உங்கள் ஹெல்த்தையே வியக்க வைக்கப் போகிறது இந்த நாற்காலி யோகா
வணக்கம் சிநேகித சிநேகிதர்களே. நலமா? இந்த புதிய தொடர், இன்றைய நவீன காலகட்டத்தை மனதில் வைத்து தரப்படுகிறது. இன்று பலருக்கும் உடல்நலம் பற்றிய ஒரு கவனமும், விழிப்புணர்வும் வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலும் வரும்போது அவர்களுக்கு வயது 40களில் இருக்கிறார்கள். கடந்த 40 வயது வரை உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்கத் தவறிய காரணத்தால் உடலில் பல பிரச்சனைகள் வந்துவிட்டன. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கலாம். அவர்களால் தரையில் அமர முடியாது. குனிந்து உடலை வளைக்க முடியாது. சிலருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கலாம். அதனால் இனி கடினமான ஆசனங்களை செய்ய முடியாமல் இருக்கலாம். அதேபோல் மாற்றுத் திறனாளிகளால் நடக்க முடியாமல் இருக்கலாம். 60 முதல் 90 வயதைத் தாண்டியவர்களால் எழுந்து, உடலை வளைத்து யோகாசனங்கள் செய்ய முடியாது. ‘பத்மாசனம் செய்’ என்று பாட்டியிடம் சொல்ல முடியுமா? சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன் பெறும் வகையில் யோகாசனக் கலைகளை எளிதாகப் பயிலும் வகையில் ஆராய்ந்து, ‘எளிமை, புதுமை, இனிமை, அருமை’ என்ற வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாற்காலி யோகா. ஆம், ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எல்லா உறுப்புகளையும் நன்றாக இயங்கச் செய்யும் படியான யோகக் கலை பயிற்சிகளை இனி இந்தப் பகுதியில் காணவுள்ளோம். இது ஒரு புதுமையான முயற்சி! நமது வாசகர்கள் அனைவரும் பலன் அடைய வேண்டும்.
அலுவலகம் செல்பவர்களுக்கும், வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கும் ஹெல்த்தை மெயின்டெயின் செய்ய இந்த நாற்காலி யோகா உதவும்! என்பதற்காக இந்த நலம் தரும் நாற்காலி யோகா தொடரை தொடங்குகிறோம். படித்து, பயின்று நலமாக வாழுங்கள்.
மன அழுத்தம் நீக்கி மன அமைதி தர இதோ ஒரு நாற்காலி யோகா…….
அன்பு நண்பர்களே… இன்றைய மிகப்பெரிய பிரச்சனையே அதிகரிக்கும் மன அழுத்தம் தான். நமது மனம் அமைதியாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வாழ்வும் வளமாக இருக்கும்! இதோ, அலுவலகத்தின் இன்டர்வலில் கூட உங்கள் சேரில் அமர்ந்தபடியே இதைச் செய்யலாம். வேலையால் அல்லது பல்வேறு விஷயங்களைக் கையாள்வதில் ஏற்படும் மன அழுத்தம் இந்த யோகாவால் குறைந்து, மனசு லேசாகும். நல்ல உற்சாகம் கிடைக்கும். நாற்காலியில் அமர்ந்தவாறே எப்படி இந்தப் பயிற்சியை செய்யலாம் என்று பார்ப்போம்.
எப்படிச் செய்வது?
- ஒரு நாற்காலியில் வெள்ளைத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து, நிமிர்ந்து உட்காருங்கள்.
- கைகள் தியான முத்திரையில் இருக்கட்டும்.
- இடது உள்ளங்கையின் மீது வலது கையை வைக்கவும்.
- இரு கட்டை விரல்களும் அவற்றின் நுனியைத் தொட்டுக் கொண்டிருக்கட்டும் (படத்தைப் பார்க்கவும்).
- கைகளை மடியின் மீது வைத்துக் கொள்ளலாம்.
- ஆனால், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். உடலை தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
- தலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளை மனதினால் தளர்த்தவும்.
- உங்கள் மனதை தலைப்பகுதியின் தசைகளில் நிலைநிறுத்தி, அதிலுள்ள எல்லா டென்ஷன் அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி தளர்த்தவும்.
- அதே போல் தோள் பட்டையின் வெளி தசைகளில் மனதை நிலைநிறுத்தி, அதிலுள்ள டென்ஷன் மற்றும் அழுத்தங்களை பூமிக்கு அர்ப்பணியுங்கள்.
- பிறகு இதே போல வலது கை, இடது கையின் வெளிதசைகள், இதயம், வயிறு, வலது கால், இடது காலின் வெளி தசைகளை மனதில் நிறுத்தி, அவற்றிலுள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.
- பின்னர் மிக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும். மூச்சை இழுக்கும் போது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை சுவாசிப்பதாக எண்ணவும். மூச்சை வெளியே விடும்போது உடலிலும் மனதிலும் உள்ள டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்டவை நம் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
- இதேபோல் மூன்று நிமிடம் செய்யவும்.
- பிறகு இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை மட்டும் ஐந்து நிமிடம் கூர்ந்து தியானிக்கவும்.
- இப்போது மெதுவாக கண்களைத் திறந்து சாதாரணமாக அமரவும்.
இந்த யோகாவின் பலன்கள் பற்றித் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!
- இதனால் மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
- ரத்த அழுத்தம் நீங்கும். உயர்/ குறைந்த ரத்த அழுத்தம் சமமாகும்.
- இதயம் பாதுகாக்கப்படும். இதய தசைகளும் வால்வுகளும் நன்றாக இயங்கும். இதயத்துடிப்பு சீராக இருக்கும்.
- ஒற்றைத் தலைவலி நீங்கும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். படபடப்பு, இதய பலவீனம் உள்ளிட்டவையும் நீங்கும்.
- தன்னுள் உள்ள இயற்கை சக்தியை உணரும் நிலை ஏற்படும்.
- பொதுவாக நம் முக சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாவதற்குக் காரணமே கவலைகளும், டென்ஷனும் தான். இந்த எளிமையான நாற்காலி யோகா பயிற்சியினால் டென்ஷனும் கவலையும் நீங்கிவிடும். அதனால், சருமத்தில் நல்ல பிராண சக்தி கிடைக்கும். சருமமும் பளபளப்பாக இருக்கும். முகம் பளபளப்பாக வசீகரம் அடையும்.
- மன இறுக்கம் நீங்கினால், மலச்சிக்கலும் வராது. உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
மேலே சொன்னதுபோல், முத்திரையும், தியானமும் சேர்ந்து செய்யும்பொழுது ‘எதிர்மறை எண்ணங்கள்’ (Negative Thoughts) நீங்கி, ‘நேர்மறை எண்ணங்கள்’ (Positive Thoughts) வளரும்.
இந்தப் பயிற்சி செய்ய நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் மொத்தமே பத்து நிமிடத்திற்குள் தான்!
- ஒரு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தீர்கள்… இது சுகாசனம்!
- மூச்சை கவனித்தீர்கள்… இது பிராணாயாமப் பயிற்சி!
- கையில் முத்திரை (தியான முத்திரை) செய்து விட்டீர்கள்!
- மனதை ஜீவனில் மூச்சில் நிலை நிறுத்தினீர்கள். இது தியானம்!
பாருங்கள்… பத்தே நிமிடத்தில் ஆசனம், மூச்சுப்பயிற்சி, முத்திரை, தியானம் என எல்லாமே செய்துவிட்டீர்கள்! அதுவும் உடலை வருத்தாமல் எளிமையாக செய்துள்ளீர்கள்!!
இந்த யோகா செய்யும் நாட்களில் என்ன உணவு சாப்பிடலாம்?
- இந்த சமயத்தில் நல்ல சாத்விகமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பழ வகைகள் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.
- உலர்ந்த திராட்சையை காலை / மாலை 4 எண்ணிக்கையில் சாப்பிடுங்கள்.
- வாரத்தில் மூன்று நாள் கொய்யாப்பழம் சாப்பிடுங்கள்.
- தினமும் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வாழைப்பழம் ஒன்று சாப்பிடுங்கள்.
தினமும் காலையும் மாலையும் அலுவலகத்தில் அல்லது வீட்டில் நாற்காலியில் அமர்ந்து, பத்து நிமிடம் இந்தப் பயிற்சியை செய்யுங்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் இருக்கும்!