மூளை நன்றாக இயங்கணுமா? இதோ ஒரு எளிய பயிற்சி!
படித்ததெல்லாம் ஞாபகத்தில் இருக்கவும் இந்தப் பயிற்சி உதவும்!
மனிதனின் வாழ்வு நலமாக இருக்க தீர்மானிப்பது எது? மூளை தானே! நமது உடலையும் மனதையும் கட்டுப்படுத்துவதும் மூளை தான். நம் மனதில் எழும் எல்லா எண்ணங்களையும் செயல்படுத்த முடியாது. அவற்றில் எது நமக்கு நன்மை தரும் என்பதை நமக்கு உணர்த்துவதும் மூளை தான்.
பொதுவாக நாம் அனைவருமே ஏதாவதொரு தவறான செயல் செய்து அதனால் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்போது, “ஐயோ, மூளையில்லாமல் இப்படியொரு காரியம் செஞ்சுட்டேனே!” என்போம். மூளை இருக்கிறதுதான். ஆனால், அது வலுவாக செயல்படவில்லை. அதனால்தான் அந்தத் தடுமாற்றம். மூளை நன்றாக செயல்பட, மூளையின் செல்கள் நன்றாக இயங்க வேண்டும். மூளையின் செல்களுக்கும் அதன் நரம்புகளுக்கும் ரத்த ஓட்டம் நன்கு பாய வேண்டும். வலது பக்க மூளையிலும், இடது பக்க மூளையிலும் செல்களின் இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது சிந்தனை தெளிவாக இருக்கும்.
நம்மால் நமது மூளையின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்த முடியும். அதற்கு, மூளை நரம்புகளும், மூளையின் செல்களும் நன்றாக இயங்க பிரிதிவி முத்திரை பயின்றாலே போதும்…. அதையும் நாற்காலியில் அமர்ந்தபடியே செய்துவிடலாம்.
பிரிதிவி முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காருங்கள்.
- கண்களை மூடி, மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள்.
- ஒரு நிமிடம் இவ்வாறு செய்யவும்.
- பின்னர் மோதிர விரல் நுனியால் கட்டை விரலைத் தொடவும்.
- மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். (படத்தைப் பாருங்கள்).
- இரு கைகளிலும் இப்படிச் செய்யவும்.
- மனசு, கை விரல்களிலும் மூச்சிலும் அமைதியாக லயிக்கட்டும்.
- இரண்டு நிமிடம் கழித்து கண்களை மெதுவாகத் திறக்கவும்.
இந்தப் பயிற்சியானது, மூளை நரம்புகளை நன்றாக இயங்கச் செய்யும். மூளை செல்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
எளிமையான மூச்சு பயிற்சி (சின் முத்திரையில்)
பிரிதிவி முத்திரையோடு இந்த மூச்சுப்பயிற்சியும் செய்தால், மூளை பகுதிக்கு நல்ல பிராணசக்தி செல்லும். மூளை செல்கள் நன்றாக இயங்கும்.
- மூச்சுப்பயிற்சி செய்ய, முதலில் நிமிர்ந்து உட்காருங்கள்.
- இரு கைகளையும், ‘சின் முத்திரையில்’ வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, பெருவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நுனியில் வைத்து இணைத்துக் கொள்ளவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.
- இப்போது மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூளைப் பகுதிக்கு நல்ல பிராண சக்தி கிடைப்பதாக எண்ணவும்.
- இதேபோல் 10 முதல் 15 முறை பயிற்சி செய்யவும்.
இப்படிச் செய்யும் பொழுது மூளை பகுதியிலுள்ள உஷ்ணம் சமன்படும். அதனால் நமது எண்ணங்கள் தெளிவடையும்.
இந்த இரு பயிற்சிகளின் மற்ற பலன்கள்….
இந்த பயிற்சிகளை பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் காலையும், மாலையும் 5 நிமிடம் செய்தாலே அவர்களின் மூளை அற்புதமாக வேலை செய்யும். எது படித்தாலும் ஞாபகத்தில் நிற்கும். நினைவாற்றல் நன்றாக இருக்கும். முக்கியமாக, மனம் ஒருநிலைப்படும். நேர்மறை எண்ணங்கள் வளரும். ஒழுக்க நெறியோடு வாழ்வார்கள்.
தன்னம்பிக்கை பிறக்கும்!
மூளை செல்கள் நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்குவதால் மாணவர்களுக்கு சிந்தனைத் தெளிவு கிடைத்து, அதனால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பார்கள். மூளைககு அருகில் உள்ள பிட்யூட்டரி & பீனியல் சுரப்பிகள் நன்றாக சுரக்கும். அதனால் முடி உதிர்வதும் இளநரையும் தடுக்கப்படும்.
சிலருக்கு மூளையில் கட்டி வருவது போன்ற பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கப்படுகிறது. ஒருவேளை, கட்டி இருந்தாலும் தினமும் இந்த பயிற்சி செய்தால் அதுவும் சரியாகிவிடும்.
நாம் இந்த பயிற்சி செய்வதற்கு எடுக்கும் நேரம் வெறும் பத்தே நிமிடம் தான். ஆனால், அந்த பத்து நிமிடம், நமது வாழ்நாள் முழுவதும் மூளை நன்றாக இயங்கவும், மூளையில் கட்டியோ மூளைக் காய்ச்சலோ வராமல் தடுக்கும்!
மூளையில் கட்டிகள்…..
நமது உடல் உறுப்புகள் அனைத்துமே முக்கியமானவைதான். அதிலும் மூளையின் செல்கள் இயங்கவில்லையெனில் எதுவுமே சரியாக நடைபெறாது. எப்பொழுதும் கவலையிலும், மன அழுத்தத்திலும், டென்ஷனிலும், கோபத்திலும் இருப்பவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி, சிந்தனைத் திறன் குறைந்து, மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பு ஏற்படும். முதலில் இது வெளியேத் தெரியாது. நாளாக நாளாக அவை கட்டிகளாக மூளையில் மாறும்பொழுது, திடீரென மயங்கி விழுவார்கள். வலிப்பு வரும். பின்னர் உடலில் பரிசோதனை செய்யும்போது தான், “மூளையில் கட்டி உள்ளது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், உயிருக்கு உத்திரவாதமில்லை” என்று மருத்துவர் சொல்வார். இந்த மாதிரி ஒரு நிலை நமக்கு வரக்கூடாது. எனவே வருமுன் காப்போம். அதுவும் நாற்காலியில் அமர்ந்தபடியே எளிமையான பயிற்சி மூலமே!
தினமும் ஏற்படும் மூளைச்சூடு குறைய….
- காலையில் கண் விழித்ததும் அமர்ந்து, கண்களை மூடி, 3 நிமிடம் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து, ஆழ்ந்து மூச்சை வெளியே விடுங்கள்.
- பின்னர் இயல்பாக நடக்கும் மூச்சை 2 நிமிடம் கவனிக்கவும்.
- இது நமது உடல் சூட்டையும் மூளை சூட்டையும் சரி செய்து, மூளை நன்றாக இயங்க வழி செய்யும்.
என்னென்ன சாப்பிடலாம்?
- தனியாப் பொடியுடன் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து டீ, காபிக்கு பதிலாக தினமும் காலையும், மாலையும் சாப்பிடவும்.
- முதல் நாள் இரவு சொம்புத் தண்ணீரில் ஒரு கைப்பிடி வெந்தயத்தைப் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் காலை எழுந்ததும், பல் துலக்கிவிட்டு அந்த நீரை பருகவும்.
- வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேருங்கள்.
- கருப்புத் திராட்சையை வாரம் இருமுறை பகலில் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிக காரம், உப்பு, புளியைத் தவிருங்கள்…..
பொதுவாக அதிக காரமான உணவுகளை எடுத்துக் கொண்டால், தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். மன எரிச்சலும் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள், செல்கள் கொதிப்படையும். எனவே பச்சைமிளகாய்க்குப் பதிலாக ‘மிளகு’ சேர்த்து சமைக்கலாம். அதேபோல அதிக உப்பும் புளியும் மூளையின் இயக்கத்தைப் பாதிக்கும். புளிக்குப் பதிலாக தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள்.