பலவித பலன்கள் தரும் ஹஸ்த தனூராசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 15
இன்று நாட்டில் ஆங்கில மருத்துவமனை பெருகிக் கொண்டே வருகின்றது. பெரிய பெரிய நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது. மாத்திரைகளை போடுவதால் வயிற்று வலி, உடல் சூடு அதிகமாதல், வயிறு புண்படுதல் முதலியவற்றிற்கு ஆளாகி மீண்டும் மாற்று மருந்து சாப்பிடுகின்றனர். ஏன் இந்த நிலைமை!
மனிதர்கள் மாத்திரை மருந்துகள் சாப்பிடாமல் வாழ முடியுமா என்று நினைக்கின்றனர். வாழ முடியும். நமது முன்னோர்கள் காலத்தைப் பாருங்கள். அவர்கள் மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழவில்லையா! வளமாக நலமாக வாழ்ந்தார்கள், எப்படி? அந்தக் காலத்தில் நவீன விஞ்ஞான முறைப்படி இப்பொழுது வந்துள்ள கருவிகள் கிடையாது. அவர்கள் நிதானமாக, அவசரப்படாமல் தனது பணிகளை திறம்பட செய்தனர். கவலை, கோபம், டென்ஷன், போட்டி, பொறாமை கிடையாது. ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியில் நிறைய வீட்டு உபயோகக் கருவிகள் கண்டு பிடித்துவிட்டோம். அதே அளவு டென்ஷன், மன அழுத்தம், கோபம், கவலை குடி கொண்டு விட்டது. இதனால் மனோரீதியான பாதிப்பு அதிகமாகி அது உடலையும் பாதிக்கின்றது.
இன்று நாம் உண்ணும் உணவு பெரும்பாலும் கெமிக்கல் நிறைந்த உணவு தான். சைவ உணவான நெல் (அரிசி), பழங்கள், காய்கறிகள் பெரும்பாலும் உரங்களில் விளைவு தான். இந்த நிலையில் நாம் எதைச் சாப்பிடுவது என்று குழப்பம் வந்து விட்டது.
நாம் இன்றைய காலத்தில் கிடைக்கின்ற சைவ உணவான பழம், காய்கறி, சாதம் சாப்பிடலாம். அதிலுள்ள இரசாயன கழிவுகள் உடலில் தங்காமல் வெளியேற வேண்டும். குறிப்பாக கழிவுகள் வயிற்றில் குடல் பகுதியில் தங்கக் கூடாது. அதற்குத் தான் யோகக்கலை பயன்படுகின்றது. கழிவுகள் வயிற்றில் தங்கும் பொழுது பலவிதமான நோய் ஏற்படும். நீரிழிவு, இரத்த அழுத்தம், பசியின்மை, அஜீரணம், அல்சர் ஏன் கேன்சர் வரை கழிவுகள் தங்குவதால் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் தங்குவதால் ஏற்படுகின்றது. இதற்கு யோகக்கலையில் எளிமையான ஆசனம் உள்ளது. அது தான் ஹஸ்த தனூராசனமாகும்.
செய்முறை:
- விரிப்பில் குப்புறப் படுக்கவும்.
- மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் சரி படுத்தவும்.
- வலது கால் கணுப்பகுதியில் வலது கையினால் பிடித்து காலை மேலே தூக்கவும்.
- தலையையும் மேலே உயர்த்தவும்.
- இடது கால், இடது கை படத்திலுள்ளது போல் தரையில் நேராக இருக்க வேண்டும்.
- சாதாரண மூச்சில் பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக கைகளை உயர்த்தி காலை தரையில் வைத்து ஒரு பத்து விநாடி ஓய்வெடுக்கவும்.
- பின் காலை மாற்றி செய்யவும்.
- மூன்று முறைகள் இவ்வாறு செய்யவும்.
- பின் ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
ஹஸ்த தனூராசனத்தின் நன்மைகள்
இந்த ஆசனத்தில் காலை வளைத்து தலையும் மேலே தூக்கப்படுகின்றது. அதனால் கண், காது, முகத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் பாய்கின்றது. கண் நரம்புகள் சிறப்பாக இயங்கும். கண் பார்வை எவ்வளவு வயதானாலும் கெடாமல் சிறப்பாக இருக்கும். கிட்டப்பார்வை என்ற குறைபாடு வராது.
காது எவ்வளவு வயதானாலும் நன்றாக கேட்கும். காது சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
முகப் பொலிவு
முகம் நன்றாக பொலிவாக இருக்கும். மிகப் பிரகாசமாக அனைவரையும் வசீகரம் செய்யும்படி அமையும். எந்த ஒரு மேக்கப் போடாமலேயே முகம் அழகாயிருக்கும்.
தோள்பட்டை வலி
இந்த ஆசனத்தை இரண்டு கால்களையும் மாற்றி செய்வதால் தோள்பட்டை வலி நீங்கும். தோள்பட்டை இலேசாக இறங்கியிருப்பது சரியாகும்.
தைராய்டு, பாரா தைராய்டு குறைபாடுகள் நீங்கி சிறப்பாக இயங்கும்.
இருதயம், நுரையீரல்
இருதயம் பலப்படும். நுரையீரலில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறும். நுரையீரல் சிறப்பாக இயங்கும். அதனால் சைனஸ், ஆஸ்துமா வராமல் தடுக்கப்படுகின்றது.
வயிறு
சிறுகுடல், பெருங்குடல் வயிற்றுப் பகுதியிலுள்ள கழிவுகள் நீங்குகின்றது. வயிறு அதிக சதை குறையும். சிறுகுடல் சுத்தமாவதால் உடல் முழு இயக்கமும் நன்றாகயிருக்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்பகுதி, அதன் கீழ்ப்பகுதி நன்கு அமுக்கப்படுவதால் மலச்சிக்கல் இல்லா வாழ்வு வாழலாம்.
மூட்டு வலி
மூட்டுகள் பலம் பெறும். மூட்டுவலி நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சியை நீக்குகின்றது. இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
அஜீரணக் கோளாறு
பசியின்மை, அஜீரணக் கோளாறுகளை நீக்கி புத்துணர்வு கொடுக்கின்றது.
முதுகு வலி
முதுகு வலி நீங்கும். முதுகு பலம் பெறும்.
இந்த ஆசனத்தில் எவ்வளவு பலன்கள் இருக்கின்றது பார்த்தீர்களா! இதைவிட இன்னும் நிறைய பலன்கள் உள்ளன. உடலுக்கு பிராண சக்தி கிடைக்கும். பசி நன்கு எடுக்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம். சோம்பல் நீங்கும்.
இன்று நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுகள் வயிற்றில் தங்காமல் இருக்க இந்த ஆசனம் பயன்படுகிறது.
உணவு
இத்துடன் மைதாவினாலான உணவுப் பொருட்களை தவிருங்கள். பசி எடுக்கும் பொழுது சைவ உணவு அதிலும் வாரம் மூன்று நாட்கள் சிறுதானிய உணவுகள் எடுத்தால் நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
பொதுவாக ஒரு நாளில் முப்பது ஆசனங்கள் இரண்டு மணிநேரம் செய்தால் தான் ஆரோக்கியமாக வாழலாம் என்று நிறைய மனிதர்கள் நினைக்கின்றனர். உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்.
நிதானமாக, அவசரப்படாமல் இந்த ஒரு ஆசனத்தை மூன்று தடவைகள் செய்யுங்கள். பத்து முதல் பதினைந்து நிமிடமாகும். இதிலேயே உடல் உள் உறுப்புகள் சிறப்பாக இயங்கும். நேரமில்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தை தினமும் செய்யுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நமது உடல் நலனுக்காக அதிகாலை அரைமணி நேரம் செலவழியுங்கள். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.