மங்களமான வாழ்வு என்கிறார்களே…. அப்படியென்றால், பொன், பொருள், வசதி வாய்ப்புகள் இருக்கும் வாழ்க்கையா? மேலே சொன்ன வசதி, வீடு எல்லாம் இருந்தும் சாப்பிட்ட உணவின் செரிமானத்துக்கும், ஒழுங்காக மூச்சு விடுவதற்கும் கூட மாத்திரைகள் சாப்பிடும் வாழ்க்கை எப்படி மங்களகரமான வாழ்க்கையாக இருக்க முடியும்? யாருடைய உடல் உள் உறுப்புகள் சீராக இயங்குகிறதோ, யாருடைய உடலில் கழிவுகள் (மலமாக, சிறுநீராக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக) சரியாக வெளியேறுகிறதோ, யாருடைய மனம் அமைதியாக இருக்கிறதோ, அவர்களே மங்கள வாழ்வு வாழ்கிறார்கள்.
அப்படி மங்கள வாழ்வு வாழ வேண்டும் என்றால் இதோ மரீசாசனம் செய்யுங்கள்.
மரீசாசனம் செய்முறை
- விரிப்பின் மீது அமரவும். இரு கால்களையும் நீட்டவும்.
- இடது காலை மட்டும் மடித்து குத்துக் காலிடுங்கள்.
- இடது முழங்காலை உடலுடன் சேர்த்துப் பின்னிய நிலையில் இடது கையினால் வலது மணிக்கட்டை இறுக்கிப் பிடிக்க வேண்டும்.
- இப்பொழுது மூச்சை வெளிவிட்டு தலையை மெதுவாக குனிந்து நீட்டியிருக்கும் வலது முழங்காலின் மேல் நெற்றியை வைக்கவும்.
- முதலில் பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மூச்சை இழுத்து நிமிரவும்.
- இதே போல் காலை மாற்றி ஒரு முறை செய்யவும்.
- ஒவ்வொரு காலிலும் இரண்டு முறைகள் செய்யவும்.
- முதலில் பயிற்சி செய்பவர்கள் பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் ஓரிரு மாதத்தில் இருபது விநாடிகள் இருக்க முடியும்.
- பதினைந்து விநாடிகள் பின் இருபது விநாடி இருக்கவும்.
மரீசாசனத்தின் நன்மைகள்
நுரையீரல் திடமாகும்
நுரையீரலில் உள்ள அசுத்தக் காற்றுகள் வெளியேறுகின்றது. நுரையீரலுக்குள் சுத்த பிராணன் தங்குவதற்கு வழிவகை செய்கின்றது. நுரையீரல் திடமாக இயங்குகின்றது.
இதயம் பலப்படும்
இராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படுகிறது. இதய வால்வுகள் நன்றாக இயங்குகிறது. பிற்காலத்தில் இதயவலி, இதய ஓட்டை போன்ற எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.
முதுகுத்தண்டு பலமாகும்
முதுகுத்தண்டை பலப்படுத்துகின்றது. முதுகு வலி வராமல் தடுககின்றது. முதுகு வலியிருந்தாலும் விரைவில் நல்ல குணம் தெரியும்.
வயிற்றுப் பிரச்சனையே வராது
ஜீரண மண்டலம், சிறுகுடல், பெருங்குடல் நன்றாக இயங்கும். அதனால் பசி நன்றாக எடுக்கும். உடலில் கழிவுகள் வெளியேற எந்தத் தடையும் இருக்காது.
அடிமுதுகு வலி வராது
அடி முதுகு வலி வராது. கோணாடு சுரப்பி நன்றாக இயங்கும். இடுப்பு வலியையும் நீக்க வல்லது. உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் சீராக இயங்க வழிவகை செய்கிறது. இரத்த ஓட்டம் நன்றாக இயங்கினால் உடலில் அசதி என்பதே வராது.
நீரிழிவு குணமாகும்
நீரிழிவு வியாதியிலிருந்து முழுமையான விடுதலை அடையலாம். நீரிழிவு வரவே வராது. இன்சுலின் அதிகமான சுரந்து நீரிழிவு நோய் விரைவில் குணமாகும். இளம் மாணவப் பருவத்திலேயே இந்த ஆசனத்தைச் செய்தால் வளர்ந்து வரும் காலத்தில் நிச்சயமாக நீரிழிவு வராது. ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
பெண்களின் இடுப்புச் சதை குறையும்
பெண்கள் இவ்வாசனம் செய்வதால் அவர்கள் வயதிற்கேற்ப இடுப்புச் சதை இருக்கும். இன்று நிறைய பெண்களுக்கு இடுப்பு எது, வயிறு எது என்று தெரியாமல் உடல் எடை அதிகமாக உள்ளனர். அவர்கள் எல்லாம் நம்பிக்கையுடன் தினமும் மூன்று முறை இருபது விநாடிகள் காலை, மாலை வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் மிக விரைவில் உடல் எடை குறைந்து சிற்றிடை அழகியாகத் திகழலாம். அது மட்டுமல்ல. பெண்களுக்கு நீர்க்கட்டிகள் (PCOD) பிரச்சனை வராது. இருந்தாலும் விரைவில் சரியாகி விடும்.
என்ன உணவு?
- வெள்ளரிக்காய் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- அவரைக்காய், முட்டைகோஸ் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- சுரைக்காய் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
- மாதம் ஒரு முறை பாகற்காய் சூப் சாப்பிடுங்கள்.
- பசலைக்கீரை, முடக்கத்தான் கீரை, அகத்திக் கீரை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- கருப்புத் திராட்சை, கொய்யாப்பழம், அத்திப்பழம் வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளுங்கள். மங்களமாக வாழலாம்.