக்கின்றது என்று டாக்டர் கூறினாராம். பின்பு பிசியோதெரபிஸ்ட்டிற்கு கடிதம் கொடுத்து அங்கு சென்று சிகிச்சை எடுக்கச் சொன்னார். அங்கு சென்றால் அவரைப் படுக்க வைத்து, தலையில் ஒரு கருவி மாட்டி மணல் மூட்டையை கழுத்தில் தொங்கவிட்டு முன்னும் பின்னும் வளையச் செய்து காலை, மாலை அரைமணி நேரம் பயிற்சியளித்துள்ளார்கள். ஆனால் இரவில் படுத்தவுடன் மீண்டும் கழுத்துவலி வந்து விட்டது. தூக்கம் கெட்டுவிட்டது.
பின் நீரோ ஸ்பெசலிஸ்டை பார்க்க அறிவுறுத்தினார்கள். அவரிடம் சென்றால் நீங்கள் இதற்கு முன் ஆர்த்தோ டாக்டரை ஏன் பார்த்தீர்கள், அது தவறு. அந்த மாத்திரை எல்லாம் நிறுத்தி விடுங்கள் என்று கூறி புதிதாக அவர் மாத்திரை கொடுத்தார். அதைச் சாப்பிட்டும் கழுத்துவலி போகவில்லை. மாத்திரையின் பக்க பலனாக இரத்த அழுத்தம் வந்துவிட்டது. இப்பொழுது கழுத்துவலியுடன் இரத்த அழுத்தமும் சேர்ந்து சோர்வாகிவிட்டார். மேற்கூறியவை நான் வேடிக்கையாக எழுதவில்லை. இதைப்படிப்பவர்களில் 60 சதவீத நபர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கும்.
கவலை வேண்டாம். எல்லா நோய்களையும் தீர்க்கும் ஒரே கலை யோகக்கலைதான். யோகக்கலை மூலம் மட்டுமே இந்த கழுத்து வலிக்கு நாம் தீர்வு காண முடியும்.
உடலில் நோய் தோன்ற காரணம் என்ன ? அது கழுத்து வலியாக இருந்தாலும் சரி, வேறு எதுவாகயிருந்தாலும் என்ன காரணம்?
வசிஷ்ட முனிவர் இராமபிரானுக்கு கற்பிக்கும் பொழுது, மனித நோயை இரண்டாக வகை படுத்துகிறார்.
- மன உளைச்சலினால் (அல்லது) தடுமாற்றத்தினால் ஏற்படும் நோய்கள்.
- கிருமிகளினால் தாக்கப்பட்டு வரும் நோய்கள்.
கழுத்து வலிக்கு காரணம், மன உளைச்சல், அதிக வேலைப்பளு, கவலை, டென்ஷன், பதட்டம், கோபம் இதுவே அடிப்படைக் காரணமாகும். இதனால் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் அதனதன் இயக்கத்தில் மாறுபாடு அடைகின்றது. அடுத்து நாம் எடுக்கும் உணவு. இதனால் நமது கழுத்து நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுகின்றது. மனிதனின் மூளை முகுளத்திலிருந்து கழுத்துப் பகுதியில் தான் மன அழுத்த நரம்பு பிரிந்து செல்லும். அதிகமான மன அழுத்தத்தினால், அந்த இடத்தில் இரத்த ஓட்டம் பாதிப்படைகின்றது. அதனால் வலி ஏற்படும்.
யோகாசனம் ஒன்றே மனோ ரீதியாகவும் மாற்றத்தை அளிக்கும். நரம்பு மண்டலத்தின் சமத்துவத்தை ஏற்படுத்தும். நாடிதுடிப்பை மிதமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வலியைக் குறைத்து பின்பு முழுமையாக சரி செய்துவிடும்.
கழுத்து தசை, நரம்பு மண்டலம் இரண்டும் தன் செயல்பாட்டை இழந்ததால் கழுத்துவலி வந்துள்ளது.
யோகப் பயிற்சியின் மூலமாக மட்டுமே மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சரியான பயிற்சி அளித்து அவற்றை நமது கட்டுக்குள் கொண்டு வர முடியும். இங்கு தான் நரம்பு மண்டலத்தின் வேர் முடிச்சுகள் செயல்படத் தொடங்குகின்றன.
அதிக மனக்கவலை உள்ளவர்களுக்கும், அலுவலகத்தில் பல மணிநேரம் கம்ப்யூட்டர் பார்த்து வேலை செய்பவர்களுக்கும், அதிகமான மசாலா உணவு உண்டு உடலில் வாயு சம்பந்தமான உபாதை உள்ளவர்களுக்கும், அடிக்கடி சைனஸ், சளி உபாதை உள்ளவர்களுக்கும், நுரையீரல் பலவீனம், இதயம் பலவீனமானவர்களுக்கும் இந்த கழுத்து வலி அதிகம் வரும். இதனை இனி வரும் பயிற்சிகள் மூலமாக பூரணமாகக் குணமாக்க முடியும்.
பயிற்சி 1: கழுத்துவலி நீங்க யோகப்பயிற்சிகள்
மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன், பதட்டம் முதலில் நீங்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட பயிற்சி மிக அவசியம்.
- விரிப்பில் சாதாரணமாக கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.
- முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
- இரு கைகளிலும் சூன்ய முத்திரை செய்யவும்.
- அதாவது நமது நடுவிரலின் மேல் கட்டை விரலை வைத்து, கட்டை விரலால் லேசான அழுத்தம் கொடுக்கவும்.
- மீதி விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
- இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும்.
- அப்பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணன் உடலில் செல்வதாக எண்ணவும்.
- உடன் மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளியிடவும்.
- அப்பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், அழுத்தம் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
- இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.
இப்பொழுது உங்களது மூச்சோட்டத்தை கழுத்துப்பகுதி முழுவதும் நன்கு பரவுவதாக எண்ணி இரண்டு நிமிடம் கழுத்துப் பகுதியில் கவனம் செலுத்தவும். பின் மெதுவாகக் கண்களை திறந்து கொள்ளவும். கை விரல்களை சாதாரணமாக வைத்துக் கொள்ளவும்.
பயிற்சி 2: இடுப்பை உயர்த்துதல்
- விரிப்பில் முதலில் நேராகப் படுத்துக் கொள்ளவும்.
- இரு கால்களையும் மடக்கவும். ஒரு அடி இடைவெளிவிட்டு கால் பாதங்கள் தரையில் இருக்கவும்.
- இரு கைகளையும் குதிகால் பக்கத்தில் கைவிரல் படும்படி வைக்கவும். (படத்தை பார்க்க)
- இப்பொழுது மூச்சை உள் இழுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் உயர்த்தவும்.
- இந்நிலையில் பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- இதுபோல் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.
பயிற்சி 3:
- பயிற்சி 2ல் செய்தபடி முதலில் இடுப்பை உயர்த்தவும்.
- பின் இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொள்ளவும்.
- அந்நிலையில் மூச்சடக்கி 10 விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளியிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
- இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.
பயிற்சி 4: வஜ்ராசனத்தில் கையை உயர்த்தல்
- விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். (படத்தை பார்க்க)
- இப்பொழுது இரு கைகளையும் கோர்த்து காதோடு உயர்த்தி படத்திலுள்ளது போல் தலைக்கு மேல் வைக்கவும்.
- கை விரல்களும் பின்னி உள்ளங்கை வானத்தைப் பார்க்க வேண்டும்.
- கைகள் காதோடு சேர்ந்து நேராக படத்திலுள்ளது போல் இருக்க வேண்டும்.
- இப்பொழுது இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும்.
- உடன் இருநாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.
- முதலில் 5 முறைகள் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- பின் 5 முறைகள் வேகமாக மூச்சை உள் இழுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும்.
- பின் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக 5 முறைகள் மூச்சை வெளிவிடவும்.
- பின் சாதாரண நிலைக்கு வரவும்.
நம் உடலில் வாதம், பித்தம், கபம் அதனதன் ஒழுங்கு விகிதத்தில் மாறுதல் ஏற்படும் பொழுது நோய், கழுத்து வலி வருகின்றது. திருமூலர் இதனை
அஞ்சனம் போன்றுடல் ஐயறும் அந்தியில்
வஞ்சக வாத மறுமத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திட பித்தமும்
நஞ்சறச் சொன்னோம்
நரைதிரை நாசமே என்கிறார்.
அதாவது காலையில் யோகா செய்தால் பித்த நோய் தீரும். மாலையில் யோகா செய்தால் கபம் தீரும். மதியம் யோகா செய்தால் வாத நோய் தீரும் என்கிறார். மூன்று வேளை யோகா செய்பவருக்கு முடி கூட நரைக்காது என்கிறார்.
மருத்துவரிடம் சென்று கழுத்துவலிக்கு காலை, மதியம், மாலை மூன்று நேரம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு அதனால் வயிறு புண்பட்டு பக்கவிளைவு வந்தது போதும்.
இனி மேற்குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளை காலை, மதியம், மாலை மாத்திரைப் போல் பயிற்சி செய்யுங்கள். எந்த பக்க விளைவும் கிடையாது. பணமும் செலவாகாது. மனமும் அமைதி பெறும். கழுத்துவலி காணாமல் போய்விடும்.