12
May
இன்று வீடு கட்ட கற்கள் இருக்கிறதோ இல்லையோ பலரது சிறுநீரகத்திலும் பித்தப்பையிலும் நிறைய கற்கள் சேர்ந்து கவலையுடன் வாழ்கிறார்கள்.
‘சிறுநீரகத்தில் கற்கள், உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்று மருத்துவர் சொல்லிவிட்டார். அதற்குரிய பணத்தை நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் மெடிகிளைம் பாலிசியில் கட்டிவிடலாம் கவலையில்லை’ என்று ஒரு கூட்டமே கியூவில் நின்று கொண்டிருக்கிறது.
இதில் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்து கற்களை எடுத்தபின், மீண்டும் வலி, மீண்டும் ஸ்கேன், புதிய கற்கள் உருவாகி மீண்டும் நவீன அறுவை சிகிச்சை என்று தொடர் கதையாகிவிட்டது. சில மருத்துவர்கள் ஒருபடி மேலே போய் பித்தப்பை இருந்தால் தானே கற்கள் வரும் என்று அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள். நாமும் அவரை சூப்பர் டாக்டர் என்று பாராட்டுகிறோம்.
டாக்டர் என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? டாக்கி (Docky) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது தான் டாக்டர். இதன் பொருள், யாரொருவர் ஆரோக்கியத்தை சொல்லிக் கொடுக்கிறாரோ அவர்தான் டாக்டர். அதாவது, மருந்துகளை கொடுப்பவரோ ஊசி போடுபவரோ டாக்டரல்ல என்பதை உணருங்கள்.
அந்தக் காலத்தில் வாழ்ந்த நம் சித்தர்கள், மனித உடற்கூறுகளை நன்கு ஆராய்ந்து ஒவ்வொரு உள்உறுப்பிலும் ஏற்படும் தேக்கங்கள், கழிவுகள் தங்காமல் இயங்க எப்படி உடலை வளைக்க வேண்டும் என்பதை வடிவமைத்துள்ளார்கள். அதனை நாம் ஒழுங்காகப் பயிற்சி செய்து, மனிதனுக்குரிய ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் இந்த சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் எல்லாம் நமக்கு வரவே வராது.
ஜானுசீராசனம் செய்முறை
- விரிப்பில் இரு கால்களையும் நீட்டி அமரவும்.
- வலது காலை மடித்து, இடது தொடையை உள்ளங்கால் தொடும்படி வைத்து குதிகாலை உள்ளே இழுத்து தொடை இணைப்பை தொடும்படி வைக்கவும். (படத்தை பார்க்கவும். இது ‘எல்’ வடிவத்தில் இருக்கும்).
- உங்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி (ஸ்டெப் – 1) மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து நெற்றி கால்முட்டியைத் தொடும்படி செய்து, இடது கால் கட்டைவிரலை கைகளால் பிடிக்கவும்.
- சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை வரை கண்களை மூடியவாறு இருக்கவும்.
- பின் கைகளை விரித்து நிமிர்ந்து சாதாரணமாக அமரவும்.
- ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும்.
- இதேபோல் மாற்று ஆசனமாக இடது காலை மடித்து (ஸ்டெப் – 2) இரண்டு முறை செய்து பின் ஓய்வெடுக்கவும்.
இந்த ஆசனத்தை ஞான முத்திரை என்றும் அழைப்பர்.
முதலில் பயிற்சி செய்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பயிலவும். எடுத்தவுடன் இரு கைகளால் கால் பெருவிரலை தொட முடியாது. நெற்றியும் கால்முட்டியில் படாது. கவலை வேண்டாம். எவ்வளவு குனிய முடியுமோ குனிந்து அந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்கவும். தொடர்ந்து ஒரு மாதம், அல்லது இரண்டு மாதம் பயிற்சி செய்ய, வளையும் தன்மை தானாக வரும். இந்தக் கோணத்தில் காலை மடித்து அமர்ந்தாலே, சிறுநீரகக்கற்கள், தானாகவே கரைந்து வெளியேறும்.
இந்த ஆசனத்தை தினமும் ஐந்து நிமிடம் காலை, மாலை சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் பயிற்சி செய்ய வேண்டும்.
யாரெல்லாம் செய்யக் கூடாது?
அடி முதுகுவலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். அல்லது தகுந்த யோக வல்லுநரின் ஆலோசனைப்படி செய்யவும்.
ஜானுசீராசனம் செய்வதால் ஏற்படும் மற்ற பலன்கள்…..
- நரம்பு மண்டலமும் தசைகளும் வலிமை பெறும்.
- தூக்கத்தில், சொப்பனத்தில் விந்து வெளியேறுவதைத் தடுக்கும்.
- பெண்களுக்கு ஏற்படும் அதிகமான வெள்ளைப்படுதலை சரியாக்கும்.
- மோகத்தில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டு, அதனால் உடலில் வீரியம் இழந்தவர்கள் இந்த ஆசனம் செய்தால் மீண்டும் இளமையுடன் வீரியத்தன்மை பெற்று வாழலாம்.
- நீரிழிவை நீக்கி கணையத்தை சிறப்பாக இயங்கச் செய்யும்.
- வயிறு உப்புசம் நீங்கி பசி எடுக்கும்.
- உடலின் அதிக எடை, தொந்தி குறையும்.
- ஆண்களுக்கு விரை வீக்கத்தை சரி செய்யும், பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான நோய்களை நீக்கும்.
- குடலிறக்கம் சரியாகும்.
எவ்வளவு நன்மைகள் இந்த ஆசனத்தால் பார்த்தீர்களா! அதனால்தான் இந்த ஆசனத்தை மஹா முத்திரை அல்லது ராஜ முத்திரை என்று கூறுவர்.