இன்றைய மாணவர்கள், இளைஞர்கள்.. ஏன் பெரியவர்கள் கூட அடிக்கடி சொல்லும் வார்த்தை செம! இதற்கு மிக அருமை, மிக சந்தோஷம், மிக மகிழ்ச்சி, எந்தக் குறையுமில்லை என்று பல அர்த்தங்கள் உண்டு.
சாப்பாடு செம, டிரெஸ் செம என்று நாம் பிறரிடம் சொல்வோம். இது நல்லதுதான். ஆனால், அந்த நபரின் உடல் உள் உறுப்புகள் செமயா? என்று கேட்டுப் பாருங்கள். கழுத்து வலி, முதுகுவலி, அல்சர், மூலம் என்று பல நோய்கள் என்னிடம் செமயாக உள்ளன என்பார்.
இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக உள்ளவர் யாரோ, அவருக்கு செம உடல் என்று சொல்லலாம்! இந்த செம உடலை, அதாவது ஆரோக்கியமான உடலைப் பெற, சமகோணாசனம் செய்து, செமயாக (நோயின்றி) வாழலாம்.
வாழ்வு வளமாக, ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்க வேண்டும். உடலில் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்க வேண்டும். நாடி நரம்புகள நன்றாக இயங்க வேண்டும். எவ்வளவு வயதானாலும் உடலில் சுறுசுறுப்பு இருக்க வேண்டும். மாடிப்படியில் ஏறினால் மூச்சு வாங்கக் கூடாது. முதுகுவலி, கழுத்துவலி வரக்கூடாது. நன்கு தூக்கம் வர வேண்டும். இவையெல்லாம் வேண்டுமெனில், காலை, மாலை என இருவேளையும் சமகோணாசனம் செய்ய வேண்டும்.
சமகோணாசனம் செய்முறை
- தரையில் விரிப்பு விரித்து அமரவும்.
- இரு கால்களையும் எந்த அளவுக்கு, பக்கவாட்டில் விரிக்க முடியுமோ விரிக்கவும்.
- இரு கால் பாதங்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
- முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- இரு கைகளையும் கும்பிட்டு, இதயத்தின் முன்பாக வைக்கவும்.
- இப்படியே சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும்.
- பிறகு மெதுவாக கைகளை பக்கவாட்டில் வைத்து, கால்களை பொறுமையாக மடக்கி அமரவும்.
இந்த ஆசனத்தை அவசரப்படாமல் நிதானமாகச் செய்ய வேண்டும். முதலில் முடிந்த அளவு கால்களை அகற்றவும். அதே நிலையிலேயே கைகளை கும்பிட்டு பயிற்சி செய்யவும். இப்படியே தினமும் செய்தால், ஓரிரு மாதங்களில் முழுமையாக கால்களை பக்கவாட்டில் அகற்ற முடியும்.
இந்த ஆசனத்தால் என்ன பலன்?
நமது கால் தசைகள், தொடை தசைகள் நன்கு இயங்கும். அதிக தசைகள் கரையும். இளமையுடன் இருக்கலாம்.
முதுகெலும்பு உறுதியாகும்
முதுகெலும்பு திடமாக இருக்கும். கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி வராது.
சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்
இந்த ஆசனத்தால் சிறுநீரகம் நன்றாக இயங்கும். இளமைப் பருவத்திலேயே பயிற்சி செய்தால், 60 வயதிற்கு மேல், பலருக்கும் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்கப்படும். சிறுநீரக பாதிப்பால், காய்ச்சல் வரும். கால் பாதம் வீங்கும். உடல் அசதி ஏற்படும். இவையெல்லாம் வராமல் இந்த ஆசனம் தடுக்கும். 80 வயதானாலும், ஏன் … 100 வயதானாலும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.
இதயம் நலம் பெறும்!
இந்த ஆசனத்தின்போது, மார்பு நன்றாக விரிவடையும். இதனால் ஆழ்ந்த சுவாசம் கிடைக்கும். அதன் மூலம், இதயம் பலம் பெற்று, மிக நன்றாக இயங்கும்.
மூலம் தடுக்கப்படும்
மலச்சிக்கல் வராது. மூல வியாதி வராது. ஏற்கனவே இருந்தாலும் கூட, இந்த ஆசனம் தொடர்ந்து செய்தால் மூல வியாதி குணமாகும்.
தோல் அரிப்பு, ஆசனவாய் புண் சரியாகும்
ஆசனவாயில் அரிப்பு, புண் வருதல், வீக்கம் ஏற்படுதல் முதலியவை வராது. அவ்வாறு இருந்தாலும் இந்த ஆசனம் செய்தால், பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்கள் அகலும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறுவதால் தோல் அரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
வெரிக்கோஸ் பிரச்சனை வராது
காலில் வரும் வெரிக்கோஸ் பிரச்சனை முழுமையாக சரியாகும். இந்த ஆசனம் செய்பவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் வெரிக்கோஸ் பிரச்சனை வராது.
உடல் வளையும் தன்மை அதிகரிக்கும்
இந்த ஆசனம் தொடர்ந்து செய்தால், உடல் வளையும் தன்மை எளிதில் வரும். தவிர, இதனால் மற்ற எந்த ஆசனங்களும் எளிதில் செய்ய முடியும். முக்கியமாக, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எப்போதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உங்களிடம் குடிகொள்ளும்.
பாத வீக்கம், பாதவலி வராது
இந்த ஆசனத்தால், கால் பாதவலி, கால் வீக்கம், காலில் நீர் தங்குவது உள்ளிட்டவை அறவே நீங்கும். பித்தவெடிப்பும் வராது. உடலில் உஷ்ணம் சமமாக இருக்கும்.
படுக்கையில் சிறுநீர் கசியாது
இரவு தூங்கும் பொழுது தன்னை அறியாமல் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுவர் சிலர். இந்த ஆசனம் தொடர்ந்து செய்தால், இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
என்னென்ன உணவுகள் சாப்பிடணும்?
- கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை இவற்றை வாரம் ஒருமுறை உண்ணவும்.
- ஆரஞ்சுப்பழம், சப்போட்டா பழம், தக்காளிப்பழம் ஆகியவற்றை உண்ணவும்.
- வெண்டைக்காயை உணவில் சேர்க்கவும்.
- வாரம் ஒரு நாள், கறிவேப்பிலையை நீரில் கழுவி, ஒரு டம்ளர் நீர்மோரில் போட்டுக் குடித்து, கறிவேப்பிலை மென்று சாப்பிடவும்.
நீங்களும் செம வாழ்வு வாழ வேண்டுமென்றால், மேலே சொன்ன உணவுகளை உண்டு, சமகோணாசனம் தினமும் செய்து வாருங்கள்.